நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/11வது திருமொழி

   11ம் திருமொழி  தாமுகக்கும்

திருவரங்கத்துச் செல்வன் மேல் காமுறுதல்

         தரவு சொச்சகக் கலிப்பா

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ?*
யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்!*
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்*
ஆ!முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே!                   1

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்*
குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.               2

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்*
அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்*
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்*
எங்கோல் வளையால் இடர்தீர்வ ராகாதே?                         3
 
மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்*
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற*
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்*
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே?                      4

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று*
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்*
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்*
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே.              5

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்* காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்*
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது* நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே.       6

உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடறுத்து*
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்*
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்*
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே.               7

பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்கு* பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்*
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்*
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே.                          8

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்*
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து*
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த*
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே.                       9

செம்மை யுடைய  திருவரங்கர் தாம்பணித்த*
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்*
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்*
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே?                  10

       ஆண்டாள் திருவடிகளே சரணம்