நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வருகையும் எதிர்ப்பும்

122. வருகையும் எதிர்ப்பும்

புனிதத் தலத்தை வழிபடச் செல்லும்போது பகைமை உணர்வுகள் தோன்றாமல் இருப்பதற்காகவும், தங்களிடம் குறைஷிகள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும் ஆயுதங்களை வெளியில் எடுக்காமல் முஸ்லிம்கள் புறப்பட்டார்கள்.

வாள்களை உறையில் போட்டு வைத்துக் கொள்ளுமாறு பெருமானார் அவர்கள் சொல்லியிருந்தார்கள். பெருமானார் அவர்களோடு முஹாஜிர்களும், அன்ஸாரிகளும் மொத்தம் ஆயிரத்து நானூறு பேர் சென்றார்கள். குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள்.

முன்னெச்சரிக்கையாக, குறைஷிகளின் எண்ணத்தை அறிந்து வருவதற்காக, முன்கூட்டியே ஒருவரைப் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

பெருமானார் அவர்கள் தங்கள் கூட்டத்தாருடன் உஸ்பான் என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

குறைஷிகளும் இதரர்களும் ஒன்று கூடி, “பெருமானார் அவர்கள் மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க இயலாது” எனக் கூறியதாக, அந்தத் தூதர் திரும்பி வந்து தெரிவித்தார்.

குறைஷிகள், சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டு, பெருமானார் அவர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காக, மக்காவுக்கு வெளியே ஆயுத பாணிகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.