பாபு இராஜேந்திர பிரசாத்/பீகார் காந்தி ராஜன் பாபு

8. பீகார் காந்தி ராஜன் பாபு

முதல் உலகப்போர் முடிந்தது! பிரிட்டிஷ் ஆட்சி பல தேசத் தலைவர்களைப் போர்க்காலத்தில் சிறையில் பூட்டியது. போர் முடிந்த பின்னர், இந்தியத் தேசத் தலைவர்களை சுதந்திர லட்சியத்திற்காக இயங்கவிடாமல் அவர்களை முடக்கி வைக்க வேண்டுமென்று எண்ணியதால் பிரிட்டிஷ் அரசு, ‘ரெளலட்’ என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டம் ஆட்சி முறைக்கு வந்தால், இந்திய நாடு சிறைக கூடு ஆகிவிடும் என்பதால், இமயம் முதல் குமரி வரையுள்ள மக்கள் அனைவரும் மூர்க்கத்தனமாக அதை எதிர்த்தார்கள்.

தில்லி சட்டமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்றத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தவர்கள். தங்களது பதவிகளைத் துக்கி எறிந்தார்கள். நாடெங்கும் இக்கிளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும் போது வேறு சில உறுப்பினர்கள் எழுந்து சட்டத்தைக் காரசாரமாக எதிர்த்துக் கண்டனம் செய்தார்கள்.

இந்திய சட்ட சபைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விவரத்தைக் கண்டிட காந்தியடிகள் அந்த சட்ட சபைக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அதுதான் அவரது வாழ்நாளில் அவர் பார்த்த முதல் சட்டசபைக் கூட்டமும் - கடைசிக் கூட்டமும் ஆகும். ரெளலட் மசோதா எவ்வாறு சட்ட சபையில் மதிக்கப்படுகிறது. அதன் ஆதரவு - எதிர்ப்புகளது நிலையென்ன. நாடு எப்படி அந்த மசோதாவை மதிப்பீடு செய்கின்றது என்பன பற்றியெல்லாம் நேரில் பார்ப்பதற்காகவே காந்தியடிகள் சென்றார்.

சென்னையைச் சேர்ந்த சில்வர் டங் சீனிவாச சாஸ்திரிகள், ரெளலட் மசோதாவை எதிர்த்துப் புயல் போல கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிருந்தார். ஆவேசமாக அவர் பேசிக் கொண்டிருந்ததையும், அவரது ஆங்கில அனந்தெறிப்பு வாதத்தையும் கண்டு காந்தியார் பிரமித்தபடியே அமர்ந்திருந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை நசுக்குவதற்காகக் கொண்டு வந்த சட்டம்தான் ரெளலட் சட்டம். இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது ஏன்? அதன் உள் நோக்கம் என்ன? இந்த சட்டம் மூலமாக யாரானாலும் சரி, எதற்கானாலும் சரி, எப்போதானாலும் சரி, காரணம் சொல்லாமலே கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம். சுட்டுத் தள்ளலாம். இந்திய சட்டமன்றக் கவுன்சிலின் அனுமதி பெற்றாலே இந்தக் கொடுமைகளை நடத்தலாம். சுதந்திரம், விடுதலை என்பனவற்றைப் பேசவிடாமல் ‘நா’க்கறுக்கும் சட்டம்தான் இச்சட்டம் என்பதை மறுக்க முடியுமா?

சட்டத் தயாரிப்புக் குழுத் தலைவரான ரெளலட் துரையின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், அந்தச் சட்டம் செயற்படுத்தப்பட்டால், நாடு சுடுகாடாகும் என்பதை அறிந்து அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். சாதாரண மக்கள் பயப்படுகிறார்கள். இந்த மசோதா சட்டமானால், அதன் கொடுமைகளை மிக மோசமான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்துமானால், அதன் பொறுப்பை பிரிட்டிஷ் ஆட்சிதான் ஏற்றாக வேண்டும் என்று ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரியார் அனல் தெறிக்க எச்சரித்துப் பேசிய ஆங்கில உரையைக் கண்டு காந்தி தனது புருவங்களை மேலேற்றி பாராட்டி வியந்தார்.

