நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/முஸ்லிம் படை மக்கா வருகை

157. முஸ்லிம் படை மக்கா வருகை

முஸ்லிம் சேனையானது மக்காவை நெருங்கி விட்டது.

அந்தப் புனித நகரம் முஸ்லிம்களின் பார்வைக்கு நன்றாகத் தெரிந்தது.

முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு அங்கே படை எதுவும் காணப்படவில்லை. எதிர்ப்பு இல்லாதது பெருமானார் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஒட்டகத்தின் மீது இருந்தவாறே, தலையைத் தாழ்த்தி, ஆண்டவனைத் தொழுதார்கள்.

சேனைகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு திசையிலிருந்து நகருக்குள் செல்லும்படிக் கட்டளையிட்டார்கள்.

சேனைகள் நகருக்குள் நுழையுமுன், கூடியவரை சண்டை செய்யாமலும் எவரையும் துன்புறுத்தாமலும் இருக்குமாறு பெருமானார் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

காலித் தலைமையில் சென்ற படை தென் திசையிலிருந்து வந்தது. அந்த வழியில்தான் இஸ்லாத்தின் மீது கடுமையான பகைமை கொண்டிருந்தவர்கள் வசித்து வந்தார்கள்.

சேனை அந்த வழியாக வந்ததும், இக்ரிமா, ஸப்வான் போன்றோர் குறைஷிகளின் சிறு கூட்டத்தைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு, முஸ்லிம் சேனை மீது அம்புகளை எய்தார்கள். அப்பொழுது தளபதி காலித்துக்குச் சண்டை செய்வதைத் தவிர, வேறு வழி இல்லாமல் அவர்களை எதிர்த்துத் தாக்கவே, அந்தச் சிறிய கூட்டம் தோற்றுச் சிதறி ஓடியது.

அப்பொழுது, பெருமானார் அவர்கள் நகரிலுள்ள உயரமான ஓர் இடத்தில் நின்று சுற்றிலும் பார்த்தார்கள்.

காலித் சேனையின் வாள்கள் ஒளி வீசுவதைக் கண்டதும், பெருமானார் அவர்கள் வருந்தினார்கள். “சண்டை செய்யக் கூடாது என்று நான் கண்டிப்பாக உத்தரவிடவில்லையா?” எனக் கடிந்து கொண்டார்கள். ஆனால், பின்னர் விசாரணையில் மக்காக் குறைஷிகளே சண்டைக்குக் காரணமாயிருந்தார்கள் என்பது தெரிந்ததும், “ஆண்டவன் எப்படித் தீர்மானிப்பானோ, அதுவே எல்லாவற்றிலும் மேலானது” என்று சொன்னார்கள்.

இந்தச் சிறிய சண்டையைத் தவிர, முஸ்லிம்களை எதிர்ப்பவர் ஒருவரும் அங்கே இல்லை.