பாப்பா முதல் பாட்டி வரை/008-024

சிசேரியன் ஏன் அவசியம்?

ம் நாட்டில், ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்வுடன், உற்றார் - உறவினர் கேட்கும் முதல் கேள்வி, சுகப் பிரசவம் தானே? பெண்ணின் பெற்றோர்க்கும், மருத்துவருக்கும் சுகப்பிரசவம் அதிக மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.

ஆனால், இப்போது சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மூலமே அதிக அளவுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன என்றும், பணத்துக்காக மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சையைச் செய்வதாகவும் பொது மக்களிடையே தவறான எண்ணம் எழத் தொடங்கி விட்டது.

சிசேரியன் அதிகரிக்கக் காரணம் என்ன? : முற்காலத்தில் கர்ப்பிணிப பெண், குழந்தையைப் பிரச்சினையின்றி பிரசவித்துவிட்டாலே, அவளுக்கு மறுவாழ்வு கிடைத்ததாகக் கருதினர். இதனால் தான் ‘பெற்றுப் பிழைத்தாயோ, செத்துப் பிழைத்தாயோ’ என்ற சொற்றொடரும் அக் காலத்தில் பிரபலமாக இருந்தது. மேலும், அக்காலத்தில் பிரசவ நேரத்தில் இறந்த தாய்மாா்களின் விகிதமும் (Matermal Mortality Rate) அதிகம்.

60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பிரசவிக்கும் நேரத்தில், கருவில் உள்ள குழந்தையின் உயிரைக் காட்டிலும், தாயின் உயிருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஏனெனில், மயக்க மருத்துவம், ரத்தம் செலுத்துதல், அறுவை சிகிச்சை தையல் உத்திகள் முன்னேறாத காலம் அது. அக் காலத்தில் தாயின் கூபகத்திலிருந்த குழந்தையின் தலையைத் துளைத்து அதை நசுக்கி மடிய வைத்து தாயைக் காப்பாற்றினர். அக் காலத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை இல்லாத காரணத்தால், குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அமெரிக்காவில் : வளர்ந்துவிட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், 1970-ல் சிசேரியன் அறுவ சிகிச்சை விகிதம் 5.5 சதவீதம்; 1983-ல் இது 20 சதவீதமாக உயர்ந்தது. 1985-ல் 25 சதவீதமாக உயர்ந்தது. 2000-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மருத்துவ முன்னேற்றம், மக்களிடையே விழிப்புணுர்வு, தாய் - குழந்தையின் நலன், மற்றும் குழந்தையின் அறிவுத் திறனுக்குப் பாதிப்பு ஏற்படாத தன்மை, ஆகிய காரணங்களால், சிசேரியன் அறுவைப் பேறு அதிகரித்து வருகிறது.

சிசு மரணம் : அக் காலத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை இல்லாத காரணத்தால் தான் மரண விகிதத்தோடு சிசு மரண விகிதமும் (infant Mortality Rate) அதிகமாக இருந்தது. அக் காலத்தில் பல்வேறு காரணங்களால் பிறக்கும்போதே அல்லது பிறந்த உடனேயோ 1000த்துக்கு 140 குழந்தைகள் உயிரிழந்தன. அக் காலத்தில் கர்ப்ப கால மருத்துவ சோதனைகள் இல்லாததால், குறை மாதக் குழந்தைகள், சிறுநீரகங்கள் இல்லாமை, இதயம் பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால், குழந்தை பிறந்தவுடன் இறக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது கருவில் இருக்கும் குழந்தையின் உடல்நிலையைச் சோதிக்க அல்ட்ரா சவுண்ட் இருப்பதாலும், சிசேரியன் அறவை சிகிச்சையாலும் சிசு மரண விகிதம் 1000த்துக்கு 40 என்ற நிலைக்குக் குறைந்துள்ளது.

முக்கிய காரணங்கள்: பெண்ணின் உடல் ஆரோக்கியம், பெண்ணின் பிறப்பு உறுப்பின் (கூபகம்) வடி வமைப்பு, கர்ப்பப் பையில் குழந்தை நிலை, கருவில் உள்ள குழந்தையின் நஞ்சு, நஞ்சுக்கொடி உள்ள இடம் ஆகியவையே சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகரித்தற்கான காரணங்கள்.

30 வயதுக்குமேல் திருமணம் செய்தால் : பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்தால், பேற்றுக்குப் பெண்ணின் உடல்நிலை இயல்பானதாக இருக்கும். 30 வயதைத் தாண்டிய பிறகு, குறிப்பாக, குறிப்பாக 35 அல்லது 40 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்குக் கருப்பைக் கழுத்து வலுவேறி, இயல்பாக எளிதில் திறந்து கொடுப்பதில்லை.

