நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/5. தூயது அன்மை

5. இவளா அழகி யோசித்துக் கூறு
(தூயது அன்மை)

அவள் ஆடை சற்ற விலகுகிறது; அவன் அவளைச் சாடைகாட்டி அழைக்கிறான்; பெண் வாடை வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்தவன்தான்; அவள் மேனி அழகு கண்டு தேனி போலச் சுற்றி வட்டமிடுகிறான்.

“என்னடா உனக்கு?”

“பக்தன் நான்” என்கிறான்.

“சித்தம் இழந்தேன்” என்று பித்தம் கொள்கிறான்.

“இங்கே வா! அவள் கையில் ரத்தம்; அதனோடு அழுகல் புண், இதைத்தானே, "மாந்தளிர் மேனி என்று கூறினாய். அவள் கையில் சொரிந்தாள்; அது எரிந்து புண் ஆகிவிட்டது. சும்மா இல்லை; அதைத் தொட்டுத் தொட்டுப் பெரிதாக்கினாள்; கையில் இப்பொழுது கட்டு ஒன்று கட்டி இருக்கிறாள்; ஈ மொய்க்கிறது. பண்டம் அன்று, முண்டம்! அது கண்டம்; ஒரு தண்டம்; இதைப் பார்த்தபின் நீ யோசித்துக் கூறு; இவளா அழகி? அது வெறும் மயக்கம்.”

“அழகு அழகு என்று பித்தம் பிடித்தவன் போல் பேசுகிறாய்; எதை அழகு என்று கூறுகிறாய்? மேல் தோலா? வாழைப் பழத்தை உரித்துக் காட்டுகிறேன். உள்ளே வழ வழப்புதான்; அங்கங்கே ஓட்டைகள்; துளைகள்; இந்த உடம்பு அதன் மீது போர்த்த போர்வை; அதைத்தான் நீ அழகு என்று கூறுகிறாய்! நான் சொல் வதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அந்தத் தோலைப் புரட்டிப்பார் நீ தொடவே அருவருப்பாய். அதற்காக ஒரு பெண்ணை இழுத்து வந்து தோல் உரிக்க வேண்டும் என்பது இல்லை; சொன்னால் நீ புரிந்து கொள்வாய்; அவ்வளவுதான். அழகி என்று அழிகிறாயே! எது அழகு? நீ யோசித்துக் கூறு.”

“அவள் வாய் இதழ் சிவந்து இருக்கிறது. அதைக் கண்டு “ஆகா பவளம் அது” என்று பகல் கனவு காண்கிறாய்; அவள் போட்ட வெற்றிலை பாக்கு; அதில் சேர்த்துக் கொண்ட சுண்ணாம்புச் சரக்கு; தக்கோலம் போட்டு இவள் இந்தப் புதுக்கோலம் பூண்டிருக்கிறாள். வாய் கமழ்க்கிறது. எல்லாம் அந்தப் பாக்கு வெற்றிலை தான்; அதனோடு சேர்த்து வாசனைப் பொடிகள் கமழ்க்கின்றன. நீ ‘மகிழ்க்கலாம்’ என்று கருதுகிறாய். எல்லாம் வெறும் பூச்சு, தீய காற்று அவள் விடும் மூச்சு. ஆபாசம் அதுதான் அவள் சகவாசம்.

நீ அறச்செயல்களுக்கு முதன்மை இடம் தருக; அஃது உன்னை உயர்த்தும். தோல் அழகைக் கண்டு நீ துவண்டு போகாதே; வாலை இளங்குமரிதான் என்றாலும் அவள் தசைப் பிண்டம்; இதை மறந்து விடாதே; கொழு கொழு வென்று இருப்பதும், மிருது வான மென்மையான அவள் மருதுவான புதுமை; கவர்ச்சி, அவள் மேனி சுருங்கும்; கண்கள் ஒடுங்கும்; கைகால்கள் நடுங்கும்; வாழ்க்கை ஒருநாள் உணங்கும்.”