அதே நேரத்தில் சீநிவாச சாஸ்திரியின் கனல் தெறிக்கும் பேச்சைக் கேட்ட இந்திய வைஸ்யராய் கண்கொட்டாமல் அவரைப் பார்த்தபடியே பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டார். அவருடைய உரையில் உண்மையும் உணர்ச்சியும் உந்தி உந்தி வந்ததைக் காந்தியடிகளும் கேட்டு உடல்புல்லரித்துப் போனர்.

தில்லி சட்மன்ற பேச்சுக்கள் நாட்டிலே ஓர் உணர்ச்சியை உருவாக்கி விட்டன. இதனால் நாடெங்கும் கிளர்ச்சி கட்டுக்கு மீறி நடந்தது. மக்களும் ஆங்காங்கே ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஊர்வலமும், கண்டனமும், பேரணியும் நடத்தினார்கள்.

மகாத்மா, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட, நாடெங்கும் மக்களது மனோநிலைகளை அறிய சுற்றுப் பிரயாணம் செய்தார். அங்கே நடந்த பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கிளர்ச்சிகளைச் செய்யும் தளபதிகளை ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்ந்தெடுத்தார்.

வங்காளத்தில் சித்த ரஞ்சன்தாஸ் எனப்படும் சி.ஆர்.தாஸ், சென்னையில் ராஜாஜி, குஜராத்தில் வல்லபாய் பட்டேல், உத்தர பிரதேசத்தில் ஜவகர்லால் நேரு, பீகாரில் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பேராட்டத் தளபதியாகத் தேர்வு செய்தார். அறப்போர் இயக்கம் தொடங்கு முன்பு, சத்யாக்ரக சபையை அமைத்தார். அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த சபையில் ராஜேந்திர பிரசாத்தும் ஓர் உறுப்பினர்.

இராஜன் பாபு அறப்போருக்கு பீகார் முனையில் தலைமை ஏற்றார். மக்காணம் முழுவதும் பாபு சுற்றுப் பயணம் செய்து படைக்கு ஆள்திரட்டுவதைப் போல சத்யாக்ரகத்துக்கு ஆள் சேர்த்தார்! காந்தியின் திட்டம், அதன் தத்துவம், ரெளலட் கொடுமைகள் என்பனவற்றைப் பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார் பாபு. பிரச்சாரம் மிக வேகமாக மாகாணம் முழுவதுமாக எதிரொலித்தது. அதனால், ராஜன் பாபுவை பீகார் காந்தி என்று மக்கள் அன்போடு அழைத்தார்கள்.

இந்த இயக்கத்தில் பங்கேற்ற பிறகு, ராஜன் பாபுவுக்குத் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை என்பதே இல்லாமல் போனது. முழு நேரத்தையும் ராஜன் பாபு நாட்டுப் பணியிலேயே செலவிட்டார்.

இந்தக் கிளர்ச்சிக்கு பொதுமக்கள் பேராதரவு தந்தது மட்டுமன்று; இந்த அடக்குமுறை பஞ்சாப் மாநிலத்தில் ராட்சத உருவம் பெற்றது. ரெளலட் சட்டத்தை எதிர்க்க அல்லது கடுமையாகக் கண்டிக்க, பஞ்சாப் அமிர்தசரசில், ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மேல் ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயன் குண்டுகள் இருந்த வரையில் சுடச் சொன்னான். அதனால்,போலீகம், ராணுவமும் சுட்டன. ஏறக்குறைய ஆயிரக்கணக்கான் மக்கள், சுவர்களைத் தாண்டி ஓடும் போது சுடப்பட்டதால் சுவர் மீதே சாய்ந்து பிணமானார்கள். எத்தனையோ ஆயிரம் பேர் படுகாயமடைந்தார்கள்.

