மாபாரதம்/சூது போர்

3. சூது போர்

செல்வமும் சிறப்யும் கொண்டு செங்கோல் செலுத்திய சீர்மையுடைய தருமனின் புகழைக் கண்டு புழுக்கங் கொண்டு துரியன் தன் நெருங்கிய சுற்றத்தினரை வையின்கண் கூட்டி அழுக்காறு படப் பேசினான். கார் துடைத்துக் கொண்டு காலம் கடத்திய சாமானியன் ஒருவன் கார் ஒட்டிக் கொண்டு குளு குளு அறையில் குதூகலமாக இருக்கிறான் என்றால் அவனோடு ஆறாம் வகுப்பில் படித்த ஆறுமுகத் தால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? நேற்று எப்படி இருந்தான். இன்று இப்படியாகிவிட்டான் என்று பேசும் அங்கலாய்ப்பு மொழிகளைக் கேட்பது வழக்கம்; அதற்குத் துரியன் விலக்காக அமையவில்லை; மகிழ்வதற்கு மாறாக இகழ்வதில் தலைப்பட்டான்.

தருமனின் தம்பிமார்கள் நால்வரும் தறுதலைகளாக மாறிவிடுவார்கள் என்று தவறுதலாகக் கணக்குப் போட் டவன் துரியன்; அவர்கள் நால்வரும் நல்ல நிலைக்கு வந்து விட்டதால் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்வீட்டுக் குடிசையில் வாழ்ந்துவந்த குப்பன் குபேரனாக ஆவதை உழைக்காது உப்பரிகையில் இருந்த சுப்பன் தாங்க முடியாமல் உளறிக்கொட்டினான்; தருமன் இப்படி உயர்வான் என்று எதிர்பார்க்கவில்லை. “என் கனவிட அவன் ஒரு சாண் வளர்ந்தாலும் நான் அவனுக்குத் தாழ்ந்துதானே போக வேண்டியுள்ளது? வீடு கட்டியவன் நம்மை ஏன் அழைக்க வேண்டும்? பளிங்குக் சல்லில் கால்வைத்து இடறியபோது அந்தப்பாவை ஏன் நகைக்க வேண்டும்? என் கையாலேயே அவன் ஈட்டிய பொருளை ஏட்டில் என்னைக் கொண்டு எழுதச் செய்தது ஏன்? தான் ஒரு சீமான் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான். அங்கர் கோமான் கன்னனைக் கொண்டு அணியையும், மணியையும் வாரிக் கொடுக்கச் சொன்னான்; அவன் எட்டு அடுக்கு மாடி கட்டினால் அதில் அவன் கட்டிப் புரள்வது தானே! திட்டமிட்டுச் சேர்த்து வைத்த பொருளைக் காக்கச் சொல்லி என் கண்களைப் பூக்கச் செய்தானே! நான் என்ன பொருள் காக்கும் பூதமா? அல்லது அவன் அடித்த கொள்ளைப் பணத்தின் பூஜ்யங்களைக் சண்டு நான் திகைப்பு அடைந்து போக வேண்டும் என்ற பிடிவாதமா? பெரியோர் சொத்தைப் பேணிக் காக்காமல் எட்டுத்திக்கும் திரிய வைத்து ஊர் சொத்து களை இவன் உலையில் போடுவது எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பாரத தேசத்தில் இவன் முரசுக் கொடிகள் அங்கங்குப் பறந்து இவன் விரசு புகழ் முழங்க வேண்டுமா? என் தந்தை திருதராட்டிரன் செய்யாத பெரு வேள்வி இவன் செய்தால் என் தந்தைக்கு இழுக்கு அல்லவா? முரசுக் கொடி உயர்த்தி முரசு கொட்டி முழங்கலாம். அரவுயர்த்தவன் ஆகிய நான் நச்சுப்பல்லுடை யவன் என்பதை அவன் அறிய வேண்டாமா? அவன் கொட்டம் அடங்க நாம் செய்யும் திட்டம் என்ன?” என்று அவையோரைப் பார்த்துக் கேட்டான்.

இச்சகம் பேசி அதனால் இகபர சுகம் அடைய முடியும் என்ற நம்பிக்கை உடைய இளையவன் துச்சாதனன் எரியும் கொள்ளியினை ஏறவிடுவது போல அதற்கு இசைய வகை மொழிகளைப் பேசினான். முளைக்கும் போதே முள் மரத்தைக் களைவது எளிது; அது முறுக்கேறி விட்டால் கோடரிதான் தேவைப்படும் என்றான். நீர் என்றும், நிலம் என்றும் வேறுபாடு அறிய முடியாதபடி பளிக்குத்தரை அமைத்து அண்ணன் திகைத்தபோது அச்சிங்காரி நகைத்தாளே அதை நினைத்தாலே நெஞ்சு குமுறுகிறது. அணங்காகிய அவளுக்கு அடுப்பு ஊதிக் கொண்டிருந்த அந்த மடையன் வீமன் அந்தச் சிறுக்கி யோடு சேர்ந்து ‘சுளுக்கு’ என்று இளித்தானே இந்தக் கிறுக்குகளுக்கெல்லாம் ஒரு சுறுக்குக் காணாமல் எப்படி இருக்க முடியும். வந்தவர்களை வா என்று அழைத்தார்களே தவிர அங்கு இருந்தவர்களைச் சாப்பிட்டீர்களா என்று வினவினார்களா? எத்தனையோ பேர் வந்தார்கள். வந்தவர்களை வரவில் வைத்தான்: சென்றவர்களைச் செலவில் வைத்தானே தவிர இருப்பில் எங்கே வைத்தான் வேள்விக்கு முதல் மரியாதை பெறக் கேள்விக்கு உரிய இடையன் தான் கிடைத்தான்; தாத்தா:வீடுமன் இல்லையா? கல்வி கற்றுத்தந்த ஆசான் துரோணன் இல்லையா? ஆரம்ப ஆசிரியன் கிருபன் இல்லையா? மன்னன் மரபில் வந்த மகிபதிகள் இல்லையா? வீரன் அசுவத்தாமன், கொடைவள்ளல் கன்னன், சிசுபாலன், அண்ணன் துரியன் இவர்கள் இல்லையா? கேள்வி கேட்ட அவனை வேள்வியிலே எரிக்கும் அவிசு என நசுக்கியது அடுக்குமா? ஒரு சிசுபாலன் செத்தான் என்றால் அது அரச பாலர்களுக்கே அவக்கேடு ஆகாதோ? அவர்கள் கட்டிய மண்டபத்தை இடித்துத்தள்ளினால் தவிர இதற்கு எல்லாம் ஒட்டிய முடிவு காண முடியாது” என்று கூறினான்.

