நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தெருவோடு போனவன்

16. தெருவோடு போனவன்

கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஒடிக் கொண்டிருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கிய மாதிரி ஒடிக் கொண்டிருந்தது. நவராத்திரிக் கொலுவுக்கு வீட்டுக்கு வீடு போகும் பெண்கள், பட்டுப் பூச்சிகள் மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர். பூக்காரப் பெண்கள், ரிக்‌ஷா வண்டிகள், கார்கள், பாதசாரிகள், தெரு அதிர ஒடும் லாரிகள் எல்லாம் கண்களுக்கு முன் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.

“மாமீ! மாமீ! கதவைத் திறங்க மாமீ...!” அப்போதுதான் செடியிலிருந்து கொய்து கொண்டு வந்த ரோஜா மலர் போல, ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி கையில் குங்குமச் சிமிழோடு கதவைத் தட்டினாள்.

தோளிலிருந்து நழுவிய வெள்ளைப் புடவையை நேர் செய்து கொண்டு, ஜன்னலோரத்திலிருந்து எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

“குங்குமம் எடுத்துக்குங்க மாமீ! எங்காத்திலே கொலு-நான் கிருஷ்ணன் வேஷம் போட்டுண்டு டான்ஸ் ஆடப் போறேன். நீங்க அவசியம் பார்க்க வரணும்.”

எனக்குச் சுரீரென்று இதயம் அடி வாங்கியது போல வலித்தது. கண்ணோரங்களில் ஈரம் கசிந்து விட்டது.

“நான் குங்குமம் வச்சுக்கப்படாது குழந்தே! உன் டான்ஸைப் பார்க்கறதுக்குக் கட்டாயம் வரேன், நீ சமத்தோ இல்லியோ! அடுத்தாத்துலே போய்க் கொடு...!”

“ஐயய்யே! இதென்ன மாமீ! எங்க அம்மா ஒங்க மாதிரித்தானே இருக்கா? அம்மா தினம் ரெண்டு மூணு தரம் குங்குமப் பொட்டு வச்சுக்கறாளே? நீங்க ஏன் வச்சுக்கப்படாது?”

“நான் அதுக்குக் கொடுத்து வைக்கலியே அம்மா! என்ன செய்யறது?”

“குங்குமப் பொட்டு வச்சிண்டா உங்க முகத்துக்கு எவ்வளவு நன்னாயிருக்கும் தெரியுமா? கொஞ்சம் உக்காருங்க மாமீ நானே வச்சு விட்டுடறேன்.” துறுதுறுவென்று இருந்த அந்தக் குழந்தையின் மலர்ந்த விழிகள், அகன்று விரிந்து ஆவலோடு என் முகத்தைக் கெஞ்சுகிற பாவனையில் ஊடுருவி நோக்கின.

நான் பூவையும், மஞ்சளையும், குங்குமத்தையும் இழந்தவள். அந்தக் குழந்தை அவற்றின் நிறைவான, மங்கல மயமான, பவித்ரம் செறிந்த வாழ்வை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பவள். என் பயங்கரத்தை - என் சோகத்தை - என் அமங்கலத்தை அதற்குப் புரிய வைக்க முயற்சி செய்வதை விட அதன் கெஞ்சுதலுக்குத்தான் தாற்காலிகமாக நான் பணிந்துவிட்டால் என்ன? 'குழந்தையையும் தெய்வத்தையும் ஏமாற்றக்கூடாது. அப்படி ஏமாற்றும்போது நாமே நம்மை அறியாமல் ஏமாற்றிக் கொள்கிறோம்’ என்று கேள்விப்பட்டிருந்தேன் நான்.

பாவமோ புண்ணியமோ,ஆகுமோ ஆகாதோ! அவற்றையெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்தக் குழந்தை ஏமாந்து போய் நிராசையோடு திரும்பக்கூடாது. அதுதான் எனக்கு முக்கியம்.

