நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/7வது திருமொழி

  7ம் திருமொழி  கருப்பூரம் நாறுமோ

பாஞ்சசன்யத்தைப் பற்பநாபனோடும் சுற்றமாக்கல்.

           கலிவிருத்தம்

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?*
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ?*
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்*
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.                 1

கடலில் பிறந்து கருதாது* பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில்* குடியேறித் தீய வசுரர்*
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!                      2

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்*
இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்*நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதேவன் கையில்*
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ்சங்கெ.                       3

சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்*
அந்தர மொன்றின்றி யேறி அவன்செவியில்*
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே!*
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே.                         4 

உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை*
இன்னார் இனையாரென்று எண்ணுவார் இல்லைகாண்*
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்*
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே.                         5 

போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்*
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு*
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய*
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே! 			   6

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்*
செங்கண் கருமேனி வாசுதே வனுடய*
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்*
சங்கரையா! உஞ்செல்வம் சால வழகியதே.                           7

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்*
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே*
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்*
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே!                             8

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப*
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்*
பொதுவாக உண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்*
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே!                      9

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்*
வாய்ந்த பெருஞ்சுற்றம் ஆக்கிய வண்புதுவை*
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்*
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே.                           10

         ஆண்டாள் திருவடிகளே சரணம்