பாற்கடல்/அத்தியாயம்-18




18

மாங்கல்யப் பிச்சை எடுக்கும்படி அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள், ஆனால் அம்மா எடுத்ததாக விவரம் இல்லை.

ஆனால், மாங்கல்யப் பிச்சை யாரோ எடுத்ததாகத் தான் பார்த்தது பற்றி அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். சொல்லும்போதே அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பூமி நடுங்கிற்று.

வயதான தம்பதிகளாம். கிழவர் நினைவிழந்து ரேழித் திண்ணையில் கிடக்கிறார். அவருடைய அகமுடையாள் - மாமியென்று சொல்வேனா, பாட்டி என்று சொல்வேனா? நரை மஞ்சள் பூத்துவிட்ட அந்தக் கூந்தல் முடிச்சில் மல்லிச்சரம் ஆட, பட்டுப்புடவை உடுத்து, இரு கைகளிலும் முந்தானைத் தலைப்பைப் பிடித்தபடி வீட்டு வாசல்படிகளினின்று சரசரவென்று இறங்கித் தெருவில் வேகமாக நடந்து செல்கிறாள்.

இரண்டொரு வாக்கியத்தின் அவசர வீச்சில், நிமிஷத்தில் காக்ஷியை உட்கண் முன் கொணர்ந்து நிறுத்தும் ஆற்றல் அம்முவாத்துக்கே வழிவந்த பாடு.

நெற்றியில் பதக்கம் போன்ற குங்குமப் பொட்டு. பாட்டியின் தந்தச் சிவப்பு - ஈதெல்லாம் அம்மா சொல்லவில்லை.

“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” "என் கணவனுக்கு உயிர்ப் பிச்சை போடுங்களேன்!” அம்மா அலறியது இவ்வளவுதான்; மிச்சமெல்லாம் அந்த அலறலின் நாடிக் குபிரில் நெஞ்சில் நடுங்கும் எதிரொளிகள், எதிரொலிகள்.

அது மாடவீதி, ஒரு சாரியில் வீடுகள்; எதிர் சாரி கோயில் மதில். அதன் நடுவே ஓங்கி எழுந்த கோபுர சாட்சி. இதுவும் தானே எழும் தோற்றந்தான். சத்திய சாயைகள்.

அந்தக் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து பதறி ஓடிவந்த பெண்டிரின் குவிந்து நடுங்கும் கரங்களினின்று பாட்டியின் முன்றானையில், அக்ஷதையும், மஞ்சளும், குங்குமமும், காசும் பெய்கின்றன. அடையாளமாக ஒரு பத்து வீடு தாண்டி, தன் வீடு திரும்பி, முன்றானையில் சேர்ந்த பிச்சையைப் பாத்திரத்தில் கொட்டியதும், ஒரு தாலிக் குண்டும் சேர்ந்து விழுந்ததாம். எந்தப் புண்ணியவதியோ?

பாட்டி கதை முடிவு எப்படி? அம்மா சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை. தெரியவும்வேண்டாம். ஆனால் அந்தச் செயலில் அடங்கியிருக்கும் அல்லது அடக்கியிருக்கும் ஆணவ ஒடுக்கம், எம்மட்டுக்கு? உனக்கு அகமுடையான் - அவன்கூட இல்லை- தாலி அவசியம் தெரிகிறது? அந்த அளவுக்கு ஆத்ம பரீட்சை.

“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” மும் மூர்த்திகளின் தேவிமார்களும் தங்களையறியாமலே தன் தன் கழுத்துச் சரடை நெருடிப் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கணவன்மார் அமரர்கள். ஆயினும் ஏதோ புரியாத திகில் – ஆலய மணி அலறுகிறது; சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு அழைக்கிறது.

“அநியாயம் நேரவிருக்கிறது. உங்கள் பாத்திரத்துக்காகவே அது நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” இதுதான் அதன் சேதி.

கடையலில், பாற்கடல் கொந்தளிக்கிறது. கடைவது அமுதத்துக்காக, அமுதம் அமரத்துவத்துக்காக.