நான் குனிந்து உட்கார்ந்தேன். என் நெற்றி அந்தப் புன்னகை நிறைந்த குழந்தையின் முகத்தை நோக்கி அண்ணார்ந்தது. தளதள வென்றிருந்த அந்தப் பிஞ்சுக் கையின் விரல்கள், ஆவலோடு குங்குமச் சிமிழில் நுழைந்தன. என் நெற்றி சிலிர்த்தது. பயங்கரமும் புளகமும் சமமாக விரவிய ஒர் உணர்வின் சலனம் என் உடல் முழுவதும் பரவியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன!. அந்த இளம் உள்ளத்தின் திருப்திக்காக, என் முதிர்ந்து மரத்துப்போன மனத்தின் வேதனைகளை அடக்கிக் கொண்டு சிரிக்க முயன்றேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்க வரும் எண்ணற்ற குழந்தைகளைப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது காண்கிறேன். அப்போதெல்லாம் மனத்தில் சாதாரணமான வெறும் சாந்திதான் நிலவுகிறது. ஆனால்..? இந்தக் குழந்தை!... இது தெய்வலோகத்தில், சிருஷ்டியின் திறனெல்லாம் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மலர், இதயத்தின் நிராசைகளையெல்லாம் அழித்து நெஞ்ச விளிம்பில் பொங்கும் ஆசைக் குமுறலை வளர்க்கும் நிர்மால்யம்!

மாதுளை அரும்பு போன்ற அந்தப் பிஞ்சு விரல்கள், என் சூனிய நெற்றியை நெருடின. குங்குமம் புருவங்களில் சிதறி விழுந்தது.

“எப்படி மாமீ! கண்ணாடிலே பாருங்கோ! நன்னாப் பொட்டு வச்சிருக்கேன்”

“ஆகட்டும் கட்டாயம் பார்க்கிறேன். நீ போயிட்டு வரியா?”

"நீங்க கொலுவுக்கு வரணும் மறந்துடப்படாது.”

“அவசியம் வரேன்! வந்து உன் டான்ஸைப் பார்க்க வேண்டாமா?” - பூமியில் உருளும் சண்பகப் பூப் பந்து போல், அந்தச் சிறுமி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே குங்குமச் சிமிழோடு அடுத்த வீட்டிற்குப் போனாள். வாசல் கதவைச் சாத்திவிட்டு, மறுபடியும் ஜன்னலோரத்து நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன். எதிரே நாற்காலி நிறையப் பள்ளிக்கூடத்துக் ‘காம்போஸிஷன்’ நோட்டுக்கள்! அருகே சிவப்பு மை நிறைந்த மைக்கூடு! கட்டைப் பேனா! கைக் கடிகாரத்தில் ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கமாக ‘டியூஷனுக்கு’ வருகின்ற பெண்களை இன்று இன்னும் காணவில்லை.

எனக்கென்று வாழ எதுவும் இல்லை. வெள்ளை வாயில் புடவையைப் புரளப் புரளக் கட்டிக் கொண்டு, கால் செருப்புத் தேயப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டு வரும் இந்த உத்தியோகந்தான், ஆசையின் ஒரே சாதனம். வாழ்வு அழிந்துவிட்டது: வருஷங்கள் பல கழிந்துவிட்டன; ஆனால் ஆசை அழியவில்லை; உள்ளத்தால் விதவையாக, உடம்பால் வாத்தியாரம்மாவாக காலம் போய்க் கொண்டிருக்கிறது. காலத்தோடு காலமாக நானும் போய்க் கொண்டிருக்கிறேன். சிறை போன்ற வாழ்வு. பெரிய வீடு. ஒடுங்கிப் போன வாழ்வின் சிறிய பிம்பம். உயிரோடு பிணமாக உலாவி வருகிறேன். மனத்தின் சாந்தியை மங்காமல் காப்பாற்றும் இந்த உத்தியோகமும் இல்லை என்றால், என்றைக்கோ, தூக்குக் கயிறோ, கொல்லைக் கிணறோ, இந்த ஏழை ஆத்மாவைப் பலிகொண்டு போயிருக்கலாம். அதில் வியப்பென்ன? பயங்கரமென்ன? வாழ முடியாதவர்களுக்கு, எல்லைக்கு அப்பால் பிடித்துத் தள்ளப்பட்டவர்களுக்குச் சாவு ஒரு சஞ்சீவி அல்லவா?

