நீங்களும் இளமையாக வாழலாம்/முதுமையும் தனிமையும்

8
முதுமையும் தனிமையும்

உடலில் முதுமை வரத் தொடங்குகிறது. என்றால், அதனுள்ளே உள்ள உள் உறுப்புக்களும் சற்றே தளர்ச்சியடைந்து கொண்ட வருகின்றன என்பது உண்மைதான். காலத்தின் சாகசம் கட்டான உடலில் கலகத்தை விளைவித்து விடுகின்றன.

மனிதனது உடலுறுப்புக்களில் மிகவும் முக்கியமானவை என்று ஐந்து உறுப்புக்களைக் குறித்துக் காட்டுவார்கள். அதை பஞ்சேந்திரியங்கள். என்பார்கள்.

காண்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள், முகர்கின்ற மூக்கு, சுவைக்கின்ற நாக்கு, உணர்கின்ற தோல்.

இவ்வாறு உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்ற உறுப்புக்கள், காலக்கிரமத்தில், முதுமைக் காலத்தில் திறமிழந்து போகின்றன என்பதும் தவிர்க்க முடியாதது தான்.

மற்றெல்லா புலன்களையும் விட, கண்களும் காதுகளும்தான், விரைவில் மாற்றங்களில் வீழ்ந்து விடுகின்றன.

கண் தெரியாமல் போவது, காது கேளாமல் போவதும் முதுமையின் விதிக்குள் பதிவாகிக் கொள்கின்ற பாதகங்கள்தான்.

இந்த இரண்டிலும் இடர்ப்பட்டுப் போகின்ற வயதாகிறவர்கள் அதாவது வயதானவர்கள், தங்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பாங்கினை தாங்களே உண்டாக்கி, தீவிரமாக வளர்த்துக் கொண்டு விடுகின்றார்கள்.

எதிரே வருவது யாரென்று தெரியவில்லை, என்ன சொல்கின்றார்கள் என்பதும் கேட்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, தங்களுடனே வசிப்பவர்களிடமிருந்து கூட, விலகி தனித்துப் போய் விடுகின்றார்கள். அதாவது சமூகத்தையே வெறுத்து விடுவது போல தனிமையை நாடிக் கொள்கின்றார்கள்.

வாழ்க்கையின் இன்பங்கள், எழிலார்ந்த காட்சிகள் எல்லாம் இளைஞர்களுக்கு மட்டுமே வயதான முதியவர்களுக்கு அல்ல என்ற வறட்டு வேதாந்தத்தின் முடிவு தான் தனிமை தேடலாகும்.

நாம் கூட இருந்தால், இளைஞர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று ஒதுங்கிக் கொள்கின்ற உத்தம குணக்காரர்களும் உண்டு.

தங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், இளைஞர்களுடன் உள்ள கவசத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று விலகி, மறைந்து வாழ்பவர்களும் உண்டு.

நாங்கள் வருகிறோம் என்றாலும், இளைஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்ற வாய்ப்புக்களை இழந்து வாய் புலம்பி விலகிக் கொண்டு வாழ்பவர்களும் உண்டு.

முதுமையின் தொல்லை வயதாகிப் போவதால் வருவதில்லை. அவர்கள் சுற்றத்தையும் சமூகத்தையும் விட்டு விலகி, தனித்துப் போய் நிற்பதால்தான். தனிமையில் வாழ்வதால் தான்.

இத்தகைய பட்டும் படாத தன்மையும் விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்ற வேதாந்தக் கொள்கையும் தான் வயதானவர்களை வாட்டி வதைத்து விடுகின்றன.

அறிவார்ந்த வயதானவர்கள் இப்படியெல்லாம் தங்களை வாட்டி வதைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களின் சிந்தனையும் தெளிவும் அவர்களை சிறப்பாக இருக்க வைக்கின்றன.

