பாலைப்புறா/அத்தியாயம் 9

ந்த மாடியின் ஒற்றை அறையில், மனோகர், கட்டிலில் கம்பீரமாகவோ அல்லது குழைந்து போயோ கிடக்காமல், அருகே உள்ள சாய்வு நாற்காலியில் சோர்ந்து கிடந்தான். கல்யாண அலைச்சல்; சென்னையில் இருந்து வந்த சகாக்களை, குற்றாலத்துக்கு அனுப்பி வைத்தது போன்ற வேலைப் பளு மட்டும் காரணம் அல்ல… அவன் மனதுள், கலைவாணியைத் தள்ளி விட்டு, டாக்டர். சந்திரா குஸ்தி போட்டாள். ஊசியும், கையுமாய் நெருங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தனிப்பட்ட சண்டையிலோ அல்லது நாடுகளுக்கிடையே நடக்கும் போரிலோ, வெற்றி என்பது இறுதியில் வெறுமையே என்று எப்போதோ படித்தது, அப்போது அவனைப் பாடாய் படுத்தியது. ‘அடாவடி’ சந்திராவின் கண் முன்னால், கல்யாணத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்ற பழைய வேகம், புதிய பயமாக உருவெடுத்தது. கலைவாணிக்கு ‘அது’ தெரியாது என்பது நிச்சயமாகி விட்டது. அப்படி இருக்கையில் இந்த சந்திரா, வேண்டுமென்றே சொல்லியிருக்க மாட்டாள்… அப்படிப்பட்டவளாக அவள் தெரியவில்லை. சொன்னது தப்பாக இருக்கலாம்… ஆனால், அதில் உள் நோக்கம் கிடையாது… ஒருவேளை… அவள் சொன்னது மாதிரி…

மனோகர், மேற்கொண்டு நினைக்கப் பயந்தான்… டாக்டர் சந்திராவை மனதில் இருந்து, வலுக்கட்டாயமாய், ரணத்தோடு பிய்த்துப் போட்டு விட்டு, அந்த இடத்தில் நாட்டு வைத்தியமும், நல்வாக்கு தந்தவருமான பேச்சிமுத்துவை பொருத்திப் பார்த்தான். சரியாக பொருந்தவில்லை… கீழே விழப் போவது போல் ஆடிக் கொண்டிருந்தார் பேச்சிமுத்து…

வளையல் சத்தம் கேட்டு, மனோகர் திரும்பிப் பார்த்தான்… கலைவாணி, 86 பாலைப்புறா

வெறுங்கையோடு நின்றாள்... (அந்த சுற்றுப்புறக் கிரா மங்களில் மணப் பெண்கள் பால் பழத்தோடு, முதலிரவு அறைக்குள் நுழைவதில்லை). மனோகர், அவளை மலங்க மலங்க பார்த்தபோது, அவள் கீழே குனிந்து, அவனை சாய்வு நாற்காலியில் இருந்து தூக்கப் போனாள். முடியாது போகவே, அவன் மீது நாணிக் கோணிய கொடியாய்ப் படர்ந்தாள்... படர்ந்து படர்ந்து, செல்லமாகச் சிணுங்கினாள்...

‘இப்படியா... தாலிய திணிக்கறது? கழுத்திலே ஒரே எரிச்சல்’...

மனோகர், அவள் கழுத்தை வருடிவிட்டான். ரத்தக் கோடுகளை, கை உணர்ந்தது. ஆனாலும், அவள், அந்த வலியை அடக்கிக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்ப்பதும், பிறகு கண்களை கைகளால் மூடிக் கொள்வதுமாக இருந்தாள். அவனோ, பேச வேண்டும் என்பதற்காகப் பேசினான்.

"ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்திலயும், அந்தப் போடு போடுவே... அப்படி அசத்துவே... இங்கே ஏன் இப்படி...?”

"அந்த ஆயிரம் பேரும், நீங்களும் சரியாயிடுமா? ஆனாலும், நான் பெரிதா நினைத்த அளவுக்கு நீங்க இல்ல...”

‘அய்யய்யோ...’

