நூறாசிரியம்/அறிவெனும் விரிசிற

99. உள்ளுயிர் நெகிழ்ச்சி

அறிவெனும் விரிசிற கார்ந்து நினைவெனும்
பொறிவண் டிமிரு முள்ளப் பொய்கையுள்
ஒளிச்சுடர் மன்னிய ஒருதனி மலரின்
மெய்யுணர் வென்னுந் தேறல் மாந்தி
ஐயநின் மயலுறப் பொய்வினை கழன்று 5
நிற்பாடி நிற்கண்டு உள்ளுயிர் நெகிழ்ந்து
சில்நெய் பெய்து துண்டிரி மாண்ட
வல்வளித் துண்விளக்க மாகி
உள்நடுங்கி யொடுங்கும் ஒருவனிங் குண்டே!

பொழிப்பு:

அறிவு எனப்படும் விரிகின்ற சிறகு பொருந்தி, எண்ணம் எனப்படும் புள்ளிகளையுடைய வண்டு முரலுகின்ற உள்ளமாகிய தடாகத்துள், ஒளிக்கதிர்கள் பொருந்திய ஒப்பற்ற பெருமலரின் மெய்யுணர்வு எனப்படும் தேனை ஆரஉண்டு, பெருமானே! நின்பேரின்பத்தில் திளைக்கின்றமையால் பொய்யான வினைகளெல்லாம் நீங்கப்பெற்று நின்னைப் புகழ்ந்துபாடி, நின்னை மனத்தாற் கண்டு உயிரகத்தே நெகிழ்ச்சியுற்றுச் சிறிதே நெய்யூற்றப் பெற்று மெல்லிய திரியிட்டு ஏற்றிக் காற்று வலிது இயங்குமிடத்தே வைக்கப் பெற்றுள்ள விளக்குப் போலாகி உள்ளம் நடுக்கமுற்று அமைந்திருக்கும் ஒருவன் ஈண்டு உளன்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் பற்றியது.

ஐய, அறிவொடு பொருந்திய நினைவினையுடைய உள்ளத்தின்கண் மெய்யுணர்வுற்றமையான் பொய்வினை கழன்று நின்னைப் புகழ்ந்துங் கண்டும் உயிர் நெகிழ்ச்சியுற்று நடுங்கி ஒடுங்குகின்ற ஒருவன் ஈங்கு உளன் என்று இறைவனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

விரிந்த சிறகினையுடைய புள்ளி வண்டு ஒன்று தான் மிழற்றுகின்ற மலர்ப் பொய்கையில் ஒளிவீசித் திகழும் ஒருபெரு மலரின்கண் தேன் உண்டு மயங்கிய காட்சி யொன்றும், சிறிதே நெய்யூற்றி மெல்லிய திரியிடப் பெற்று ஏற்றிப் பெருங்காற்று வீசும் வெளியிடத்தே வைக்கப்பெற்ற காட்சியொன்றும் ஆசிரியரின் கருத்தைத் தெளிவுறுத்தும் பொருத்தமான உருவகங்களாக இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.

முன்னதன்கண் அறிவே சிறகாகவும், நினைவே அதனையுடைய வண்டாகவும், மனமே அவ்வண்டு முரலும் மலர்ப் பொய்கையாகவும், நறுமலர்த் தேனே மெய்யுணர்வாகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ளன.

பின்னதன்கண் உடலே விளக்காகவும் நினைவே நெய்யாகவும் உயிரே திரியாகவும் மெய்யுணர்வே சுடராகவும் அலைக்கலைக்கும் உலக வாழ்க்கையே பெருங்காற்று வீசும் வெளியாகவும் கொள்ளுமாறு உருவகம் அமைந்துள்ளது.

அறிவுஎனும் விரி சிறகு ஆர்ந்து - அறிவு எனப்படும் விரியும் சிறகு பொருந்தி.

அறிவின் பரப்புக் கருதி அதனை விரிசிறகு என்றார்.

நினைவு எனும் பொறிவண்டு இமிரும் - நினைவு எனப்படும் புள்ளிகளையுடைய வண்டு முரலுகின்ற.

பொறி-புள்ளி, இமிர்தல்- ஒலித்தல், முரலுதல்.

உள்ளப் பொய்கையுள் - உள்ளம் எனப்படும் குளத்துள்.

ஒளிச்சுடர் . . . தேறல் மாந்தி - ஒளி விளங்கப் பொருந்திய ஒப்பற்ற பெருமலரின் கண்ணுள்ள மெய்யுணர்வு என்னும் தேனையுண்டு

மன்னிய - பொருந்திய ஒரு தனி ஒப்பற்ற - பெரிய தேறல் - தேன்.

ஐய - இறைவ.

ஐயன் என்னும் பெயரின் அண்மை விளி. இறைவன் எங்கும் நிறைந்திருத்தலை உணர்ந்தமையின் அண்மைவிளி போதுமானதாயிற்று.

நின் மயலுற - நின் அருளின்பத்திலே திளைத்தலால்,

மயல் - மயக்கம்; திளைத்தலின் விளைவு.

பொய்வினை கழன்று - பயனிலாச் செயற்பாடுகளினின்றும் விடுபட்டு. கழன்று-நீங்கி, விடுபட்டு.

நிற்பாடி நிற்கண்டு - உன்னைப் புகழ்ந்து நின் அருட் காட்சியைக் கண்டுனர்ந்து.

காணுதலென்றது உணர்வில் தோய்தலை,

பாடுதல்-புகழ்தல்.

உள்உயிர் நெகிழ்ந்து - உயிரின் உள்ளே நெகிழ்ச்சியுற்று.
நெகிழ்தல்- அன்பால் உருகுதல்,
சில்நெய்பெய்து - சிறிதே நெய்யூற்றப்பட்டு.
சின்மை அளவாற் சிறுமை குறித்து நின்றது.
நுண்திரி மாண்ட - மெல்லிய திரியால் சிறந்த
சுடருக்கு இடமானமையின் மாண்ட என்றார்.
வல் வளித்து உண்விளக்கம் ஆகி-கடிது காற்று வீசும் வெளியிடத்தினுள் வைக்கப்பெற்ற விளக்கம் என்னுமாறு ஆகி.
வன்மை கடுமை, வளித்துஉள்-காற்று வீசுவதான வெளியினுள்.
உள்நடுங்கி ஒடுங்கும் - உள்ளம் நடுங்கி அமைந்திருக்கின்ற
உள்-உள்ளம் ஒடுங்குதல் - அமைந்திருத்தல்,
ஒருவன் ஈங்கு உளன் - ஒருவன் ஈண்டு உளன்.
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.