மகாகவி பாரதியார்/நாடக விமர்சனம்

பாரதியார்
நாடக விமர்சனம்



ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே,
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம்; அன்னோன்
இருந்த இடம் தனிலிருந்தே எழுத்து லாவி,
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான் !
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:—

'மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவதுதானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா' என்றார் !
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்.
சரிதானே பாரதியார் சொன்னவார்த்தை !
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்கவந்தான்.
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக்காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான் ! தூங்கிவிட்டால்,
முடிவுநன்றா யிருந்திருக்கும்; சிரம மும்போம் !