உயிரின் இயல்பு, உள்ளுணர்வு, நோக்கம், லக்ஷியம் எல்லாமே அதுதான். நான் அழியக்கூடாது.

மத்துச் சூடேறி இமயத்தினின்று நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.

“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்” இமயம் கூக்குரலிடுகிறது.

“இதென்ன திரும்பத் திரும்பத் திருப்பயாமி? பக்கம் ரொப்பியாமி ?”

அப்படித் தோன்றின் அப்படியே இருக்கட்டும். எங்கெங்கோ திரிந்து அயர்ந்து, பாலைவனச் சோலைக்கு வந்திருக்கிறேன். இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் சேர்த்து, உயிரின் சுனையினின்று இரண்டு மொள்ளு அள்ளிக் குடிக்கிறேனே! அப்படியே அந்தப் பால் மணலில் சாய்ந்து அண்ணாந்து, ஆகாயத்தில் கண் விட்டிருக்கும் அத்தனை நக்ஷத்திரங்களில் என் மூதாதையரைத் தேடி அடையாளம் கண்டு அவர்கள் ஆசியைப் புதுப்பித்துக் கொள்கிறேனே! அத்தனையும் உயிரின் ஊர்ஜிதந்தானே!

“பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்...” இவள்தான் நளாயினி, அவள்தான் பாஞ்சாலி. இதுவே பாரதம்.

ஆகவே அம்மாவின் தவ பலமோ, முதலியார் பொதுவாகப் பெண்களுக்கென உணர்த்திய வேறு பலமோ, வியாதி பலம் ஒடுங்கி, ஆனால் முடிந்த மட்டும் அதன் பற்களிடையில் அண்ணாவைக் கடித்துக் கசக்கி மென்று விழுங்கப் பார்த்து முடியாமல், கோபத்துடன் உமிழ்ந்துவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட மீட்சி! அண்ணா, தன் அஸ்தியிலிருந்து எழுந்து வந்தார்.

He cried in a loud voice. Lazarus comes forth.

And he that was dead came forth bound hand and foot with grave clothes and his face was bound about with a napkin. Jesus saith unto them Lose him and let him go.
(St. Jhon, XII. 43,44)

எங்கள் அண்ணா எங்கே? ஏன், உங்கள் அண்ணாவை உங்களுக்கு அடையாளம் தெரியாதா? ஆம். அடையாளம்தான் தெரியறது. உங்கள் அம்மாவுக்காகப் போட்ட பிச்சைதானே! படி அடியில் அக்ஷதை, பிழைச்சுப் போங்கோ.

அண்ணா கடைசிவரை குடுமி வைத்திருந்தார். கசப்பின் வார்ப்பிடத்தில் உதடுகள் நிரந்தரமாக முறுக்கிக் கொண்டுவிட்டன. நெஞ்சின் முள் எலும்பு முண்டிக்கொண்ட உடனே அதன் கீழ் நெஞ்சுக் குழியில் எண்ணெயிட்டுத் திரியேற்றலாம். செழிப்பான அந்த buff கன்னங்கள் ஒளி மங்கி, அவற்றில் சதா ஒரு மருட்சி, கூடவே சிறை வைத்த சீற்றம்.

இருந்தாலும் அண்ணா, எங்கள் அண்ணா. எங்களுக்கு அண்ணா மிஞ்சியிருக்கார்.

அண்ணா தன் பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு - எல்லாமே தனிச் சமையல், தனி அளவு ஏனத்தில் அளவாகச் சாதம் வடியல் உள்பட - பள்ளிக் கூடத்துக்குத் தயாராகிறார். அந்தப் பஞ்சகச்சமும் close Coatlம், டர்பனும் கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரமும்- அவற்றிற்கும் அவர் உடலுக்கும் சம்பந்தமில்லாதவை போல் அவர் மேல் மாட்டி வைத்திருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் ஓய்வில் இருந்தால் தேவலை, ஆனால் திணறிக்கொண்டேனும் வேலைக்குப் போய்த் தான் ஆகணும். இரண்டு மாதங்களாகக் குடும்பம் திணறுகிறது. சரியான சோதனைக் காலம்.

