நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/13வது திருமொழி

          13ம் திருமொழி கண்ணனென்னும்

அச்சுதன் அணிகளால் தன் வாட்டம் தவிர்க்க முயலுதல்

       அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை*
புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின்று அழகு பேசாதே*
பெண்ணின் வருத்த மறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு* என்னை வாட்டம் தணிய வீசீரே.           1 

பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை*
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே*
கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி*
நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே.     2
 
கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்*
நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை*
அஞ்சேல் என்னான் அவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை*
வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே.              3 

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்*
காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை*
ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய*
நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே.            4 

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவனொருவன்*
தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்*
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமால் ஊதி வருகின்ற*
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே.          5 

நடையொன் றில்லா உலகத்து நந்த கோபன் மகனென்னும்*
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு*
புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்*
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே.      6 

வெற்றிக் கருள கொடியான்தன் மீமீ தாடா உலகத்து*
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே*
குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு*
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே.                   7 

உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத*
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்*
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்*
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே.       8 

கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்*
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்?*
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று*
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே.   9 

அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணிவிளக்கை*
வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை*
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்*
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே.          10 

         ஆண்டாள் திருவடிகளே சரணம்