பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/10. நாட்டுக் கல்வி

10. நாட்டுக் கல்வி
(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின்
மொழிபெயர்ப்பு)

விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஓளியினைப் பண்டொரு
காலன் நீர்சென்று தேடிய தில்லையோ? 1

அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;
நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவ மாறொத் திருந்தன காண்டிரோ? 2

இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறை முறைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி.
போலே மந்திர வேதத்தின் பேரொலி3

"இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி,அமிர்தத்தை ஊட்டுவாய்"
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 4