நெருப்புத் தடயங்கள்/ஒரு சொல்

தான், நான், இந்த படைப்புபற்றி பெருமிதப்படலாம். இந்த நாவலில் வரும் கலாவதி போன்றோர் காலாவதியாகிறார்களே தவிர, இவர்கள் மீது எய்யப்படும் கொடுமைகள் காலாவதியாகவில்லை. இன்றைய வர்த்தகக் கலாச்சார சமூகம் பாழ்பட்டுப்போய், வர்க்க பேதமற்ற புதிய சமூகம் உருவாகும்போது, இன்றைய கொடுமைகள், அன்றைய தடயங்களாகத்தான் இருக்குமே தவிர, தடமாக இருக்காது என்று நம்புவதும், நான் இந்த நாவலுக்கு 'நெருப்புத் தடயங்கள்' என்று பெயரிட்டதற்கு ஒரு காரணம்.

'தேவி'யில் தொடர்கதைக்கு, கதைச் சுருக்கம் கொடுத்தபோது இந்த நாவலில் நடமாடும் தாமோதரனை, போலீஸ்காரர்களுக்கே இயல்பாகவுள்ள முரட்டுத்தனத்தோடுதான் படைத்திருந்தேன். 'தேவி' ஆசிரியர் திரு. ராமச்சந்திர ஆதித்தன், அந்த கேரெக்டருக்கு மனிதாபிமானம் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தார். நானும் யோசித்துப் பார்த்தேன். 'எரிகிற வீட்டில், பிடுங்குவது ஆதாயம்' என்று ஆகிவிட்ட இந்தக் காலத்தில் எல்லாத் துறைகளும், 'துரைத்தனமாகத்தான்' நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள், இதர துறைகளை மோதினால், பணத்திற்குத்தான் 'ரிஸ்க்', அதே சமயம் காவல் துறையென்றால், உயிருக்கே ரிஸ்க் என்பதால் அது, அரசின் வெளிப்பாட்டு சக்தியாக (Visible power) இயங்கு கிறது. இங்கேயும், தனிப்பட்ட முறையில், எத்தனையோ நல்லவர்கள் உள்ளார்கள். அதோடு, மூடத்தனத்தை தன்மானமாகவும், போக்கிரித்தனத்தை வீரமாகவும் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில், அரசுப் பணிக்கு முதன்முதலாகச் செல்லும் இளைஞன், அந்தக் குடும்பத்தின் வறட்டுக் கௌரவத்திற்கு பகடைக்காயாவதுண்டு. இதில் அவனுக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பது தான் பிரச்னை, உடன்பாடு காண முடியாதவன். சிந்தனை சித்ரவதைக்குள் அகப்படுவதைத் தவிர, வேறு வதைகளுக்கும் உட்படுவான். இப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக, தாமோதரனை சித்தரிக்கலாம் என்றும், நான் 'பின்யோசனை' செய்தபோது தோன்றியது.

இப்போது நினைத்துப் பார்த்தால், தாமோதரனை, மனிதாபிமான விரோதியாகக் காட்டியிருந்தால் சரியாய் இருக்காது என்றே கருதுகிறேன். பாவப்பட்ட இந்தக் காலத்தில், பத்திரிகை ஆசிரியர்களின் பார்வை விரிசலாகிக் கொண்டிருக்கும்போது, விரிவான பார்வையோடு, முழுச் சுதந்திரமாய், என்னை எழுதவைத்த, ‘தேவி’ ஆசிரியர், திரு. இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு, மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். முன்பும், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ அவரது முன்னோடிப் பார்வையால்தான் உதயமானது. இதேபோல், தேவியின் உதவியாசிரியர் திரு. ஜேம்ஸ், அத்தியாயம் அத்தியாயமாய் விழர்சித்து, எனக்கு அதிக யோசனைகள் வழங்கினார். ‘தேவி’யில் வந்த இரண்டு தொடர்கதைகளின் வெற்றிக்கான காரணங் களில், ‘ஜேம்ஸ்’ என்ற உச்சரிப்பும் ஒன்று. ‘தேவி’யில் படித்து முடித்ததும் அந்த பத்திரிகைக்கும் எனக்கும் கடிதங்கள் எழுதிய ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு, என் நன்றி.

வழக்கம்போல், என் ஆஸ்தான பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகமே, இந்த நாவலையும் வெளியிடுகிறது. எழுத்தாளன் படைப்புகள், நூலகங்களுக்கு ‘ஆர்டரானால்’தான் அரங்கேறும் என்ற நிலை எனக்கு எப்போதும் வந்ததில்லை என்றால், அதற்கு ஒரு காரணம் ஒரே காரணம் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் தான். நான் பெறும் வெற்றியை தான் பெற்றதாக நினைக்கும் இனிய நண்பர். பதிப்பகத் துறையின் ஒரு சில அத்திப் பூக்களில் ஒரு பூ.

இதேபோல், திரு. ச. மெய்யப்பனின் உதவியாளர்களான பிரபல நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான, திரு. க. நாராயணன் அவர்களும், திரு. குருமூர்த்தி அவர்களும் பல படைப்புக்கள், அச்சேறுவதற்கு முன்பே, அரும் பெரும் யோசனைகளைச் சொன்னவர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், என்னைக் கலந்தாலோசிக்கும் இலக்கிய சகாக்கள். இவர்களுக்கும் கடப்பாடுபட்டுள்ளேன். படைப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதாலேயே மேலே சில விவரங்களையும், நண்பர்களையும் கோடிகாட்டி இருக்கிறேன்.

நல்லது; படித்துப் பாருங்கள்; பிறகு, நல்லது, கெட்டதை, எழுதிப் போடுங்கள்.

அன்பன்,
சு. சமுத்திரம்.