நூறாசிரியம்/மானும் இளையோள்

82 மானும் இளையோள்


பிறர்மனந் தூக்கி இயல்வன செய்யுந்
திறங்கொள் எலுவ திகைப்பறக் கேண்மோ
மனைக்கென் வேண்டுவ வென்பையின் மாண்டோர்
தனைக்குறிப் புணர்த்துத் தான்குறிப் பறிவே
பொழுதுசூழ் புணர்ந்து புலப்படுத் துணர்வே 5
பழுதுகண் டடங்கி விழுப்பத் துரைப்பே
படுவுழிப் படுத்து விடுவுழி விடுப்பே
வடுவில் கற்பின் நெடுநிலைக் காப்பே
என்றிவை மானும் இளையோள்
வென்றிய நிலைக்கென் வேண்டுவல் வேறே! 10

பொழிப்பு:

பிறர்தம் மனநிலையை ஆராய்ந்து அவர்தமக்கு ஏற்ற உதவியைச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தோழனே. இல்லாளுக்கு வேண்டும் இயல்புகள் யாவை என்று வினவுவாயாயின் கூறுவேன், மயக்கமறக் கேட்பாயாக!

மாட்சி வாய்ந்த பெரியோர் தனக்குக் குறிப்பாக உணர்த்துதலைத் தான் விளங்கிக் கொள்ளும் குறிப்பறிவாற்றலும், காலமும் சூழ்நிலையும் உணர்ந்து தன் உள்ளக் கிடக்கையைப் புலப்படுத்தும் உணர்வும் குறைபாடு கண்டவிடத்து அதனை உடனே வெளிப்படுத்தாது அடங்கியிருந்து சிறப்பினைக் கூறுமாற்றால் கூறும் சொற்றிறமும்; பொருள் வருகின்றவழி அதனைப் பாதுகாத்து வைத்துச் செலவிடத் தேவையான விடத்து அதனைச் செலவிடும் பொருளாட்சித்திறமும்; குற்றமற்ற கற்பினைக் காத்துக் கொள்ளும் உயரிய தற்காப்பும் என்னும் இந் நற்குண நற்செயல்களில் சிறந்த இளைஞையின் வெற்றி நிலைக்கு யான் வேண்டத் தக்கது வேறு யாது உளது:

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

மணஞ்செய்து கொள்ளுமாறு ஒருவனை அவன் தோழன் வற்புறத்தினானாக, நற்குண நற்செயல்களுடைய பெண்ணாயின் மணக்கத் தடையில்லை யென்று கூறியவன், பின்னும் அத்தகைய குணஞ் செயல்கள் தாம் யாவையென்று வினவுவாயாயின் கூறுவேன் என்று தொடங்கித் தன் கற்பனைப் பெண்டாட்டியின் பொற்புறு நலங்களைக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு

நன்மகளுக்குரிய அறிவாற்றலும், நா நலமும் பொருளாட்சித் திறமும், தற்காப்பு வல்லமையும் எத்தகையனவாய் இருத்தல் வேண்டும் என்பது இப்பாடலில் விளக்கியுரைக்கப்பட்டுள்ளது.

பிறர் மனந் தூக்கி-திறங்கொல் எலுவ - மற்றையோர் மனநிலையை ஆராய்ந்து அவர்தமக்கு ஏற்ற உதவியைச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தோழனே!

வினைப்பாடு நோக்கிய ஆராய்ச்சியே தலையாயது ஆதலின் தூக்கி இயல்வன செய்யும் திறங்கொள் எலுவ என்றான். தூக்கி ஆராய்ந்து. இயல்வன பொருந்துவன. எலுவ தோழனே!

திகைப்பு அறக் கேண்மோ - மயக்கமறக் கேட்பாயாக

தோழனின் பொருட்டு மேற்கொள்ளத்தக்க செயல் யாது என்றறியாத நிலையில் இருந்தானை நோக்கித் திகைப்பு நீங்கக் கேண்மோ என்றான்.

எலுவ என்று விளித்தவன், அவன் போல்வாரையும் உள்ளடக்கிக் கேண்மோ எனப்பன்மையிற் கூறினான்.தன் பெற்றோர்.துண்டுதலாலேயே தோழன் மணவினை குறித்துப் பேசுகின்றான் என்னும் ஊகத்தால் அவரை உள்ளடக்கிக் கூறினான். எனினுமாம்.

மனைக்கு என் வேண்டுவ என்பையின் - மணமகளுக்கு வேண்டியன யாவை என வினவுவாயாயின்,

இக்காலத்து மணவினை முயற்சிகளிலெல்லாம் மனக் கொடையே பெரிதும் பேசப்படுதலின் இவ்வாறு கூறினான்.

மனை-மனைவி; ஈண்டு மணமகள் என்பையின் - என்பை ஆயின் எனற்பாலது இவ்வாறு நின்றது. யின் என்பது ஆயின் என்பதன் தலைக்குறையாகக் கொள்க!

மாண்டோர் தனைக் ..... குறிப்பறிவே - மாட்சிமை வாய்ந்த பெரியோர் தனக்குக் குறிப்பாக உணர்த்துதலை தான் அறிந்து கொள்ளும் குறிப்பு அறிவு ஆற்றல்.

மாட்சி வாய்ந்த பெரியோராவார் பெற்றோரும் மற்றும் சான்றோரும், தக்க விருந்தினருமாம்.

பொழுது சூழ்பு உணர்ந்து புலப்படுத்து உணர்வே - காலமும் சூழலும் அறிந்து தன் கருத்தை வெளிப்படுத்துகின்ற உணர்வு.

சூழ்பாவது இடமும், உடனிருப்போரும், ஒட்டிநிற்கும் வினையும், இடையூறும், விளைவும் பிறவுமாம்.

பழுதுகண்டு அடங்கி விழுப்பத்து உரைப்பே - குறைபாடு கண்டவிடத்துப் பொள்ளென அதனை வெளிப்படுத்தாது அடங்கியிருந்து சிறப்பினைக் கூறுமுகத்தான் வெளியிடுதல்.

விழுப்பம் - சிறப்பு.

படுவழிப் படுத்து விடுழி விடுப்பே - பொருட் செல்வம் வருகின்றபோது அதனை முறையாகக் காத்துவைத்துச் செலவிடத் தேவையானவிடத்துச் செலவிடுதல்.

படுதல்- பொருந்துதல், வந்து சேர்தல்.

வடுவில் கற்பின் நெடுநிலைக் காப்பே - குற்றமற்ற கற்பென்னும் உயர்ந்த நிலையைத் தற்காத்துக் கொள்ளுதல்.

குற்றமற்ற கற்பு என்றது மனத்தாற் குற்றப்படாமையை. ஆதலின் அது நெடுநிலையினது என்றும் கூறப்பட்டது.

காப்பு - தற்காப்பு.

என்று இவை மானும் இளையோன் - இவ்வாறு மேற்கூறப்பட்ட நற்குண நற்செயல்கள் நிறைந்த இளைஞையின்

வென்றிய நிலைக்கு வேறுஎன் வேண்டுவல் - இல்லற வெற்றி நிலைக்கு யான் வேறென்ன வேண்டுவேன்.

இப்பாடல் பெருந்திணை என்னும் புறத்தினையும் கொண்மகள் மாண்பு என்னும் புதுத்துறையுமாம்.