நீங்களும் இளமையாக வாழலாம்/இளமையும் முதுமையும்

1
இளமையும் முதுமையும்

நீங்களும் இளமையாக வாழலாம்!

நம்பிக்கையோடு தான் இந்த முயற்சியைத் தொடங்குகிறேன். ஏனென்றால், வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

நாம் நீண்ட நாட்கள் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையில் தான் பணம் சேர்க்க முயற்சித்துப் பாடாய் படுகிறோம். நிலபுலம், சொத்து சுகம், பதவி மோகம் என்பனவற்றிற்கெல்லாம் ஆளாய் பறக்கிறோம்! ஏனென்றால், அதுதான் நம்பிக்கை.

தலைப்பு சிறப்பாகத்தான். இருக்கிறது. இளமையாக வாழலாம் என்று! ஆனால் மலைப்பாகவும் இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது என்றார் என் நண்பர் ஒருவர்.

ஆமாம்! இளமையாக வாழலாம் என்பது தலைப்பென்றால் அதனுள்ளே எத்தனை எத்தனை கேள்விகள் தலைக்குமேல் கத்திகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தெரியுமா? அவைகளுக்கு விடையளித்துத் தப்பிப்பதற்குள் விலா எலும்புகளும் நொறுங்கிப்போய் விடும் போலிருக்கிறது. அவ்வளவு பிரச்சனை மிகுந்த தலைப்பு என்று எனக்கும் இப்பொழுதுதான் புரிகிறது.

இந்த உடலை அப்படிதான். இறைவனால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ரகசியங்களையும் அதிசயங்களையும் கொண்டதாக விளங்கும் இந்த உடலைப்பற்றி, ஆயிரமாயிரம் விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக முயற்சித்துக் கொண்டுதான் வருகின்றார்கள். தோல்விகளைத் தோள்களில் சுமந்து கொண்டுதான் அலைகின்றார்கள் கண்டு பிடிக்க இயலாமல்.

தெரிவது போலத் தோன்றி, சீதை பார்த்த மாயமான் போல மறைந்தும் பதுங்கியும் ஜாலங்கள் காட்டுகின்ற சக்தி படைத்ததுதான் நமது தேகம். இந்த உடலுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற பெயர்களைப் பாருங்கள்.

மனிதன் என்று அழைக்கிறோம். அந்தப் பெயருக்குள்ளே பிரிந்து நிற்கும் உபப்பெயர்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மனித உடல் என்று கூறும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் கால் குறைந்தவனை நொண்டி என்கிறோம். காது கேளாதவனை செவிடன் என்கிறோம். பேச முடியாதவனை ஊமை என்கிறோம். மனநலம் குறைந்தவனை பைத்தியம் என்கிறோம். உடல் நலம் குறைந்தவனை நோயாளி என்கிறோம். சுவாசிக்கும் நிலையை இழந்தவனை பிணம் என்கிறோம்.

உடலுக்கான பெயர்களில் தான் மாற்றம் என்றால், உடலுக்குள்ளே எழும் மாற்றங்களை வைத்துக் கொண்டு என்னென்ன பெயர்களை வைத்துக்கொள்கிறது இந்த உடல்? செய்யும் தொழிலை வைத்துக்கொண்டு பெயர்களைப் பெறுவது நமக்குத் தெரியும் வைத்தியன், வாணிகன், வாத்தியார், விஞ்ஞானி என்பது போல.

உலகத்தைப் பார்க்க வந்த உடனேயே குழந்தை என்கிறோம். பிறகு சிறுவர் சிறுமியர் என்கிறோம். பிறகு இளைஞர் என்கிறோம். நடுத்தரவயது என்கிறோம். அதன் பின் முதியவயது என்கிறோம். கிழம் என்கிறோம், இன்னும் எத்தனை எத்தனையோ பெயர்கள்!

இப்பொழுது இளமையும் முதுமையும்தான் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள்! இளமை என்றால் என்ன? இளமை எதுவரை? முதுமை என்றால் என்ன? முதுமை எது வரை?

இந்தக் கேள்விக்கு விடைகாணும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.

மனிதன் என்கிறோம். கிழவன் என்கிறோம், எப்பொழுது ஒருவன் மனிதன் ஆகிறான்? எப்பொழுது ஒருவன் கிழவன் ஆகிறான்? ஒருத்தி மனுஷியாக இருக்கிறவள் எப்பொழுது கிழவி ஆகிறாள்?

இளமைக்குரிய வயது என்ன? இளமை எந்த வயதில் மாறி முதுமைக்கோலம் கொள்கிறது? அந்த முதுமைக்கு உரிய இலக்கணம் தான் என்ன?