இப்போது வரதட்சிணைக் கொடுமையாலும், சில சமயங்களில் தன் சுகத்தை மறந்து, குடும்ப வருமானத்துக்கு ஆதாரமாகப் பெண் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் திருமணங்கள் தாமதப்படுகின்றன. ஆனால், ஒரு சில பெண்கள் உயர்தர வாழ்க்கையை மனத்தில் கொண்டு, படிப்பு, வேலை எனத் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். ஒருசில பெண்கள், சூழ்நிலை சாதகமாக வரும்போது, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனக்கருதி கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப் போடுகின்றனர். இக் காரணங்களால் வயது அதிகரித்து, பேறு கடினமாகி சிசேரியன் அதிகரித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம் : கர்ப்பம் தரிக்கும்நிலையில், குழந்தையின் கழிவுகளையும் சேர்த்து வெளியேற்ற ஏதுவாக, தாயின் சிறுநீரகங்களுக்குச் சுமை அதிகரிக்கிறது. இதனால் முதல் பேறு (தலைச்சன்) கர்ப்பிணிகளில் பலருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட வாயப்புண்டு. பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாகத் தாய்க்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வலிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், கருவிலே குழந்தை இறந்துவிடும். இது போன்ற சூழ்நிலையில் வலிப்பைக் கட்டுப்படுத்தி, சிசேரியன் அறுவைசிகிச்சை செய்து தாயையும் சேயையும், காப்பாற்ற முடிகிறது. இதேபோன்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்கள், பிறவியிலிருந்தே இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு முன்பெல்லாம் குழந்தைப் பேறு என்பது எட்டாக்கனியாக இருந்தது. தற்போது இது போன்ற கோளாறு உள்ளவர்களுக்கும் கூட சிசேரியன் உதவுகிறது.

சர்க்கரை நோய் இருந்தால் : 100 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணுக்குச் சர்க்கரை நோய் இருந்தால், அவள் திருமணம் செய்துகொள்ளவே தகுதியற்றவள் எனக் கருதப்பட்டாள். ஏனெனில், அப்போது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துற்குரிய இன்சுலின் மருந்து கிடையாது. தாய்க்குச் சர்க்கரை நோய் இருந்தால், கருவில் உள்ள குழந்தையின் எடை (4 கிலோ அளவுக்கு) அதிகமாகி, பேறு கடினமாகிவிடும். தற்போது கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நல்ல மருந்துகள் உள்ளன. மேலும் சர்க்கரை நோய் காரணமாக, குழந்தையின் எடை கருவில் அதிகரிக்கும் நிலையில் தாய்க்கும் சேய்க்கும், ஆபத்து ஏற்படாமல் இருக்கவே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவும் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது.

குழந்தையின் நிலை: பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, தாயின் கூபக, வாயிலை நோக்கிக் குழந்தையின் தலை முதலிலும், கால் பின்னரும் இறங்கவேண்டும். சில நேரங்களில் கால் கீழேயும், மேலே தலையும் இருக்கும்; பிரசவ இறுதி தேதிக்கு, மூன்று வாரங்களுக்கு முன்பு இவ்வாறு, கால் முதலில் இருப்பது தெரிந்துவிடும். இவ்வாறு இருந்தால், குழந்தை வெளியே வரும் நிலையில், கழுத்து இறுகி, சிசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையைத் தற்போது, எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. பிரசவ நேரத்தில் குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக, சிசேரியன் செய்வதையே பெற்றோர் விரும்புகின்றனர். இப்படிப்பட்ட தருணங்களில் சிசேரியன் செய்துவிடுவதே நல்லது.

