நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ F. G. நடேசய்யர்

ஸ்ரீ F. G. நடேசய்யர்

இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாழ்ந்தவர். சுகுண விலாச சபை 1912-வது வருஷம் திருச்சிக்கு போய் சில நாடகங்கள் ஆடின போது அவைகளைப் பார்த்துத்தானும் அப்படிப்பட்ட சபை ஒன்று சேர்க்க தீர்மானித்து அவ் வருஷமே ஆரம்பித்தனர். இவர் ஒரு நல்ல நடிகர், சங்கீதம் மாத்திரம் என்னை போலத்தான். அவர் தான் ஏற்படுத்திய சபையைக் கொண்டு எனது சில முக்கிய நாடகங்களை ஆடியுள்ளார். ஆங்கிலத்திலும் நாடகங்கள் ஆடியுள்ளார், ஷேக்ஸ் பியருடைய ஹாம்லெட் நாடகத்திலும் ஷெரிடன் எழுதிய பிஷாரோ என்னும் நாடகத்திலும் முக்கிய பாத்திரங்களை நடித்து பெயர் பெற்றார். எங்கள் சபையிலும் என்னுடன் சேர்ந்து இரண்டு நண்பர்கள் என்னும் நாடகத்தில் சுகுமாரன் வேடம் பூண்டு நன்றாய் நடித்தது ஞாபகமிருக்கிறது, இவர் திருச்சியில் பன்முறை மனோகரனாக நடித்திருக்கிறார். அதன் மீதுள்ள ஆர்வத்தினால் திருச்சி உறையூரில் தான் குடியிருந்த வீட்டிற்கு மனோகர விலாஸ் என்றே பெயர் வைத்தார். இவருக்கு சென்னை சங்கீத நாடக சபையார் இவர் நடிப்புக் கலைக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன் பரிசு கொடுத்தனர் இவர் சென்ற வருடம் காலகதி யடைந்தபோது தென்னிந்திய நாடகம் ஒரு நல்ல நடிகரையும் நான் எனது ஒரு நல்ல நண்பனையும் இழந்தோம்.