“டீச்சர்! டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்!” எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தேன். குஞ்சுவும் ராஜமும் தான் வந்திருந்தார்கள்.

“என்னடி இது? நீங்க புஸ்தகம் கொண்டு வரலியா?”

“இல்லே டீச்சர்.”

“இப்ப என்ன காரியமா வந்தீங்க ரெண்டு பேரும்”

ராஜமும், குஞ்சுவும் பதில் சொல்லாமல் என் முகத்தையே வெறித்து வெறித்துப் பார்த்தனர். பின் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னடீ? என் முகத்திலே ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா? கேட்டதுக்குப் பதில் சொல்லாமே இப்படிப் பார்க்கிரீங்க?"

“இல்லே டீச்சர்... நீங்க ஒரு நாளும் நெத்தியிலே குங்குமம் வச்சுக்கமாட்டீங்களே?. இன்னிக்கு மட்டும் வச்சிண்டிருக்கீங்களே...?”

என் தவறு எனக்கு அப்போதுதான் புரிந்தது. குழந்தை போனதும் அதை நான் அழித்திருக்க வேண்டும். மறந்துவிட்டது.

"ஓ! இதைச் சொல்றீங்களா?- இதுவந்து...இதை ஒரு குழந்தை விளையாட்டுக்காக வற்புறுத்தி இட்டுட்டுப்போச்சு” என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாக அதை அழித்தேன்.

"ஏன் டீச்சர் அழிச்சிட்டீங்க? உங்க நெத்திக்கு அழகா இருந்துதே?”

"அது சரி, வந்த காரியத்தைச் சொல்லுங்க”

"நவராத்திரி முடியற வரைக்கும் கொலுவுக்கு இருக்கணுமாம்; ‘டியூஷன்’ வேண்டாம்னு அம்மா சொல்லச்சொன்னாங்க்."

“சரி போயிட்டு வாங்க...அப்போ இன்னும் ஏழெட்டு நளைக்கு ‘டியூஷனுக்கு’ வரமாட்டீங்க?... இல்லியா?”

"ஆமாம் டீச்சர்.”

தலைநிறைய மல்லிகைப் பூ கொத்துக் கொத்தாக அசைய, சடைக்குஞ்சலங்கள் ஆட ராஜமும் குஞ்சுவும் தெருவில் திரும்பி நடந்து மறைந்தார்கள்.

பொட்டை அழித்துவிட்டேன்.மீண்டும் ஒரு பிரமை!அந்தக் குழந்தையின் பட்டுக் கையிலுள்ள பிஞ்சு விரல்கள்,நெற்றியில் அழுத்திக் குங்குமத்தைத் தேய்ப்பதுபோல ஒரு உணர்வு. சுருட்டை சுருட்டையாக மயிர் புரளும் முன் நெற்றிக்கும், அடர்ந்த புருவங்களுக்கும் இடையே அந்த உணர்வின் விளைவாக ஒரு கிளுகிளுப்பு ஊடுருவிக் கொண்டிருந்தது. எண்ணங்களின் அடக்க முடியாத வேகம். சிறைப்பட்ட தண்ணீர் உடைத்துக் கொண்டு பெருகுவதுபோல, இதயவெளியில் பாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு பெண் கல்யாணமாகாமல் அனாதையாக வாழ்ந்துவிடலாம். கல்யாணம் ஆனபின் கணவனுக்கு முந்திக் கொண்டு இறந்துவிடலாம். ஆனால் வாழ வேண்டிய பருவத்தில், வாழ்கின்றவர்களுக்கு நடுவே, வாழாதவளாக ‘விதவை’ - என்ற பேரில் உயிரோடிருப்பதைப் போலச் சித்திரவதை வேறில்லை.புஷ்பங்களுக்கு நடுவே கிடந்து புரளும் சுகம்போல, யெளவன மலர்களாகிய பெண்களின் பள்ளிக்கூடத்தில் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டேனோ, இல்லையோ, அதனால்தான் பிழைத்தேன்! மனம் வழி தவறிய ஆசைகளின் ஒழுங்கற்ற மார்க்கங்களிலோ, ஆசைகளின் கொட்டத்துக்கு முடிவு காட்டும் சாவிலோ செல்லாமல், பொறுத்துக்கொண்டு செல்வதற்குக் காரணம் குழந்தைகளின் முகம்தான்.