ஒரு குடும்பத்தில் வயதானவர் இருக்கிறார் என்றால், வயதாகி விட்டதே என்பதற்காக அவர் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. ஒதுக்கப்படுகிறார் என்றால், அவர் நடைமுறை மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து போகவில்லை என்பதுதான் உண்மை.

அன்றாட நடை முறைகளில் அக்கறை கொள்வது. வருகின்ற விருந்தாளிகளை, சுற்றத்தாரை வரவேற்பது மனம் குளிர உரையாடிக் கொண்டிருப்பது; தேவையான நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது; குடும்ப முன்னேற்றமான காரியங்களுக்குத் துணை நிற்பது தொல்லை தராமல் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது எல்லாம் முதியவர்களால் மகிழச் செய்யும் காரியங்களாகும் மற்றவர்களையும் மகிழ்விக்கும் உதவிகளாகும்.

தன்னை ஒரு பாரமாகக் கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் பாரமாகக் கருதும் அளவுக்குப்பேசிக் கொண்டும் அன்றாடப் பிரச்சனைகளில் தாமும் போய் விழுந்து, அதிகப் பிரச்சனையாக மாறிக் கொண்டும் இருந்தால், நிச்சயம் நிம்மதியே கிடைக்காது.

முதுமை வரும்பொழுது மனதைத்தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் இனிய ரகசியமாகும்.

எப்படி சமாளிப்பது?

(அ) கண்களும் பார்வையும்:

கண்கள் பார்க்கும் சக்தியை இழக்கின்றன என்பது முதுமையின் சதிதான். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

இளமைக் காலத்தில் கண்ணானது, அருகிலிருக்கும் பொருளையும், தூரத்திலிருக்கும் பொருட்களையும், எந்தவிதமான கஷடமுமின்றி பார்க்கும் சக்தியைப் பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம் அவ்வாறு பார்க்கும் சக்திக்கேற்றவாறு விழிப்பாவை உருளும் முறைமை தான்.

கண்ணில் உள்ள கண்மணி என்னும் லென்சுப் பகுதியானது. மிகவும் நுண்ணிய தசைகளால் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவை நினைவுக் கேற்றவாறு மேலும் கீழும் முன்னும் பின்னும் விழிப்பாவை நகர்வதற்கேற்றவாறு, தசைப் பகுதிகளை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

வயது ஆக ஆக, லென்சுப் பகுதியானது நீண்டு சுருங்கும் நெகிழ்ச்சித் தன்மையை (elastiicity) இழந்து விடுகிறது. தசைகள் இழுத்து விடும் தன்மையும் மாறிவிடுகிறது. தசை இழுப்புகள் அந்த நேர்த்தியான சக்தியை இழக்க இழக்க, லென்சின் அரிய பணி அருகிப் போகின்றன.

அதனால் அருகில் உள்ள பொருட்கள் பார்வைக்குப் படாமலும், தூரத்துப்பொருட்கள் பார்வைக்குத் தெரியாமலும் போய்விடுகின்றன. காரணம், கண்தசைகள் பலவீனப்பட்டுப் போவதால் தான்.

கண் தசைகள் பலவீனப்படும் பொழுது மாற்றம் நிகழ்கிறதே அதற்கு பிரஸ்பியோபியா (Presbyopia) என்று பெயர்.

இந்த சரிகட்டிப் போகாத கண் தசை ஆற்றலின்மை காரணமாக, பார்வையின் சக்திமங்கிப் போய்விடுகிறது. இந்த பார்வை குறையும் தன்மை இருபதிலிருந்தே தொடங்கி விடுகிறது என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.

20 வயதில் தொடங்குவது இளமையில் தெரிவதில்லை. அது 40 வயதாகும்பொழுது நன்றாக உரைக்கச்செய்கிறது. 60 வயதிலோ அந்தக் கண் தசைச் செயல்கள் களைத்துப் போய் கண் மங்கலாகப் போக வைக்கின்றன.

அதனால்தான் 40-ல் தொடங்குகிற கண் பார்வை மங்கலுக்காகக் கண்ணாடியை அணிந்து குறை களையும் செயல் மேற்கொள்ளப்படுகிறது. இதை வெள்ளெழுத்து என்பார்கள்.