கற்பழிக்கப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட மாதரசிகள் எண்ணற்றவர்கள் ஆவர். இவற்றை எல்லாம் கண்ட மக்கள், நாட்டில் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

இதற்கு இடையில், ஐரோப்பியப் போரின் விளைவாகத் துருக்கி நாடும் துண்டாடப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லீம்கள் கிலாபத் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். மகாத்மா காந்தியும், ராஜன் பாபு போன்ற முக்கியத் தலைவர்களும், அதாவது பொது மக்களது சக்தியிலே இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட மற்ற தலைவர்களும் இதற்குத் தங்கள் ஆதரவைத் தந்தார்கள். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக அறப்போர் இயக்கத்தில் பங்கு பெற்றனர்.

கிலாபத் மாநாடு 1920 ஆம் ஆண்டில், பாட்னா நகரில் ராஜன் பாபு தலைமையில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. அவருடைய மாநாட்டுத் தலைமையுரை, பீகார் மக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. இதனால் அறப்போர் இயக்கம் மேலும் பலமடைந்து வளர்ந்தது.

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 1920-ஆம் ஆண்டு நாகபுரி நகரில் கூடியது. இந்த மாநாடு காந்தியடிகளாரின் ஒத்துழையாமை என்ற அறப்போரை ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்டது.

பட்டம் - பதவிகளையும், கல்லூரிகள், வழக்கு மன்றங்கள் முதலியவைகளையும், துறக்க வேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும். அதற்கான சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் சட்டங்களை மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வை எல்லாரும் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் நாம், அரசாங்கத்துடன் ஒத்துழையாமல் இருக்கின்றோம் என்பதே காந்தியடிகளின் திட்டமாகும்.

இராஜேந்திர பிரசாத், காங்கிரஸ் தீர்மானத்துக்கு இணங்கி வக்கீல் தொழிலைக் கை விட்டார். ஒவ்வொரு மாதத்துக்கும் நான்கு அல்லது ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயை அவரது வழக்குரைஞர் தொழில் தந்து கொண்டிருந்தது. ஆனால், அவ்வளவிலும், ராஜேந்திர பிரசாத் தனது எதிர்க்கால குடும்ப வாழ்க்கைக்காக எதையும் சேமித்து வைக்கவில்லை. ஆனாலும்,தன்னிடமுள்ள செல்வத்தை ஏழை மக்களுக்காக வாரித் தந்தார் என்பது சத்தியமாகும். எனவே, ராஜன் பாபு வழக்குரைஞர் தொழிலை வெறுத்துக் கைவிட்ட போது, அவருடைய வங்கி சேமிப்புக் கணக்கில் இருபத்தைந்தே ரூபாய் மட்டுமே இருந்தது என்பதே உண்மை.

இங்கிலாந்து நாட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு 1921 ஆம் ஆண்டில் வந்தார். ஆனால் காந்தியடிகள் பகிரங்கமாக அவரது வருகையை வெறுத்து, பகிஷ்கரித்தார். இளவரசர் எங்கெங்கு வருகை தந்தாரோ, அங்கங்கே எல்லாம் கருப்புக் கொடிகள் இளவரசரை வரவேற்றன. ஆலைத் தொழிலாளர்கள் பல்வகைத் தொழிலிலே பணியாற்றுபவர்கள் ஒன்று கூடி கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள், இதனால், பிரிட்டிஷபு அரசு ஆத்திரம் கொண்டது. தொண்டர்களைக் கொடுமை செய்ய முற்பட்டது.

காங்கிரஸ் அறப்போர் தொண்டர்களைச் சேர்க்க அரும்பாடுபட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ராஜன் பாபுவின் பொது வாழ்க்கை நாணயத்தை நம்பி தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவகர்லால் நேருவின் தந்தையாரான பண்டித மோதிலால் நேரு போன்ற எண்ணற்றோர், தங்களைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். அரசு அவர்களைக் காராக்கிரகத்தில் அடைத்துக் கொடுமைகளைச் செய்தது. ஆனால், ராஜன் பாபுவை மட்டும் கைது செய்திட பீகார் அரசுக்கு துணிவு வரவில்லை.

ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் வெள்ளையராட்சியால் கைது செய்யப்பட்டு விட்டதல், காங்கிரஸ் போராட்ட இயக்கம் பலவீனமானது. மக்களும் சோர்வடைந்து விட்டார்கள். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றவர்கள், சட்டமன்றங்களிலே கலந்து கொண்டு, பிரிட்டிஷார் கொடுமைகளை எதிர்த்துப் போராடிட முடிவு செய்தார்கள். இவர்கள் கருத்து மகாத்மா காந்தி கருத்துக்கு முரணானது.

இராஜேந்திர பிரசாத், ராஜாஜி போன்றவர்களை ‘மாறுதல் வேண்டாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் முழுக்க முழுக்க காந்தியடிகளது கருத்தையே பின்பற்றினார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய நிர்மாண வேலைகளை மட்டுமே செய்தார்களே ஒழிய சட்டமன்றப் போராட்டங்களைச் செய்யவில்லை.

காங்கிரஸ் தொண்டர்கள் கதர் நூல்களைத் தயாரிப்பதும், கதராடைகளை உருவாக்குவதும் அதற்கான பயன்பாடுகளை மக்களிடம் விளக்கிக் கூறி பொருளாதாரத்தைப் பெருக்கும், கதர் பிரச்சாரத்தையும் செய்தார்கள். ராஜேந்திர பிரசாத் இந்தப் பணியை தொண்டர்கள் இடையே தீவிரப்படுத்தினார். பாபுவும் இறுதிவரை ஒவ்வொரு நாளும் நூல் நூற்று வந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றப் பிறகும் கூட, கதர் பணிகளைச் செய்யும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை.

இதே பணிகளை சுமார் எட்டு ஆண்டுகள் ராஜன் பாபு தொடர்ந்து செய்து வந்தார். அதைக் காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளிலே ஒன்றென எண்ணிச் செய்தார். 1928-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் போராட்டச் சங்கு முழங்கியது.

பிரிட்டிஷ் அரசு நியமித்த சைமன் கமிஷனை காங்கிரசும் நாடும் பகிஷ்காரம் செய்தது. 1930 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேரு தலைமையில் லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. இந்த மாநாட்டில் தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திரம் தேவையென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து உப்புச் சத்தியாக்கிரகப் போரை ஆரம்பித்தார். ராஜேந்திர பிரசாத் இந்தப் போராட்டத்தில் தீவிரமாய் கலந்து கொண்டார். 1930- ஆம் ஆண்டில் ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார்.

அதற்குப் பிறகு, 1932 ஆம் ஆண்டில் ராஜன் பாபு மீண்டும் கைது செய்யப்பட்டு, மறுபடியும் ஆறுமாதம் தண்டனையை அடைந்தார். இத்தகையவர், இரண்டு முறை ஆறாறு மாதம் அடுத்தடுத்துச் சிறை சென்றதால், அவர் காசநோய்வாய் பட்டார். பிறகு, நாளாவட்டத்தில் அந்த நோய் வெளிப்படையாகவே அவரை துன்புறுத்தியது. சிறை அதிகாரிகள் அவருக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சையை அளித்துக் கொண்டே இருந்தார்கள்.

ராஜன் பாபு, மற்றுமோர் முறை போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் பதினைந்து மாதம் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கொடுமையான சிறைத் தொல்லைகளால் அவருள்ளே இருந்த காசநோய் அதிகமாக வருத்தியது. அதற்காக அவர் தளரவில்லை. அவர் சிறை புகுந்ததைக் கண்ட பீகார் மக்கள் ஆயிரக்கணக்காக அவரைப் பின்பற்றி சிறை சென்றார்கள்.