இப்போ தோன்றுகிறது. கடவுளர்கூட பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிதான். அவர் சுழிக்கத் தீர்மானித்துவிட்ட பையன், வேறு காரணங்களால் - மார்க்குக் கூட்டலில் வாத்தியார் தப்பைச் சுட்டிக் காட்டியோ, நோட்புக் மார்க்கில் கூட வாங்கி ஈடுகட்டியோ, அல்லது சிபாரிசிலோ, அவர் சிவப்புப் பென்சிலுக்குத் தப்பித்து விட்டால் அவரால் அவனை லேசில் மன்னிக்க முடிவ தில்லை. 'ஓ!' அப்படியா சமாச்சாரம்? நீ இனிமேல் என் முன்னால் உட்கார வேண்டியதில்லை - பின்னாலே போ! அண்ணா back benchக்குத் தள்ளப்பட்டு விட்டார். அங்கே போனவர்கள் [1]Devils island போன மாதிரி. அதிலிருந்து தப்பவே வழி கிடையாதாம்.

பெந்துப் பாட்டியின் பாசம் வேறு. விதியின் தேவதைகளின் கோபம் வேறு. பூசாரி வரம் பெறும் தயவு பூசாரி கோபம் பொல்லாக் கோபம். பெந்துப் பாட்டியின் அணைப்புத்தான் கழுகு வட்டத்தினின்று குஞ்சைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அம்மா முகம் இப்போதெல்லாம் கொஞ்சம் இறுகியிருக்கிறதா? அண்ணா தன்னைப் பார்க்காத சமயத்தில் அவள் அண்ணாவைப் பார்க்கும்போது, அண்ணாவைப் பார்க்கவில்லை. அண்ணாவுக்குப் பின்னால் அவளுக்கு மட்டும் தெரியும் ஏதோ நிழலுருவத்தைப் பார்க்கிறாள். “வா உனக்காச்சு எனக்காச்சு”

“என்னம்மா பேசிக்கிறே?”

அம்மா என்னை மெளனமாகப் பார்க்கிறாள் யாரோ அந்நியனைப் பார்க்கிற மாதிரி.

புரியல்லே.

வீட்டு நடப்பிலேயே கார் மாதிரி ஏதோ gear மாறியிருக்கிறது. இதுபோல் புது வார்த்தைகள், நாங்களும் வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே, அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொள்ள ஆரம்பிச்சாச்சு.

என் குட்டித் தம்பி இப்போது விரலானாயில்லை. உரலானாகிவிட்டான்! இன்னும் ஆகிக்கொண்டிருக்கிறான். சிவந்து தளதளத்து, சுருட்டை மயிர், அழகிய பெரும் விழிகள், மூக்கு என் மாதிரியில்லாமல், கூரிட்டுக் கொண்டு வருகிறது. அவன் அண்ணா ஜாடை, இட்ட பெயர் வைத்யலிங்கம், இப்பத்தான் சிரமப்பட்ட நினைவுடன் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறது.

அம்மா பெருமாள் கோயிலுக்குக் கையில் எண்ணெய்க் குடுவையுடன் போய்க்கொண்டிருக்கிறாள். தன்னோடு வர எங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. எங்களுக்கும் சிரத்தையில்லை. எந்தப் புது நிலைமைக்கும் உடனே சரியாகிவிடும் தன்மையில் குழந்தைகளுக்கு நிகரே கிடையாது. பெரியவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வரப் போவதில்லை.

அண்ணாவுக்குப் பகலும் இரவும் இழுத்து மூச்சில் தந்திக் கம்பம் வாசித்தால் என்ன, எங்கள் தூக்கம் கலைவதில்லை. ராச்சாப்பாடு முடிந்ததும் நாங்கள் எங்கள் ஜமாவைச் சேர்த்துக்கொண்டு வாசல் திண்ணையில் கூடித் தாத்தா சொன்ன கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம். எங்கள் சொந்தச் சரக்கையும் சேர்த்து எங்கள் புது அலையில் (அஹ்ஹா அர்ச்சுனன் கதையைத் தூக்கிக்கொள்வான். பீமன் வில்லாளி ஆகிவிடுவான். லக்ஷ்மணனோடு கர்ணனைச் சண்டைக்கு விட்டுப் பார்ப்போம். ராவணனுக்கு இரண்டு மூன்று தடவையேனும் யுத்தத்தில் வெற்றி கிடைக்கும். ராமனுக்காக, அசோகவனத்து மரங்களை வளைய வந்து சீதை மடிப்பிச்சை எடுப்பாள். எங்களைக் கேட்பதற்கு ஆள் இருந்தால்தானே!

