பாஞ்சாலி சபதம்/46. நகுலனை இழத்தல்

46. நகுலனை இழத்தல்

நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -- அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி -- வந்து
புகுவது போலவன் புந்தியில் -- ‘என்ன
புன்மை செய்தோம்?’ என எண்ணினான்-- அவ்வெண்ணம்
மிகுவதன் முன்பு சகுனியும் -- ‘ஐய,
வேறொரு தாயிற் பிறந்தவர் -- வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை -- வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை. 26

‘திண்ணிய வீமனும் பார்த்தனும் -- குந்தி
தேவியின் மக்களுனையொத்தே -- நின்னிற்
கண்ணியம் மிக்கவர் என்றவர் -- தமைக்
காட்டுதற் கஞ்சினை போலும்நீ?’ -- என்று
புண்ணியம் மிக்க தருமனை -- அந்தப்
புல்லன் வினவிய போதினில், -- தர்மன்
துண்ணென வெஞ்சின மெய்தியே -- ‘அட,
சூதில் அரசிழந் தேகினும், 27