“என்னை வெறியன் என்கிறாய்; உளறுகிறேன் என்று கருதுகிறாய். அவள் கண்கள் நீரில் தோன்றும் குவளை, அங்கே அதன் அயல் பாய்ந்தோடும் கயல் மீன். உன்னைத் தாக்குவதால் ‘வேல்’ என்று எல்லாம் நீ என்னிடம் அளக்கின்றாய்! அதைக் கவிதை என்று கூறி உன்னையே நீ உயர்த்திப் பேசிக் கொள்கிறாய்!”

“கவிஞரே! என்னுடன் வாரும்; இடுகாட்டில் வந்து பாரும்; அங்கு இருக்கமாட்டார் யாரும். இதோ! இது மண்டை ஓடு; மயிர் முளைத்து இருந்த ஒடுதான்; இன்று வெறும் கூடு; சுட்டு எரிபட்ட மண்டை; சதை இல்லை; குழி விழுந்து கிடக்கிறது. கண் நோண்டி எடுத்து விட்டார்களா? இல்லை; அது பற்றி எரிந்து பசையற்றுவிட்டது; குழிவிழுந்த கண்; பனம் நுங்கு; நுங்கு எடுத்துவிட்ட குழி; பயங்கரமாக இல்லையா! இவளா அழகி? யோசித்துக் கூறு.”

“அவள் நகை முல்லை முகை என்பாய்! நீ கூறுவது எல்லாம் வெறும் மிகை; அதோ சிதறிக் கிடக்கிறதே எலும்புத்துண்டு. அது நீ புகழ்ந்து பேசிய அதி அற்புதப் பல்; பல் என்று நீ இப்பொழுது கூறமாட்டாய். அது வெறும் கல். இதனை அறிந்து கொள்.”

“நில்! அது வெறும் எலும்புத்துண்டு என்று சொல். நீ ஒரு ஞான சூரியன்; யாரோ சொன்னார்கள். ‘தொகுமுகை இலங்கு நகை” என்று; பிறர் சொல்லக் கேட்டுப் பேசுகிறாய். அது கவிதை, முல்லை; அது பல் என்று மாற்றிக்கூறி மகிழ்கிறார்கள். ‘பல் அழகு’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பொய்; அது வெறும் எலும்புச்சில்; யாரோ இப்படித் தவறாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். பெண்ணை நீ மதிக்கலாம்; வேண்டுமானால் தெய்வம் என்று துதிக்கலாம்; விருப்பம் இல்லை என்றால் வெறுத்து ஒதுக்கலாம். ஆனால் அழகி என்று அளக்காதே.”

“செத்துவிட்டாள் ஒருவன் காதலி, வண்டி ஏறி அவள் வகைப்பட்டுவிட்டாள்; மனையில் கொண்டு சென்று மருத்துவர் அவள் சாவின் அருத்தத்தை ஆராய் கின்றனர். காதலியைத் தேடிக்கொண்டு அந்தக் காரிருளில் கனவேகத்துடன் ‘அறுப்பு மனையில்’ நுழைகிறான். வெள்ளை அங்கி அவளை மூடி இருந்ததால் அவள் முகத்தை மட்டும் காட்டினர் அஃது அவன் காதலி என்பதை அறிவிக்க. “இது முகம்; அவள் எங்கே? “அதோ அறுத்துக் கூறுபடுத்தி வேறு வேறாக வைத்திருக்கிறோம், குடல், கொழுப்பு, நரம்பு, எலும்பு, தசை, நார்கள் நன்றாகப் பார்; இவள்தான் உன் காதலி!”.

“நீ கூறும் காதலி வேறு எத்திறத்தாள்? கூட்டிக் கழித்துப் பார்; அவள் ஒரு சதைக் கட்டு, குருதிக் கொட்டு.”

“மேனி மாசற்ற பட்டு” என்று பிதற்றுவாய். அவள் பேரும் பட்டுதான். எடு கொஞ்சம் துட்டு. இங்கே அவளைக் கொண்டு வந்த அறுவடைக்காரருக்குக் கூறு போட்டுத் தரவேண்டும்; அப்பொழுதான் அவர்கள் அழகாக மூடி அவளைத் திருப்பித் தருவார்; இதை ‘மாமூல்’ என்பாய்; ‘சகஜம்’ என்போம்; அவர்கள் சுடு காட்டில்கூட விடமாட்டார்கள்; கொடுத்தாக வேண்டும்; செத்தவள் உயிர் பிழைத்து வரப்போவது இல்லை. இவளா அழகி? யோசித்துக் கூறு”.