இன்னும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. தசரா விடுமுறை. ராஜமும், குஞ்சுவும்கூட ‘டியூஷனுக்கு’ வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.தனிமை! தனிமை! இந்தப் பெரிய வீட்டில், சிறிய உள்ளம் அலைமோதும் ஏக்கத்தினிடையே எப்படித்தான் தத்தளிக்கப் போகிறதோ? எண்ணங்களை எண்ணிப் பார்ப்பதற்கே நேரமில்லாமல், மனத்தை மற்றவர்களுக்கு நடுவே அவர்களுடைய கோலாகலத்தில் மூழ்கச் செய்துவிட்டால், வாழ்வின் அமங்கலமான பயங்கரம், தனிமையின் ஏக்கம், எல்லாம் மறைந்து விடும், போர்வையால் உடலை மூடிக் கொண்டதும், அதுவரை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்த குளிர் மறைகின்ற மாதிரி!

கண்களைச் சொருகிக் கொண்டு தூக்கம் இமை வழியே கனமாக இறங்கிக் கொண்டிருந்தது. மணி ஒன்பதுகூட ஆகவில்லை. வழக்கமாகத் துங்குகின்ற நேரமும் இல்லை அது! ஆனால் என்னவோ தெரியவில்லை! காரணத்தைச் சொல்லிக் கொண்டா வருகிறது தூக்கம்? அப்படியே நாற்காலியில் தலையைச் சாய்த்தேன். சாப்பாடு?... அதைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. ஜன்னல் வழியே புகுந்த தெருவோரத்துப் பன்னீர் மரத்தின் குளுமையான வாசனை நிறைந்த காற்று, முகத்தில் ஜிலுஜிலுவென்று விளையாடியது.இந்தக் காற்றின் ஸ்பரிச சுகத்திற்கு வேறு உவமை சொல்ல வேண்டுமானால், அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்கள் என் நெற்றியில் பொட்டு இட்டனவே, அந்த ஸ்பரிச சுகத்தைத்தான் சொல்ல வேண்டும்.

நெற்றியில் பளபளவென்று கருமை மின்னும் சாந்துப் பொட்டு வைத்துக்கொள்கிறேன். நாசித் துவாரங்களைத் தெய்வலோகத்திற்கு இழுத்துச் செல்லும் மணம்மிக்க குடை மல்லிகைச்சரத்தைப் பந்து பந்தாகச் சுருட்டித் தலையில் வைத்துக்கொள்கிறேன். ரோஜா நிற ஜார்ஜெட் புடவை, உடலில் பட்டும் படாததுபோல மென்மையாக ஒட்டிக்கொண்டிருந்தது. கையில் தேங்காய் பழக்கூடையை எடுத்துக்கொண்டு, அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன்.

கோவில் வாசலில் யாரோ ஒரு சிறுமி இரைந்து கத்தி என்னை கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்க்கிறேன். கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டு நிற்கிறாள்.

“மாமீ! மாமீ! இப்ப நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க அம்மாகூட இவ்வளவு அழகு இல்லை."

அழகின் அளவுக்கு வரம்பு கட்டிவிடுகிறவளைப்போல, அந்தச் சிறுமி இரண்டு கையையும் நீட்டி விரித்து உதடுகளைக் குவிய வைத்துக் கொண்டு மலர மலரக் கண்களை விழிக்கிறாள்.

கையை விரித்தபோது, வலது கையிலிருந்த எண்ணெய்க் கிண்ணம் கீழே விழுந்து எண்ணெய் கொட்டிவிடுகிறது!

"ஐயையோ! எண்ணெய் கொட்டிட்டுதே மாமீ! எங்கம்மா கோவில் விளக்குலே விட்டுட்டு வரச் சொன்னாளே. இன்னிக்கு அடிதான் வாங்கப் போறேன்.”