பிள்ளைக்கு உயிர்ப்பயம் இல்லை என்று தெளிந்ததும் தாத்தா ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். அவரால் பெருந்திருவைப் பிரிந்திருக்க முடியவில்லை.

“பெருந்திருவையா? யெச்சுமியையா?” அண்ணா மன்னியைக் கேட்பார். “பிள்ளை உடம்பு தேற இட்டுக் கட்டின பாட்டுக்களை அவளிடம் அரங்கேற்ற வேண்டாமா ?”

“ஆமாம். சின்ன நாத்தனார் காலமானபின், அப்பாக்குப் பெரியத்தைதான் யோசனைக்கு. அவளும் சாமானியமா? ராமநாதபுரம் ஸ்மஸ்தான சங்கீத வித்வானுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். உங்கள் அப்பா கால்நடைக்கு வாளாடி கொல்லைப்புறம்.”

‘சரிதான் மன்னி, நான் சொல்றது வாளாடி அத்தையை இல்லை. இந்தச் சாமர்த்தியமெல்லாம் உனக்கெப்போ வந்தது?”

அண்ணாவுக்கு, அப்பாவின் காதல் கிழத்தி மேலிருந்த கசப்பை மன்னியிடம் நான் காண முடியவில்லை. மன்னி, உங்கள் தோல் வலிமை தடிமனா, அல்லது இப்போது எங்கள் பாஷையில், adjustment திறமை அவ்வளவு அபாரமா?

என் தம்பி இன்னமும் என்னிடம் பாடுகிறான். கொக்கரிக்கிறான், வாய்ப்பாடு ஒப்பிக்கிறான். 'அஜஸ்ட்! அஜஸ்ட்! அஜஸ்ட்!' (நடுவில் ‘d’ காலி தெரிகிறதா?) அது இல்லாததனால்தான் நீ திண்டாடித் தெருக்குலைந்து உள்ளேயே வெந்துகொண்டு வயசுக்கு மீறின கிழம் காட்டறே! என்னைப்பார், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாததால் எவ்வளவு இளமையா யிருக்கேன்! நான் ஆதம்பாக்கத்து M.G.R.

சைதாப்பேட்டையில் குடியிருந்தபோது சைதாப் பேட்டை M.G.R.

ஒருநாள் எதிர்வீட்டுப் பையன், பெருமையாக எங்களிடம் ஒரு சாமானைக் காண்பித்தான். அவனுக்குத் தெருவில் கிடைத்ததாம் Compass. நிமிஷம் கூட ஓயாத அதன் முள் ஆட்டம் எங்களுக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. நாம் தூங்கிப் போயிட்டாக் கூட அப்படித்தான் துடிச்சுண்டிருக்கும். எங்கப்பா சொன்னா.

அண்ணா உடம்பு அப்படித்தான் இருந்தது. ஒரு நிலையில் இல்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வருவார். குஷியாகவே இருப்பார் ட்யூஷன்களைக் குறைத்துக் கொண்டு விட்டதால், அண்ணா இப்போதெல்லாம் எங்களுக்குக் கூடவே கிடைச்சார் எங்களுக்குச் சரியா பேசிண்டு, கும்மாளம் அடிச்சுண்டு, இந்த அண்ணா இத்தனை நாள் எங்கேயிருந்தா? அண்ணா எப்போ தினம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வருவா? ராத்திரி எங்களை அணைச்சுண்டு படுத்துப்பா. ஏதோ நாங்கள்லாம் பெரிய மனுஷா மாதிரி பள்ளிக்கூடத்தில் அன்னிக்கு நடந்ததைச் சொல்லுவார்.