“பட்டுத்துகில் உடுத்திப் பகட்டான தோற்றத்துடன் பட்டம்மாள் காட்சி அளிக்கிறாள்; சந்தனம் பூசிச் சவ்வாது பொட்டிட்டுக் கமக்கிறாள். மல்லிகைப்பூ மணக்கும் கூந்தல் அவ்வல்லிக் கொடிக்கு: எல்லாம் மேற்பூச்சு; இவற்றைக் கண்டா அவள் பேரழகி என்று பிதற்றுகிறாய்? ஊறுகாய் டப்பாவுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டால் அது பளபளக்கத்தான் செய்யும். அலங்காரம் கண்டு அது காரம் உடையது என்று பேரம் பேசுவது அறிவுடைமையாகாது; அழுகலைத்தான் ஊறுகாய் என்கின்றனர். அது புளிக்கத்தான் செய்யும். அதைத் தின்று நீ களிக்க நினைக்கிறாய். உள்ளே இருக்கும் பண்டம் எது என்று அறியாத முண்டங்கள் சிலர் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று எதையும் மேற்போக்காகப் பார்த்து அதுதான் மெய்ம்மை என்று கருதுவர். சேலையும் பூவும் அழகுடையவைதாம்; அவற்றைக் கண்டா அவள் அழகி என்கிறாய்? ஊறுகாய் டப்பா; அஃது உடம்புக்கு ஆகாது.”

கர்வம் பிடித்தது இந்த மண்டை ஒடு; குழிந்து ஆழ்ந்து கண்டார் அஞ்ச அது சிதைந்து கிடக்கிறது. அப்பொழுதும் அது சிரிப்பதுபோல் அதன் பற்கள் விரிந்து கிடக்கின்றன. “ஏய்! நான்தான் நீ காதலித்த கண்ணம்மா; என்னைக் கடித்துத் தின்னத் துடித்துக் கிடந்தாய்; படித்து வைத்த பழங்கவிதை, அன்று முடித்து வைத்த புகையிலை. காரம் மணம் இன்று செத்துவிட்டன. என்னைக் கண்டுதான் நீ கற்கண்டு என்றாய்; சுவைத்தாய்; மிகைத்தாய், நகைத்தாய் உன் பெற்றோர் களையும் பகைத்தாய். நான் இப்பொழுது மண்டை ஓடு, இருப்பது சுடுகாடு, நான் தனிமையில் தான் இருக்கிறேன். வந்தால் இனிமையாகப் பொழுது கழிக்கலாம், பேய் வரும் என்று அஞ்சுகிறாயா அஞ்சாதே, அதுவும் என்னைக் கண்டு ஓடிவிடும், நானா. அழகி? யோசித்துக்கூறு”

முடைநாற்றம், அடைமழை; பெடைக் கழுகு; உடன் அதன் இணைப்பறவை இவை என்ன செய்கின்றன. குத்திக் குத்திக் குருதியைச் சுவை பார்க்கின்றன; தத்தித் தத்தி ரணப்படுத்தி நிணத்தில் முழுகுகிறது. கணத்தில் அந்த உடலும் மறைகிறது, இது யார்? உன் ரசிகை; இப்பொழுது அவள் இந்தப் பறவைகளுக்கு ருசிகை.

நீ விரும்புவது இந்த உடல்; அதனைத் தழுவும் அற்ப ஆசையை நீ விடுக; நான் தெரிவிக்கும் மடல் இது;

காயம் இது பொய்; மாயம் நீ காண்பது, அறம் மெய்; அறிவு மெய்; உண்மை மெய். இம்மூன்றும் சேர்வதுதான் அழகு அறிக, ஆராய்க, மெய்ப்பொருள் காண்க.