254. சிறுகுடிச் சேர்ந்தனை சென்மோ!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி படைத்து மொழிந்தது.

[(து.வி.) தலைமகன், இற்செறிப்புற்ற தலைமகளைத் தலைவன் அடைந்து இன்புறுவதற்கு இயலானாய் வருந்துகின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சிலவற்றைப் புனைந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும்
குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்
துனியில் நன்மொழி இனிய கூறியும்
சொல்லெதிர் பெறாஅய் ஆகி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலியிரும் பரப்ப! 5
உமணர் தந்த உப்புநொடை நெல்லின்
அயினி மாஇன்று அருந்த நீலக்
கணம்நாறு பெருந்தொடை புரளும் மார்பில்
துணையிலை தமியை சேக்குவை அல்லை
நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி 10
வானம் வேண்டா உழவினெம்
கானலம் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே!

தெளிவுரை : பகற்பொழுது எம்முடன் கூடியிருந்து வண்டல் மனையினைப் புனைந்து உதவினை; கரை மேலாக வந்து மோதுகின்ற அலைகளை உதைத்து விளையாடலையும் செய்தனை; குன்றுபோல உயர்ந்திருக்கும் வெண்மையான மணல் மேட்டிடத்தே கொடியரும்பின் பூக்களைக் கொய்தும் தந்தனை; வருத்தம் இல்லாதபடி நல்ல மொழிகளுள் இனிமையாயினவற்றையே எம்மிடத்துக் கூறினை. ஆனால், நீ கூறிய சொற்களுக்கு எதிர்மாற்றம் எதனையும் பெறாதவனாகி, மெல்ல நின்னூர்க்குச் செல்லுதலையும் மேற்கொண்டனை. ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பின் தலைவனே! நேராக வகுக்கப்பெற்ற இடம் பொருந்திய சிறிய பாத்திகளுள் கடல்நீரைப் பாய்ச்சி உப்பினை விளைவிக்கும் மழையை வேண்டாத வேளாண்மையினை உடைய எமது கடற்கரைச் சோலை சூழ்ந்த சிறு குடியினிடத்தே வந்து சேர்ந்தாயாய், எம் இல்லிடத்தே தங்கி, இன்றைய இராப் பொழுதையும் கழித்துப் போவாயாக!

அங்ஙனம் தங்கிச் செல்வாயாயின் உப்பு வணிகராலே உப்பை விலைமாறிக் கொண்டுவரப் பெற்ற நெல்லினாலே சமைக்கப்பெற்ற அரிசிக் காணத்தை நின் குதிரைகள் இன்று உண்ணுதலைச் செய்யவும், நீதான், இவ்விடத்தே, நீலமலர்க்கூட்டம் நறிய மணத்தைக் கமழுகின்றதான பெரிய மாலையானது புகழுகின்ற மார்பினையாகி, அம்மார் பிடத்தே அணைத்து இன்புறுதற்கான நின் துணைவியும் இல்லாதே தனியனாகத் தங்குவாயும் அல்லை காண்! அதனால் தங்கிச் செல்வாயாக பெருமானே!་

சொற்பொருள் : வண்டல் – மணற்பாங்கிலே சிற்றிலை இழைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு. தைஇ–புனைந்து; சிற்றில் புனைந்து எனவும், சிற்றில்லில் வைத்து விளையாடுதற்கு ஏற்ற பஞ்சாய்ப் பாவையைப் புனைந்து எனவும் கொள்ளுக. வருதிரை–கரையை நோக்கி வருகின்ற அலைகள். உதைத்தல்–உதைத்து. விளையாடல்; அன்றிச் சிற்றிலைச் சிதைக்க வரும் அலைகளை உதைத்து அதனைக் காத்தற்கு முயலலும் ஆம். துனி–வெறுப்பு. ஒலிஇரும் பரப்பு–ஒலியோடு விளங்கும் கடற்கரைப் பரப்பு. அயினி – உணவு. மா–தேர்க் குதிரைகள். தொடை–தொடுக்கப்பெற்ற பெரிய மாலை. சேக்குதல் – தங்குதல். நேர்கண் சிறுதடி – நேர் நேராக விளங்கும் இடப்பரப்பாக மறிக்கப்பட்டுள்ள சிறுசிறு உப்புப் பாத்திகள். பிற பயிர் விளைத்தலைப்போல உப்பு விளைத்தலுக்கு மழையின் தேவை வேண்டாவாதலின், 'வானம் வேண்டா உழவு' என்றனர். 'வானம் வேண்டா வளனில் வாழ்க்கை' என அகநானூற்றிலும் இது கூறப்பெறுதலைக் காண்க (அகம். 186).

விளக்கம் : நீதான் எமக்கு இனியன பலவும் செய்தனையாய், எம்மால் விரும்பப்படுகின்றவனும் ஆகி, நின் கருத்தையும் எமக்கு புலப்படுத்தினை! நின் இரப்புக்கு யாமும் இசையுங்கால் அதனாற் பழிபல வந்தெய்தும். ஆதலின் பலரும் உறங்கும் இரவு வேளையில், எம் விருந்தினனாகி, எம் இல்லத்தே வந்து தங்கிச் செல்வாயாக என்கின்றனள், விரைந்து மணந்தாலன்றி அவ்வாறு தலைவியின் இல்லத்தே தங்குதல் தலைவனின் உயர்வுக்கு இயலாமையின், அதனை மறுத்து வரைவு வேட்டனள் ஆயிற்று. இதனைக் கேட்டலுறும் தலைவனின் உள்ளத்தே தலைவியை விரைந்து சென்று மணத்தலே செயற்கு உரியதென்னும் உறுதிப்பாடு எழும் என்பது முடிபாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/254&oldid=1698424" இலிருந்து மீள்விக்கப்பட்டது