பழைய கணக்கு/மணியனுடன் ஒரு பயணம்



மணியனுடன் ஒரு பயணம்

னந்த விகடனில் ‘தெற்கு வளர்கிறது’ கட்டுரைத் தொடர் எழுதுவதற்காக நானும் திரு மணியனும் ஒரு முறை நீலகிரி மாவட்டத்துக்குப் போயிருந்தோம். ஊட்டியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். அச்சமயம் அங்கே குதிரைப் பந்தய ஸீஸன். எனக்கு ரேஸ் பழக்கம் கிடையாது. உழைத்துச் சம்பாதிப்பதை ஒரு வாழ்க்கை நெறியாக மதிப்பவன் நான்.

ஆனாலும், ஒரு எழுத்தாளனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பிரசவம் பற்றிக் கூட அறிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகவே, ரேஸ் மைதானத்துக்குப் போய் அங்கே என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

“மணியன்! நான் ரேஸுக்குப் போகப் போகிறேன். நீ வருகிறாயா?” என்று கேட்டேன். பயணச் செலவுக்கென்று ஆபீஸில் பெற்று வந்த ஆயிரம் ரூபாயை என் கைப் பையில் வைத்திருந்தேன். நான் அவ்வளவு பணத்தையும் ரேஸில் தொலைத்து விடுவேனே என்ற அச்சம் பிடித்துக் கொண்டது மணியனுக்கு! “ஐயையோ அங்கே போனால் பணம் போய்விடும். பணப்பையை எடுத்துப் போகாதீர்கள். நான் அதைத் தர மாட்டேன்” என்று சொல்லி அந்தப் பையை என்னிடமிருந்து பலாத்காரமாக வாங்கி வைத்துக் கொண்டு விட்டார். நான் மெளனமாய்ச் சிரித்துக் கொண்டேன்!

“நான் என்ன சின்னக் குழந்தையா? ரேஸுக்கு வரும் சில கேரக்டர்களை ஸ்டடி பண்ணத்தான் அங்கு போக விரும்புகிறேனே தவிர ரேஸில் பணம் கட்ட அல்ல” என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொடுத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் எங்கள் சுற்றுப் பயணம் முடிந்ததும் மைசூர் வழியாகச் சென்னை திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டோம். அதுவரை மணியன் மைசூர் பார்த்ததில்லை. எப்படியும் மைசூர் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாக இருந்தார். ஊட்டி கலெக்டரிடம், “மைசூர் வரை ஜீப் அனுப்ப முடியுமா?” என்று கேட்டோம். எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தந்த கலெக்டர் கொஞ்சம் யோசித்து விட்டு, “என் அதிகாரத்துக்கு உட்படாத கர்நாடக எல்லைக்குள் நான் ஜீப் அனுப்பக் கூடாது!” என்று தயங்கியபடியே கூறினார்.

ஆனாலும் எங்கள் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், “சரி...உங்களுக்காக அனுப்பி வைக்கிறேன்” என்று அரை குறை மனதோடு அனுப்பி வைத்தார்.

மைசூர் போகும் வழியில் கூடலூரில் சில நிமிடங்கள் ஜீப்பை நிறுத்தி, காப்பி சாப்பிட்டு மீண்டும் மைசூர் நோக்கிப் பயணமானோம். சூரியன் மறைந்து லேசாக இருள் பரவத் தொடங்கிய நேரம். தூரத்தில் சாமுண்டீசுவரி மலையின் அழகிய தோற்றம் தெரிந்தது. விளக்குகள் அப்போதுதான் கண் சிமிட்ட ஆரம்பித்திருந்தன. மைசூரை நெருங்கி விட்ட குஷி காரணமாக மணியனின் குரலில் உற்சாகம் தொனித்தது. ஆனால் அந்த சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்க வில்லை. திடீரென்று மணியன் பதற்றத்தோடு கையை உதறிக் கொண்டு, “ஐயோ சாவி பணப்பையைக் காணுேமே!” என்றார்.

கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லே. கூடலூரில் இறங்கி காப்பி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஜீப்புக்குள் அமர்ந்த போது கூட மணியன் கையில் பணப்பையைப் பார்த்தது நன்றாக ஞாபகம் இருந்தது.

“இங்கேதான் பையை வைத்தேன்” என்று ஜீப்பின் பக்கவாட்டில் சக்கரத்துக்கு மேலாகக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த ஒரு கித்தான் துணியை விலக்கிக் காட்டினர்.

மணியன் காட்டிய இடம் உண்மையில் ஜீப்பின் ஜன்னல் கான்வாஸ் துணியால் திரைபோல் மூடிப் பித்தான் போட்டிருந்தார்கள். ஜீப்பின் அந்தப் பகுதி அமைந்துள்ள விதம் பொதுவாக எல்லோருக்குமே அங்கே ஏதோ பை இருப்பது போலத்தான் தோன்றும். கூடலூர் வரை பணப்பையைக் கையிலேயே வைத்திருந்த மணியன் காப்பி சாப்பிட்டு விட்டு மறுபடியும் ஜீப்பில் ஏறிச் சிறிது தூரம் சென்றதும் பணப்பையை அந்த ஜன்னல் பை வழியாகக் கீழே விட்டிருக்கிறார். அடுத்த வினாடியே அது ரோடில் விழுந்து விட்டிருக்கிறது.

“பை போய்விட்டது” என்று மணியன் அலறியதும் வண்டியை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தோம். பை அகப்பட வில்லை. பணம் போய்விட்ட கவலை ஒருபுறம். மைசூர் பார்க்க முடியவில்லையே என்ற துக்கம் இன்னெரு புறம்!

வேறு வழியின்றி ஜீப்பை கூடலூருக்கே திருப்பி ஒட்டச் சொன்னோம். எதிரில் வந்த ஒரு காரை நிறுத்தி, “எங்களது பை கண்ணில் பட்டதா?” என்று கேட்டோம்.

“ஆமாம்; கூடலூர் அருகில் ரோடு ஓரத்தில் ஒரு பை கிடப்பதைப் பார்த்தேன். ஆனால் அதை யாரோ அங்கே வைத்து விட்டுப் பக்கத்தில் எங்கோ இயற்கைக்குப் பதில் சொல்லப் போயிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வந்து விட்டேன்” என்றார் அந்தக் காரின் சொந்தக்காரர்.

கூடலூர் நெருங்கும் வரை வழியெங்கும் மெதுவாகத் தேடிக் கொண்டே போனோம். கிடைக்கவில்லை. கூடலூருக்கே திரும்பிச் சென்று அங்கே விகடன் ஏஜெண்டிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு அன்றிரவே ஊட்டிக்குப் போய்ச் சேர்ந்தோம். ‘தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி ஜீப் எடுத்துச் செல்ல அதிகாரமில்லை; ஆனாலும் தருகிறேன்’ என்று அரை மனதோடு அனுமதித்த கலெக்டர் மனம் போலவே ஆகிவிட்டது.

“மணியன்! ரேஸுக்குப் போனால் பணத்தைத் தொலைத்து விடுவேன் என்று என்னிடமிருந்து பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே. இப்போது என்ன ஆச்சு?”என்று நான் அவரைக் கேட்கவில்லை.