தம்பிக்கு ‘சபாஷ்’ பட்டம் கொடுத்து அவனைத் தட்டிக்கொடுத்து அவர்களை வெல்வதுதான் அடிப்படை. அது போரில் என்று இருக்கத் தேவை இல்லை; அதில் அவர்களை அசைக்க முடியாது என்றால் வஞ்சகத்தால் அவர்களை நசுக்கிக் கேடு சூழ்தலே தக்கது” என்றான் துரியன்.

தான் ஒருவனே அவர்கள் அனைவரையும் போரில் அழித்திடச் செய்ய முடியும் என்று கூறி மோது போரே தக்கது என்றான் கன்னன். அரச அவையில் மற்றவர் சிரிக்கப் பேசும் நகையாளி இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கன்னன் கோமாளித்தனமாகப் பேசிய உரைகள் அவையினர்க்குச் சலிப்பை ஊட்டின. குடித்துவிட்டு நடுத் தெருவில் குரல் கொடுத்து வீர மொழி பேசும் குடிகாரர் களைப் போல அவன் உரைகள் அவர்களுக்கு இருந்தன.

எதிரியின் ஆற்றலை எடுத்துப் பேசி அதற்குத் தான் எவ்வகையில் நிகர் என்று தொடுத்துப் பேசுபவனே அறிவாளி. தான்படித்த பட்டமும், அடைந்த கட்டமும், தான் வைத்துள்ள திட்டமும் மட்டும் பேசிக் கொண்டு தற் பெருமை தோன்றப் பேசும் போலித்தன்மை அவனிடம் வெளிப்பட்டது. தன் வில்லின் முன் விசயன் மட்டுமே அல்லாது எதிரிகள் அனைவரும் நிற்க முடியாது என்று பெருமை பேசினான்.

போர் என்பது கூட்டுப் பொறுப்பு:மாற்றான் வலிமையையும் சீர் தூக்கிப் பேசுபவன்தான் அறிவாளி ஆவான். கன்னன் கழறிய உரைகளில் இக்குறைகளை எடுத்துக்காட்டிச் சகுனி அவனைச் சொல்லால்சுட்டு அடக்கி விட்டான். இதுவரை அவன் விசயன் முன் வெட்கித் தலைகுனிந்த நாளை விவரித்துப்பேசினான். “திரெளபதியை மாலையிட்ட நாளில் இவன் மதிமயங்கிக் கிடந்தானா? விசயன் வில்லைக் காட்டியபோது எல்லாம் இவன் கைகட்டிக் கொண்டிருந்த கதை தெரியாதா?” என்று கேட்டான்.

“இடும்பன், பகன், சராசந்தன் இவர்களை வென்ற வீமன் தருமனின் தம்பி என்பதை மறந்து விடமுடியுமா?”

“வீரம் சோறு பேடாது; விவேகம்தான் வெற்றி தரும்” என்றான்.

கடந்த காலத் தோல்வி கன்னனின் நெஞ்சை முடக்கி வைத்தது; சகுனியின் சாதுரியமே தலை எடுத்தது. “மயன் கட்டிய மண்டபம் காட்டி நம்மை அழைத்து வியன் பெரும் செல்வத்தை விளம்பரம் செய்தான். வேள்வி செய்வதாகச் சொல்லி நம்மைக் கேலிக்குரியவர்கள் ஆக்கினான். அதே காயை நாம் திருப்பிப் போட்டு இவர்களை நாம் வகையாக மாட்டி வைக்க முடியும்” என்றான்.

“மண்டபம் ஒன்று கட்டு; அதைச் சொல்லி அவர்களை இங்கு வரவழைத்துக்காட்டு; உண்பதற்கு முன் அயர்ந்துஇருப்பார்கள்; மாமன் நான் இருக்கிறேன்; ‘ஆடுக தாயம்’ என்பேன். ‘குடுக வெற்றி’ என்று நீ சொல்; அவன் அகமனத்தைத் தட்டி எழுப்பு: ஆடாவிட்டால் அது தோல்வி என்று செப்பு. அவன் புகழ் வெறிகொள்வான். நெறி தவறுவான். அதனால் மானம் பறி போகும். தாயம் அவன் தாய பாகத்தைக் கவ்வும், சூதில் விழுபவன் துண்டி லில் விழும் மீன் போன்றவன். ஆரம்பம் எனது; அதற்கு மேல் அவன் துயரக் கதைக்குத்தொடர் அத்தியாயம் நீங்கள் அமைத்துக் கொடுக்கலாம். ஈட்டிய புகழ் எல்லாம் இழந்து விட்டுக் கைகட்டி நிற்கும் அடிமையாக ஆக்க முடியும், அவனை வெல்லும்போது மற்றவர்கள் தாமாக விழுந்து விடுவார்கள். அங்கே சிரித்துப் பேசிய ஒய்யாரி அவளை இங்கே ஒப்பாரி வைத்து அழவைக்க முடியும். அதுமட்டு மல்ல; சிசுபாலனைக் கண்ணன் கொன்றான். அதனால் சினந்த சல்லியன் போர் தொடுப்பான், கண்ணன் மீது படை எடுத்துச் சென்றுள்ளான். சல்லியன் வல்லியன். நாள் பல ஆகும். கண்ணன் மடக்கிப்போடப் படுவான்; அதற்குள் இவர்களை அடக்கிக்கூண்டில் வைத்துவிடலாம்” என்றான். இதுதான் தக்க சூழ்நிலை” என்றான்.

