பாபு இராஜேந்திர பிரசாத்/ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படிப்பில் புலியானார்!



3. ஆரம்பப்பள்ளி முதல்
பல்கலைக்கழகம் வரை
படிப்பில் புலியானார்!

அவரது சொந்தக் கிராமமான ஜீராதேயியில், ஆரம்பக் கல்வியைப் பார்சியிலும், சப்ரா பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்விலும், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலும், கல்கத்தா ‘டப்’ காலேஜில் இங்கிலீஷிலும் மற்றக் கல்வித் துறைகளிலும், அதாவது பள்ளி முதல் பல்கலை வரையுள்ள படிப்புத் தேர்வுகளில் கல்வியில் புலியாகவே இருந்து எல்லாவற்றிலும் முதல்வராகவே வெற்றி பெற்றார் பாபு ராஜேந்திர பிரசாத்.

அவரது அறிவுத் திறமையிலே மகிழ்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஓராண்டிற்கு இரண்டு வகுப்புகளாய் பாபுவை உயர்த்தினார்கள். ஆனால், இராஜேந்திர பிரசாத்தின் தந்தை மகாதேவ தேசாயக்கு ஆசிரியர்களது இச்செயல் அறவே பிடிக்கவில்லை. இந்த இருவகுப்புத் தேர்வால் தனது மகனுடைய கல்வி குன்றி விடுமே என்று அஞ்சினார். ஆசிரியர்களை அழைத்து பாபுவுக்கு இருவகுப்புத் தேர்வுகளைச் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இரோஜேந்திர பிரசாத், சமஸ்கிருத மொழியை வீட்டிலேயே கற்றார். இந்தி மொழிப் பயிற்சி அவருக்கு நீண்ட நாட்கள் நீடிக்காமல் போனாலும், இந்தி மொழியில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களைப் புரிந்து கொள்வது மட்டுமன்று பார்சி மொழிச் சொற்களையும், சமஸ்கிருதச் சொற்களையும் கலந்து, அழகாக இந்தியில் பேசும் ஆற்றல் அவருக்குக் கைவந்தக் கலையாகவே இருந்தது.

அவரது மெட்ரிகுலேஷன் படிப்பும், சப்ரா பள்ளியிலேயே முடிவுற்றது. பிறகு, அவர் கல்கத்தா சென்றார். அங்கே உள்ள ‘டப்’ கல்லூரியிலே சேர்ந்தார். அக்கல்லூரியிலே அப்போது ஜகதீச சந்திரபோஸ் தாவரவியல் விஞ்ஞானம் கற்பித்தார். டாக்டர் பி.சி.ராய் ரசாயனப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்தக் கல்லூரியில் ராஜேந்திர பாபு படித்த போது, அவரே முதல் மாணவராக விளங்கினார்.

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றதற்குரிய உபகாரச் சம்பளம் மாதம் இருபத்தைந்து ரூபாயைக் கல்லூரி வழங்கியது. இந்த உபகாரத் தொகை அவருக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்து வந்தது. அதற்கடுத்து பி.ஏ. தேர்விலும் அவரே முதல் மாணவமணியானார். கிடைத்து வந்த உபகாரச் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் தொண்ணூறு ரூபாயாக உயர்ந்தது.

இவ்வாறாகக் கல்வித் துறையின் ஒவ்வொரு பிரிவிலும், ராஜன் பாபு முதல் மாணவராகத் தேர்வு பெற்றுக் கொண்டே வந்ததில் ஓர் உண்மையும், சிறப்பும் இருந்தது. அந்த நேரத்தில் பீகார் மாகாணம் வங்காள மாகாணத்தோடு சேர்ந்திருந்தது. பீகார் மாணவர்கள் எல்லாருமே கல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்!

வங்க மொழி பேசுவோர் தெளிவான அறிவுடையோர், உணர்ச்சியின் போர்வாட்கள்; ஆனால், பீகார் மக்கள் அவ்வாறல்லர்; அப்பாவிகள்; எடுப்பார் கைப் பிள்ளைகள்; சுறுசுறுப்பு இல்லாமல் எக்காரியத்தையும் ஆமை வேகத்திலே செய்பவர்கள். அதனால், பீகாரிகள் என்றாலே வங்காளிகளுக்கு எப்போதும் கேலிப் பொருளாகவே தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏளனமாகவே வங்காளிகள் அவர்களைப் பேசுவர்! புத்தி மட்டு யாருக்கென்று ஒரு வங்காளியைக் கேட்டால், சற்றும் யோசிக்காமல், இது தெரியாதா? பீகாரிகள் தான் என்பார்கள்.

