நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/25. அறிவுடைமை

25. அறிவே ஆக்கம் தரும்
(அறிவுடைமை)

அறிவு என்பது அறிந்து செயல்படுதல்; எப்பொழுது எது செய்தால் அது நன்மை தருமோ அப்பொழுது அதனைச் செய்வது அறிவுடைமையாகும். முளையிலே களைந்துவிடலாம் என்று பகைவன் மெலிந்திருக்கும் நிலையில் அவனைத் தாக்குவது தற்காலிக வெற்றி தரலாம். “நொந்து கிடப்பவனை இவன் நோகடித்தான்” என்று இந்த உலகம் பழிதூற்றும்; எதிரி தலை நிமிர்ந்து வாழும்போது நல்லது கெட்டது காண அவனோடு மோதினால் அஃது ஆண்மை; அந்த வெற்றி நிலைத்து நிற்கும்; குறுக்கு வழி சறுக்கிவிடும். திங்கள் பிறை வடிவில் இருக்கும்போது இராகு கேது இவை அதனைப் பற்றா, முற்றி வளர்ந்த நிலையிலேயே அவை அதனைச் சுற்றும்;; அதுவே அதற்குப் பெருமை: கடன்பாக்கி கேட்பதாக இருந்தால் அவன் கையில் காசு உள்ளதா என்று கவனிக்க வேண்டும்; சட்டி பானை தெருவில் எறிகிறேன் என்றால் அது குன்று முட்டும் குருவியின் செயல் ஆகும்.

ஏழைகள் என்றும் அடங்கி இருப்பது அவர்களுக்கு ஏற்றம் தரும்; நிறை குடம் தளும்பாது; குறை குடம் நீர் தளும்பினால் உள்ளதும் வெளிப்படும். அடக்கம் இல்லை என்றால் அவனை மற்றவர்கள் முடக்கிவிடுவர். அவனைப் பற்றி ஆதியோடு அந்தமாக நீதிகேட்டு விமரிசிப்பர். தப்பிப் பிறந்தவன் என்று அவன் பிறப்பில் தப்புக் காண முற்படுவர். உலகம் அவனை ஒப்புக் கொள்ளாது. அடக்கம் உயர்வு தரும்; அதுவே பிழைக்கும் வழி; அடங்காமை நிறை வறுமையுள் ஆழ்த்தி விடும். இல்லாதவர்கள் அவசரப்படக்கூடாது. வாய்க் கொழுப்பால் மண்ணைத் தலையில் வாரிக் கொட்டிக் கொள்ளக்கூடாது.

எட்டிக்காய் எட்டிக் காய்தான்; அதனை எந்த நிலத்திலும் விதைத்தாலும் அது தென்னையாக மாறவே மாறாது. அனைவரும் உயர்வுதரும் சுவர்க்கம் புகுவர் என்று கூறமுடியாது; ஒரு சிலர்க்கே அந்த வாய்ப்பு அமைகிறது. அதற்காக அங்கலாய்ப்புப்பட்டால் பயன் இல்லை.

வேப்பம் இலை நடுவே வாழை பழுக்கிறது என்றாலும் வாழை தன் இனிமையை இழக்காது. மோப்பம் பிடிக்கும் நாய் போன்ற இழிந்த இனத்தவர் ஒரு சிலர் ஒருவனைச் சுற்றிக் கொண்டாலும் அவன் சுய அறிவு இயல்பாக உடையான் தன்சால்பு குறையான்.

சொந்த புத்தி கெடாமல் இருக்கும்போது ஒருவன் யாரோடு சேர்ந்தால் என்ன? பழகினால் என்ன? அவன் மனம் உறுதியாக இருக்கும்போது அவனை மடத்தனம் வந்து ஒன்றும் செய்யாது; கடற்கரைதான்; நீர்தோண்டிப் பார்த்தால் நல்ல குடி தண்ணணீர் ஊறுகிறது; மலைப்பகுதி தான்; அங்கே உப்புத் தண்ணீர் சில சமயம் சுரக்கிறது; வியப்பாக இல்லையா? நிலத்தியல்பால் நீர் திரியும் என்பார் வள்ளுவர். நீர் தன் நிலை கெடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நாலடியார் கூறுகிறது; புதிய கருத்து. இரண்டும் இரு கண்ணோட்டங்களில் உண்மையானதுதான்; கெடுவதற்கு வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட்ட கருத்துக்கள் அல்ல; துணை நிற்பன இவை.

நட்பு என்பது பூப்போன்றது; அது மலர்ந்து இருந்தால் தான் மணம் வீசும்; பூ வாடிவிட்டால் அதனை யாரும் நாடார். நட்பு அஃது ஒட்பு உடையது; எடபொழுதும் ஒரே தன்மையது; கூம்பலும் மலர்தலும் இல்லாமல் ஒரு பூ இருந்தால் அதனைச் சிநேகிதத்திற்கு உவமை கூறலாம். எப்பொழுதும் ஒரே நிலையில் எப்பொழுதும் ஒரே நிலையில் பழகுபவரே பண்புடைய நண்பினர் ஆவர்.

சொன்னால் புரிந்து கொள்ளத் தேவை இல்லை; உணர்த்தினாலேயே உணரும் உயர்வு உள்ளவரே உயர்ந்த நண்பர் ஆவர்; பன்னிப் பன்னிப் பலமுறை எடுத்துப் பகர்ந்தாலும் செவியில் சேர்க்காத முரடர்கள் அவர்கள் தொடர்பினை அறுத்துக் கொள்வதுதான் ஆக்கம் தரும்; துன்பத்தினின்று விடுதலை கிடைக்கும். உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். மெல்லிய உணர்வுகள் துல்லியமாக அறிபவரே நல்லியல் உடையவர் ஆவர்.

உன்னை நீதான் உயர்த்திக் கொள்ள வேண்டும்; யாரோ வந்து கைதுக்கி விடுவார்கள் என்று பைதுக்கிச் செல்ல வேண்டாம். தன்னை உயர்த்துபவனும் தான் தான்; தாழ்த்திக் கொள்பவனும் தானே தான். நிலையில் இருந்து படிப்படியாக வளர்பவனும் அவனேதான். எல்லாம் அவரவர் கைகளில்தான் இருக்கிறது; அழித்துக் கொள்ளலாம்; விழித்துக் கொள்ளலாம்; எப்படியும் வாழலாம்.

கப்பல் கரை சேர்கிறது என்றால் கலத்தின் மாலுமிக்குப் பாராட்டு; அவன் தன் கடமையில் கருத்துன்றினான் என்பது அதன் விருத்தம்; எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கவும்; தெய்வம் கொடுத்த பொருளைக் கொண்டு இன்பம் துய்க்கவும்; மகிழ்ந்து உண்க. அதற்கு மேல் ஒருபடி, அதை நீபடி ஆன்றோர் சொற்படி தருமத்துக்குக் கீழ்ப்படி. இயன்றவரை தருமவினை கடைப்பிடி; இவையே வாழ்க்கைப் படிகள்: இம்மூன்றையும் விடாப்பிடியாகக் கொண்டு நடந்து கொள்க. வாதம் விடுக; தருமத்தில் பிடிவாதம் காட்டுக.