“வெளக்குலே விட்டுட்டேன்னு அம்மாக்கிட்டப் போய் பொய் சொல்லிடேன்”

“பொய் சொல்லப்படாது மாமீ! அம்பாள் கண்ணை அவிச்சுப்பிடுவா, பாவம்..”சிறுமியின் கண்களில் உலகெங்கும் தேடினாலும் காணக்கிடைக்காத பயபக்தியின் சாயல் மின்னுகிறது.

"அழாதே! வாசல்லே எண்ணெய்க் கடை இருக்கு. இந்தா, இந்தக் காசைக் கொண்டுபோய்க் கொடுத்துக் கிண்ணத்துலே எண்ணெய் வாங்கிண்டு வா... அதுவரை நான் இங்கேயே நிற்கிறேன்”. ஒரு முழு ஒரணா நாணயத்தை அந்தக் குழந்தையின் கையில் வைக்கிறேன்.

தங்கக் குத்துவிளக்கு ஒன்று, கையும் காலும் பெற்று ஓடின. மாதிரி 'குடுகுடு’ வென்று கிண்ணத்தோடு கோயில் வாசலிலிருந்த கடையை நோக்கி ஒடுகிறாள் சிறுமி.

அவள் கிண்ணத்தில் எண்ணெயை வாங்கிக் கொண்டு ஓடிவருகிறாள். சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு சந்நிதிக்குள் நுழைகிறேன். கோவில்மணி, பாவத்தின் மேல் விழும் சவுக்கடியைப் போல ‘கணீர் கணீரெ’ன்று முழங்குகிறது.

நான் விழித்துக் கொண்டேன். கனவு கலைந்துவிட்டிருந்தது. தொலைவிலிருந்த மாதா கோவிலின் கால அறிவிப்பு மணி, பன்னிரண்டு முறை அடித்து ஒய்ந்து கொண்டிருந்தது. மணி அடித்து ஒய்ந்தபின்பும், ஒலியின் அலைகள் சிறிதுநேரம் ஓயாமல் செவித் துளைகளில் 'கிணுகினு’த்துக் கொண்டிருந்தன. கனவு கலைந்துவிட்டது. கனவைப் பற்றிய இனிய நினைவுகள் மனத்திலிருந்து கலையவேயில்லை: ஒசை ஒய்ந்துவிட்டது, ஆசை ஒயவில்லை! மனம் மரத்துப் போகவில்லை! விந்தைதான்..!

விளக்குகளை அணைத்து விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்தேன். சுற்றிலும் நித்திரைக்கு நடை பாவாடை விரித்து வைத்ததுபோல ஒரே இருட்டு. ஜன்னலுக்கு வெளியே தெரு விளக்குகள் உறங்காமல் ஒடுங்காமல் கடமை வீரர்களைப் போல எரிந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் இருட்டு. இருட்டைச் சுற்றிலும் நான்; இருளில் உறங்கும் இருளைப்போல, வாராத உறக்கத்தை வரவழைக்க முயன்று, வலியக் கண்களை மூடிக் கொண்டு பார்த்தேன். கவலைக்கும், உறக்கத்திற்கும் என்ன பகைமையோ, தெரியவில்லை.

பொழுது விடிந்தது. விடிந்த வேகத்தில் வளர்ந்தது.காலை நண்பகலாகி, நண்பகல் பிற்பகலாகி, பிற்பகல் மாலை என்ற பெருங்கிடங்கில் வந்து தேங்கியது.

“மாமீ... மாமீ.!.. கதவைத் திறங்க மாமீ!” - வரத்தை நாடி ஒடும் பக்தனைப்போல, ஒடிப் போய்க் கதவைத் திறந்தேன். அந்தத் தெய்வீகக் குழந்தை, கையில் குங்குமச் சிமிழோடு நின்று கொண்டிருந்தாள்.

