242. கார் தொடங்கின்றே!

பாடியவர் : விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தராநின்றி தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.

[(து.வி.) வினைமுடித்து மீள்கின்ற தலைவன், தலைமகள்பாற் கொண்டுள்ள காதன்மை மேலெழ, விரையத் தேரைச் செலுத்துமாறு தன் பாகனுக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]

இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக் கார்தொடங் கின்றே காலை வல்விரைந்து 5 செல்க பாகநின் தெரே! உவக்காண் கழிப்பெயர் களரில் போகிய மடமான் விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக் காமர் நெஞ்சமொடு அகலாத தேடூஉ நின்ற இரலை ஏறே! 10

தெளிவுரை : பாகனே! இலையுதிர்ந்திருந்த பிடாமரங்கள் எல்லாம் குளிர்ந்த மலர்களைத் தருகின்ற அரும்புகளை முகிழ்த்தன. புதர்மேல் ஏறிப்படர்கின்ற முல்லைக் கொடியில் பூக்கள் மலர்ந்தன. கொன்றைகள் பொற்காசுகளைப் போன்ற பூக்களைப் பூத்தன. நீலமணியின் நிறத்தைப் போன்ற பலவாய் மலர்களை யுடையவாய்க் காயாவின் குறுகியவான கிளைகள் விளக்கம் பெற்றன. காலைப் பொழுதிலேயே மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர் நிலத்திலே போகிய இளைய பிணைமானானது, மருண்டு விழித்தலையுடைய கண்களைக் கொண்ட தன் குட்டியின் பின்னே, தன் இனமாகிய ஏனைய மான் கூட்டத்தினின்றும் நீங்கி வேறிடத்தை நோக்கி ஓடிப்போகின்றது. அப்பிணையின்மீது விருப்பமிக்க நெஞ்சத்தோடு, தானும் இனத்தினின்றும் நீங்கிச் சென்றதாய், அதனைத் தேடியபடி நிற்கின்ற ஆண்மானையும் உவ்விடத்துக் காண்பாயாக! ஆதலின், நின் தேர்தானும் மிக விரைந்து செல்வதாக!

சொற்பொருள் : பிடவம்–பிடாமரம். ஈர்மை–குளிர்ச்சி. தளவம்–முல்லை. மணி – நீலமணி. காயா – காயாமரம். கஞல – விளங்கித் தோன்ற; பூவும் தளிருமாக அழகுடன் தோன்ற. காலை –பொழுது; காலைப் பொழுதும் ஆம். வல்விரைந்து – மிக விரைந்து. கழி – உப்பங்கழியின் நீர்; களர்பட்ட நிலப்பகுதி. மடமான் – இளமான்; என்றது பிணையினை. காமர் – விருப்பம். இரலை ஏறு – ஆண்மான். பேதை – குலத்தொழில் அறியாத சிறு குட்டி.

விளக்கம் : 'இலையில் பிடவம்' என்றது, கோடையில் இலையுதிர்த்து நின்ற பிடவினது பழைய தன்மையை; அது தான் ஈர்மலர் அரும்பின என்றான், அவ்வாறே வாடியிருக்கும் தலைவியும் புதுப்பொலிவு பெறுதலை நினைக்கின்றான். புதலிவர் தளவம் பூங்கொடி அவிழ்தலைக் காண்கின்றான், அவள் தன்னைத் தழுவிப் பெறுகின்ற மகிழ்வைக் கருதுகின்றான். பொன்னென மலர்ந்த கொன்றை காண்பான் அவள் பொன்மேனியையும், காயாவின் கருநீல மலரைக் காண்பான் அவள் கூந்தலையும் எண்ணுகின்றான் என்று கொள்க.

பேதைமையால் இனத்தினின்றும் பிரிந்து சென்ற தன் சிறுகுட்டியோடு சென்ற பிணையைத் தேடி நிற்கும் இரலை ஏற்றைக் காட்டினான், தானும் புதல்வனோடு வருந்திய படியிருந்து, பிறர்போல இன்புற்றிராது ஒதுங்கி நிற்கும் தன் தலைவியை விரையச்சென்று சேர்தலை விரும்புகின்றான்.

'களர் நிலம்' என்றது, அதன் செடி கொடியற்ற தன்மையைக் காட்டுதற்கு; அதன்கண் மான்குட்டி ஓடியது பேதைமையால் என்க; இதனைக் கேட்டலுறும் பாகனும் தேரை விரையச் செலுத்துவானாவன் என்பது இதனைக் கூறியதனால் விளையும் பயன் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/242&oldid=1698409" இலிருந்து மீள்விக்கப்பட்டது