மருமக்கள்வழி மான்மியம்/கடலாடு படலம்‌

4. கடலாடு படலம்

நேர்ந்த வெல்லாம் நெடுநா ளாகியும்
நெஞ்சைவிட் டின்னும் நீங்க வில்லையே?
இவற்றை,
இறந்து போகுநாள் அன்றி, இடையில்
மறந்து போய்விட மருந்தும் இல்லையே? 5
சென்ற
ஆடி மாதம் அமாவாசை யன்ன்று
குடும்பத் தோடு குமரித் துறையில்[1]
தீர்த்த மாடச் சென்று, நாங்கள்
பட்ட பாடும் பரிசு கேடும் 10
சொல்வி முடியுமோ! சொல்லி முடியுமோ!
கரையில் தர்ப்பணக் கடனெலாம் முடித்து,
நீரில் இறங்காது நின்றனர் கணவர்.
நின்றனர், நின்றனர், நெடிது நின்றனர்.
கண்டவர், 'இதற்கென் காரணம்' என்றனர். 15
அவரும்,
'ஏக காலத் திவர்களை எல்லாம்
அங்கை பிடித்துநீர் ஆடு தற்குநான்

பன்னிரு கரத்தப் பரமன் அல்லவே,
இருபது கரத்தவ் இராக்கதன் அல்லவே, 20
ஆயிரங் கரத்தவ் அண்ணலும் அல்லவே!"[2]
என்று பலபல சொல்லி, இறுதியில்
மணந்த முறையாய் மனைவிய ரெங்களைத்
தனித்தனி யாகத் தடங்கை பற்றிக்
கடல்நீ ராடினர். கதையிது பெரிதே! 25
இங்ஙனம்,
ஐந்து முறைநீ ராடிவந் ததனால்,
ஐயோ! அவரும் அறுபது நாள்விடாச்
சுரத்தில் விழுந்து துன்பம் அடைந்தனர்.
அடையவே, 30
ஏட்டைத் திருப்பித் திருப்பி யிருந்தும்
பாட்டைப் பாடிப் பாடி யிருந்தும்,
நாட்டு வைத்தியர் நாளைக் கடத்தினர்.
முடிவில்,
மிஷியன் தெரசர்—மிகத்தய வுள்ளவர்.[3] 35
பொறுமை நல்லகைப் புண்ணிய முள்ளவர்,
இறைவன் அடிகள் இதயத் துள்ளவர்—
வந்தொரு வாரம் மருந்து கொடுத்துக்
கணவரை மீட்டிஎம் கைகளி லாக்கினர்.
இவர்,
காட்டை வெட்டிக் கஷாய மிடவோ 40

கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ
மலையை யிடித்துச் சூரணம்[4] வைக்கவோ
சொல்லி, எங்களைத் தொந்தரை[5] செயவிலை;
அன்றியும், 45
பணமோ காசோ[6] பாதிவெற் றிலையோ
எமக்குச் செலவுகள் ஏற்பட்டதுமிலை.
இவ்வறம்,
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே!
வையகத் தென்றும் வளர்க! வளர்கவே; 50


  1. 8. குமரித்துறை - கன்னியாகுமரி.
  2. 19-20. பன்னிரு கரத்தப் பரமன்: முருகன்.

    இருபது கரத்தவ் இராக்கதன்: இராவணன்.

    ஆயிரங் கரத்தவ் அண்ணல்; வாணாசுரன்.
  3. 35. மிஷியன் தெரசர் - லண்டன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்.
  4. 43. சூரணம் - சூர்ணம், பொடி.
  5. 44. தொந்தரை - தொந்தரவு, துன்பம்.
  6. 46. பணம், காசு என்பன முன்பு நாஞ்சில் நாட்டில் வழங்கிய நாணயங்கள். பணம் என்பது திருவிதாங்கூர் நாணயத்தில் 4 சக்கரத்தின் மதிப்புடைய வெள்ளி நாணயம்; காசு என்பது செப்புக்காசு. திருவிதாங்கூர் நாணயத்தில் ஒரு சக்கரத்திற்கு 16 காசுகள் முன்பு வழக்கத்தில் இருந்தன. இந்தக் காசு இப்பொழுது வழங்கும் ஒரு நயா பைசா போன்ற
    அமைப்பில் இருந்தது.