நான் நேற்றுப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டேன். சிறுமி சிரித்துக்கொண்டே, என் புருவங்களுக்கிடையே குங்குமம் தோய்ந்த பிஞ்சு விரல்களை அழுத்தினாள். என் நெற்றி நரம்புகளுக்குள் ‘குபுகுபு’ வென்று மின்சாரத்தை அள்ளிப் பாய்ச்சியது அந்த ஸ்பரிசம். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அவளோடு சேர்ந்து கொண்டு நானும் சிரித்தேன். மீண்டும் என்னைக் கொலுவுக்கு வரச்சொல்லி வற்புறுத்திவிட்டுப் போய்ச்சேர்ந்தாள் அந்தச் சிறுமி.

திறந்த கதவை அடைத்தேன். இதயத்தையும் நினைத்தபோதெல்லாம் இப்படி அடைத்துவிட முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஜன்னலோரத்து நாற்காலியில் என் உடம்பைச் சரணடைத்தேன். தெருவோரத்துக் காட்சிகளைக் கண்கள் பிடித்துக்கொண்டன.

சாரி சாரியாக நகைகளும், புதுப் புடவைகளும் மின்ன, நெற்றி நிறையத் திலகமும், தலை நிறைய பூவுமாகக் கொலு வீடுகளுக்குச் சென்றுவரும் பெண்கள், தெருவை நிறைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

ராஜமும், குஞ்சுவும் வந்து கதவைத் தட்டினார்கள். ஏதோ கலியாணப் பெண்கள் மாதிரி உடலெல்லாம் மினுக்க ஒரு அலங்காரரம்! தலை நிறையப் பூ!

கொலுவுக்குச் செய்தது என்று ஏதோ பட்சணங்களைக் கொண்டு வந்து வைத்து விட்டு, விடை பெற்றுக் கொண்டு போனார்கள்.

"மல்லிகைப் பூ! மல்லிகைப் பூ! முழம் அரையனாத்தான்.”

இதயத்தின் அந்தரங்கமான மூலையொன்றில், வெட்கத்தை மறந்து தனிமையின் துணிவில் ஒரு சிறு ஆசை துளிர்த்தது.

'ஏய், பூ இங்கே கொண்டா!” - எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிச்சல் வந்ததோ? எனக்கே தெரியவில்லை! "யாரும்மா? நீங்களா கூப்டிங்க?"

"ஆமாம், வா." பூக்காரன் என்னை ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே கூடையை என் வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கினான்.

"நாலு முழம் நல்ல மல்லிகைப் பூவாப் பார்த்துக் கொடு.”

அவன் பூவைக் கொடுத்தான். நான் காசைக் கொடுத்தேன்.

"ஏம்மா வீட்டுக்கு வேறே யாராச்சும் வந்திருக்காங்களா?”

"ஏன்? எதற்காக இப்படிக் கேட்கிறே நீ?"

“இல்லே! பூ வாங்கினீங்களே அதனாலே கேட்டேன். நீங்கதான் வச்சுக்க மாட்டீங்களே?” - அவன் போய்விட்டான்.

பூவோடு ஒரு அர்த்தம் நிறைந்த கேள்வியையும் என்னிடம் தொடுத்து விட்டுப் போய்விட்டான். இதயத்தின் அடிவிளிம்பில் ‘ஜிலுஜிலு’ வென்று ஆடிக் கொண்டிருந்த ஆசையின் இளந்தளிர், ‘வெடவெட'வென்று நடுங்கியது. பூவை வைத்துக்கொள்ள இடமுண்டு. தலையிருக்கிறது! அதுவும் இல்லாவிட்டால் தரை இருக்கவே இருக்கிறது. அந்தக் கேள்வி?... அதை எங்கே வைத்துக் கொள்வேன்? இதயத்தில் வைத்துக் கொண்டால், இதயம் வெந்து போய்விடுமே?

முடிவில் ஆசைக்குத்தான் வெற்றி! தொலை தூரத்தில் மங்கிக் கொண்டிருந்த, ‘மல்லிகைப் பூ! மல்லிகைப் பூ...’ என்னும் அவனுடைய குரலின் ஒடுங்கிய தொனியைப் போலவே, அந்தக் கேள்வியும் ஒடுங்கிவிட்டது.

கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். உள்ளே போய் அலமாரியைத் திறந்தேன். மழைக்காலத்து அருவியின் பிரவாகத்தைப்போல, கள்ளத்தனமான அந்த ஆசை உள்ளத்தைச் சிறியதாக்கி விட்டுத் தான் பெரிதாகிக்கொண்டிருந்தது.