கடிகார சுழற்சியை வைத்துக் கொண்டு, காலண்டர் காட்டும் நாட்களை, மாதங்களை, வருடப் பூர்த்தியைக் கணக்கிட்டுக் கொண்டு இளமை முதுமையைக் கணிப்பதா?

உடல் வளர்ச்சியைப் பார்த்தும், உடலில் உள்ள தளர்ச்சியைப் பார்த்தும், உடலில் உண்டாகும் உணர்ச்சியையும் எழுச்சியையும் பார்த்தும் இளமை முதுமையைக் கணிப்பதா?

அறிவு மேதா விலாசத்தைப் பார்த்து இளமை முதுமை என்பது எப்படி என்று கணிப்பதா?

ஒருவனுக்கு இத்தனை வயதாகி இருக்கிறது. அதனாலே இவன் இளைஞன், அதனாலே இவன் கிழவன் என்று கூறிவிடலாமா?

நாம் உலகத்தில் தோன்றியவுடனேயே நமக்கு வயது குறிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். இந்த வயது கூறும் பரம்பரையை நாம் இப்பொழுது இரு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. கடிகாரம் காலண்டர் இவற்றை வைத்துக் கொண்டு ஒருவரது வயதை அறிந்து கொள்ளும் முறை (Chronological age)

2. ஒருவனுடைய உடல் வளர்ந்திருக்கும் உடல் வளர்ச்சி நிலையைக் கொண்டு வயதை அறிந்து கொள்ளும் முறை (Physical age)

உடலில் அதிக வளர்ச்சி ஏற்பட்டு விட்டதனாலேயே ஒருவனை முதியவன், கிழவன் என்று கூறி விடலாமா? அல்லது இவன் பிறந்து இத்தனை ஆண்டுகளாகி விட்டன. இதனாலே இவன் இளைஞன் அல்லது முதியவன் என்று கூறி விடலாமா? எப்படி கூறுவது?

முப்பது வயதிற்குள்ளே வாழ்க்கையே முடிந்து விட்டது. இனிமேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? என்று முனுமுனுப்பவர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

58 வயது தான் உழைக்கும் வயது. அதன்பின் ஓய்வு கொள்வது தான் முறை என்று உத்தியோகத்திலிருந்து மனிதர்களைக் கழற்றி விட்டு விடுகிற பழக்கம் நம்மிடையே இருக்கிறது.

அப்படியென்றால் 58க்கு மேல் மனிதர் முதுமைக்கு ஆட்பட்டு அடிமையாகி விடுகின்றார்களா? அவர்களால் உலகுக்கு எந்த விதமான உபயோகமும் இல்லையா?

இப்பொழுதும் நாம் காலண்டர் வயதுக்குத்தான் மதிப்புத் தருகிறோம். உடலின் வயதுக்கு முக்கியத்துவம் இல்லை.

முப்பதுதான் முதிர்ச்சி பெறும் வயது என்றால், 60 வயது நீதிபதி முன்னே நிற்கின்ற முப்பது வயது வழக்கறிஞன், தான் இந்தத் துறைக்கு ஒருசிறுவன் என்கிறான். அப்படியென்றால் ஒரு துறைக்கு முப்பது வயது முதிர்ச்சியில்லாத வயதா?

விளையாட்டுத் துறையில் தங்களால் இனி முடியாது என்பதாக எண்ணி 25 வயதுக்குள் ஓய்வு பெற்று கொள்கின்றார்கள் பல வீரர்கள் வீராங்கனைகள், அப்படியென்றால் இந்த வயதுமுதிர்ந்து போய் விட்ட வயதா?

வயதை வைத்துதான் இளமை முதுமை என்கிறார்களா? வலிமையை வைத்துதான் இளமை முதுமையைக் கணிக்கின்றார்களா?

அறுபது வயதுக்காரன் ஒருவன் இராணுவ வீரன் போல நிமிர்ந்து நடக்கிறான். வேகமாக நடக்கிறான். களைக்காமல் காரியங்கள் பண்ணுகிறான். இருபது வயதுக்காரன் நோயில் நலிகிறான். கூன் போட்டு நடக்கிறான். மேல் மூச்சு வாங்க முனுகுகிறான். இதில் யார் இளைஞன்? யார் கிழவன்? நமக்கே திகைப்பாக இருக்கிறதே!

அப்படியென்றால் இளமை என்றால் என்ன? முதுமை என்றால் என்ன? குழப்பமாகத்தான் இருக்கிறது! முடிவைக் காணும் முயற்சியைத் தொடருவோம்.