விதுரன் பத்திரிகைத் தலையங்கம் போல நடுநிலை ஏட்டி ன் பணியைச் செய்தான். “நாடு கேட்டு உன் தந்தை ஒரு ஏடு அனுப்பினால் போதும்; அதற்கு மறுப்புச் சொல்லாமல் அவனே வந்து தருவான்; பொன்னும் பொருளும் கேட்டாலும் அவற்றைப் பூமேல் வைத்துக் கொடுப்பான். பகை கொண்டு அழிப்பதை விடு. நகை கொண்டு உறவு வளர்ப்பதைத் தொடு, உலகம் உங்களைப் போற்றும். சகுனி சொல்லை நீவிர் மாற்றும். அதுதான் நல்லது ஆற்றும்” என்று பேசினான்.

கட்சித் தலைவர் சொல்வதை எதிர்த்துப் பேசும் தொண்டன் நிலைமைதான் விதுரனுக்கு ஏற்பட்டது. ‘தாசிக்குப் பிறந்த ஒசிச்சாப்பாடு நீ; ஒரவஞ்சனையோடு பேசுகிறாய்” என்றான். “புது பணக்காரனைக் கண்டு நீ மதிமயங்கி விட்டாய்; அதனால் எங்கள் சதிக்கு எதிர் நீ பேசுகிறாய். எடுபிடிக்கு ஆளாகச் செயல்பட வேண்டிய நீ மாடுபிடி சண்டையில் பங்கு கொள்வது ஏன்? என்று துரியன் அதட்டிப் பேசினான்.

விதுரன் புறக்கணிக்கப்பட்டான். தருமன் இயற்றிய மண்டபத்திற்கு நிகராக இவன் ஒரு மண்டபம் அமைத்தான். தன் தந்தையிடம் செய்தி சொல்லிப் பாண்டவர்க்கு அழைப்பு அழைப்புமாறு கூறினான். கடிந்து தடுக்க வேண்டிய தந்தை அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து போர் செய்து உங்களால் வெல்ல இயலாது, வஞ்சினம் செய்து போர் செய்வதை விட வஞ்சனையால் வெல்வதே தக்கது; அதற்குச் சூது போர்தான் மிக்கது. திட்டம் கனியச் சகுனி தவிர வேறு யாரும் உதவ முன் மாட்டார்கள். வெற்றி அடைய அவன் சொல்வதைப் பின் பற்றுவதே ஏற்றது” என்று கூறினான்.

விதுரன் பாண்டவருக்கு வேண்டியவன். அதனால் அவனை அனுப்பினால் பாண்டவர்கள் எதிர் ஒன்றும் பேசமாட்டார்கள். திருதராட்டிரனை அணுகி அவனைக் கொண்டு விதுரனையே பாண்டவர் பால் அனுப்பி வைத்தான். விதுரனுக்குச் செல்ல விருப்பம் இல்லை; எனினும் தமையனின் கட்டளைக்கு எதிர் சொல்ல முடியவில்லை.

பாண்டவர்களிடம் சென்ற விதுரன் கொண்டு வந்த செய்தியைச் சொன்னான். மண்டபம் காண அழைப்பதாகக் கூறினான். அவர்கள் திட்டத்தையும் தெளிவுபடுத்தினான். சூது போர் செய்து தருமனின் நாட்டையும் பொருள்களையும் கவர அவர்கள் திட்டம் இட்டு இருப்பதைக் கூறினான். அதற்குத் தருமன்:
“அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,
அழகும், வென்றியும், தத்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,
குலமும், இன்பமும், தேசும்,
படியும் மாமறை ஒழுக்கமும், புகழும், முன்
பயின்ற கல்வியும் சேர
மடியுமால்; மதியுணர்ந்தவர் சூதின்மேல்
வைப்பாரோ மனம் வையார்”

என்று கூறினான். சூதாடுதல் தருமம் அன்று என்று கூறினான். “உம்முடைய கருத்து யாது?” எனத் தருமன் விதுரனைக் கேட்டான்.

“அறிவு கூறினேன்; ஆடாதே சூது என்றேன்; முறிவு ஏற்பட்டது; முடங்கி விட்டேன். செய்தி சொல்ல வந்தே னே அன்றிச் சூது ஆடுதல் செப்பம் உடையது என்று நான் கூறமாட்டேன். அழைப்புத் தந்தேன்; அதனை ஏற்பதும் ஏலாததும் உம் விருப்பம்” என்றான்.

வீமன் தக்க நீதிகள் சொல்லிச் சூது ஆடுதல் தகாது என்று ஏதுகள் கூறினான்.

“குழி வைத்து யானையைப் பிடிப்பர். அது குழி என்று தெரிந்ததும் அவ்வழியே அது எட்டிப்பார்க்காது. பழி என்று தெரிந்தும் விழிகளை மூடிக் கொண்டு நாம் அழியச் செல்வது கூடாது” என்று அருச்சுனன் கூறினான்.

“விதி கூட்டும் இறுதி இது என்றால் அதை மதி கொண்டு கழிப்பதுதான் சரியான கணக்காகும்” என்று அடுத்த தம்பியர் அறிவித்தனர்.

“மூத்தோர் சொல் வார்த்தை தட்டுவது கூடாது; இயலாது; பெரிய தந்தை அழைப்பு விடுத்து மறுப்புக் கூறுவது நம் பெருமைக்கும் பொருந்தாது.” என்று கூறிப் பயணக் கட்டுரைக்குத் தாளும் கோலும் எடுத்து வைத்தான். அனைவரும் அத்தினாபுரி சேர்ந்தனர்.