“அம்மாப் பொண்ணே, இன்னிக்குக் குழந்தை களோடு சேர்ந்து எனக்கு முற்றத்தில் நிலாச்சாப்பாடு.”

“ஐயே, ஜாலி! ஜாலி!” நாங்கள் கையைக் கொட்டிக் கொண்டு கொக்கரிப்பு. அண்ணா கழுத்தைக் கட்டிக் கலாமான்னு ஆசையாயிருக்கே! ஆனால் அது கூல்டிரிங்கை உறிஞ்சிக் குடிக்கிறான்களே அந்தப் புல்குழாய் மாதிரி முறிஞ்சுட்டா? கழுத்து அவ்வளவு சன்னம் –

“அம்மாப் பொண்ணே ! இன்னிக்கு என்ன சமையல் ?”

அண்ணாவுக்கு ராத்திரி மாதத்தில் 35 நாளைக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி (கேஸ் பிடிக்கக் காத்திருப்பவர் ஏமாற்றமடையக் கடவர். இதற்கு முன் பக்கங்களில் Poetic licence பற்றி ஒரு பிரசங்கமே நிகழ்த்தியிருக்கிறேன். அதுதான் இது)

பச்சை மணத்தக்காளி வெந்தயக் குழம்பு, கீரை மசியல், வேணும்னா அரிசி அப்பளாம் சுட்டுப் போடறேன்.

“பேஷ். ராஜ சாப்பாடு! இதுக்கு மேல் என்ன வேணும்?”

“கண்டிப்பா வடுமாங்காய் உங்களுக்குக் கிடையாது. உங்கள் கண்ணெல்லாம் எங்கே , இந்தச் சூழ்ச்சியெல்லாம் எதுக்குன்னு எனக்குத் தெரியும்.”

“சரி, வேண்டாம், மோரும் சாதத்துக்குக் கீரையும் குழம்பும் கலந்துக்கக் கைபிடிக்க முடியாதே?”

“மோரும் சாதமா? சப்தரிஷி”

“ஆனாலும் அக்கிரமம் பண்ணாதேயுங்கோடி. மோரைச் சுடவெச்சுப் போடுங்கோ.”

ஊரில் உள்ள அத்தனை பேச்சையும் பேசிண்டு, சிரிச்சுண்டு, சத்தம் போட்டுண்டு சாப்பிடுவோம்.

“ஏ பசங்களா! சின்ன வயசுலேருந்தே எனக்கு இப்படித்தான் சாப்பிடணும்னு ஆசை. ஆனால் அது இப்போத்தான் கிடைக்கணும்னு இருக்காப்போல் இருக்கு.“

மனம் நிரம்பறதுன்னா நிஜம்மா அதுவும் Cup போல வழியும்னு லேசா அப்பவே ஒரு உணர்ச்சி தோணித்து.

இன்னும் மோருஞ்சாதத்துக்கு வந்திருக்க மாட்டோம். அண்ணா பேச்சு அடங்கிப்போய், எங்களை ஒரு தினுசாப் பாக்கறா. அந்த மிரண்ட முழியை அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்கே தெரிஞ்சு போச்சு. அடுத்த சில வினாடிகளில் “கொர் கொர், லொக்கு லொக்கு, கல் கல்.“ அந்த ஆஸ்துமா அரக்கன் கொலுசு கட்டிண்டிருப்பானா? நெஞ்சை அடைக்கிறது. டேய், உனக்கு தைரியம் இருந்தால் வெளியே வாடா, அண்ணா உள்ளே ஒளிஞ் சுண்டு அவரை என்ன மிதி மிதிக்கறே? நீ மாத்திரம் கண்ணில் படு, உன்னை என்ன பண்ணறேன் பார்!

“சப்தரிஷி, சொன்னா கேக்கறையா? நீ எல்லாம் வெட்ட வெளியில் உட்காரப்படாது - இங்கே காற்று நடமாட்டம் ஜாஸ்தி.“

இருமல், இழுப்பின் அவஸ்தையோடு அண்ணா திணறுவார். “மன்னி, காற்று இல்லாட்டா, நாம் எல்லோரும் செத்துப்போயிடுவோம். காற்று இருக்கோ, இழுத்துண்டாவது இருக்கேன். இல்லாட்டா, ஒரேயடியா க்ளோஸ்.“

“அட போடா அசடே, நீ சொல்ற காற்று வேறே! நான் சொல்ற காற்று வேறே!”

