நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/12வது திருமொழி

      12ம் திருமொழி மற்றிருந்தீர்

அரங்கனோடு என்னைச் சேர்ப்பீர் எனும் ஆண்டாள் துணிவு

     அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மற்றிருந் தீர்கட்கு அறியலாகா மாதவ னென்பதோர் அன்புதன்னை*
உற்றிருந் தேனுக்கு உரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை*
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி*
மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்.           1

நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்*
பாணியா தென்னை மருந்து செய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்*
மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்*
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள்! என்னும்சொல்லு*
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்*
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற*
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே  நள்ளிருட் கண்என்னை யுய்த்திடுமின்.         3

அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று*
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்*
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா*
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4

ஆர்க்குமென் நோயி து அறியலாகா   தம்மனைமீர்! துழதிப்படாதே*
கார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்*
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்  காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து*
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த  பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.       5

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்*
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டு இருடீகேசன் பக்கல் போகேயென்று*
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடி சிலுண்ணும் போது*ஈதென்று
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் பத்தவி லோசநத்து உய்த்திடுமின்.         6

வண்ணம் திரிவும் மனங்குழைவும்  மானமி லாமையும் வாய்வெளுப்பும்*
உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்*
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும்* பிலம்பன்தன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்.           7

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்*
பற்றி யுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக் கேச்சுக்கொலோ?*
கற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து*
கொற்றக் குடையாக வேந்திநின்ற  கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்.        8
 
கூட்டி லிருந்து கிளியெப்போதும் கோவிந்தா! கோவிந்தா என்றழைக்கும்*
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந் தான்!என்று உயரக்கூவும்*
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்  நன்மை யிழந்து தலையிடாதே*
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்  துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்.        9

மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்*
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை*
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை*
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.    10

         ஆண்டாள் திருவடிகளே சரணம்