குருட்டுத் தந்தை திருட்டுத்தனம் மிக்கவனாக நடந்து கொண்டான். அன்புடையவனைப்போல அகம் குழையப் பேசித் தழுவிக்கொண்டு தருமன் கட்டிய மண்டபத்தையும் நடத்திய வேள்வியையும் காணும் பேறு தனக்கு இல்லாமல் போய்விட்டது என்று வருந்துவது போலப் பேசி நடித்தான். அன்னை காந்தாரியைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னான்; தருமன் அவளையும் பார்த்து இனிய உரை பேசி மகிழ்வித்தான்.

மாமன் சகுனியும், தம்பிமாரும், அங்கர் தம் அரசனும், வீடுமனும், விதுரனும், அசுவத்தாமனும், துரோணனும் கூடியிருந்த அரசவையில் வீற்றிருந்த துரியன் மண்டபத் தின் அழகு காண மன்னர் ஐவர் தம்மை நீ கொண்டு இமைப்பில் வருக” என்று தேரோட்டியாகிய பிராதிகாமி யைப் பணித்திட்டான்.

சென்றவன் எட்டுத்திக்கும் வென்றவனாகிய தருமனை வணங்கினான். வாய்புதைத்து அடக்கம் காட்டித் தன் உரையைத் தொடங்கினான். “மண்டபத்தின் அழகுகாண மன்னன் துரியன் அழைக்கின்றான்; வருக” என்று கூறினான்.

வேள்விச் செல்வியாகிய திரெளபதியைக் காந்தாரியின் இல்லில் இருக்கச் சொல்லிவிட்டுத் தானும் தம்பியும் பேய் இருந்தது என்னும்படி அமர்ந்திருந்த துரியனை அணுகினான்; அசையாத கொலுப்பொம்மைகள் போல் வீற்றிருந்த பெரியவர்களை வணங்கிவிட்டு மண்டபத்தைக் கண்டு வியந்து அதனை மனமாரப் பாராட்டினான்.

“இந்த மண்டபத்துக்கு இணையாக விண்ணவர் நகரிலும் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறினான், தான் கட்டிய மண்டபத்தை விடவும் அழகிது என்று அடக்கத்தோடும் கூறினான். அவன்பின் வந்த தம்பியரும் முறைப்படி அவைப் பெரியோருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவரவர்க்கு இட்டு இருந்த தவிசில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

உண்டார்களோ இல்லையோ அதற்குள் அவர்களை வம்புக்கு இழுத்து வலையில் மாட்டிவைக்க மாமனும் துரியனும் பேச்சுத் தொடங்கினார்கள். சோறு சமைக்க ஆகும் காலத்துக்குள் பொழுது தக்க வகையில் போக்கத் தடையுண்டோ என்று சகுனி தொடங்கினான். மாமன் மருமகன் என்ற உறவு கொண்டு தருமனோடு வேடிக்கைப் பேச்சில் வேதனையைத் தொடங்கி வைத்தான்.

“சும்மா இருக்கிறாயே இந்தத் தாயத்தை உருட்டிக் கொண்டு இருக்கலாமே” என்றான். அறப்பள்ளியிலே பாடம் படித்த தருமன் அறநெறிச் சாரத்தை அடியோடு ஒப்புவித்தான். “சூதும் வாதும் வேதனை செய்யும்” என்று சொல்லிப் பார்த்தான்.

“நீ ஒன்றும் காசுவைக்க வேண்டாம்; உருட்டத்தான் சொல்கிறேனே தவிரத் தெருட்டச் சொல்லவில்லை. நான் தோற்றால் காசு தருகிறேன். நீ தோற்றால் கைவிரித்தால் போதும்” என்று கிண்டி விட்டான் சகுனி.

“பாவம்! வேள்வி செய்தனர். அதனால் பொருள் விரயம் ஆகிவிட்டு இருக்கும். இல்லாதவர்! அதனால் வைத்து ஆடக் காசு இருக்காது” என்றான் துரியன்.

“தாயம் உருட்டத் தெரியாதவர்கள் வில் எடுத்து நாண் எங்கே பூட்டப் போகிறார்கள்? காய் வைக்கத் தெரியாதவர்கள் கரி பரி தேர் ஆள் இவர்களை எப்படி அணி வகுத்து அசைக்கப் போகிறார்கள் என்று வில் உண்டாக்கும் வடுவினைச் சொல் எடுத்துக் கன்னன் உண்டாக்கினான்; வீரம் மிக்க விசயன் வெகுண்டெழுந்தான்.

“வீட்டைக் கட்டி விட்டு வேடிக்கை காட்ட அழைத்தீர்; கேளிக்கை படப் பேசிச் சூது வழியாக எம்பொருளைக் கொள்ளை கொள்ளத் திட்டமிட்டீர். காய் வைத்து ஆடத் தெரியாது தான், உம் தலைவைத்துச் சாடத் தெரியும்; எடு வில்லை; விடு சொல்லை” என்று முழக்கம் செய்தான்.

வாதங்கள் பெருகி மோதல்கள் உண்டாவதைத் தவிர்க்தத் தருமன் எங்கள் பொருளைப் பறிக்கத்தானே இந்த ஆட்டம்; தேவையில்லை; கேள்; ஆடாமலே தருகிறேன்” என்றான்.

“வெற்றி தோல்வி என்பது இருவருக்கும் பொது. நீங்கள் வெல்ல மாட்டீர்கள் என்று நினைப்பது தவறு. தாயம் வைத்து ஆடு, காயை அகற்று. என் மாமனுக்காக எவ்வளவு வைக்க வேண்டுமானாலும் நான் வைக்கிறேன்; அத்தினாபுரியையே அடகு வைக்கச் சொல்கிறாயா நான் தயார். கேவலம் காசு செலவு ஆகும் எனறு அஞ்சிப் பின் வாங்குவது உன் பெருமைக்கு இழுக்கு” எனறான் துரியன். அதற்குமேல் அருச்சுனனைத் தருமன் பேசவிடவில்லை. அருச்சுனனை அடங்கி இருக்கும்படி கூறிவிட்டு ஆடும் பலகை முன் எதிர் எதிரே அமர்ந்தான்; அறம் மறந்தான்; அறிவு குறைந்தான்; தூண்டிலில் மீன் சிக்கிக் கொண்டது. அசையும் பொருள் அசையாப்பொருள் அனைத்தும் வைத்து ஆடினான்; இழக்கும்தோறும் குது அவனை மேலும் இழுத்தது. ஒரே ஆட்டத்தில் இழந்தவை அனைத்தையும் திரும்பப்பெறலாம் என்பதால் பந்தயத் தொகை அதிகரித்தது. ஈட்டி வைத்த செல்வம், நாட்டி வைத்த புகழ் அத்துணையையும் ஒரு சில உருட்டல்களில் இழந்து விட்டான்.