சத்தியாக்கிரக இயக்கத்தை நசுக்க முனைந்த பிரிட்டிஷ் அவசரச் சட்டத்தால், பாபு நடத்தி வந்த ‘தேசம்’ என்ற ஹிந்திப் பத்திரிகையும் வெளிவராமல் தடை செய்யப்பட்டது. இந்தி மொழியில் அவருக்கிருந்த புலமை காரணமாக அவர் பல நூல்களை எழுதியுள்ளார். ‘சம்பரான் சத்தியாக்கிரகம் காந்திஜீ மகத்துவம்’, ‘காந்தி தத்துவம்’ முதலிய நூல்கள் அவர் எழுதியுள்ளவைகளில் மிகவும் சிறப்புடையவை. அவர் ‘லா வீக்லி’ என்ற சட்டப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார். பீகாரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சர்ச் லைட்’ என்ற இங்கிலீஷ் பத்திரிகையின் நிர்வாகியாகவும் இருந்தார்.

இராஜன் பாபு சிறையிலே இருந்த போது 1934 - ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள், பீகார் மாகாணத்தைக் கொடிய பூகம்பம் தாக்கியது. பூமி பிளந்தது. மாளிகைகளும், வீடுகளும், கோபுரங்களும், தொழிற்சாலைகளும் மண்ணுக்குள் மூழ்கின. சில இடங்களில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. நகரின் முக்கிய பகுதிகள் எல்லாம் மணற்காடாகக் காட்சியளித்தன. மக்களும், கால்நடைகளும் ஏராளமாக மாண்டு மறைந்து, எங்கும் பிணவாடைகள் வீசின. வீடிழந்தோர், உறவிழந்தோர். பொருள் பறி கொடுத்தோரின் ஒலங்களால் பீகார் மாநிலம் பரிதாபமாகக் காட்சியளித்தது.

இந்தக் கோரக் காட்சியைக் கண்ட காந்தியடிகள் ‘தீவினைப் பயன்தான் இது’ என்று வருந்தினார். ‘இயற்கையின் சீற்ற லீலைகள்’ என்றார் கவியரசர் தாகூர். அப்போது ராஜன் பாபு காச நோய் கொடுமை காரணமாக பாட்னா மருத்துவமனையிலே சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பூகம்பம் ஏற்பட்ட இரண்டு நாள் கழித்து அவர் மருத்துவ மனையிலே இருந்து ஓரளவு உடல் நலத்தோடு வெளியே வந்தார்.

பீகார் மாகாணம் முழுவதும் அரைகுறை உடல் நலத்தோடு சுற்றிச் சுற்றி வந்து மக்களின் பரிதாப அழிவுகளைக் கண்டு பதறினார் மனம் தடுமாறினார்! தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல், பூகம்ப நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

பூகம்ப அழிவால் வட பீகார் சின்னாபின்னமானதற்கும், லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல் இழந்து அனாதைகளாக்கப் பட்டதற்கும் எப்படி நிதி திரட்டலாம் என்று அவர் திட்டமிட்டார். வீடிழந்தோர் தங்குவதற்கும், உணவும், ஆடை, மருத்துவ வசதிகளும் கிடைக்க, யார் யாரை அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் சென்று பார்த்து வேண்டிய வசதிகளைத் திரட்டினார்.

பூகம்ப அழிவு விவரங்களைக் கணக்கிட்டு, தேவைகளையும் கணக்கிட்டு, இந்த நேரத்தில் எல்லா நாடுகளும் பீகார் அழிவுகளுக்கு உடனடியாக நிதியுதவி, பொருள் உதவி, தானிய வகைகள் உதவி ஆகியவைகளைச் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் எல்லாவற்றுக்கும் அறிக்கைகளை எழுதி வெளியிட்டார். பத்திரிக்கைகள் அவரது அறிக்கைகளைப் பரபரப்புடன் வெளியிட்டு உதவின. இந்த நிலைகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் மகாசபைக்கும், காந்தியடிகளாருக்கும் நேரிலும், பத்திரிக்கை வாயிலாகவும், கடிதங்கள் மூல்மாகவும் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்தார்.

