மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பாரியும் மாரியும்

34. பாரியும் மாரியும்

“வாரும் புலவரே, வாரும்” என்றார் கபிலர். வந்த புலவரோ “புலவர் திலகமே வணக்கம்” என்றார்.

“வந்த காரியம் யாது?”

“பாரெல்லாம் புகழும் பறம்புமலை வள்ளலைப் பார்க்க வேண்டும். பாரி பாரி என்று நாவார வாழ்த்த வேண்டும்.

“பாரிதானா வள்ளல்?”

“கபிலர் கூற்றா இது?”

“இவன் ஒருவன்” தானா வள்ளல், உலகில் வேறு கொடையாளியே இல்லையா?

“இல்லை இல்லையென்று எண்ணாயிரம் தடவை சொல்வேன். முடி சூடிய வேந்தரும் நம் பாரிக்கு இணையாகார்.

“பாரியைப் போன்று கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் ஒருவன் இருக்கிறான்.”

“எங்கே? யார் அவன்?”

“வையம் காக்கும் மாரி - மழை” என்றார், கபிலர்.