இன்னும் வயதாக ஆக, கண்ணிலுள்ள லென்சுப் பகுதியானது. சுற்றிலும் மறைக்கப்படுகிறது. அதனால் பார்வை மேலும் மங்கலாகிப் போகிறது படிப்பதற்கு அதிகமான வெளிச்சம் தேவைப்படுகிறது.

இப்படி லென்சுப் பகுதியானது திரையிடப்படுவது போன்று மறைக்கப்படுவதால் தான். பார்வையே பழுதாகிப் போகிறது. அது ஒரு கண்ணையோ அல்லது இரு கண்களையோ குருடாக்கி விடுகிறது. இதை கண் சதை வளர்தல் காட்டரேக்ட் (Cataract) என்று கூறுகின்றார்கள்.

வருவதற்கேற்ப வைத்தியம் செய்து கொள்வதுதான் வாழ்வை வருத்தமில்லாமல் அனுபவித்து வாழ வழி வகுக்கும். வருகிறதே, வந்துவிட்டதே என்று வருத்தப்படுவது. மகிழ்ச்சியை அழிப்பதுடன், சுவையற்ற சாரமற்ற வாழ்வு வாழ வைத்துவிடும்.

(ஆ) கேளாத காதுகள்:

காதுகளின் செயல் அமைப்பு, கண்களைப் போல அல்ல.

வயதான காலத்தில் உள்ளவர்கள் பலருக்கு தெளிவாகக் காது கேட்பது உண்டு. சிறியவர்கள் பலர் செவிடர்களாக இருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

காதுகேளாமல் போவதற்குரிய காரணங்கள் பல உண்டு. நடுக்காதில் உள்ள நுண்ணிய காதெலும்புகளை இணைக்கின்ற தசைநார்கள் நெகிழ்ச்சித் தன்மையை இழந்து, விறைப்பாகிப் போய்விடும்போது, காதுகள் கேட்கும் சக்தியை இழந்துவிடுகின்றன.

இந்த நுண்ணிய காது எலும்புகள், வெளியிலிருந்து காற்றுடன் வரும் செய்தி அலைகளை ஏந்தி, காதிலே உள்ள செவிப்பறையில் மோதவிடுகிறது.

இத்தகைய செய்தி கடத்தும் செயல்களில் ஈடுபடுகின்ற எலும்புகளும், அவற்றை இணைக்கின்ற தசைநார்களும் நெகிழ்ச்சியை இழப்பதானது, நோயினால் ஏற்படவும் கூடும். நோயின் கொடுமையானது எலும்புகளை பாதித்து விடுகிறது. சிறுசிறு கோளாறுகளும் இவற்றை செயலிழக்கச் செய்து விடுகின்றன.

தொண்டைக்குள் ஏற்படுகின்ற கடுமையான வியாதியும், காதுகேளாமல் செய்து விடுகிறது.

சில சமயங்களில், காதுக்குள் அழுக்குகள் சேர்ந்து குறும்பியாகி (Wax) அடைத்துக் கொள்வதுண்டு. அதனை எடுக்கிறோம் என்று முயற்சித்து, கூரான குச்சிகளையோ, ஊக்கையோ மற்றும் கையில் அப்பொழுது கிடைக்கின்ற சாதனங்களை வைத்துக் கொண்டு குடைந்தெடுப்பவர்கள் உண்டு.

அப்பொழுது செவிப்பறை கிழிந்து போகநேரிடும். அதனால் காது செவிடாகிப் போவதும் உண்டு.

காது கேட்காமல் போவது வயதானதால் தான் என்று நம்பிக்கொண்டு, வைத்தியர்களை அணுகாமல் அவதிப்படுவோர் பலர். நிலைமையை ஏற்று அறிவோடு நடந்து கொள்பவர்களே முதுமையை வென்று இளமையாக வாழ்கிறார்கள்.