எதிரே பெரிய நிலைக்கண்ணாடி வஞ்சகமில்லாமல் இருபத்தெட்டு வயது வாலிபத்தின் பெண்மை அழகை அப்படியே காட்டியது. என்றோ நடந்து என்றோ பாழாகவும் போன, கல்யாணக் கூறைப் புடவையை, நடுங்கும் கைகளால் பிரித்துக் கட்டிக் கொண்டேன். அலமாரிக்குள் கைப்பெட்டி நிறைய அடைபட்டுக் கிடந்த எல்லா நகைகளும் என் உடலில் தத்தம் பதவிகளை அடைந்தன. காதுகளில் வைரத் தோடுகள் மின்னின. கழுத்தில் ‘நெக்லேஸ்’, இரட்டை வடம் சங்கிலி, காசுமாலை! கை நிறையப் பொன் வளையல்கள், மூக்கில் சுடர் தெறிக்கும் மூக்குத்தி, நெற்றியில் அந்தக் குழந்தை தீற்றிவிட்டுப் போன மெல்லிய குங்குமக் ‘கீறல்’. தலையை வட்டமாக முடிந்து கட்டிப் பிச்சோடாப் போட்டு, நாலு முழம் மல்லிகைப்பூவையும் சந்திரப்பிறைபோல் சூட்டிக் கொண்டேன்.

பூவைச் சூட்டிக் கொள்ளும்போது மட்டும் கைகள் கொஞ்சம் நடுங்கின! பூக்காரன் கேட்டுவிட்டுப் போன அந்தக் கேள்வி? சாட்டையைச் சொடுக்கி உதறியதுபோல, மனத்தில் ஒரு மின்வெட்டு வெட்டியது!

கண்ணாடி வாழ்க! வெள்ளைப் புடவையும் மூளிக் காதுகளுமாகப் பாலைவனம் போலிருந்த என்னை, பத்தே நிமிஷங்களில் யெளவனம் ததும்பி வழியும், பருவ அழகு நிரம்பிய சுமங்கலியாகக் காட்டிவிட்டதே? இப்படியே தெருவில் இறங்கி நடந்தால் நான் ‘விதவை’ என்று சத்தியம்செய்தால்கூட யாரும் நம்பமாட்டார்களே? கனமான பட்டுப் புடவை, வழுக்கலும் மொடமொடப்புமாக உடம்பை யாரோ கட்டித் தழுவுகிற மாதிரி எவ்வளவு இதமாக இருக்கிறது? என்னையறியாமலே என் வாய், தானாக ஒரு புன்னகையை இதழ் ஒரங்களிடை நழுவவிட்டது! கண்ணாடியில் பார்க்கிறபோது, அந்தப் புன்னகை என்னையே ஒரு மயக்கு மயக்கிக் கிறங்க வைத்தது.

அலமாரியைச் சாத்தி விட்டுக் கண்ணாடிக்கு முன்பிருந்து, கூடத்துப் பக்கம் வந்தேன்! ‘லேடீஸ் வாட்ச்’சின் - சிறிய எண்கள் தெரியவில்லை. விளக்கைப் போட்டு மணிக்கட்டை உயர்த்தி கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். ஏழரை மணி ஆகியிருந்தது.

சில நிமிஷங்களுக்குள் வாழ்க்கையின் ஓரத்தில் ஒதுக்கியிருந்த என்னுடைய எல்லா அமங்கலங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாக ஒரு பிரமை, அதற்குப் பதிலாக, இதுவரை கிடைக்காமல் இருந்த, அல்லது கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த சகல செளபாக்கியங்களும் பூர்ணமாகக் கிடைத்து, சுமங்கலியாக வாழ்வின் மலையுச்சியில் நிற்பதாக ஒரு எண்ண மிதப்பில், நீந்திக் கொண்டிருந்தேன். உடல் முழுவதும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இன்னதென்று இனவரம்பில் அடங்காத - அடக்கவும் முடியாத ஒரு பூரிப்பு ‘கிளுகிளு’த்துக் கொண்டிருந்தது.

