பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/11. புதிய கோணங்கி

11. புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான்,போவான்,ஐயோவென்று போவான்! 2

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது; 3

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ!
அந்தரி,வீரி,சண்டிகை,சூலி
குடுகுடு குடுகுடு 4

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது:
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
சாத்திரம் வளருது,சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடி சக்தி,மலையாள் பகவதி;
தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5