நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/9வது திருமொழி

       9ம் திருமொழி சிந்தூரச் செம்பொடி

     திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடல்

                 கலிவிருத்தம்

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்*
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்*
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட*
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.              1

போர்களிறு பொரும்மாலிருஞ் சோலையம் பூம்புறவில்*
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற*
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்*
ஆர்க்கிடுகோ தோழிஅவன் தார்ச்செய்த பூசலையே.                    2

கருவிளை யொண்மலர்காள்! காயாமலர்காள்! * திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்*
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி*
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே.                     3

பைம்பொழில் வாழ்குயில்காள்! மயில்காள்!ஒண் கருவிளைகாள்!*
வம்பக் களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!*
ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ் சோலைநின்ற*
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே?                  4

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற*
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்*மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்! தொகுபூஞ்சுனை காள்!*சுனையில்
தங்குசெந் தாமரைகாள்! எனக்கோர்சரண் சாற்றுமினே.                5

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்*
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்*
ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.             6

இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்*நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்*
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்*அடியேன் மனத்தேவந்து நேர்படிலே.                    7

காலை யெழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்*
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ*
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்*
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே.            8

கோங்கல ரும்பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்*
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்*
பூங்கொள் திருமுகத்து  மடுத்தூதிய சங்கொலியும்*
சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ.       9

சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது*
வந்திழி யும்சிலம்பாறுடைமாலிருஞ் சோலைநின்ற*
சுந்தரனை, சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த*
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே.                  10

    ஆண்டாள் திருவடிகளே சரணம்