‘பின்ன என்ன? இந்த ராத்திரியிலே நம் கல்யாண நிகழ்ச்சியை வீடியோவுல போட்டுக் காட்டுறேன்னு ‘பிராமிஸ்' செய்தீங்க. ஆனால், வீடியோக்காரங்க வரவே இல்லை... முடியாதுன்னு தெரிஞ்சிருந்தால், எங்கப்பா ஏற்பாடு செய்திருப்பார்’

"அதை ஏன் கேட்கிற... வீடியோக்காரங்க, முன்னாலயே ஊருக்கு வந்துட்டாங்களாம்... எங்கப்பன், ‘எங்க சாஸ்திரப்படிகல்யாணத்தை படம் பிடிக்கப்படாது'ன்னு, அவங்களை துரத்திட்டாராம். வரதட்சிணை பணத்தில வீடியோவுக்கு அவரே பணம் கொடுக்கனுமுன்னு சொன்னேன்... அதனால வந்த வினை".

"ஒருத்திக்கு, பிறக்கிறது, கல்யாணம், முதலிரவு, முதல் குழந்தை பெறுவது, இறக்கிறது- இந்த ஐந்துதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள். பிறக்கிறதையும் இறக்கிறதையும் படம் எடுக்க முடியாது... முதலிரவையும், குழந்தை பெறுவதையும் வீடியோ எடுக்க முடியாது... மிஞ்சுறது கல்யாண நிகழ்ச்சிதான். அதையும் கோட்டை விட்டுட்டிங்களே”.

‘எல்லாம்... அந்த பாவியால வந்தது; கல்யாண வரவேற்பையும் ரத்து பண்ணிட்டான். ஊர் முழுக்க பட்டதாரிப்பையன்கிட்ட என் மூலம் வேலை சு. சமுத்திரம் 87

வாங்கித் தரப் போறதாய் கிட்டத்தட்ட... ஐம்பதாயிரம் ரூபாய் வசூலிச்சிருக்கான். அவங்க கிட்ட வட்டியோட பணம் கட்டுறதா வாக்கு கொடுத்திருக்கேன். இவன் ஒரு அப்பன், இவன் ஒரு மனுஷன்'.

கலைவாணி, அவன் வாயைப் பொத்தினாள். “ஆயிரம் இருந்தாலும் பெற்றவர். ‘இன்’ போட்டுப் பேசப்படாது" என்றாள். பிறகு மேஜையில் உள்ள ஒன்றை ஆவலோடு பார்த்தாள். மனோகர்... விளக்கினான்.

‘அது ஆப்டிக்கல் லைட்... பனியன் மாதிரி சட்டை போட்டு ஜோக் அடித்தான் பாரு ஒரு தடியன்... என்னோட கலீக்... சிங்கப்பூர் போயிருந்தப்போ நமக்காக வாங்கிட்டு வந்தானாம்’

மனோகர்... எழுந்தான் அந்த விளக்கோடு பொருத்தப்பட்ட ஒயர் பிளக்கை பொருத்திவிட்டு, ஸ்விட்சைதட்டிவிட்டான். உடனே ஒரு ஜோதி மயம்... செம்பருத்திப் பூவும்... ஊமத்தம் பூவும் செக்கர்வான் சிவப்போடும், சுண்ணாம்பு ஜொலிப்போடும் பச்சை நிற இலை தழைகளோடும் கூற்றி வந்தது. அப்புறம் செம்பருத்தி, பூவரசுப் பூவாகவும், ஊமத்தம் பூ, பூசணிப் பூவாகவும் உருமாறின. ஒரே மாதிரியான உருவப் பொலிவு கொண்ட, வேறு வேறு வண்ணங்களைக் காட்டும் விதவிதமான பூக்கள்... இந்த எலெக்டிரிக்கல் பூக்களுக்கு மேல், பிரபஞ்ச பிம்பமாய் வியாபித்த நட்சத்திரப் பொறிகள்... மனோகர், டியூப் லைட்டையும் அணைத்தான். சிறிது நேரத்திற்கு முன்பு பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்த அந்த அறை, இப்போது வண்ணக்கூடமானது.

"கிப்ட் எப்படி இருக்குது கலை!” ‘நீங்களே... எனக்கு கிப்டா கிடைத்ததால்... அது பெரிசா தெரியல. ஆனாலும் நல்லா இருக்குது. நல்லவேளை, இந்த கிப்ட் பார்த்ததும் டாக்டரம்மாவோட கிப்ட் ஞாபகம் வருது. அதுதான் பெட் ரூம்ல பார்க்கச் சொன்ன பரிசுப் பொருள்; எடுங்க!’

மனோகருக்கு, மனதில் மீண்டும் அந்த எய்ட்ஸ் பூதம்; கால்மணி நேரம் வரை தன்னை மறந்தவனுக்கு, அந்த கிப்ட் தன்னை நினைவூட்டியது. இன்னும் அவன் பிரித்துப் பார்க்கவில்லை.

