7. வீரசோழிய வளநாடுடையார்

வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர்மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேரன்பாக இருக்கும். ஒன்றாக இருப்பினும் நிறமும் தோற்றமும் வேறுபடும். உள்ளங்கையும் புறங்கையும் போல இந்த உணர்வுகளும், உறவுகளும் அமையும். நேரிற் காணும் போது. குத்தலாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டாலும் இளங்குமரனிடமிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி வீரசோழிய வளநாடுடையார் மனத்தினுள் அவனை நினைத்து ஏங்கும் பிணைப்பை உண்டாக்கியிருந்தது. இதனால் அந்த அநாதை இளைஞனை ‘உறுதியாக வெறுக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே அந்நினைவின் மறுபுறம் அவன் மேல் அவர் கவலையும், அக்கறையும் காட்டி வந்தார். அதற்குக் காரணமானதும் உணர்வு ஒருபுறம் விரும்பாமல் மனம் மறுபுறம் விரும்பியதுமான அன்புத் தூண்டுதல் அவருள் மிக அந்தரங்கமானதாக இருந்தது.

அன்று காலை முல்லையும், இளங்குமரனும் நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் வீரசோழிய வளநாடுடையாருக்கும், அருட்செல்வ முனிவருக்கும், தங்களுக்குள் உரையாடுவதற்குத் தனிமை வாய்த்தது.

தாம் அறிவதற்கு ஆவல் கொண்டுள்ள பல செய்திகளைத் தூண்டிக் கேட்கும் விருப்பத்துடன் வந்து அமருகிறவர்போல் முனிவரின் கட்டிலுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார் வீரசோழிய வளநாடுடையார். அவர் இவ்வாறு வந்து உட்காரும் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்போல் தமக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டார் முனிவர்.

“உங்களுடைய இல்லத்துக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், உடையாரே! எப்படியோ சந்தர்ப்பம் நேற்றிரவு இங்கே வந்து தங்கும்படி செய்துவிட்டது. ஆனால் இப்படி அடி, உதைபட்டுக் கொண்டு வந்து தங்கியிருப்பதை நினைக்கும் போதுதான் என்னவோ போலிருக்கிறது.”

“கவலைப்படாதீர்கள் முனிவரே! நானும் கிழவன், நீங்களும் கிழவர். நம் போன்றவர்களுக்கு இந்த வயதில் இப்படிச் சந்தித்து மனம் விட்டுப் பேசுவதைப்போலச் சுவையான அனுபவம் வேறு கிடைக்க முடியாது. எவ்வளவோ செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசலாம் அல்லவா?”

“ஆகா! நீங்கள் ஆசைப்படும்போது நான் பேசுவதற்கு மறுக்க இயலுமா? ஆனால் உங்களுடைய கருத்தில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நான் மறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். மூப்பு நெருங்க நெருங்கப் பேசாமைதான் சுவையான அனுபவமாகப் படுகிறது எனக்கு. மூப்புக் காலத்தில் மனத்தினுள் முன்பு வாழ்ந்த நாளெல்லாம் கட்டி வைத்த நினைவுச் சுமைகளையே அவிழ்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யக் காலம் காணாதபோது பேசிப் பேசிப் புதிய நினைவுச் சுமைகளையும் சேர்க்கலாமா?”

“முனிவர் பெருமானுக்குத் தெரியாத மெய்யில்லை. இன்பமும், துன்பமும் நிறைந்த நினைவுகளைச் சுமப்பதுதானே உயிர்ப் பயணம்? முடிவற்ற அந்தப் பயணத்தில் அவ்வாறு நினைவுகளைச் சுமப்போரைக் கண்டும் நாம் சுமையின்றி நடந்து போகலாமென எண்ணி ஒதுங்கலாமா அடிகளே?”

“ஒதுங்க வேண்டுமென்று நான் கூறவில்லை, உடையாரே. இந்தப் பிறவிக்குப் போதும் போதுமென்று சொல்கிறாப் போல அவ்வளவு நினைவுச் சுமைகளை ஏற்கனவே கனமாகச் சுமந்து கொண்டிருக்கிறேன் நான்.”

இவ்வாறு கூறிவிட்டு முகத்தில் ஏக்கமும்; ஆற்றாமையும் தோன்ற நெட்டுயிர்த்தார் முனிவர்.

