நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சங்கரதாஸ் சுவாமிகள்

திரு. சங்கரதாஸ் சுவாமிகள்

இவர் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகங்களை எழுதியவர். இவர் சிறு வயதிலேயே தமிழ் நூல்களை நன்றாய் கற்றபின் முதலில் அக்காலத்தில் நடத்தப்பட்ட கூத்துக்களில் வேடம் தரித்து நடித்தவர். அப்படி நடித்த முக்கிய பாத்திரங்கள் இரண்யகசிபு, சனீஸ்வரன், யமதர்மன் முதலியவைகளாம். இவர் கம்பீரமான உருவமும் பார்வையும் குரலும் பெற்றிருந்தமையால் அப்பாத்திரங்களை ஆடுவதில் மிக்கப் பெயர்பெற்றது சுலபமாயது. 1891-வது வருஷம் தமிழ் நாடகங்களை ஆடுவதைவிட்டு தமிழ் நாடகங்களை எழுதத் தொடங்கினார். அந்நாடகங்களின் வசனங்கள் மாத்திரமன்றி தக்க பாட்டுகளையும் தாமே எழுதி மற்றவர்களுக்குக் கற்பித்தனர். இவரது நாடகங்கள் முதல் முதலில் ராமுடு ஐயர் கலியாணராமய்யர் சபையில் ஆடப்பட்டன. இச்சபையில் நடிகராகவும் பிறகு ஆசிரியராகவும் விளங்கினர். அக்காலத்திலேயே இவர் சன்யாசம் பூண்டனர். அதன்பிறகு இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்று அழைக்கத் தலைப்பட்டனர். சன்யாசம் பூண்டபிறகும் நாடகசபைகளில் வேலை பார்த்தார். வேல் நாயர் சபையிலிருந்தபோது எனது மனோஹரன் நாடகத்திற்கு இவர் தான் தக்க பாடல்கள் எழுதினார். பிறகு சமரசசன்மார்க்க நாடக சபையை சொந்தத்தில் தாமே ஏற்படுத்தி நடத்தினார். இவரால் பாடல்களுடன் எழுதப்பட்ட நாடகங்கள் கோவலன், வள்ளித் திருமணம், பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, சீமந்தினி, சதியனுசூயா, மணிமேகலை, லவகுசா, சாவித்திரி, சதிசுலோசனா பிரகலாதன், வீர அபிமன்யு, சிறுத்தொண்டர், பிரபுலிங்கலீலை, பார்வதி கல்யாணம் முதலியன. இவர் 1922-ஆம் வருஷம் பூதவுடலைவிட்டு நீங்கின பிறகு சென்னை நடிகர் சங்கத்தார் புதுவையில் இவருக்கு ஒரு மண்டபம் கட்டினர். அதில் வருஷாவருஷம் திரு. டி. கே. ஷண்முகம் அவர்கள் முயற்சியால் சுவாமிகளுக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேற்குறித்த இவரது நாடகங்களில் வீர அபிமன்யு என்னும் நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது.