நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருமாலை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:


திருமாலை தனியன் தொகு

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்த

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை தொகு

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. (1) 872


பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (2) 873


வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (3) 874


மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே. (4) 875


பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே. (5) 876


மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6) 877


புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான். (7) 878


வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (8) 879


மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே (9) 880


நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10) 881


ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (11) 882


நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே. (12) 883


எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே. (13) 884


வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே. (14) 885


மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே. (15) 886


சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்துதன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே. (16) 887


விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.(17) 888


இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே. (18) 889


குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே. (19) 890


பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே. (20) 891


பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே (21) 893


பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய் (22) 894


கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே (23) 895


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே. (24) 896


குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா. கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (25) 897


போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே. (26) 898


குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. (27) 899


உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே. (28) 900


ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே. (29) 901


மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. (30) 902


தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31) 903


ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே (32) 904


மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே (33) 904


உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே. (34) 906


தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால்சிக் கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே. (35) 907


மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே. (36) 908


தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (37) 909


மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (38) 910


அடிமையில் குடிமை யில்லாஅயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே. (39) 911


திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. (40) 912


வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே. (41) 913


பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே. (42) 914


அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே. (43) 915


பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. (44) 916


வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. (45) 917