பாண்டியன் கலித்துறை

பாண்டியன் கலித்துறை
21 பாடல்கள்
நூலில் பக்கம் 68 முதல் 71
***
இரட்டையர்
காளமேகப் புலவர்
ஆகியோர் பாடல்களும்
இதில் உள்ளன

குறிப்புரை - செங்கைப் பொதுவன்
***
  • பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகியோர்மீது பாடப்பட்ட கலித்துறைப் பாடல்கள் இவை.
  • செங்கைப் பொதுவன் குறிப்புரை.

1-3 தொகு

சரராஜ சம்புவைரி யென்மாது சரீரமெல்லாம்
பொரரா சரத்துக் கிவள் பொருட்டோ பசும்பொற் கிரண
சுரராச திவ்ய கிரீடவி பாடத்துடித் தடக்கைப்
பரராஜ ராவண ராமா பராக்கிரம பாண்டியனே. (1)
ராவண ராமன் பராக்கிரம பாண்டியனைப் பாடுகிறேன்.
காளைமுகிற் குலமெல்லாம் விலங்கு கடிந்திட்டநீ
வேளையு மப்படிச் செய்திலையே விளைநெல் வயலில்
வாளை குதித்து வளர்பூங் கமுகின் மடலொடியப்
பாளை முறிக்குந் துறைவா பராக்கிரம பாண்டியனே. (2)
வாளை மீன் துள்ளிக் குதித்துப் பாக்குக் குலையை முரிக்கும் வளநாடனே! மழைமேகங்களை விலங்கிட்டுக் கொண்டு வந்து மழை பொழிய வைக்கும் நீ என்னை வருத்தும் காம வேளையும் விலங்கிட்டுச் சிறையில் அடைக்கக் கூடாதா? - ஒரு தலைவியின் வேண்டுகோள்.
ஆர்க்குங் குளிரு நிலவுயர் கோனின் னலங்கல்பெறா
வார்க்குங் குமமுலையாட் கனலாகும் வடக்குந் தெற்கும்
மேற்குங் கிழக்குமொரு வெளுப்பாய் நின்று விண்ணை யெட்டிப்
பார்க்கும் புகழுக் கிறைவா பராக்ரம பாண்டியனே. (3)
நாலாத் திசையிலும் புகழ் பரவிக் கிடக்கும் பாண்டியனே! நிலாக் குலத்தில் பிறந்தவன் நீ. குளிர்ச்சிக்காக என் முலைமேல் குங்குமம் பூசினேன். அது உன் மாலை பெறாத காரணத்தால் தணலாக எரிகிறது. - தலைவி கூற்று.

4-6 தொகு

கூரம் பொறுத்த விழியாள் கதலிக் குருத்திலிட்ட
ஈரம் பொறுக்க வறிந்திலளே யிந்திரனிட்ட செம்பொன்
ஆரம் பொறுத்த புயமீதி லாயிர நாவுரக
பாரம் பொறுத்த புயலே பராகரம பாண்டியனே. (4)
இந்திரன் ஆரம் தாங்கிய மார்பினை உடைய பாண்டியர் குடி மன்னவா! கூர்மையான அம்பை வென்ற விழியாளுக்கு வாழைத்தண்டு போன்ற கால்-தொடை ஈரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
வெறிக்குங் குமக்கொங்கை மீதேயிளம் பிறை வெள்ளைநிலா
எறிக்கும் பொழுது வந்தா யிலையே யிலங்கா புரியைக்
குறிக்கின்ற ராவணன் பொன்முடி பத்துங் குரங்கை விட்டுப்
பறிக்கின்ற சணபக மாறா பராக்ரம பாண்டியனே. (5)
சுரும்பேய்க்கும் வாட்கண்ணி பங்காளர் கண்கொண்டு சுட்டுவிட்ட
பெரும்பேய்க்கு வேப்பிலைக் காப்புதவாய் பிணர்சேர் பசுங்கோங்
கரும்பேய்க்கு மென்முலையா ரமுதூட்டி யடர்ந்து கொல்ல
வரும்பேய்க்கு வானுதவுங் குலசேகர மன்னவனே. (6)