அம்மா ஒண்ணும் பேசமாட்டாள். அண்ணாவின் அவஸ்தையை உற்று கவனித்துக்கொண்டிருப்பாள். அவளுடைய கறிவேப்பிலைக் கன்று மறுபடியம் புயலில் சிக்கிவிட்டது.

மறுபடியும் - மறுபடியும் - இதுவரை எத்தனை மறுபடியோ? கணக்கில்லை இன்னும் எத்தனை இருக்கோ ?

சரியானபடி எங்கள் நிலாச்சாப்பாட்டைக் கெடுக்க வந்த பாவி வியாதி.

நிலாவா? யார் சொன்னது? அது அண்ணா பேச்சுக்குச் சொன்னது. எங்களோடு சேர்ந்து சாப்பிடும் சந்தோஷத்துக்கு எல்லாம் நடுமுற்றத்தில், லாந்தர் வெளிச்சம்தான். இந்த வீட்டிலும் மின்சாரம் கிடையாது. வேணும்னா நக்ஷத்ர வெளிச்சத்தைச் சேர்த்துக்கோ - அதுவும் கிடைச்சவரை. இன்னிக்குக் கொஞ்சம் கறுக்கல், நிலாவெல்லாம் அவரவர் மனசு நிலாத்தான்.

காலம் சரியானபடிதான் எங்களுக்கு வக்கரித்துக் கொண்டு இருந்தது.

ஒருநாள் சாயங்காலம் மன்னி அடுத்த தெருவில் ஏதோ சாமான் வாங்க, என்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போனாள்.

எதிர் வீட்டுள் நுழைஞ்சு போனால் பின்கட்டு வாசலில் அடுத்த தெரு. அப்படித்தான் போனோம். அந்தியிருட்டு. கடைகளில், இப்பொத்தான் அங்கு மிங்குமாய்ச் சோம்பல் மினுக் மினுக் விடுகின்றன.

தெருவில் சக்கரங்கள் பறந்தவண்ணம், எங்கள் கடை எதிர்ப்பக்கம் சடக்னு நான் மன்னி கையை விட்டுட்டுத் தெருவின் குறுக்கே பாய்ந்தேன்.

“பூம்! பூம்!”

என்மேல் ஒரு பெரிய கட்டடம், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாதிரி - தன்னிடத்திலிருந்து பேர்ந்து வந்து என்மேல் மோதிற்று. கார் அடியில் போய்விட்டேன்.

முன் சக்கரம், அடுத்து, பின் சக்கரம். இரண்டுக்கும் இடைவெளி மின்னல் நேரத்திலும் மட்டு. ஆனால் தனித் தனி நேரம் - மண்டைமேல் ஏறி இறங்கினது எனக்கு நன்றாகத் தெரிந்தது. வாயிலிருந்து ஒரு சத்தத்துக்கு நேரமில்லை. சத்தம் மறந்துபோச்சு.

அப்பா, என்ன அடி! கழுத்தில் ஏறி இருந்தால், லா.ச.ரா. (“புரியாத எழுத்தாளர், புரியாமல் எழுதுவதே அவர் அம்சம்!”) ஏது? மண்டையே ஏன் இந்த இரண்டு அடிகளுக்கும் சட்னி ஆகவில்லை? (மண்டையா அது? சரியான மரக்கட்டை” தேங்காயைச் சுண்டுவதுபோல் ‘ணக் ணக்' பண்ணிக்கொண்டு” — அண்ணா)

எங்களைச் சுற்றி உடனே கூடிவிட்ட கூட்டத்துக்குக் கேக்கணுமா? யாரோ ஒருவன் என்னை எழுப்பி நிறுத்தி என்னைத் தும்பு தட்டினான். ஒரு சிராய்ப்புகூட இல்லை - அடுத்தநாள் பையன்களிடம் பீற்றிக் கொள்ள (போடா டூப் விடறே!) எனக்கு ஏமாற்றம் தான். Death takes a Holiday.

பாட்டி இரு கன்னங்களிலும் அறைந்த கையோடு கல்லாய்ச் சமைந்துவிட்டாள்.

காரைத் தெருவோரத்தில் (அப்போல்லாம் Platform கட்டவில்லை) நிறுத்திவிட்டு யாரோ இறங்கி எங்களைப் பார்த்து நடந்து வரார் - பையிலிருந்து Purseஐ எடுத்துக்கொண்டு. என்னைத் தொடக்கூட இல்லை. (அவர் கையில் நான் பிசுக்கு ஒட்டிக்கொண்டால்? அவ்வளவு பெரிய மனுஷர்) ஒரு முறை கூர்ந்து கவனிக்கிறார் தலையிலிருந்து, கால் வரை. Purse பைக்குள் திரும்பிவிட்டது.

”யாரம்மா பாட்டி? உன் பையனா? நீங்கள் எல்லாம் இப்படிப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை நடுத் தெருவில் ஓட விடுங்கோ. அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லுங்கோ? இந்த நாட்டுக்கு எப்படிச் சுதந்தரம் வரும் Road sense ஏ கிடையாது! Fools!”...

கூட்டத்தில் மறைந்துவிட்டார். கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்கிறது. Ford ஆ? Chevrolet ஆ? அப்பவும் என் கவலை ஏன் இப்படி ஓடுகிறது?

அன்று நான் வீட்டில், பெரிய ஹிரோ, எனக்குப் போட்டியில்லை. அப்போ M.G.R எங்கே சின்னப் பையனோ? ரஜினி இன்னும் பிறக்கவேயில்லை. அப்பாடி!

மன்னி, எனக்கு உதிரி விபூதி இட்டு, நடு முற்றத்தில் என்னை உட்காரவைத்துச் சுற்றிப் போட்டு - மன்னி நடு முற்றத்தில் எங்கோ ஒரு மூலையை முறைச்சுப் பார்த்துண்டு.

”கருப்பண்ணன் மேல் ஆணை - ஒடிப்போ - இங்கே விட்டு ஓடிப்போ!” யாரை அதட்டுகிறாள்?

”உனக்கு என்ன வேணும்” அன்று இரவு எனக்குச் சாப்பாட்டில் தனி மரியாதை எனக்கு என்ன வேணும்? பாலுஞ் சாதம்தான்.

”ஏலே, நீ செத்துப் போயிருந்தால், உன்னை எரிக்கிற வயசா? புதைக்கிற வயசா?” விரலான் அவர் கைகளிலிருந்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.

”போறுண்டா சப்தரிஷி உன் வேடிக்கை!” மன்னி என்னை மூர்க்கமாக அணைத்துக் கொண்டாள். ”தவம் கிடந்து பெத்த குழந்தை. பெருந்திரு போட்ட பிச்சை அவளை உதாசீனமாய்ப் பேச எப்படிடா உனக்குத் தோணறது?”

மன்னி சீறி அன்றுதான் பார்த்தேன். முதல் தடவை, கடைசித் தடவை ரெண்டும் அதுதான்.

இவாள்லாம் இப்படி அமர்க்களப்படுத்துவதால், எனக்கு லேசா பின்மண்டையில் வலிக்கிற மாதிரி இருக்கோ?

உண்மையிலேயே வலிக்கத்தான் செய்தது. பின் மண்டையில் 'சுருக் சுருக்' - அந்த அடிக்கு அதாவது இருக்க வேண்டாமா? தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு உருண்டேன். ஊஹும் - முனகலாமா? இல்லை. மன்னியும் அம்மாவும் பேச்சுக்குரல் கேட்கிறது. அவாளுக்கும் தூக்கம் வரல்லே போலும். விடி விளக்கில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் நிழல் உருவம் (Silhouette) தெரிந்த்து.

“அம்மாப் பொண்னே! குழந்தைக்கு நேரக்கூடாதது நேர்ந்திருந்தால் என்னடி பண்ணுவோம்?”