“பிறரிடம் ஒருமுறை மனம் திறந்து பேசினாலாவது உங்கள் நினைவுச் சுமையின் கனம் குறையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது முனிவரே!”

“செய்யலாம் உடையாரே! ஆனால் எல்லாச் செய்திகளையும் எல்லாரிடமும் மனம் திறந்து பேசிவிட முடிவதில்லை. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாகத் திறந்து எண்ணிப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறதே...”

இதைக் கேட்டு வீரசோழிய வளநாடுடையார் இரைந்து வாய்விட்டுச் சிரித்தார்.

“முனிவரே! இந்த மாபெரும் நகரத்தின் புற வீதியில் சாதாரணக் காவல் வீரனாகச் சுற்றிய நாள் தொடங்கிப் பின்பு காவற்படைத் தலைவனாகி இன்று ஓய்வு பெற்றிருக்கும் நாள் வரை உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்னும் நீங்கள் என்னிடம் சில செய்திகளை மறைத்தே பேசி வருகிறீர்கள். துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள். பலமுறை அவற்றை அறிய முயன்றும் தொடர்ந்து நான் ஏமாந்து கொண்டே வருகிறேன். இன்றும் அதே போல் ஏமாற்றத்தைத் தவிர வேறு மறுமொழி உங்களிட மிருந்து எனக்குக் கிடைக்காது போலத் தோன்றுகிறதே?”

“இந்த வினாடிவரை ஒரு கேள்வியும் கேட்காமலே நான் மறுமொழி கூறவில்லையென்று நீங்களாகக் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா உடையாரே?”

“நான் எதைக் கேட்பதற்கு நினைக்கிறேன், என்ன கேட்கப் போகிறேன் என்பதொன்றும் உங்களுக்குத் தெரியாததுபோல் மறைக்கிறீர்கள் அருட் செல்வரே!”

இதைக்கேட்ட உடனே முனிவர், வீரசோழிய வளநாடுடையார் முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். மெல்ல அவரை நோக்கி நகை புரிந்தார்.

“இந்தப் பார்வையையும், இந்தச் சிரிப்பையும் தவிர இத்தனை காலமாக என்னுடைய கேள்விக்கு நீங்கள் வேறு மறுமொழி எதுவும் கூறவில்லை முனிவரே! இந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனைப் பற்றி அவன் சிறு பிள்ளையாக இருந்த நாளிலிருந்து நானும்தான் உங்களைத் தூண்டித் தூண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறேன். இது வரை என் கேள்விக்குப் பயன் விளையவில்லை.”

“இளங்குமரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ?”

“இதென்ன கேள்வி முனிவரே? என்னென்ன தெரியக் கூடுமோ அவ்வளவு தெரிந்தால் நல்லதுதான். அந்தப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கிய உங்களைத் தவிர வேறு யாரிடம் போய் நான் இவற்றையெல்லாம் கேட்க முடியும்.”

“உடையாரே! ஏதோ ஓர் அந்தரங்கமான எண்ணத்தை மனத்திற் கொண்டு நீங்கள் இளங்குமரனைப் பற்றி விசாரிக்கிறீர்கள். என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே?”

“ஆமாம் முனிவரே! உங்களுக்குத்தான் எதையும் ஒளித்து மறைத்துப் பேசி வழக்கம். என்னுடைய அந்தரங்கத்தை நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளுவதிலும் எனக்கு மறுப்பில்லை. என்னுடைய பெண் முல்லைக்கு இந்தப் பிள்ளையாண்டான் பொருத்தமான கணவனாக இருப்பானென்று வெகு நாட்களாக எனக்கு ஒரு நினைப்பு இருக்கிறது. ஆனால் அந்த நினைப்பு ஒன்றை மட்டுமே தூண்டுதலாகக் கொண்டு அதை நான் செய்து விடுவதற்கில்லை. இளங்குமரனுடைய பிறப்பிலிருந்து எதிர்காலம் வரை ஓரளவு தீர்மானமாகத் தெரிந்து கொண்ட பிறகு தான் முல்லையை அவன் கையில் ஒப்படைக்க நான் துணிய முடியும். இப்படியே இப்போதிருப்பதுபோல் ஊர் சுற்றும் முரட்டுப் பிள்ளையாக அவன் எப்போதும் இருப்பதானால் முல்லையை இளங்குமரனோடு தொடர்புபடுத்தி நினைப்பதையே நான் விட்டுவிட வேண்டியது தான். செய்யலாமா கூடாதா என்று இந்த எண்ணத்தை மனத்தில் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதனால்தான் உங்களிடம் இளங்குமரனைப் பற்றி அடிக்கடி விசாரிக்க நேர்ந்தது” என்று இந்தச் செய்தியை முனிவரிடம் சொல்லி முடித்தபோது மனத்திலிருந்த பாரத்தை இறக்கி வைத்தாற் போலிருந்தது வீரசோழிய வளநாடுடையார்க்கு. அவர் அதற்கு விளக்கமான பதிலை எதிர்பார்த்து முனிவருடைய முகத்தை நோக்கினார். சிறிது நேரம் முனிவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் எதற்கோ சிந்தித்துத் தயங்குவது போலிருந்தது.

