பாரதியாரின் பல்வகைப் பாடல்கள்/9. மறவன் பாட்டு

9. மறவன் பாட்டு

1.
மண்வெட்டிக் கூலிதின லாச்சே! - எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! - இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே.

2.
நாணிலகு வில்லினொடு தூணி - நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணுலகு திண்கதையும் கொண்டு - நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு

தற்கால ஜீவனம்


3.
கன்னங் கரியவிருள் நேரம் -அதில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரிய துணியாலே -இந்தத்
தீயவுடல் மூடி நரிபோலே,

4.
மெல்லப் பயந்து மிகப் பதுங்கி -ஒரு
வேற்றுவரும் கண்டபொழு தொதுங்கி,
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் -வெறும்
சோற்றுக்கோ வந்த திந்தப் பஞ்சம்.

5.
ஏழை எளியவர்கள் வீட்டில் -இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிகளென்னச் சென்றே-பொருள்
கொண் டிழிவின் வருகிறோம் இன்றே.

அதில் கஷ்டங்கள்


6.
நாயும் பிழைக்கு இந்தப் பிழைப்பு -ஐயோ
நாளெல்லாம் சுற்றுதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக் -காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பிழைப்பு.

7.
பேராசைக் காரனடா பார்ப்பான் -ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் -துரை
இம்மென்றால் நாய்போலே உழைப்பான்.

8.
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் -சொல்வார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்;
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் -இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்.

9.
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் -நம்மைப்
பிய்த்துப் பணம் கொடெனத் தின்பான்;
கொள்ளைக் கேசென்றொரு பொய் மூட்டி - நம்மைக்

கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி.

10.
சோரந் தொழிலாக் கொள்வோமோ? -முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர்நாம் அன்றோ? -இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?