“வைப்பதற்கு ஒன்றும் இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்; எஞ்சியிருந்த தம்பியர் நால் வரையும் வைத்து இழந்தான். தன்னையும் வைத்து ஆடினான். அரைக்கணத்தில் ஐவரும் அடிமையாயினர்.

“இன்னும் உன் மனைவி” என்று இழுத்தான்.

வீடுமன் தடுத்தான்; விதுரன் கடுமையான சொற்களைத் தொடுத்தான்; விசயன் வில்லை எடுத்தான்; வீமன் கதையை மடுத்தான்; தம்பியர் விழிகள் கடுத்தனர்.

“பொறு” என்று அவர்களுக்குக் குறிப்புக் காட்டினான் தருமன்.

பெண்ணைப் பணயம் வைத்தான்; ஆட்டத்தில் அறிவுக்கண்ணை இழந்தான்.

கட்டிய மனைவியைச் சதுரப்பலகையின் கட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்தினான்.

ஆட்டம் முடிந்து; ஆர்ப்பாட்டம் எழுந்தது.

ஆரணங்கினைக் கொணர்க என்றான். தேரோட்டியை அனுப்பினான். அடிமைக்கு மேலாடை ஏன் என்று ஆரவாரம் செய்தான். எப்பொழுதும் உடுத்துக் களையாத உத்தரியத்தை எடுத்துக் கீழே போட வைத்தான். அவர்கள் வீரம் உடல் தழும்புகளில் அடங்கி மவுனம் சாதித்தது.

தேர் ஒட்டி பிராதிகாமி நேர் ஒட்டமாக ஓடினான். சிந்தித்துப் பார்த்தான்; அவன் சிந்தையில் சட்ட நுணுக் கங்கள் சதிர் ஆடின; திரும்பி வந்தான்.

“தருமன் தன்னைத் தோற்குமுன் பெண்ணை வைத்து விளையாடினானா? கண்ணை இழந்தபின் சித்திரம் வரைந்தானா?” என்று திரெளபதி வினா எழுப்பியதாக அவனே ஒரு கற்பனையை அவிழ்த்துவிட்டான்.

“அவளை அழைத்துவா! அரங்கில் அவள் கணவன் விடை சொல்வான்” என்று கடுத்துப்பேசிச் துச்சாதனன் முகத்தை வெகுண்டு நோக்கினான்.

“கற்கண்டு போலப் பேசும் அவள் சொற் கண்டு நீ திகைக்காதே; குவளை விழியாளைத் ‘திரு ருதி’ என்று இழுத்து வந்து இங்கே ‘இரு இரு’ என்று கொண்டு வந்து நிறுத்து” என்று கட்டளையிட்டான்.

“ஐவருக்கு ஒருத்தி; அவள் அஞ்சாத சிறுக்கி; அவளை அழைத்துவா; பேசலாம் இங்கே நிறுத்தி” என்றான்.

அதிருஷ்டம் துச்சனை அனைத்தது. நேரே திரெளபதி இருந்த காந்தாரியின் இல்லத்துக்குச் சென்றான்.

“வாடி இங்கே, வடிவுக்கு அரசி நீ; அங்கே உன் கணவர்கள் வாடி இருப்பதை நேரடிவந்து பார்” என்று கூறி அவள் கரங்களைத் தொட்டிழுக்க அருகில் சென்றான்.

“அத்தை; இந்தச் சொத்தை செய்யும் வித்தையைப் பார்! அவன் கைப்பிடித்து இழுக்கிறான்; நீ கண் கட்டிக் கொண்டு மறைகிறாய். அடைக்கலம் அளிக்க வேண்டிய நீ அவனுக்குப் படைக்கலமாகத் துணை செய்கிறாய்” என்று கதறினாள்.

“அத்தை மகள் நீ; அதனால் அவன் கற்றவித்தையைக் காட்டுகிறான். இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளலாமா? மூத்தவன் அழைக்கிறான்; உன்முத்துப் பல் ஒன்றும் உதிராது; உன்னைப்பார்க்க விரும்புகிறார்கள். நீ வியர்க்க அழுகிறாய் அரங்கில் சேர்த்து உன்னை ஆடவா அழைக்கிறான்? அவையில் உனக்கு ஆசனம் தருவான் என்றாள் பலபாதகரைப் பயந்த காந்தாரி. அவன் தொட்டு இழுக்க அஞ்சினான்; சட்ட விழ்ந்த மயிர் முடியைப் பற்றிக் கொண்டு அவளைத் தரதர என்று தரையோடு அவள் உடம்பு கறை பட இழுத்துச் சென்றான்; அவள் அழுது அரற்றினாள், கத்தினாள், கதறினாள்; அவள் சொற்கள் செவிடன் காதில் ஊதும் சங்கு ஒலி ஆயின.

