நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/27. நன்றியில் செல்வம்

27. பணம் படைத்தும் என்ன பயன்?
(நன்றியில் செல்வம்)

விளாமரம் பக்கத்திலேயே காய்க்கிறது. அதன் மணம் மூக்கையும் துளைக்கிறது. வவ்வால் அருகிருந்தும் அதைத் தின்னச் செல்வது இல்லை. அது அதற்குப் பயன்படாது.

செல்வர்கள் மிக அருகில்தான் இருப்பார்கள் என்றாலும் மானம்மிக்க நல்லோர் அவரிடம் சென்று உதவிக்குக் கேட்கமாட்டார்கள். அச்செல்வம் பயன்படாத ஒன்று யாருக்கும் பயன்படாது. அவர்களே வைத்துப் பூஜிக்கிறார்கள். என்செய்வது?

அள்ளிக்கொள்ளத் தக்கவகையில் கள்ளிப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அவற்றை யாரும் தலையில் சூடிக் கொள்வது இல்லை; சென்று பறிப்பதும் இல்லை. கீழ் மக்கள் செல்வம் மிக்கு வைத்திருந்தாலும் அறிவுடையவர் அவர்களைத் தேடிச் செல்லார்.

அடுத்த வீட்டு ஆசாமி, கொடுத்துப் பழக்கமில்லாத கருமி, அவனிடம் அவசரத்துக்கு என்று கேட்டால் சராசரி மனிதனாகக் “கொடுப்பது இல்லை” என்று கைவிரிப்பான். அவன் 'கடல் நீர். உவர்க்கும்; யார்க்கும் குடிக்கப் பயன்படாது. கிணறு சிறிதுதான்; அதன் தண்ணிர் பருகப் பயன்படும். செல்வம் படைத்தவர்கள் நல்ல உள்ளம் படைத்தவராக இருப்பது இல்லை. ஏழைகளே ஒரளவு அவசரத்துக்கு ஆறுதல் காட்டுவர் என்று கருதப்படுகிறது. இதில் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை. கஞ்சத்தனம் இருசாராரிடமும் உள்ளது. நல்லவர்கள் எங்கோ ஒரு சிலர் நன்மை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களைத்தான் வறியவர் நாடுவர்; தேவைப்பட்டவர் தேடிச் செல்வர்; நாடிய பொருள் அங்குக் கைக்கூடும்.

கரிமுள்ளிச் செடியும், கண்டங்கத்திரியும் யாருக்குமே பயன்படுவது இல்லை. இவற்றைப்போல ஒரு சிலர் செல்வம் பிறர்க்குப் பயன்படாமல் சீரழிகிறது. என் செய்வது; தேவை உடையவரைச் செல்வம் நாடுவது இல்லை. தேவை அற்றவரிடம் அது சேர்ந்து பதுங்கிக் கொள்கிறது.

நல்லவர்கள் செல்வம் பயன்படுபவை; பலர் இருக்கிறார்கள் கஞ்சத்தனம் உடைய கீழ்மக்கள்; அவர்களிடம் செல்வம் தஞ்சம் புகுந்து கொண்டு வெளிவர மறுக்கிறது. என் செய்வது?

நற்குணம் மிக்க பொற்புடையாரிடத்து வறுமை அடைக்கலம் புகுகிறது; பலாப் பிசின் போல ஈயாத கஞ்சன்பால் செல்வம் ஒட்டிக் கொள்கிறது. இது வியப்புக்கு உரியது; இந்த நிலை மாறவேண்டும். உடையவர் இல்லாதவர் என்ற பேதம் நீங்கினால்தான் சமுதாயம் சீர்படும்.

தாமரை மலரில் தாள் வைக்கும் பொன்மகளே நன்மக்களை விட்டு விட்டுப் புன் மக்களைக் காக்கிறாள்; ஏன்? சிந்தித்துப் பார்க்க வேண்டிய சீர்கேடு இது, பணம் எங்கும் முடங்கிக் கிடக்கக் கூடாது. அது பொருளாதாரச் சீர்கேடு; இது மாதிரிதான் வாழ்க்கை இன்பமும்.

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று எங்கே அழைப்புக் கிடைத்தாலும் நுழைப்புக்குப் பின் வாங்கமாட்டார்கள் அற்பர்கள்; மானம் மிக்கவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டி இருந்தாலும் உள்ளது சோறும் நீரும் போதும் என்ற எளிய உணவு உண்டு அமைதி காண்பர். அலைச்சல் என்பது அவர்கள் உளைச்சலில் காணமுடியாது. அலைகிறவர்கள் வாழ்க்கையின் நன்மையைத் தொலைத்தவர் ஆவார்.

நெற்கதிர்கள் நீர் இல்லாமல் வாடுகின்றன. அவற்றை வாழ வைக்கும் பொறுப்பை மேற்கொள்ளா மல் மழை நீர் கடலுள் பெய்கிறது. இதைப் போல் அறிவற்றவர் கைப்பட்ட செல்வம் செறிவு அற்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். வீண் விரயம் ஆக்குகின்றனர். ஏன் என்று கேட்க ஆள் இல்லை; இன்னும் இந்தச் சமூகம் விழிக்கவில்லை.

நுண்ணுணர்வு அற்ற பேதைகள் நூல் பல படித்தாலும் அவர்கள் அறிவு பெருக்கிக் கொள்வது இல்லை. அதுபோல பேதையரிடத்துப் படும் செல்வம் மேதகு செயல்களுக்குப் பயன்படுவது இல்லை. செல்வம் இருந்தும் செல்வம் ஒழுங்குபடுத்தப்படுவதில்லை; சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி இதுவாகும்.