பூகம்பம் அழிவுகளைப் பற்றிக் கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக ஜவகர்லால் நேருவும் வேறு சிலரும் பாட்னா நகருக்கு வந்தார்கள். அப்போதுதான் ராஜன் பாபு சிறையிலே இருந்து விடுதலையாகி வந்திருந்தார். ‘நாங்கள் கொடுத்த தந்திகள், பிற விவரங்கள் எதுவும் ராஜன்பாபுவிடம் போய் சேரவில்லை. காரணம் பூகம்ப அழிவுச் சக்திகளால் ஏற்பட்ட சேத விளைவுகள் தான். எனவே ராஜன்பாபுவுடன் வெட்ட வெளியிலேயே தங்கினோம்’ என்கிறார்.நேரு தனது கயசரிதையில்.

பிரிட்டிஷ் ஆட்சி இடிந்து விழுந்த கல், மண்ணை நீக்கிட எந்த வேலையையும் செய்யவில்லை. சவங்கள் அப்படியப்படியே நாறிக் கிடந்தன. பிரிட்டிஷ் அரசு எந்த உதவிகளையும் பீகார் மக்களுக்கு மனிதாபிமானத்துடன் செய்ய முன் வரவில்லை.

வெள்ளைக்காரர்களின் இந்த அரக்க மனோபாவத்தை விளக்கி ராஜன்பாபு இந்திய மக்களுக்கு அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்ததின் பயனால், நாடெங்கும் இருந்து நன்கொடைகள் வந்து குவிந்தன. ஒவ்வொரு மாகாணத்திலே இருந்தும் தொண்டர் படையினர் வந்து குவிந்தார்கள். லட்சக் கணக்கில் பணம் நிதியாக வந்தபடியே இருந்தது. வந்து சேர்ந்த அனைத்தையும் ஒழுங்காகப் பிரித்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய்ச் சேர ராஜன் பாபுவும் அவரது குழுவினரும் தளராமல் வேலை செய்தார்கள். இந்த மாதிரியான பூகம்ப நிவாரண வேலை இரவும் பகலுமாக ஓராண்டு காலம் வரை நடந்து வந்தது. மக்களும் வேண்டிய உதவிகளைப் பெற்று வந்தார்கள்.

இவ்வாறு, முப்பது லட்சம் ரூபாய், அவரது வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானிகள் உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். இந்த நிவாரண வேலைகளுக்காக ராஜன்பாபு மக்களைத் திரட்டும் முறைகளையும், தனது நோயையும் உடல் உருக்குலைப்பையும் கண்டு சோர்ந்து விடாமல் செயல்புரியும் தன்மையினையும் கண்டு, நாடே ராஜன் பாபுவை இரு கை கூப்பி வணங்கி வாழ்த்தியது.

எந்த வித உதவியையும் பிரிட்டிஷ் ஆட்சி, பீகார் மக்களுக்கு செய்யாமல் இருந்தும் கூட, தனியொரு மனிதன் இவ்வளவு தீவிரமாகப் பூகம்ப நிவாரண வேலைகளைச் செய்து வருவதைக் கண்டு, அதே அரசு ராஜன் பாபு பணிகளைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியது மட்டுமல் வலிய வந்து வேண்டிய உதவிகளைச் செய்து ஆட்சிக்கு நற்பெயரைத் தேடிக் கொண்டது.

பூகம்ப நிவாரணப் பணிகளைப் பொறுத்த வரையில் ராஜேந்திர பிரசாத் கட்சி பேதம் ஏதும் காட்டாமல், எல்லாரிடமிருந்தும் எல்லா உதவிகளையும் ஏற்று, பீகார் மக்களுக்குத் தெய்வம் போல நின்று கடமையாற்றினார்.