“உடையாரே! உங்கள் கேள்விக்கு மறுபடியும் பழைய பதிலைத்தான் கூற வேண்டியிருக்கிறது. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறது. ஒரு மனிதன் உலகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளுவது ஞானம். ஒரு மனிதனை உலகம் முழுமையாகப் புரிந்து கொள்வது அதிர்ஷ்டம். இளங்குமரன் ஒரு காலத்தில் இவ்விரண்டு பாக்கியங்களையுமே பெறப் போகிறான் என்றாலும் இன்றைக்கு அவன் வெறும் இளைஞன். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையிலுள்ள முனிவர் ஒருவரால் வளர்த்து விடப்பட்ட முரட்டுப் பிள்ளை. இதுவரையில் அவனது உடம்பைத் தவிர உள்ளத்தை அதிகமாக வளர்க்க முயலாத நான் இப்போதுதான் சிறிது காலமாக அவன் உள்ளமும் வளர்வதற்கு உரியவைகளைக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். இவற்றைத்தான் அவனைப் பற்றி இப்போது நான் உங்களிடம் கூற முடியும்.”

“இவற்றில் புதிதாக எந்த உண்மையையும் எனக்கு நீங்கள் கூறவில்லையே, முனிவரே?”

“உண்மை வேறு, வாய்மை வேறு, மெய்மை வேறு, உடையாரே! உள்ளத்துத் தூய்மை உண்மை. சொல்லில் தூய்மை வாய்மை. உடல் ஈடுபட்டு நிகழும் செயலில் தூய்மை மெய்ம்மை. இந்த மூன்றாலும் இளங்குமரனுக்கு ஒருபோதும் நான் தீங்கு நினைத்ததில்லை.

“வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்றுதான் நம் முன்னோர்கள் வாய்மைக்கு வரையறை வகுத்திருக்கிறார்கள். பிறருக்குத் தீமை தரும் உண்மையைக் கூறுவதும் பொய். பிறருக்கு நன்மை தரும் பொய்யைக் கூறுவதும் வாய்மை! இளங்குமரனைப் பற்றிய சில உண்மைகளை நான் கூறாமல் மறைத்து வருகிறேனென்பதற்குக் காரணம், அந்த உண்மைகள் வெளியாகும்போது அவற்றால் இளங்குமரனுக்கு ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகள் அதிகமென்பதுதான்.

“நான் ஏதோ அந்தப் பிள்ளையைப் பற்றி அவனுக்கு முன்னாலேயே ஏளனமாகப் பேசுகிறேனே என்பதனால், என்னை அவனுக்கு ஆகாதவன் என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம் முனிவரே! அந்தரங்கமாக எனக்கு அவன்மேல் நிறைந்த அனுதாபம் உண்டு. இல்லாவிட்டால் என் மகளுக்கு அவனை மணமகனாக்கிக் கொள்ளும் ஆவலை உங்களிடம் கூறியிருப்பேனா அடிகளே? இளங்குமரன் சோழர் படைக்குழுவிற் சேர்ந்து பெருவீரனாகப் புகழ்மாலை சூட வேண்டுமென்றெல்லாம் எனக்கு ஆசை உண்டு. அந்தப் பிள்ளையின் தோற்றமும் உடலின் வலிமையும் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதிக்கும் தகுதி வாய்ந்தவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் முனிவரே!”

