நீங்களும் இளமையாக வாழலாம்/முதுமை மூன்று வகை

3
முதுமை மூன்று வகை

இளமையுடன் வாழலாம் என்பது இளமைபோடு இருக்கும் பொழுது ஒரு சிறிதும் கஷ்டமில்லை. இளமையிலே முதுமை கொண்டவர்களாக வாழ்பவர்களை நாம் விட்டு விடுவோம். முதுமையாகிறபோது அதனை முறியடித்து இளமையாக வாழ்வதும், இளமையோடு இருப்பதும் எவ்வாறு என்பதைத்தான் இங்கே நாம் கண்டுகொள்ள இருக்கிறோம். கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

மனிதருக்குப் பருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவது போல, உடலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே வருவது உண்டு. அது இயற்கைதான். அதை நாம் நன்றாகவே அறிவோம்.

ஒரு மனிதன் முழுமையடைவதை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டி விளக்குகின்றார்கள் அறிவியல் அறிஞர்கள்.

1. வயதால் வரும் முதுமை
2. உடலால் வரும் முதுமை
3. மனதால் வரும் முதுமை

முதலில் வயதால் வரும் முதுமையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயதால் வரும் முதுமை:

மாறுகின்ற காலங்களுக்கிடையில்தான் மனிதர்கள் வாழ்கின்றார்கள். காலங்கள் மட்டும் மாறுவதில்லை; மனப்போக்கில், செயல்முறைகளில் ஆசைகளில், உணர்வுகளில் மக்களும் மாறிக் கொண்டே வருகின்றார்கள்.

காலங்கள் மாறி மாறி வருவது இயற்கை. இயற்கையின் எழில்மிகு பிறப்பான மனித உடலும் மாற்றம் பெறுவது இயற்கைதானே! தனது உடலில் மாற்றம் விளைவதை ஒவ்வொரு மனிதரும் உணர்கிறார்கள். அறிகின்றார்கள் அதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்!

சிறு குழந்தை வாலிப வயதை அடைய விரும்புகிறது. ஆனால் வாலிபர்களோ முதுமை அடைவதை விரும்புவதில்லை. 15 வயது இளைஞன் தன்னை 20 வயது இளைஞனாகக் கூறிக் கொள்ள விரும்புகிறான். ஆனால் 30 வயது மனிதன் தன் உண்மை வயதை மறைத்து, வயதைக் குறைத்து சொல்லி மகிழ்கிறான். இதில் ஒன்றுமட்டும் நமக்கு நன்றாகப் புரிகிறது. மனிதர் யாரும் முதுமை அடைவதை விரும்பவில்லை என்பதுதான். இதை முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு வயது மட்டும் உயர்வதில்லை, ஆசைகளும்தான் உயர்ந்துகொண்டே போகின்றன. அதனால் என்ன? கூடவே கவலைகளும் , கலவரங்களும், கலக்கங்களும், கற்பனைப் பயங்களும் நிறைய வந்து விடுகின்றன. அது மட்டுமல்ல. அடுத்தவர் இடத்தை பிடித்துக் கொள்ளக்கூடிய ஆக்ரோஷமான உணர்வும், ஆக்ரமிக்கும் பண்புகளும் அடுத்தடுத்து அவர்களுக்கு வந்து சேர்கின்றன.

ஒரு நகரத்திற்கு ஒரு மாயாவி வந்து சேர்ந்தான். அந்த நகரத்தின் தலைவர்களிடம் சென்று, இறந்து போன உங்கள் முன்னோர்களையெல்லாம் உயிர்ப்பித்து தருகிறேன். நான் கேட்கின்ற பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறான். தலைவனுக்கு மட்டுமல்ல. அந்த நகரத்து மக்களுக்கெல்லாம் சந்தோஷம். அவர்களும் ஓர் ஆனந்தக் கூத்தையே ஆடிக் களைத்துப் போனார்கள். அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு.

எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் தருகிறோம். எங்கள் தாய் தந்தையரை, பாட்டன் பாட்டியரை இறப்பிலிருந்து எழுப்பித்தாருங்கள் என்று கேட்டு, உயிர்ப்பிக்க ஒப்புதலும் தந்தனர்.