வங்காளிகளின் இந்த வக்ரப் புத்தியை வங்கக் கடலிலே தூக்கி எறிந்தார் இராஜேந்திரர்! அடுத்து வந்த ஒரு பரீட்சையில் இராஜேந்திரரிடம் புறுமுதுகு காட்டி ஓடினார்கள் வங்காள மாணவர்கள். பீகாரிகள் புத்தி நுட்பம் உடையவர்கள் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

பல்கலைக் கழகப் புதுமுகப் பரீட்சை அடுத்து வந்தது. அந்த தேர்விலே ராஜன் பாபு முதல் எண் பெற்றுத் தேறினார். இந்த செய்தியைக் கேட்ட பீகார் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. பீகார் மக்கள் அறிவாளிகளே என்பதை இராஜேந்திரர் மீண்டும் ஒருமுறை யெமப்பித்தார். இதனை ஒரு முறைக்கு இருமுறை நேரில் கண்ட வங்கப் பெருமக்கள் அவரை வியந்து பாராட்டினார்கள். என்றாலும், பீகாரிகளின் பெருமிதத்துக்கு இவை இணையாகுமா?

பீஹாரிலே இருந்து வெளிவந்த ‘இந்துஸ்தான் ரிவியூ’ என்ற திங்கள் இதழ், மாணவர் குல நாயகமான இராஜேந்திரரை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்து எழுதியது. வாலிபர் ராஜேந்திரர் எல்லா வகைகளிலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகத்திலும் அவர் இவ்வாறே சிறந்து விளங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் இராஜேந்திரருக்குப் பெரும் பதவிகள் கிட்டும் என்று நம்புகிறோம். நீண்ட ஆயுளோடு அவர் வாழ்ந்தால், எந்தப் பதவியும் அவருக்கு அரியதன்று. மாகாண உயர்நீதிமன்றத்தில் அவர் நீதிபதி பதவியை வகிக்க முடியும். இந்துஸ்தான் பத்திரிகை 1902 ஆம் ஆண்டில் எழுதியதற்கேற்றவாறு இராஜேந்திரப் பிரசாத் தேசிய காங்கிரஸ் மகா சபைக்குத் தலைவரானார்.

1906- ஆம் ஆண்டில் இராஜேந்திர பிரசாத் பி.ஏ. பரீட்சையில் தேறினார். அதே ஆண்டில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் தேசிய மகா சபை தொண்டர் படையில் பாபு பிரசாத்தும் சேர்ந்து சிறப்பாகச் சேவை செய்தார். அந்த மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்கள் பலர், இராஜேந்திரர் சேவையைப் பாராட்டினார்கள். அப்போது முதல் அவருடைய கவனம் தேச சேவையின் பக்கம் திரும்பியது.

கல்வியில் அவர் போதிய கவனம் செலுத்தினார் படிப்பில் ஆழ்ந்த, உறுதியான எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால், பி.ஏ. வகுப்பு வரை நடைபெற்ற தேர்வுகளில் அவர் கல்வியில் புலியாகவே எல்லாருக்கும் காட்சி தந்தார். அவர் எம்.ஏ. வகுப்பில் படிக்கும் போது தேச சேவை அவரை ஈர்த்தது. அதனால் எம்.ஏ. தேர்வி முதல் மாணவராக வரும் வாய்ப்பை அவர் இழந்தார். இந்த நேரத்தில் இராஜேந்திரரின் தந்தையார் மகாதேவ தேசாய் இறந்து விட்டதால், அவர் மீள்முடியாத துன்பமடைந்தார்; சோகமே உருவமானார்.

இராஜேந்திரர் வீட்டார் அவரை ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு அனுப்பிட விரும்பினார்கள். ஆனால்,பாரிஸ்டராக பாபு விரும்பினார். சூழ்நிலை அவருக்கு சரியாக அமையாததால், அவர் எண்ணம் நிறைவேறாது போயிற்று.