பேச்சு:முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் - ஒரு பார்வை

காலம்:- கவிஞர் பற்றிய விரிவான விபரம்,ஊர்,காலமும் தெரியாது. பாடல்களைப் பார்க்கும் போது, ஏதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ளன என எண்ண வேண்டியுள்ளது. வெண்பாவில் அமைந்துள்ள எதுகைகளும் மோனைகளும் பூர்வமான வைப்பைக் காட்டுகிறது.

கவிஞருக்கு, மக்கள் இதயப் பண்பு இன்னத்தென்று தெரிந்திருக்கிறது.; தமிழ்ப் பண்பு இன்னதென்று தெரிந்திருக்கிறது; எல்லாவறையும் விட, கவிப் பண்பு இன்னதென்று தெரிந்திருக்கிறது.

உள்ளத்தில் கண்ட ஒவ்வொரு உண்மையும், எப்பேர்பட்ட உண்மையானலும் சரி, அற்புதமான கவியாக உருவெடுத்து ஒளி வீசுகிறது. இந்த விதமாக 2700 பாடல்களை பாடியுள்ளார். சமீப காலம் வரை, அதாவது நானூறு ஐந்நூறு வருஷங்களுக்கு முன் வரை முத்தொள்ளாயிரத்தை சிலர் போற்றி வந்திருக்கிறார்கள்.அவர்கள் கையில் முத்தொள்ளாயிர ஏடு இருந்தது என்பது தெரிய வருகிறது. பிறகு ஏட்டைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.

கடைசியாக, புறத்திரட்டு எனும் நூலை யாரோ ஒருவர் தொகுக்க நேர்ந்தது.விஷயங்களை நாலடியார் திருக்குறள் முதலிய நூல்களில் பாகுபாடு செய்ததது போல் வாழ்த்து, அவை அடக்கம், நீத்தார் பெருமை, பொறையுடைமை,அரண், கைக்கிளை[காமத்துப்பால்] என்று அந்த அதிகாரங்களுக்கு ஒத்த செய்யுளை யாத்துள்ளனர். அந்த ஏட்டிருந்தும் சில பாடல்களைப் புறத்திரட்டில் ஆங்காங்கு பெய்து வைத்தார். நமக்குக் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்கள் எல்லாம் புறத்திரட்டில் பெய்துள்ளவைதான்.

அப்படி கிடைத்த பாடல்கள் 108 மேல் இல்லை. ஆக 2700 - 108 = 2593 பாடல்கள் ஒழிந்து போயின. அத்துனை அற்புதமான பாடல்களை- மணிகளை இழந்தது தமிழுலகமும், தமிழரும். அந்த 2700 பாடல்கள் கிடைத்திருந்தால் நம்முடைய சந்ததியரும் அனுபவித்து இருக்கலாம். இந்த அனுபவித்திலிருந்து அரிய நூல்களையும், தமிழையும் வளப்படுத்தி இருக்கலாம்.

தமிழர்கள் இசையிலும், நாடகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் என்று நாம் அறிந்த ஒன்று. கோவை பிரபந்தங்களைப் பார்த்தால், எல்லாச் செய்யுள்களும் நாடகத் துறைகளாகவே இருந்துள்ளன. அவ்வளவு ஆர்வம், ஆசை நாடகத்தில் நம்மவர்களுக்கு.

ஒரு நீதியைச் சொல்ல வந்த இடத்திலும் ஒரு நாடக நிலையில் நின்று பேசுவார்கள் நம்மவர்கள்.

தோழியைப்பார்த்து நாயகி சொல்கிறதாக ஒரு பாடல். ‘'நாயகன் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுப்பட்டுள்ளான். சரி, அப்படியானால் வர இயலாது என்றுதானே சொல்லவேண்டும். அதை விட்டு விட்டு இங்கே நம்மிடம் ‘மாலை வருகிறேன்' என்று வேண்டுமென்றே பொய் சொன்னான் அல்லவா?

இந்த ஆற்றாமையை நாலடியார்ச் செய்யுள் ஒன்று விளக்குகிறது.

இசையா ஒரு பொருள்
இல்லென்றல் யார்க்கும்
வசையன்று, வையத்(து)
இயற்கை; நசையழுங்கச்
சென்றோடிப் பொய்த்தல்,
நிறைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரில் குற்றம்
உடைத்து

(ஆசையினால் மனஞ் சோரும்படி,தோள் வளையங்களை ஒழுங்காய் அணிந்த தோழியே ஒருவர் செய்த குற்றத்துக்கு மாறாகத் தீமை விளைத்தல் போன்ற பாதகமல்லவா இது.)

இதுபோலக் காதலனது நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் சேனை வளத்தையும் நாயகி மூலம் வெளிப்படுத்துவது, காதல் துறையைச் சேர்ந்தது.

அன்பொடு, கிருஷ்ணன், சிங்கை

தமிழில் பிழையின்றி எழுத ஒருகுறிப்பு:

லகர ஒற்றுக்குப்பின்(ல்) வல்லின எழுத்தில் ஆரம்பிக்கும்(க்,ச்,த், ப்) சொல்வந்தால் அதுமிகாது.

பால்+குடம்= பால்குடம் என எழுதலாம், முற்காலத்தில் 'பாற்குடம்' என எழுதுவார்கள். இங்கு ல்>ற் ஆகத்திரிந்தது. பால்க்குடம் என எழுதுவது பிழை. அது இயற்கையும் அன்று. அதேபோல் கல்+தரை= கல்தரை,அல்லது கற்றரை (பழையவடிவம்) கல்த்தரை என்பதுதவறு. கல்த்தரை என்று நாங்கள் உச்சரிக்கின்றோம் எனச்சிலர் கூறுவர். கல்தரை என்றாலே அந்த உச்சரிப்புத்தான். கல்கத்தா என்று எழுதும்போது நாம் கல்க்கத்தா என்றுயாரும் எழுதுவதில்லை. எனவே இனிநாம், 'ல்' க்குப்பின் வல்லின ஒற்றெழுத்து எதுவும் இட்டு எழுதுவதைத் தவிர்ப்போம். நன்றி.--Meykandan 13:52, 17 பெப்ரவரி 2010 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:முத்தொள்ளாயிரம்&oldid=2602" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முத்தொள்ளாயிரம்" page.