“என் அண்ணன் கல்லில் தடுத்தபோது சொல்லிச் சிரித்தாயே! இங்கே வல்லில் தம்மை இழந்த உன் மகிபர்கள் முன் வந்து அவர்கள் அல்லல் கண்டு சிரி; அடிமையாகி விட்ட அவர்கள் மிடிமை பார்த்துச் சிரி; பீடு பெற்றுச் சீர் பெற்று உயர்ந்த வாழ்வு கேடு உற்றதே அதைப்பார்த்துச் சிரி; உங்கள் பிழைப்பு அம்பலத்துக்கு வந்துவிட்டதே அதைக்கண்டு சிரி, கட்டிய கணவர்கள் கை கட்டிக் கொண்டு சேவகம் செய்வதைப்பார்; விற்பிடித்த கையும், கதை எடுத்த தோளும், வாள் பிடித்த கரங்களும், கோல் பிடித்த முடியும் என் அண்ணனுக்கு வால் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்” என்று சொல்லி இழுத்து வந்தான்.

அவை நடுவே பெண்ணின் அவலக்குரல் கேட்டது; பெண் என்றால் என்ன என்று அறியாத மரக்கட்டையே! நீ மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீடுமனைப் பார்த்துக் கேட்டாள். “கல்விக்கு ஆசான் என்று சொல்லிக் கொண்டு கலைமகளை வழிபடும் துரோணரே! என்னை விலை மகளினும் கீழாக நடத்துவதைக் கண்டு சிலையாக நிற்கிறீரே ஏன்?” என்று கேட்டாள். “வில்லிலே விவேகம் உடையவர் என்று பேசும் விதுரரே! உம்சதுரவிளையாட்டு ஏன் அதிர்ந்து போய்விட்டது” என்றாள். கண் இழந்து வாழ்வில் ஒளி இழந்து இருப்பதைத்தவிர வெளுப்பு ஏதும் காணாத வேந்தனே! உன் செவிகளும் பார்வை இழந்து விட்டனவோ?” என்ற திருதராட்டிரனைக் கதறிக் கேட்டாள்.

செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் மவுனம் சாதித் தது; அறிவும் சால்பும் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அடங்கி விட்டன. வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடந்தனர். மனித இயல் அவன் செய்வது அடாது என்று அறிவிக்கிறது; சட்ட வியல் அவன் பக்கம் சாய்ந்து நின்றது. அடிமைப்பட்ட அவளை அழைத்துவர அவனுக்கு உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் வாய் அடங்கிக் கிடந்தனர்.

அழுது பயன் இல்லை என்று அறிந்து அவள் அறிவைத் தீட்டினாள். கண்ணகி போல அறம் கூறும் அவையத் தைப் பார்த்து அறைகூவிக் கேட்டாள்.

“தன்னை வைத்துத் தோற்றுவிட்ட பிறகு என்னை வைத்து விளையாட என் மன்னன் தருமனுக்கு உரிமை ஏது? சட்டம் எப்படி என்னைக் கட்டுப்படுத்தும்? இந்தச் சின்ன அறிவு கூட இல்லாமல் தீர்ப்பு வழங்கியதைக்கண்டு தீர்ந்தது கடமை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீரே. உங்கள் வித்தகம் மெத்தனம் அடைந்தது ஏன்?” என்று கேட்டாள்.

மவுனம் குடி கொண்டது. மடமை துரியன்பால் வெளிப்பட்டது.

கிள்ளை மொழி பேசும் வள்ளைக் கொடியாளைத் துகில் உரித்துக் காட்டு; அப்பொழுது எழும் அழுகுரல் பாட்டு; அதை இந்த அவையோர்க்கு எடுத்துக்காட்டு; அதற்காக அவளை வாட்டு” என்றான் துரியன்.

அந்தத் தடிப்பையல் அந்தத் தையல் மீது கொண்ட மையல் காரணமாக அவளைத் தொட்டுத் துகில் உரிக்க அவள் சேலையைப்பற்றி இழுக்கச் சென்றான்.

இனி பொறுப்பது இல்லை தம்பீ! எரிதழல் கொண்டு வா; நெறிதவறிய தருமனைத் தீய்ப்போம்; வேள்வி மகளை வைத்து விளையாடிய அவனைக் கேள்வி கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டான்” என்று வீமன் கடிந்து பேசினான். “தருமத்தின் கையைச் சுட்டுப் பொசுக்குவோம்” என்றான். “யாரைப்பார்த்து நீ இவ்வாறு பேசுகிறாய்” என்று வருந்தி விசயன் ரத்தக் கண்ணிர் வடித்தான். மற்றும் தம்பியர் இருவரும் உள்ளக் குமுறலால் குமைந்து எதையும் உளறாமல் மனம் அழிந்து நின்றனர்; தருமன் தக்க உரை தந்தான்.

“பூக்க வேண்டிய மலர்கள் பூத்துக் காயாதலும் உண்டு. உதிர்ந்து கருகிப் போதலும் உண்டு. காற்று அடிக்கும் வேகத்தில் கீற்றுகள் மட்டும் அசைவதில்லை. அடிமரமும் ஆட்டம் கொடுக்கும், வேரோடு மரம் வீழ்ந்து சாய்தலும் உண்டு; வெள்ளம் வந்தால் அது பள்ளத்தில் மட்டும் பாயும் என்று கூற முடியாது; கரைகளையும் உடைத்துக் கொண்டு பெருக்கெடுத்து ஒடுதலும் உண்டு; முன்னம் பொறுத்தீர் இன்னும் பொறுப்பதுதான் நம் கடமை” என்று காந்தி மூர்த்தி போல சாந்தமூர்த்தி தருமன் பேசினான்.

“கட்டுண்டோம் காலம் மாறும்” என்று ஆறுதல் அடைந்தனர் பாண்டவர் ஐவரும். விகர்ணன் என்னும் துரியனின் கடைசித்தம்பி துணிந்து எழுந்தான். இது பேடித்தனம்; அடிமையாகி விட்டால் அவர்களை அவமானப் படுத்த வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்– கிறது? சிறைக் கைதிகள் என்றால் அவர்களை அடைத்து வைக்கலாமே தவிர அடக்கி வைக்க முடியாது”.

