நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவுக்குத் திரும்புதல்

165. மதீனாவுக்குத் திரும்புதல்

மக்காவாசிகளில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால், ஒருவரையாவது இஸ்லாத்தை தழுவும்படி வற்புறுத்தவில்லை.

பெருமானார் அவர்கள் முதலில் மக்காவுக்குள் நுழையும் போது, கடுமையான குற்றங்களைச் செய்த கொடியவர்கள் பதினேழு பேரை எங்கே கண்டாலும் கொன்று விடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் கூட பதின்மூன்று பேர் மன்னிக்கப்பட்டார்கள்.

இப்னு கத்தல், ஹுவைரிது, மிக்யாஸ் என்ற ஆண்கள் மூவரும், லாரா என்ற ஒரு பெண்ணும் மரண தண்டனைக்கு ஆளானார்கள்.

மக்காவில் பெருமானார் அவர்கள் பதினைந்து நாட்கள் தங்கி, இஸ்லாத்தின் அறிவுரைகளை மக்காவாசிகளுக்குப் போதிப்பதற்காகத் தக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள்.