மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/31. திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்

31. திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்

போரில் பெருமானார் அவர்கள் உயிர் துறந்து விட்டதாக, மதீனாவுக்குச் செய்தி எட்டி, அங்கிருந்தோர் பெருமானாரைக் காண்பதற்காக ஓடோடி வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் ஹன்லல்லா இப்னு அபூ ஆபீர் என்பவரும் ஒருவர். அவருக்கு அன்றுதான் திருமணமாகி இருந்தது. செய்தி கிடைத்ததும் மிகுந்த ஆத்திரத்தோடு, போர்க்களத்துக்கு ஓடி வந்தார். வந்ததும் குறைஷிகளின் அணிகளில் புகுந்து அவர்களை வெட்டி வீழ்த்தியவாறு முன்னேறி, அபூஸுப்யானையும் நெருங்கி விட்டார். ஆனால், எதிரிகள் பல பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவர் உயிர் துறக்கும்படியான பலத்த காயங்களை உண்டாக்காமல் இருந்தால், அபூஸுப்யானையும் அவர் கொன்றிருப்பார்.

பெருமானார் அவர்களின் மகளார் பாத்திமா நாச்சியார் வந்து பெருமானார் அவர்களைக் காணும்போது, அவர்களுடைய முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. முகத்தில் அழுந்தி இருந்த கவசத்துண்டுகளை அபூஉபைதா என்பவர் தம்முடைய பற்களால் கடித்து இழுக்கவே, அத்துண்டுகள் வெளியே வந்தன. அதனால் அபூ உபைதாவின் இரண்டு பற்கள் உடைந்து விழுந்தன.

அலீ அவர்கள் கேடயத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள்.

பாத்திமா நாச்சியார் அந்தத் தண்ணீரால் கழுவியும் கூடப் பெருமானார் அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வருவது நிற்கவில்லை.