“அடிமைகள் என்றுமே அடிமையாக இருப்பது இல்லை. புரட்சிக்கனல் எழுந்தால் உங்கள் புரட்டுகள் பொசுங்கி விடும். இந்த மருட்டுகளை விட்டு ஆண்மையோடு நடந்து கொள்ளுங்கள். பேடிகளைப்போல அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு மல்யுத்த வீரர்கள் என்று நீங்கள் வாய்கிழியச் சொன்னால் அது குதர்க்கம் ஆகுமே தவிர தருக்கம் ஆகாது. பெண்ணடிமை செய்த காலம் போச்சு; வாதில் பெண் ஆட்சி செய்யும் காலம் இது ஆச்சு; இந்திரன்தான் ஆட்சித் தலைவன் என்பது பழைய பேச்சு; இந்திராணியும் மாட்சிக்குரிய தலைவியாவது இன்றைய மூச்சு, கண்ணகியின் வீர முழக்கம் பசண்டியன் ஆட்சியைக் காற்றாடியாகப் பறக்கவிட்ட கதையைப் படிக்காதது உம் குறை”.

“பெண் தன்னைச்சூதில் இழந்தவளாக இருக்கலாம்; எளிதில் அவளை வென்று விடமுடியும் என்று பகற்கனவு காணாதீர்கள். அவள் யார் என்பதைப் பற்றி இங்குப் பேச வரவில்லை. அல்லல் உறுபவள் இவள். பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை இனி இந்த மண்ணுக்குத் தாங்கும் சக்தி இருக்காது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று மதி படைத்த எவரும் முழக்கம் செய்வார்கள்” என்று எடுத்து உரைத்தான்.

கன்னன் எழுந்தான்; விகர்னனைக் கடிந்தான். சின் னப்பயல் நீ; உன்னை யார் இங்கு வாய் திறக்கச் சொன் னது? அனுபவம் இல்லாத ஆத்தி சூடி நீ; கொன்றை வேந் தன் என்றால் அது கொத்தவரங்காய் என்று தான் நீ அறிவாய்; பெரியவர்கள் கூடி இருக்கும் இப்பெருமை மிக்க பேரவையில் பேசுவதற்கு உனக்கு யார் வாக்குரிமை தந்தார்கள்? இளைஞர்கள் நீங்கள் இட்டபணி செய்யலாமே

பால் மணம் மாறாத பாலகர்கள் நீங்கள். அரச அவையில் பங்குகொள்ள உங்கள் மீசை நரைக்கவில்லை; அண்ணனை எதிர்த்துப்பேசத் திண்மை உனக்கு எவ்வாறு வந்தது? தம்பி என்றால் படைக்கு அஞ்சாமல் இடும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அண்ணன் பேசும் போது அடக்கம் தான் உனக்கு அணிகலன்; சட்டம் தெரியாமல் உன் இட்டம் போல் பேச உனக்கு உரிமை கொடுத்ததே தவறு.

“அவன் மாடுமனை வீடு என்று சொல்லித்தானே பந்த யப் பொருளாக வைத்தான்; வீட்டில் இருக்கும் மனைவி யும் வீட்டில் அடங்காதோ? ‘இல்’ எனப்பட்டது இல்லாளைக் குறிக்காதோ? அவன் உடைமைகளில் மனைவியும் ஒருத்தி ஆக மாட்டாளோ? சட்டம் படிக்காமல் சபையில் பேசுவது சரியாகாது” என்றான். “இது தவறு என்று பட்டால் பேசாமல் வெளியே நடந்து காட்டுவதுதான் அரச அவையின் நடைமுறை.”

துரியனின் ஆதிக்கம் அவையோர் விவேகத்தை அடக்கிவிட்டது.

சிலைகள் வைப்பதற்கு நிதிகள் திரட்டத் தேவை இல்லை. சிற்பிகளின் கைவண்ணம் அதுவும் தேவை இல்லை, துரியனின் அவையில் மாந்தர் எல்லாம் சிலைகளாக மாறி விட்டனர். அந்தக் கலைத் திட்பம் துரியனிடம் இருந்தது.

அவள் கூந்தல் சரிந்தது; சேலை நெகிழ்ந்தது. மானம் குலைந்தது; அவையில் ஒழுங்கு தலை கீழ் ஆகியது.

அவள் மனநிலையை வில்லியின் சொற்களில் தருவது சிறப்புடைத்து. செயல் இழந்து கண்ணனை மனத்தில் நினைந்து தன்னை மறந்து நின்றாள்.
“ஆறாகி இருதடங்கண் அஞ்சன வெம்
புனல் சோர அளகஞ் சோர
வேறான துகில் தகைந்த கைசோர
மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று
அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்துஊற உடல் புளகித்து
உள்ளமெலாம் உருகி னாளே”

என்பர் கவிஞர் வில்லிபுத்துரார்.

துச்சாதனன் அவள் கட்டியிருந்த சேலைகளைக் கஜக் கணக்கில் பார்த்தான்; ஆறு அல்லது எட்டு என்று நினைத்தான்; நிஜக்கணக்கில் அது வேறாக முடிந்தது. இழுக்க இழுக்க நீதிமன்ற வழக்குகள் போல் நீண்டு கொண்டே வந்தது. அவர்கள் வாதங்கள் போல நிறங்களும் மாறிமாறி வந்தன; அவன் கைகள் சலித்தன; கால்கள் தளர்ந்தன; மெய் அயர்ந்தது; மனம் சோர்ந்தான். அவன் களைத்து ஒய்ந்துவிட்டான்.