மனோகர்... வேண்டா வெறுப்பாய் பீரோவைத் திறந்து, அந்த பார்சலை எடுத்துக் கொண்டு, கலைவாணி அருகே உட்கார்ந்தான். பிரித்துப் பார்த்தால் நிரோத் உறைகள்... கலைவாணி, அறுவெறுப்பாய்ப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

‘பார்ஸல... நீங்க பிரிக்கும் முன்னயே பிய்த்து இருக்குது'..

“எங்கப்பனோட வேலையா இருக்கும். சாயங்காலம் திருட்டுத்தனமா 88 பாலைப்புறா

அவரு இங்கிருந்து போனதை பார்த்தேன். இந்த பார்ஸல் திருடுறதுக்கு வந்திருப்பார். திறந்து பார்த்ததும் விட்டுட்டார்...”

"அவரு கிட்டயே கொடுங்க... ஒங்களுக்கு தம்பி... தங்கை பிறக்கமாட்டாங்க”

"நான், யூஸ் பண்ணப் போறேன்”.

"வேண்டாம், உடலுறவு என்கிறது குழந்தை பெறுவதுக்காக மட்டும் கடவுளாய் கொடுத்த வசதின்னு மகாத்மா காந்தி சொன்னதுல எனக்கு நம்பிக்கை; நமக்கும் கழுதை வயசாயிட்டுது... சீக்கிரமாய்... சீக்கிரமாய்...”

கலைவாணி, மனோகரின் கழுத்தில் கைகளை கோர்த்துக் கொண்டாள். பிறகு எழுந்து, அவன் கையைப் பிடித்து "எழுந்திருங்க” என்று இழுத்தாள்... எழுந்தவனை இறுகத் தழுவி கொண்டாள். உடனே அவன், எல்லாம் மறந்த ஆளாகிவிட்டான். அவளைச் சேர்த்துப் பிடித்து, அவள் முதுகை மார்பில் சாய்த்து, வாயை கன்னத்தில் வைத்தபடி, அவளை நகர்த்தி, நகர்த்தி, அவள் கையைத் தூக்கி டியூப் லைட் ஸ்விட்சில் வைத்து அழுத்திவிட்டான். இருவரும், வண்ண ஒலிக் கதிரில், கட்டிலில் தொப்பென்று விழுந்தார்கள். ஒருத்தரோடு ஒருத்தர் பின்னிக் கொண்டார்கள். இருவரும் எல்லைகள் அற்று போனபோது...

தலைக்கு மேலே, ஒரு டக். டக்... சத்தம்... கலைவாணி, ஆடைகளைய கட்டிலில் உட்கார்ந்தாள். தலைப்பக்கத்துச் சுவரில் தொட்டால் பிடிக்கக் கூடிய தொலைவில், எலி மாதிரி உப்பிப் போன ஒரு பெரிய பல்லி, வண்ண விளக்கு கூச்சத்தில் சுவர் ஏறி இருக்கக் கூடிய ஒரு கரப்பான் பூச்சியை, பின் பக்கமாய் பிடித்து தின்று கொண்டிருந்தது. அதன் வாயில் குற்றுயிரும், குலையுயிருமாய் துடித்த அந்தப் பூச்சியை, அந்தப் பல்லி, ஆட்டி, ஆட்டி, அதன் தலையை சுவரில் மோத வைத்தது.

எலியை மறிக்கும் பூனையையும், பூனையை மறிக்கும் நாயையும், நாயை மறிக்கும் சிறுவர்களையும் துரத்தும் கலைவாணிக்கு, என்னவோ போல் இருந்தது. ஒரு தடவை, மரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு காக்கைக் குஞ்சுக்காக, கையில் ஒரு கல்லோடு, காவல் பார்த்தாள். இதனால், காக்கையிடம், தலையில் கொத்துப்பட்டவள். இந்தக் கோரக் காட்சியைத் தாள முடியாமல் கேட்டாள்.

"இந்த கரப்பான் பூச்சியைக் காப்பாற்ற முடியாதா?” “எப்படி முடியும். இப்போ தலைதானே மிச்சம்!”

கலைவாணி, பல்லியையும் அடிக்க முடியாமல், பாச்சனையும் காப்பாற்ற முடியாமல், அல்லாடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_9&oldid=1639229" இலிருந்து மீள்விக்கப்பட்டது