புல்லின் இதழ்கள்/வாழ்த்துரை


வாழ்த்துரை

சைக் கலை என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு கலை. பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு; இறைவனைச் சரணடைய இசையால் ஆராதிப்பதை விடச் சிறந்ததும்; சுலபமானதுமான மார்க்கம் வேறில்லை. அதனாலேயே பக்தை மீரா, ஆண்டாள், சங்கீத மும்மூர்த்திகள்; நாயன்மார்கள் ஆகியோர் பக்தியால் உள்ளமுருகி, இசையால் இறைவனைத் துதி பாடி, உன்னத நிலை அடைந்தனர்.

பச்சிளங் குழந்தை முதல்—படமெடுத்து ஆடும் பாம்பு வரை இசை கேட்டு மயங்கும். கண்ணனின் குழலோசை கேட்டு, ஆயர்பாடியில் ஆநிறைகள் மெய் மறந்து நின்றதுண்டு.

நல்ல இசைக்கு இசைப்பவனையும், கேட்பவனையும் மெய் மறக்கச் செய்கிற அற்புத சக்தியுண்டு. இத்தகைய சிறப்பு மிக்கதொரு இசை வல்லுனராக—சுவாமிமலை சுப்பராம பாகவதரும்; அவரால் உருவாக்கப்பட்ட சிஷ்யனான ஹரியும் இந்த நாவலில் திகழ்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஹரிக்குப் பெற்றோர் இட்ட பெயர் கண்ணப்பன் . ‘கியாஸ் லைட்’ தூக்கிப் பிழைக்கும் தொழில் செய்து வந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்து; பெற்றோரால் வீட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட அவனை—அவனுடைய இசையார்வம் கண்டு வலியச் சென்று சுவீகரித்து; “ஹரி” என்னும் புதிய பெயர் சூட்டி, வீட்டோடு ஆதரித்து, அவனுக்குத் தன் உயர்ந்த இசைக் கலையையும் போதித்து உயர் நிலைக்கு ஆளாக்குகிறார் பாகவதர்.

ஹரியோ—

தன் வாழ்நாள் முழுவதும்—குருவின் ஆணைப்படி நடப்பதையே தன் வாழ்வின் லக்ஷியமாகக் கொண்டு வாழ்கிறான்.

இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும், திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக வயலின் கற்றுத் தேர்ந்தவர். ஆயினும், இசையைத் தொழிலாகக் கொள்ளாமல், தினமணியில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வருகிறார். இசையிலும், இலக்கியத்திலும் இவருக்குள்ள ஆர்வத்தை இந்த நாவலில் காண முடிகிறது.

எளிய தமிழில், சரளமான நடையில் ஆசிரியர் இந்நாவலை எழுதியுள்ளார். இவரது இந்த நாவலைப் படிப்பதற்கு எடுத்தேன். மிக சுகமாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

தலை சிறந்த சங்கீத வித்வான் ஒருவருடைய இசை வாழ்வையும்; அவரது குடும்ப வாழ்வையும்; நிலைக் களமாகக் கொண்டு; ஒரு அருமையான நாவலைப் பின்னி; மிகச் சிறந்த சங்கீதக் கச்சேரியொன்றைக் கேட்டது போன்ற மன நிறைவை உண்டாக்கி விட்டார் ஆசிரியர்.

இவர் இது போன்று, இன்னும் பல சிறந்த நூல்களைப் படைத்து பெயரும், புகழும் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
லாயிட்ஸ் லேன், ராயப்பேட்டை,
சென்னை - 600014.