இந்த அற்புதத்தைக்கண்டு அவையோர் அஞ்சினர். தீண்டாத தெய்வக் கற்பினாள் இவள் என்பதை உணர்ந்து அவள் அடிகளுக்கு மலர்கள் தாவினர். அஞ்சலி செய்து ஆராதனை நிகழ்த்தினர். தனிமனிதன் தவறு செய்யலாம்; மானுடம் தவறக்கூடாது; அப்படித் தவறி னால் தெய்வம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை அந்நிகழ்ச்சி காட்டியது. கண்ணன் மானம் காத்தான் என் பதை நிதானமாக யூகித்து அறிந்தனர். அவையே ஆட்டம் கொடுத்தது; வெளியே கனல் தெறிக்கக் காற்று வீசியது; புரட்சிப் புயல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊமை யராய்ச் செவிடர்களாக வாழ்ந்தவர் எல்லாம் எழுந்து அங்கிருந்த மேசை நாற்காலிகளைக் கால் தலை மாற்றினர். அவையில் ஆவேசக் குரல் எழுந்தது. அரசனின் இறையாண்மை ஆட்டம் கொடுத்தது. திருதராட்டிரன் நடுங்கிவிட்டான். பூகம்பமே உண்டாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. போட்ட கணக்கெல்லாம் பூஜ்ஜியத்தில் முடிந்து விட்டதே என்று முதியோன் கவலைப்பட்டான்.

முதலில் தன் மக்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற தற்காப்பு உணர்வு ஏற்பட்டது. “அம்மா தாயே! உன் புருஷனை அழைத்துக் கொண்டு வீடு சேர்; நாடு பொருள் உரிமை எல்லாம் தந்து விட்டேன். உன் மைத்துனர்கள் விளையாட்டுத்தனமாகத் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடி விட்டார்கள். நமக்குள் நாம் அந்நியர் அல்ல; கண் மலரில் கைபட்டால் அதை வெட்டியா விட முடியும்? எங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் உனக்கு அதில் பங்கு உண்டு. வீட்டுக்கு வந்த மருமகளே! எங்களுக்குக் கருணை காட்டு” என்று அவள் அருள் வேண்டி நின்றான்.

பாண்டவர் அனைவரும் விடுதலை பெற்றனர். எனினும் சகுனி எதிர் வழக்கு ஒன்று எழுப்பினான். “வாலை முறுக்கி விட்டீர்! புலி சும்மா விடாது. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளும் ஆரம்பம் இது” என்றான்.

திரெளபதியும் அவர்கள் தரும் விடுதலையை விரும்ப வில்லை; அங்கேயே இருந்து செத்து மடிவதற்கு உறுதி பூண்டாள். மறுபடியும் சூதாடி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினாள்; தருமனை அவளே மறுபடியும் ஆடத் தூண்டினாள். இறுதிச்சுற்று வெற்றி தோல்வி என்ற இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சகுனிக்கு மனம் நடுக்கம் ஏற்பட்டது. தருமன் தான் செய்த புண்ணியம் அனைத்தும் பணயமாக வைத்தான்; தருமம் வென்று விட்டது. சகுனி பக்கம் காய் தலை சாய்க்கவில்லை; தருமம் கை கொடுத்துத் தூக்கியது. தருமமே தலை காக்கும் என்பதற்கு அவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது.

தன்னை அவையில் “பலர் முன் கொண்டு வந்து நிறுத்து” என்று அவதூறு பேசிய துரியனின் தொடை வழியே குருதி கொட்ட அந்த இரத்தத்தைக் கொண்டு தான் விரித்த கூந்தலை முடிப்பதாகச் சபதம் எடுத்தாள். அதைத்தொடர்ந்து வீமன் தன் கதாயுதத்தால் அவன் கதையை முடிப்பதாக வஞ்சினம் செய்தான்; அருச்சுனன் கன்னனைத் தீர்த்துக் கட்டுவதாக அவனைப் பார்த்துக் கூவினான்; நகுலன் சகுனியின் மகன் உலூகனை உலுக்கிக் குலைப்பதாகக் கூறினான். சகாதேவன் குள்ள நரியாகச் செயல்பட்ட கள்ளச்சிந்தை உடைய சகுனி மீது பாய்ந்தான். ஆளுக்கு ஒருவரைக் குறிவைத்துப் பேசினர். வீமன் துரியனை முடிக்கும் வரை நீரைக் கையால் அள்ளிப் பருகிக் குடிப்பதில்லை என்றான். தண்டு கொண்டு தண்ணிரை மேல் எழுப்பி அத் துளிகளைப் பருகுவதாக அறிவித்தான்.

தருமத்தைப் பணயமாக வைத்து ஆடிய வெற்றி அவர்களுக்கு விடுதலை தந்தது; முழு உரிமை கிடைத்தது; அவர்களை இனி யாரும் கட்டிப்போட முடியாது; விட்டு விடுதலையாகி நின்றார்கள். அப்பொழுதே அவர்கள் போரில் எதிர்த்து நாட்டைப் பெறும் உரிமை இருந்தது. வீரர்களுக்கு உள்ள உரிமை பறிபோகவில்லை. அவர்கள் உடனே படைதிரட்டிப் பாரினை வவ்வியிருந்தால் துரியன் வேரோடு அழிந்து இருப்பான். அந்தச் சூழ்நிலையைத் தடுக்கத் திருதராட்டிரன் மற்றொரு சூழ்ச்சி செய்தான்.

இராமாயணக் கதையை எடுத்துக் காட்டி, “நீங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று தவம் செய்யுங்கள்; ஒராண்டு மறைந்திருந்து வாழுங்கள்; அதற்குப்பிறகு நாட்டு உரிமை உங்களை வந்து சேரும், படை திரட்டத் தேவையில்லை” என்று கூறினான்.

உடனே பெரிய மனிதர்களான வீடுமன், துரோணன் முதலியவர்கள் பகை ஆறுவதற்குப் பன்னிரண்டும் மற்றும் ஒர் ஆண்டும் போதும். அதற்குள் மனம் மாறி ஒன்றுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அதுவும் தக்கதே என்றனர். பாண்டவர்க்கும் படை திரட்டக் காலமும் துணையும் தேவைப்பட்டன. ஆண்டுகள் அதிகம் ஆனாலும் இழந்த நாட்டை மீண்டும் பெற முடியும் என்பதால் அதனை ஏற்றுக் கொண்டான். தருமன் தாழ்விலும் அவன் மனம் சமநிலை பெற்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மாபாரதம்/சூது_போர்&oldid=1063077" இலிருந்து மீள்விக்கப்பட்டது