‘இன்னும் ஒருவாரம் கழித்து வருகிறேன். நீங்கள் பிரிந்து விட்டிருக்கும் பெரியவர்களையும் உறவினர்களையும் சந்தித்து மகிழத் தயாராக இருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனான் அந்த மாயாவி, அனைவரும் அவனை ஆர்ப்பாட்டமாக, ஒரு விழாவெடுத்து அனுப்பி வைத்தார்கள்.

ஒருவாரம் ஓடோடி விட்டது. மாயாவி வந்தான் அவனை வந்து வரவேற்க அந்த நகரத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. அவனைப் பார்க்கவே அஞ்சினார்கள். அவன் பெயரைக் கேட்டதுமே பரபரப்படைந்தார்கள். ஒதுங்கி ஒளிந்து கொண்டார்கள். அவன் அப்படி உயிர்ப்பிக்கும் வேலையை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். அந்தச் செயலை இழிவுச் செயல் என்று வெறுத்தார்கள்.

காரணம்?
இறந்து போனவர்கள் மீண்டும் அந்த நகரத்திற்குள் வந்தால் என்ன ஆகும்? பதவியிலிருந்து இறந்தவர்களின் பதவிகளை இப்பொழுதுள்ளவர் வகித்து வருகின்றார்களே! அதிகாரம் அவர்களுக்குப் போய் விடாதா? இறந்தவர்கள் சொத்தை பலர் எடுத்துக் கொண்டு வாழ்கின்றார்களே! இறந்தவர்கள் வந்தால் சொத்துரிமை போய் விடாதா? சுகங்களும் கூடவே செத்தொழியுமே! இறந்து போனவர்கள் வந்தால் கடன்களைக் கேட்பார்களே! ஆண்களில் சிலர் இறந்து போனவரின் மனைவிமார்களை கல்யாணம் செய்து கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் நிலை என்ன ஆவது? வயதாகிப் போனவர்கள் மீண்டும் கிழமாகி வந்தால், அவர்களை எங்கே தங்க வைப்பது? அவர்களை எப்படிக் காப்பாற்றுவது?

இப்படிப் பலப் பலப் பிரச்சனைகள் அவர்களை ஆட்டி வைத்து விட்டன. மாயாவியிடம்போய், பேசிய பணத்திற்கும் மேலே அதிகமாகக் கொடுத்துவிட்டு, அவனை ஊரைவிட்டுப் போகச் சொல்லி அப்புறப்படுத்திய பிறகுதான் அவர்கள் நிம்மதி அடைந்தார்கள், என்பதாக ஒரு கதையை எழுதிக் காட்டியிருக்கின்றார் ஒரு அறிஞர்.

மற்றவர்கள் இறந்து போவதற்காக மகிழ்வதும், கிழமாகிப் போவதற்காகக் களியாட்டம் போடுவதும் மனிதர்களின் இயற்கையான சுபாவமாகவே இருந்து வருகிறது. என்றாலும், முதுமை அடைவது என்பது தடுக்க முடியாத ஒன்று தான். இறப்பு என்பதும் இறுதியாக அடையக் கூடியதே என்பதும், தவிர்க்க முடியாத ஒன்று தான்.

ஆகவே, தவிர்க்க முடியாததுதான் முதுமையும் இறப்பும், ஆனால் முதுமையில் இளமையைக் காண்பது முடியாத ஒன்றல்ல. மனிதன் மனம் வைத்தால் நிச்சயமாக முடியும் என்பது தான் நமது வாதம்.

முற்காலத்தில் அதாவது ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, மக்கள் அதிகமாக இறந்து போவதற்குரிய காரணங்கள் நோய்கள்தான். உதாரணத்திற்கு 1837ம் ஆண்டுக்கு முன்னர் மக்களின் சராசரி வாழும் வயது 35க்குள்ளாகவே இருந்தது. காரணம் பல கொள்ளை நோய்கள் தான். அதாவது அம்மை, காலரா, எலும்புருக்கி நோய், விஷக் காய்ச்சல், டிப்தீரியா போன்ற நோய்கள் எல்லாம் மக்களை ஆயிரக்கணக்காக ஒரே சமயத்தில் கொள்ளை கொண்டு போவனவாக இருந்தன.

விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புக்களினால், அற்புதமான மருந்துகளினால் இத்தகைய கொள்ளை நோய்கள் தடுக்கப்பட்டன. மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். அதன் காரணமாக மக்கள் வாழ்கின்ற சராசரி வயது 50 ஆயிற்று. இப்பொழுது 60க்கு மேலாக சராசரி வாழும் வயது இருக்கிறது. என்று கணக்கெடுத்துக் கூறுகின்றார்கள். ஆகவே, வந்து வருத்துகின்ற முதுமையை வரவிடாமல் செய்கின்ற வலிமை, இன்னும் விஞ்ஞானத்திற்கே வரவில்லையே!