“நாம் என்னத்தைப் பண்ணுவோம்? வரத்தைப் பட வேண்டியதுதான்.”

“என்னடி அவன் என்னமோ விகடம் பண்ணறான்! நீ விட்டேத்தியாப் பேசறே! எவ்வளவு பெரிய பழி பாவத்துக்கு ஆளாகியிருப்பேன்? அப்புறம் என் கதி என்ன ? மெனக்கெட்டுக் குழந்தையை அடுத்த தெருவுக்கு அழைச்சுப் போய் நான் யமனாக முளைக்க இருந்தேனடி?”

“ஒரு சுந்தரம் சுப்ரமணியம் போனதுக்கு மேலேயா மன்னி? பத்தே நாளில் இரண்டுபேரையும் பறி கொடுத்துட்டு உசிரோடு பாவி நான் இன்னும் இல்லையா?” அம்மா சட்டென மன்னி மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுகிறாள்.

அம்மா சட்டென எழுந்து உட்காருகிறாள். 'இதோ மறுபடியும் அதுக்குமேல் பிரளயம் இப்போ வந்திருக்கு. நானும் என்னவோ எனக்கு மிஞ்சி யாருமில்லேன்னு வளைய வரேன். ஆனால் எனக்கு ஒரு சமயம் இல்லாட்டா ஒரு சமயம் பயமாயிருக்கே!'

மன்னி அம்மாவின் தலையைத் தன் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். ”அந்த அளவுக்குப் பெருந்திரு விட்டுடமாட்டாள். அம்மாப் பொண்ணே, நாங்களே உன் தைரியத்திலேதானே இருக்கோம்!”

அம்மாவின் மனம், நினைப்பதெல்லாம் ஒரு செறிந்து எங்கே நிற்கிறது என்று தெரிகிறது. அம்மாவின் எண்ணத்தில் நான் First இல்லை. ஆனால் ஏனோ எனக்குப் பொறாமையில்லை.

முதல் காதல், முதல் துயரம், முதல் முறிவு யாருக்கும் நேரும் கவிதை. முன்னாலேயே சொல்லியிருக்கிறேன். பின்னரெல்லாம் காயங்கள்; நேர்ந்து கொண்டு தானிருக்கின்றன. நேர்ந்துகொண்டுதான் இருக்கும். படத்தான் காயங்களே.

புலி, சிங்கம், சிறுத்தை, கரடி வனவிலங்குகள் வேட்டையாடுகையில் அவைகளையும்தான் பற்கள் கடிக்கின்றன. நகங்கள் கிழிக்கின்றன. கொம்புகள் குத்தி வாங்குகின்றன. அம்புகள் பாய்கின்றன. குண்டுகள் விலாவில் புதைகின்றன. முட்கள் தைக்கின்றன. ஒரொரு சமயமும் மிருக வைத்தியன். இதோ வந்தேன் ராசாவே! என்று கட்டியம் கூறிக்கொண்டு பாண்டேஜுடன் தோன்றுகிறானா? அல்லது Androcles ஆஜராகிறானா?

காயங்கள் பட்டுக்கொண்டுதான் இருக்கும். புதைந்த குண்டின் மேல் சதை மூடும்- அம்புப் புண் தீராத வினை கண்டிருக்கும்.

வேட்டை நடந்துகொண்டு தானிருக்கும். ஒருநாள் இப்படியே குண்டுக்கோ அம்புக்கோ, பொட்டென்று இரையானாலும் போச்சு.

அல்லது –

இப்படியே ஆறிக்கொண்டும் அழுகிக்கொண்டும் முழு வயது வாழ்ந்து கடைசியாக ஒரு நாள் அதன் வேளை வந்ததும் மறைவிடம் தேடி உயிரை நீத்தாலும்

போச்சு.

ஆனால்….

எப்படியும் அவைகளின் கம்பீரம் கடைசிவரை அவைகளைக் கைவிடுவதில்லை. மாந்தரைப் போல அவைகளுக்குத் தன்னிரக்கம் கிடையாது.


  1. French penal settlement.
"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-18&oldid=1534459" இலிருந்து மீள்விக்கப்பட்டது