நஞ்சு இடம் மாறியிருந்தால் : கர்ப்பம் தரித்தது முதலே தாயிடமிருந்து குழந்தைக்கு ரத்தம் மூலம் ஆக்சிஜன், உணவு உள்பட அனைத்தும் செல்லும் ஆதார சுருதியாக நஞ்சு விளங்குகிறது. இந்த நஞ்சு, பொதுவாக கர்ப்பப் பையின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும். கர்ப்பப் பைச் சுவரைச் சுற்றி ஒட்டினாற்போல் இருக்கும் இந்த நஞ்சு காரணமாக, பிரசவ நேரத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நஞ்சு இடம் மாறி, கர்ப்பப் பை வாய் திறக்கும் அடிப்பகுதியில் ஒட்டியிருக்குமானால், பிரசவ வலி ஆரம்பிப்பதற்கு முன்பே, உதிரப் போக்கு அதிகமாக ஏற்படும். இந் நிலையில், தாயைக் காக்க சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. சில சமயங்களில் நஞ்சு வளர்ச்சிப் பற்றாக்குறை காரணமாக, குழந்தைக்குச் செல்லும் ரத்த ஒட்டம் பாதிக்கப்பட்டு, சிசுவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு மேலும், சிசுவின் மூளைக்கு, ஆக்சிஜன் செல்வதில் பற்றாக்குறை ஏற்பட்டு, பிறந்தவுட்டன் அறிவுத் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதுபோன்ற தருணங்களிலும் சிசேரியன் அறுவை சிகிச்சையே சிறந்தது. இதேபோன்று நஞ்சுக்கொடி நழுவுதல், பனிக்குடம் முன்கூட்டியே உடைதல், பிரசவ வலி வராமல் இருத்தல், ஆகிய சூழ்நிலைகளில் சிசேரியன் அவசியமாகிறது. சில சமயங்களில் கருக் குழந்தையின் கழுத்தை நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு அதற்கு திணறல் ஏற்படும் நிலையில் சிசேரியன் தேவைப்படும்.

மன இறுக்கம் கூடாது : பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகள் மன நிலை தளர்வாக இருப்பது அவசியம். அதிர்ச்சி, குடும்பப் பிரச்சினைகள், பேற்றைப் பற்றி அதிகக் கவலை ஆகியவற்றடன் கர்ப்பிணி இருந்தால், கர்ப்பப் பை வாய் திறக்காது. விளைவு, பிரசவம் தாமதமாகி, சிசேரியன் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டியிருக்கும்.

உயரம் 5 அடிக்குக் குறைவாக இருந்தால்: கர்ப்பிணியின் உயரம், 5 அடிக்குக் குறைவாகவும், குழந்தையின் தலை தாயின் கூபகத்துக்குப் பொருந்தாமல் இருந்தாலும், சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

குழந்தை இல்லாத் தம்பதியினருக்கு : உலக அளவில் தம்பதியினரில் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேருக்குக் குழந்தை இல்லாத நிலை உள்ளது. குழந்தைப் பேறு இல்லாத் தன்மையைப் போக்க, தற்போது செயற்கைக் கருத்தரிப்பு உள்பட, நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்து, ஒரு பெண் கருத்தரிக்கும் நிலையிலோ அல்லது தொடர்ந்து கருச் சிதைவு ஏற்பட்டு அவதியுற்ற பெண், கருத்தரித்த 10 மாதம் நெருங்கிவிட்ட நிலையிலோ, எந்தத் தம்பதியினரும் குழந்தைக்குச் சிக்கல் ஏற்படுவதை விரும்புவதில்லை. குழந்தை, பாதுகாப்பாக இப் பூமியை எட்ட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். எனவே சிசேரியன் அவசியமாகிறது.

இளம்சிசு மரணம்: 1950-ல் 1000த்துக் 60 என்ற நிலையில் இளம் சிசு மரண விகிதம் இருந்தது. தற்போது கடின பிரசவங்களில், சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தைகள் காப்பாற்றப்படுவதால், 1000 த்துக் 30 முதல் 40 வரை என்ற அளவுக்கு சிசு மரண விகிதம் குறைந்துள்ளது.

தாய் மரண விகிதம்: பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில் தாய் இறக்கும்நிலை சிசேரியன் காரணமாக வெகுவாகக் குறைந்துள்ளது. 1950 ல்.1000 த்துக்கு 20 என்ற விகிதத்தில் இருந்த தாய் மரண விகிதம், 1990-ல் 1000 த்துக்கு 3 முதல் 4 வரை எனக் குறைந்தது. தற்போது அந்த விகிதம் 1000 த்துக்கு 1 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

சிசேரியன் அதிகரித்திருப்பதாக நினைப்பது மாயத் தோற்றம்: 1960-களில் 100 பேர் பிரசவத்துக்கு வந்தால், அவற்றில் 20 பேர், முதல் பிரசவத்துக்கு (தலைச்சன்) வந்தனர்; 80 பேர் இரண்டு அல்லது மூன்றாவது அல்லது நான்காவது குழந்தையைப் பெற்றெடுக்க வந்தனர். அப்போது, முதல் பிரசவத்துக்கு வந்த 20 பேரில் 2 பேருக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆக அப்போது மொத்த சிசேரியன் விகிதம் 4 சதவிகிதம்