60 வயதிற்கு மேல் வாழ்கின்ற மக்கள், எண்ணிக்கையில் அதிகம் இருக்கின்றார்கள் என்ற அளவுக்கு வாழ்க்கையில் வயதுத்தரம் உயர்ந்திருக்கிறது. ஐஸ்லாந்தில் பெண்களுக்கு 79ஆண்டுகள்; ஆண்களுக்கு 72 ஆண்டுகள், பிரிட்டனில் பெண்களுக்கு 75 ஆண்டுகள். ஆண்களுக்கு 69 ஆண்டுகள் அது போல இந்தியாவில் 60 ஆண்டுகள் என்று சராசரி வயதைக் கணக்கிட்டிருக்கின்றார்கள்.

எனவே வயது நிறைய வேண்டும் என்பதை விருத்தி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், வயதான முதுமைக் காலத்தில் இளமையாக எப்படிவாழவேண்டும் என்பதை நாம் நினைத்தே பார்க்கவில்லை.

எதற்கும் முன்பாகவே திட்டமிட்டுத் தயார் செய்து, தேர்ந்த நிலையில் சந்திக்கத் தயாராக இருப்பவர்களே கவலை இல்லாமல் எந்தக் காரியத்தையும் தங்கு தடையின்றி செய்யமுடியும். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டுத் தைரியத்துடன் ஆணவமாகப் பேசிக் கொண்டு, அலட்சியப்படுத்துகின்ற அறிவாளிகள்தாம். முதுமையில் மனதாலும் உடலாலும் முடமாகிப் போய், குடங் குடமாகக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.

 கூட்டங் கூட்டமாக மீன்கள் வசிக்கின்றன. நீந்தி விளையாடுகின்றன. அது மீன்களின் இயற்கைப் பிடிப்பு, யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் கூட்டங் கூட்டமாகக் கூடிவாழ்கின்றன. மகிழ்கின்றன. அது இயற்கைப் பிணைப்பு, ஆனால், மனிதர் வாழ்க்கை அப்படியல்லவே!

மனிதர்கள் கூடித்தான் வாழ்கின்றார்கள். கூட்டமாகத் தான் வாழ்கின்றார்கள். சமுதாயம், கலாசாரம், நாடு மொழி என்ற கூட்டுக்குள் தான் வாழ்கின்றனர். அவர்கள் கூட்டமாக இருந்தாலும், மனதாலும் வயதாலும் தனித்தனி மனிதர்களாகவே தான் வாழ்கின்றார்கள். அதாவது எண்ணெய்யும் தண்ணிரும் போல, ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்கின்றார்கள்.

கூடிவாழ்வது மகிழ்வது எல்லாம் சிறுவர்களாக இருக்கும் பொழுதுதான். இந்த ஒற்றுமைப் பண்பும் தன்னலமில்லாத அன்பும், அடிப்படையாக மனிதப் பண்பாட்டோடு இருப்பவை, அகலமும் திண்மையும் மிகுந்த ஒரு பரந்த மேடையாக சிறுவர்களின் அன்பும் பண்பும் இருக்கின்றன.

ஆனால், வயது ஆக ஆக, இந்த அன்பும், பண்பும் குறுகிக் கொண்டேவருகின்றன. அடிப்படையில் அகலமான பரப்பாக அமைந்திருக்கும் மேடை, போகப்போக குறுகிக் கொண்டே வருவதுபோல, மனித மனத்தின் விசாலமும் பெருந்தன்மையும் குறுகிக் கொண்டே வந்து, சுயநலம் என்னும் துரும்புத் தூணாக மாறிப் போகின்றது.

வயதான பிறகு ஏற்படுகின்ற இத்தகைய மனமாற்றம் எப்படி ஏற்படுகின்றது? நலிவு படுத்தும் நோய்களால் என்கிறார்கள். கூடவே இருந்து கொண்டு கொடுமைப்படுத்துகின்ற நோய்களால், மக்கள் உடலால் தளர்ந்து போகின்றார்கள். அதனால் மனத்தாலும் மாற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் முதுமையை எப்படி சந்திப்பது? அதனிடமிருந்து எப்படி சாதிப்பது?