7-9 தொகு

பூணித்திலத்துப் புயல்வீர மாரன்புகல் கவிக்கு
நாணிப்புலவர் செல்லாதென் செய்வாரிந்த நானிலத்தில்
ஆணிக்கனக மணந்தரிற் பூமணம் யார் கொள்ளுவார்
மாணிக்கந் தித்திக்கி லென்னாகு மற்ற மதுரங்களே. (7)
எண்ணீர்மை நூலுக் ககத்தியனா மிவனென்ப தெல்லாம்
வெண்ணீர்மை யன்றி விரகல்லவே யிவ்விய னுலகில்
பண்ணீர்மை தேரும் பராக்கிரம மாறன் பதங்கழுவுந்
தண்ணீர் குடித் தல்லவோ கும்பயோனி தமிழ் கற்றதே. (8)
காம்பு வனம் புக்க தோளாடகு நின்றன் கழுத்திலிட்ட
வேம்பு தனக்கும் விதியில்லையோ வெகுண் டாச்சியர்கள்
தாம்பி னடிக்க வுரலோடு கட்டத் தடைப் பட்டுச்சிப்
பாம்பி னடிக்கின்ற மாலே பராக்ரம பாண்டியனே. (9)

10-12 தொகு

கடந்தூங்கு வேழப் பிடர்க்கேவரக் கண்டுகண் கண்முத்து
வடந்தூங்க வாடும் கிளிக்கென் செய்வேன் மணிவாய் திறக்க
விடந்தூங்கு பாம்பின் படத்தின் மிசைதிமி தித்தியெனப்
படந்தூங்க வாடும் புயலே பராக்ரம பாண்டியனே. (10)
சடம் பழுக்குங் கிழட்டுக் குருகீர் தலைசாய்த்து நின்று
முடம் பழுக்குங் கைதை நற்றுறையிற் றெங்குமுப் புடைக்காய்
குடம் பழுக்குங் கொற்கையாங் குலசேகரன் கூடலிலென்
உடம் பழுக்குஞ் சிறையும் பழிகார ருணர்ந்திலரே. (11)
மற்றொப்பிலாக் கொடைச் சணபக மாறவ ரோதயநின்
வெற்றிக்கிரண் டுண்டடங்காத காரிய மேருகிரிச்
சற்றிலுங் கீர்த்தி யடங்காது நின்னுடைத் தோடழுவாக்
கற்றைக் குழலிக்கு மாலடங்கா திதுகை கண்டதே. (12)

13-15 தொகு

விருத்தம்

ஒருவாணுதல் பண்டுளங் களிக்க வுயர்வான் முகடு கிழித்தெழுந்து
மருவார் தருவின் மரங்கொணர்ந்த மதுரை வடிவேல் அதிவீரா
அரவார் வேம்பின் பசுங்கண்ணி யந்தியிறைவிக் கருளென்னா
இரவா திருக்கநீ யளித்தற் கிரங்கா திருந்தா யிதுநாளே. (13)

இரட்டையர்

தேங்கு புகழாங் கூர்சிவனே வல்லாளி யப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ- போங்காணும்
கூறுசங்கு டோன்முரசு கொட்டோசை யல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல். (14)
மூடர்முன்னே பாடன் மொழிந்தால் அறிவாரோ
ஆடெடுத்த தென்புலியூ ரம்பலவா- ஆடகப்பொற்
செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
அந்தகனே நாயகன் ஆனால். 15)

16-18 தொகு

வேயீன்ற முத்தர்தமை வெட்டினானே யிடையன்
தாயீன்ற மேனி தயங்கவே- பேயாகேள்
எத்தனை நாளென்றே யிடறுவான் பாற்குடத்தை
அத்தனையும் வேண்டு மவர்க்கு. (16)
மாங்காட்டு வேளான் மகளை மருமகன்பாற்
போங்காட்டி லின்பம் புணர்ந்தானே- ஆங்காணும்
மக்கண் மெய்தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு. (17)
குன்றுங் குழியுங் குறுகிவழி நடப்ப
தென்று விடியுமெமக் கென்கோவே- ஒன்றுங்
கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறில்
இடாதோ நமக்கிவ் விடி. (18)

19-21 தொகு

காளமேகப் புலவரும் இரட்டையரும்

நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம்
பாணந்தான் மண்டின்ற பாணமே- தாணுவே
சீராரூர் மேவுஞ் சிவனேநீ யெப்படியோ
நேரார் புரமெரித்த நேர். (19)
ஆசுகவி யாலகில வுலகெங்கும்
வீசுபுகழ்க் காள மேகமே- பூசுரா
விண்கொண்ட செந்தணலாம் வேகுதே யையையோ
மண்டின்ற பாணமென்ற வாய். (20)

கட்டளைக் கலித்துறை

புராதன மானதமிழ்ப் புலவீ ரிந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவகை கேட்டிலையோ
தராதலம் வென்ற தமிழ் மாறனையுந் தன்தம்பியையும்
இராகவ னென்றும் இலக்குவ னென்று மிருந்ததுவே. (21)
"https://ta.wikisource.org/w/index.php?title=பாண்டியன்_கலித்துறை&oldid=25063" இலிருந்து மீள்விக்கப்பட்டது