தற்போது சிறு குடும்பக் கட்டாயச் சூழ்நிலை காரணமாக, 100க்கு 60 பேர் முதல் பிரசவத்துக்கு (தலைச்சன்) வருகின்றனர்; இவர்களில் ஆறு பேருக்குச் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது. மீதமுள்ள 40 பேர் தான் இரண்டு அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது. ஆக மொத்த சிசேரியன் விகிதம் 7 சதவீதம். ஆக 40 ஆண்டுக்காலம் சிசேரியன் விகிதம், கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான் உள்ளது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, மருத்தவ ரீதியாக ஒரு பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பது கடினமான ஒன்று; தற்போது தலைப் பிரசவம் அதிகரித்துள்ளதால், சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரித்தது போல் தோன்றுகிறது.

இரட்டைக் குழந்தைகள் : கருவில் இரட்டைக் குழந்தைகள் வளரும் நிலையிலும், சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் முதல் குழந்தை இயல்பாக வெளியேறிய பிறகு, இரண்டாவது குழந்தை கர்ப்பப் பையில் குறுக்கும் நெடுக்குமாக இருந்தால், சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

முதல் குழந்தை சிசேரியன் என்றால், இரண்டாவது குழந்தயுைம் சிசேரியனா? : சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் தான் பிறக்கும் என்ற விதி ஏதும் இல்லை. நஞ்சு இடம் மாறியிருத்தல், குழந்தை மாறிக்கிடத்தல், உயர் ரத்த அழுத்தம், குழந்தையின் கழுத்தை நஞ்சுக் கொடி சுற்றிக்கொள்ளுதல், ஆகிய காரணங்களால், சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், மீண்டும் இதே காரணங்கள் ஏற்படாமல் போகும் நிலையில் சிசேரியன் அவசியம் இல்லை. ஆனால், தாய்க்குக் குறுகிய கூபகம். கர்ப்பப் பையில் குழந்தையின் எடை அதிகரித்து, கூபகத்தோடு தலை பொருந்தாமல் போகுதல் போன்ற நிரந்தரக் காரணங்கள் இருக்குமானால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே இரண்டாவது குழந்தை பிறக்கும்.

முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால்: சிசேரியன் மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், இரண்டாவது முறை கர்ப்பம் தரித்தது முதலே, கர்ப்பிணிகள் உஷாராக இருப்பது அவசியம். அனைத்துச் சோதனை வசதிகளும் கொண்ட மகப்பேறு மருத்தவமனையில், முன் பேற்றுக்கால கவனிப்பைச் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில், பிரசவ நேரத்தில் எற்படும் திடீர் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்து வசதிளும் கொண்ட மருத்துவமனை அவசியம்.

சுகப் பிரசவத்துக்கு வழி உண்டு : சிசேரியன் அறுவை சிகிச்சைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவதால், சுகப் பிரசவத்துக்கே வாய்ப்பில்லை என நினைக்க வேண்டாம். சிசேரியன் செய்தவதற்கான கட்டாயச் சூழ்நிலைகள் தான் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் தரித்தது முதலே, உடல்நிலையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டு மருத்துவர் சொல்லும் ஆசோசனைகளைக் கடைப் பிடித்தால் சுக பிரசவத்துக்கு அதிக வாய்ப்புண்டு. குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைத்துக் கொள்ளுதல்,

கர்ப்ப காலம் முழுவதும் உடல் எடை 10 கிலோவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 11 கிராமுக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டு, ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ளுதல் ஆகிய முன் பேற்றுக் கவனிப்பு மூலம் சுகப்பிரசவத்தை அடைய முடியும். ரத்த சோகை வராமல் தடுத்துக் கொள்ள, இரும்புச் சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவருக்கு ஆறுதல் எது : என்ன தான் மருத்துவம் முன்னேறியிருந்தாலும், சிசேரியன் உள்பட எந்தவித அறுவை சிகிச்சையானாலும், சிறிதளவு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. எனவே, பெற்றோரைப் போலவே சுகப் பிரசவம் மட்டுமே மருத்துவருக்கு மிகுந்த ஆறுதலையும், பெருமூச்சையும் அளிக்கக்கூடிய விஷயம். மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு பணத்துக்காக அதிக அளவு சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற கருத்தை மக்கள் மாற்றிக்கொள்வது அவசியம். தாய் - சேய் இருவருமே, நலமே ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரின் அக்கறையாக இருக்க வேண்டும்.