336. குடிமுறை பகுக்கும் நாட!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.

[(து-வி.) இரவுக் குறியை விரும்பி வருகின்றான் தலைவன். அவன் மனத்தை, மணவினையை விரைந்து செய்தற்கு முயலுவதிற் செலுத்த விரும்புகிறாள் தோழி. ஆகவே, இரவிலே அவன் வரும் வழியினது கொடுமைக்கு அஞ்சியதுபோலக் கூறி, இரவில் வருவதை மறுத்து உரைக்கின்றாள். இந்தக் கூற்றாக அமைந்த செய்யுள் இது.]


பிணர்ச்சுவற் பன்றி தோன்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல்லதர் அரும்புழை அல்கிக் கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை
புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டி, 5
குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட!
உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈரளைப் புற்றங் காரென முற்றி
இரைதேர் எண்கினம் அகழும் 10
வரைசேர் சிறுநெறி வாரா தீமே

.

தெளிவுரை : சிலிர்த்திருக்கும் மயிர்மிகுந்த பிடரினையுடைய ஆண் பன்றியானது, தோலாக வற்றித் தொங்கும் முலையையுடைய தன் பெண்பன்றியோடும் சென்று, திரண்ட தண்டினையுடைய தினையின் கதிரை அளவுக்கதிகமாகக் கவர்ந்து தின்றது. அதனாலே கானவன், கற்கள் நிரம்பிய மலையிடத்திலுள்ள கடத்தற்கரிய புழையிடத்தே பதுங்கியிருந்து, வில்லினால் அம் பெய்து அந்தச் சிறிய ஆண்பன்றியைக் கொன்றான். கொன்றவன், அதனைத் தன் மனைவியிடம் கொண்டு தந்தான். அலங்கரித்த கருமையான கூந்தலையுடையவளான அவன் மனைவியானவள், அப்பன்றியை அறுத்து, தசையை அவ்விடத்துக் குடிகளுக்கெல்லாம் முறையாகப் பகுத்துக் கொடுத்தனள். அத்தகைய நெடிய மலை நாடனே!

மிக்க வலிய சினமுடைய களிற்றியானையானது, வருகின்ற புலியினை எதிர்பார்த்திருக்கும் இரவின் கண்ணே, இங்கு வருவதனை நீயும் அஞ்சமாட்டாய்; ஆயின், யான் அஞ்சுவேன். பாம்பின் ஈரிய புறத்தையுடைய புற்றினைக் கார்மேகம் போலக் கவிந்துகொண்டு, புற்றாஞ்சோறாகிய இரையினை ஆராய்கின்ற கரடிக்கூட்டம் தோண்டியபடி இருக்கும். மலையைச் சார்ந்த சிறு நெறியிலே, இனியும் இரவிலே வாராதிருப்பாயாக.

கருத்து : ஆகவே, விரைய வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வாயாக என்பதாம்.

சொற்பொருள் : பிணர் – சொரசொரப்பான தன்மை; இங்கே மயிர்ச் சிலிர்ப்பை உணர்த்தும். சுவல் – பிடரி. தோல் முலைப் பிணவு – குட்டிகளையுடையதாகவே, அவற்றுக்குப் பாலூட்டியதனாலே வற்றிய முலையுடைய பெண்பன்றி. கைம்மிக – மிக அதிகமாக. கவர்தலின் – கவர்ந்து உண்ணுதலினாலே. புழை – பொந்து. அல்கி – பதுங்கி. கெண்டி – இங்கே பன்றியின் தசை. குடிமுறை பகுத்தல் – ஊரிலுள்ள குடிகள் யாவர்க்கும் முறையாகப் பகுத்துத் தருதல். உரவு – வலிமை. உறுபுலி – நாளும் வரும் புலி. காரென – கருமேகம் போல; இது கரடியின் உருவைக் குறித்தது. எண்கினம் – கரடிக் கூட்டம்.

உள்ளுறை : 'தினை கவர்ந்த பன்றியைக் கானவன் கொன்று கொணர்ந்து தர, அவன் மனைவி அதனை அறுத்து ஊரிலுள்ள குடியினர் அனைவருக்கும் முறையாகப் பகுத்துக் கொடுக்கும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவனும் இல்லறம் தொடங்கித் தான் ஈட்டிவரும் பொருளையெல்லாம் மனைவிபால் அளிக்க, அவள் ஐம்புலத்தாரையும் பேணிக் காத்து அறம் பேணுபவளாவாள் என்பதாம்.

விளக்கம் : தன் முயற்சியாலே தேடியதெனினும், அதனை மனையோளிடம் தந்து, அவள் குடியினர்க்கெல்லாம் பகுத்து அளிக்கத் தான் மகிழும் அக்கால ஆடவர் மனப்பான்மை இதன்கண் விளக்கப்பட்டுள்ளது. 'வருநெறிக்கு அஞ்சுவல்' என்றதால், அவ்வச்சத்தால் தலைவிக்கு ஊறு நேரிடா வகையில் தலைவன் அவளை வரைந்து கொள்வதற்கு முயற்சி செய்பவன் ஆவான் என்பதாம். 'எண்கினம் அகழும்' என்றதால் கரடிகளின் மிகுதியும், பாம்புப் புற்றுக்களின் மிகுதியும் கூறினள்; இத்துடன் உறுபுலி பார்க்கும் களிறும் உடைத்தாதலால், இரவில் தனியே வழி வருவார்க்குத் தீங்கு நேருமென அஞ்சுதல் இயல்பே என்பதும் தெளிவாகும்.

பயன் : இரவின் வழி ஏதத்துக்கு அஞ்சுவதுபற்றிக் கூறுதலால், இனி இரவுக்குறியும் வாயாது என்பதை உணரும் தலைவன் தலைவியை வரைந்து வந்து மணந்துகொண்டு பிரியா இன்பம் நுகர்தலிலேயே மனம் செலுத்துவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/336&oldid=1698636" இலிருந்து மீள்விக்கப்பட்டது