கைகளில் வளைகள் குலுங்கின. காதுத் தோடுகளின் ஒளிச் சிதறல் சுவரில் ‘டால்' அடித்தது. நடந்து போய் அப்படியே ஜன்னலருகிலிருந்த நாற்காலியில் ‘பொத்'தென்று உட்கார்ந்தேன். வீடு நிறைய எல்லா மின்சார விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. தெருவைப் பார்த்து இருந்த பெரிய ஜன்னல், முழுமையாகத் திறந்து கிடந்தது. அந்த ஒளி வெள்ளத்தின் இடையே மங்கலமயமான எண்ணத்தோணியின் மிதப்பில், எங்கோ கண்காணாத வாழ்வின் பூரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, ஒரு சொப்பன அவஸ்தையில், நினைவுள்ளபோதே அமுங்கி ஆழ்ந்து கீழே, கீழே, கீழுக்கும் கீழே செளபாக்கியத்தின் அதலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன்.

நெஞ்சின் ஆழத்தில் எங்கோ ஒரு கோடியைத் தவிர, மற்றெல்லா இடங்களிலும் ‘நான் செளபாக்கியவதி, நான் செளபாக்கியவதி’ என்று மெளனத்தின் ஒசையில்லாத குரலில், பாஷையில்லாத சொற்களில், அர்த்தமில்லாத குறிப்பு ஒன்று கிளர்ந்து கொண்டிருந்தது. பாதத்தின் அடிப்புறம் முள் தைத்து வீங்கினால், செங்கல்லைச் சுட வைத்து ஒத்தடம் கொடுக்கும்போது அந்தச் சூடு வெது வெதுப்பாய் இதமாக இருக்குமல்லவா? அது மாதிரித்தான் இந்த செளபாக்கிய சொப்பனாவஸ்தையில், என் உடம்பு புளகித்துக் கொண்டிருந்தது.

தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில், ஜாக்கிரமுமில்லாமல் சொப்பனமுமில்லாமல் மதுவுண்ட வண்டு போல, தெருவைப் பார்த்தும் பார்க்காமலும் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தேன். ஜன்னலோரமாகத் தெருவில் தன் போக்கில் நடந்து வந்து கொண்டிருந்த யாரோ இருவர், இரைந்து பேசிக் கொண்டு போனார்கள்.

“அட! நீ ஒண்ணு-அவ அறுத்த முண்டையா லட்சணமாவா வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறா?... பூவும்,பொட்டும், நகையும், புடவையுமாகக் குலுக்கி மினுக்கிக்கிட்டுல்ல திரியுறா!”

யாரைப் பற்றியோ, கூட வந்தவனிடம் கத்திக் கொண்டு போனான் அவன். என் நெஞ்சு ஒரு குலுக்குக் குலுக்கி ஒய்ந்தது. தலை நிறைய நெருப்பை வாரி வைத்த மாதிரி ஒரு வலி. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன். குபீரென்று மெயின் சுவிட்சை அமுக்கினேன்! வீடு இருண்டது. கழுத்தில் காசு மாலை பாம்பு மாதிரி நெளிந்தது. பட்டுப்புடவை உடம்பில் ஒட்டவே இல்லை. ‘சுளீர், சுளீர்’ என்று சவுக்கடிகள் விழுகின்ற மாதிரி, உடம்பில் ஒரு வேதனை.செளபாக்கியம் என்ற சொப்பனாவஸ்தைப் படகு, சில்லுச் சில்லாக உடைந்தது. உள்ளத்தால் அமங்கலி, உடலாலே மட்டும் சுமங்கலியாகி விட முடியுமா? புடவையை அவிழ்த்து எறிந்தேன். நகைகள் மூலைக்கொன்றாகச் சிதறின. இருண்ட வீட்டின் மூலையில் ஆசைப்பட்டுத் தேடிய எனது தாற்காலிக செளபாக்கியத்தைக் கலைத்த அவன் யார்? யாரோ தெருவோடு போனவன்!

(ஆனந்த விகடன், அக்டோபர், 1957)