நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/14வது திருமொழி

          14ம் திருவொழி  பட்டி மேய்ந்து

       பிருந்தாவனத்திலே பரமனைக் கண்டமை

        அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்*
இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?*
இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி*
விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.         1

அனுங்க வென்னைப் பிரிவுசெய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்*
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே?*
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல* வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.           2

மாலாய்ப் பிறந்த நம்பியை  மாலே செய்யும் மணாளனை*
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே?*
மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்*
மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே.          3

கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி* என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?*
போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்*
வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.           4

மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்*
ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே?*
பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்*
வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே.                5

தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்*
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே?*
உருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்*
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே.          6

பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை*
கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே?*
அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்*
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே.       7

வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை*
அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே?*
களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்*
மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே.              8

                   சாற்றுப்பாட்டுக்கள்

நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி*
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே?*
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன்மடிய*
வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே.           9

பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் தன்னை* பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்*
மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்*
பெருந்தாள் உடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்றும் இருப்பாரே.       10

             ஆண்டாள் திருவடிகளே சரணம்