“அப்படி நீங்கள் உணர்ந்திருப்பது உண்மையானால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலைச் சிறிது காலத்துக்கு அடக்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது.”

“உங்களைப் போல் நிறையப் படித்த ஞானிகளாயிருப்பவர்களுக்குப் பேசுவதில் ஒரு வசதி இருக்கிறது. எதையும் பிறருக்குப் புரியாமலும், பிறராகப் புரிந்து கொள்ள முடியாமலும் அழகாகப் பேசிவிட முடிகிறது.”

வீர சோழிய வளநாடுடையார் தம்மைக் குத்திக் காட்டுவது போல் பேசிய இந்தப் பேச்சைக் கேட்ட பின்பும் முனிவர் அமைதியாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எத்தகைய பேச்சுக்களையும் ஏற்றுத் தாங்கிப் பழகிய அவருக்கு இது பெரிதாக உறுத்தவில்லை. சாதாரணமானவற்றுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பழக்கமில்லை அவருக்கு.

வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் இன்று நேற்றுப் பழக்கமில்லை. ஆனாலும் அன்று அந்த காலை நேரத்துத் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆழம் பார்க்க முயன்றது இப்படி முடிந்தது. இந்தச் சமயத்தில் வீட்டு வாயிலில் குதிரைகள் வந்து நிற்கும் ஒலி கேட்கவே இருவருடைய பேச்சும் நிற்க நேர்ந்தது. வீரசோழிய வளநாடுடையார் வாயிற்புறம் வந்திருப்பது யாரென்று பார்ப்பதற்காக விரைவாய் எதிர் கொண்டு சென்றார்.

கதக்கண்ணனும் முதல் நாளிரவு அவனுடனே சம்பாபதி வனத்திற்கு சுற்றிய மற்றோர் ஊர்க்காவலனும் வேறு சில இளைஞர்களும் இல்லத்துக்குள் பரபரப்போடு நுழைந்தார்கள்.

“இராக் காவலை முடித்துக் கொண்டு பொழுதோடு வீட்டுக்குத் திரும்பக் கூடாதா குழந்தாய்? இப்படிச் சிறிது நேர உறக்கம்கூட இல்லாமல் பொழுது விடிகிறவரை கண் விழித்து ஊர் சுற்றுகிறாயே; உடல் நலம் என்ன ஆவது?” என்று புதல்வனை அன்போடு கடிந்து கொண்டு பேச்சைத் தொடங்கிய வீரசோழிய வளநாடுடையாரை மேலே பேச விடாமல் இடைமறித்து,

“அதெல்லாம் இருக்கட்டும் அப்பா, இப்போது இளங்குமரன் இங்கிருக்கிறானா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள்” எனப் பரபரப்போடு விசாரித்தான் அவருடைய அருமைப் புதல்வன் கதக்கண்ணன்.

அவனுடன் வந்து நின்றவர்களும் அவன் கேட்ட அந்தக் கேள்விக்குத் தம்மிடமிருந்து பதிலை எதிர்பார்த்துப் பரபரப்புக் காட்டுவதை அவர்களுடைய முகச் சாயலிலிருந்து வளநாடுடையார் புரிந்துகொள்ள முடிந்தது.

“உன்னுடைய தங்கை முல்லை அந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பூதசதுக்கத்துக்குப் படையல் இடப் போயிருக்கிறாள். நீ திரும்பி வந்தால் உன்னை இங்கேயே இருக்கச் சொன்னான் இளங்குமரன். அவனுக்கு உன்னிடம் ஏதோ முக்கியமான செய்திகள் பேசவேண்டுமாமே?”

இந்த மறுமொழியை அவர் கூறிவிட்டு எதிரே பார்த்தபோது கதக்கண்ணன் உட்பட, நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர்கூட அங்கே இல்லை.

வேகமாக ஓடிப் போய்க் குதிரைகளில் தாவி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த கணம் வாயிலில் நின்ற குதிரைகள் புற வீதியில் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தன.

“அப்படி என்ன அவசரம் குடிமுழுகிப் போகிறதோ?” என்று தமக்குள் முணுமுணுத்தபடி வாயிலில் இறங்கிக் குதிரைகள் விரைந்து செல்லும் திசையில் வெறித்து நோக்கினார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/007-039&oldid=1149303" இலிருந்து மீள்விக்கப்பட்டது