மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பேகனின் பெருமை

49. பேகனின் பெருமை

பரிசில் பெற்றுத் திரும்பிய பரணர், ஒரு பாணனைக் கண்டார். பேகன் சிறப்பைப் பாணனுக்குக் கூறினார்.

“விறலி சூடும் மாலையும் பாணன் சூடும் பொற்றாமரையும் மார்பில் புரளக் கடுந் தேரை நிறுத்திக் காட்டிடை இளைப்பாறுகின்ற நீங்கள் யார்?” என்று கேட்கும் இரவலனே, சொல்லுகின்றேன் கேள்:

பேகனைக் காண்பதற்கு முன் நான் ஏழையாய் இருந்தேன். நான் பேகனைக் கண்ட பின்னரோ, எனக்குத் தேரும் கிடைத்தது. சீரும் கிடைத்தது.

பேகன் எப்படிப்பட்டவன் என்று கேள்:

ஒரு நாள் மயில் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் பேகன். அதன் ஆட்டத்தில் மனதைப் பறிகொடுத்தான். தன் பொன்னாடையை எடுத்து, மயிலின் மேனியைப் போர்த்தினான்.மயில் உடுத்தாது என்று தெரிந்தும் பரிசு கொடுத்த பேகன், உடுக்கவும் உண்ணவும் ஏங்கும் உனக்குப் பரிசு தராமல் இருக்க மாட்டான். எனெனில் அவன் மறுமையை நோக்கிக் கொடுப்பவன் அல்லன், இரவலர் வறுமையை நோக்கிக் கொடுப்பவன் என்றார் பரணர் பேகனின் பெருமையை நோக்கிச் சென்றான் பாணன்.