மாபாரதம்/காடுறை வாழ்க்கை

4. காடுறை வாழ்க்கை

காட்டுக்குச் சென்றவர்களுக்கு வடித்துக் கொட்டிய காய்கறிச் சோறா கிடைக்கப் போகிறது? காயும்கனிகளும் தின்று காலம் கடத்தி வாழ வேண்டி நேர்ந்தது; அரங்கில் ஆடுவதற்கு அன்ன நடையினர் அங்கு இல்லை; பாடுவதற்குப் பண்ணிசை வல்ல பாவையரும் அங்குவரப் போவது இல்லை; பராசக்தியின் பாடலாகிய ‘கா கா கா’ என்று கத்தும் குரல்கள் தாம் அங்குக் கேட்க முடியும். நீச்சல் குளங்கள் உண்டு நீந்தி விளையாட; பாய்ச்சல் மான்கள் உண்டு பாவை பாஞ்சாலி பிடித்துக்களியாட; வாழ்க்கை வசதிகள் என்பவை மறுக்கப்பட்டன. தேரும் இல்லை ஊர்ந்து செல்வதற்கு, யானையும் இல்லை ஏறி உலவுவதற்கு; பரியும் இல்லை பரந்து சுற்றுவதற்கு; நட ராஜர்களாகத்தான் எங்கும் சுற்றிவர வேண்டியிருந்தது. அடிமைத்தனம் பாண்டவர்க்கேயன்றி அவர்கள் அன்னை குந்தி தேவிக்கு அல்ல; காட்டு வழியில் மேட்டு நிலத்தில் அவர்களை அலைக்கழித்து அல்லல் உறச் செய்வதால் பயன் இல்லை; அதனால் குந்தியை நாட்டிலேயே விட்டு விடும்படி கண்ணன் அறிவுரை கூறினான். விழியில்லாக் காந்தாரியோடு வேறு வழி இல்லாது குத்தி தங்கி வாழுமாறு ஏற்பாடுகள் செய்தனர்.

பெற்ற பிள்ளைகளை உற்ற சுற்றத்தினிடையே சேர்ப்பது தக்கது என முடிவு செய்தனர். பாஞ்சாலியின் பிள்ளைகளைத் துருபதன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பாட்டன் வீட்டுக்குப் பேரப் பிள்ளைகள் அனுப்பப் பட்டனர்.

அதற்குப் பிறகு அவர்கள் செய்ய வேண்டியது பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம்; ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம்; அதற்குப் பிறகுதான் சுகவாசம் என்று பேசப் பட்டது.

நாடு திரும்ப அடைவது எளிது அன்று ஆண்டவன் பார் மீண்டும் அவர்க்கு விட்டுக் கொடுப்பான் என்பது உறுதி இல்லை. போர் மூண்டால் அதற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினர்.

அருச்சுனன் தவ யாத்திரை

வியாசன் அங்குவந்து வரப்போகும் பாரதப்போருக்கு மாரதர்கள் ஆகிய பாண்டவர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினான்.

அருச்சுனன் சிவனிடம் சென்று பாசுபத அத்திரம் பெற்று வரும்படி பணித்தான்; தவம் செய்தால் சிவன் அருள் செய்வான் என்று கூறினான்.

தவயாத்திரை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அனைவரிடமும் விடைபெற்றுச் சடைமுடி தரித்துத் தவக்கோலம் மேற்கொண்டு கயிலை நோக்கிச் சென்றான். மலையடிவாரத்தில் நிலையான இருப்பைத் தேடிக்கொண்டான்; உணவும் உறக்கமும் மறந்தான்; இலைச்சருகுகளைப் புசித்தான்; காற்று அவன் உயிரை இயக்கியது; வெய்யில், மழை என்ற பேதத்தை அவன் அறிந்ததில்லை. கோரமான தவம் செய்த நிலையைக் கண்டு பார்வதி மனம் இரங்கிப் பரமசிவனிடம் எடுத்து உரைத்தாள். மற்றும் பன்றி ஒன்று அவனைக் கொன்று தின்னச் செல்வதையும் சுட்டிக் காட்டினாள்.

அன்னை பார்வதி நீலகண்டனாகிய நிமலனிடம் இவன் தவத்தைப்பற்றி எடுத்துப் பேசினாள். புன்முறுவல் பூத்து அனைத்தும் அறிந்த ஈசன் அவனைக் காப்பது தம் கடமை என்று பேசிச் செயல்பட்டான்.

வேடுவனும் வேடுவச்சியுமாக இருவரும் உருமாறி மேடுபள்ளம் நிறைந்த அந்த மலைக்காடுகள் நோக்கிச் சென்றனர்.

அந்தப் பன்றி மூகன் என்ற பெயர் உடைய அசுரன் ஆவான். துரியனால் ஏவப்பட்டவன்; அருச்சுனனைத் தன் கொம்பால் முட்டி வயிற்றைக் கிழித்து அவன் ஏட்டை முடிக்கவிரும்பியது. அருச்சுனனும் கண் விழித்தான்; பன்றி வருவதைக் கண்டான்; சிவனும் தன் வில்லை எடுத் தான்; இருவர் அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்தன. பன்றி அலறி விழுந்து உருண்டு உயிர் விட்டது.

“நீ யார்? அதை ஏன் கொலை செய்தாய்?” என்று விசயன் வினவினான்.

“வேடுவன் யான்; வேட்டை என் தொழில்” என்றான்;

“என்னை யான் இங்குக் காத்துக் கொள்ளும் விறல் என்னிடம் உள்ளது. நீ இங்கு வந்து எனக்கு வாய்த்தது அவமானம்” என்றான்.

“காத்தலும் என் தொழில்தான்” என்றான் சிவன். “அழித்தலும் காத்தலும் நீயே செய்வதாக இருந்தால் இறைவன் எதற்கு” என்று கேட்டான் சிறுவன், “பொறுப்பை இறைவனிடம் தள்ளிவிட்டு இம்மானுடர் கடமையாற்றுவதின்று தப்பித்துக் கொள்கின்றனர்” என்றான் இறைவன்.

சொற்போர் மற்போரிலும் விற்போரிலும் கொண்டு சென்றது. மல்யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு புரண்டனர். விட்டுகொடுக்காமல் துவண்டனர்.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன் பாண்டியன் பிரம்படி பட்ட அவ்வடு பார் முழுதும் பட்டது. அதே போன்ற நிலையில் அருச்சுனன் வில் அம்பால் இறைவனுக்கு ஏற் பட்ட தழும்பு உயிர்கள் அனைத்துக்கும் பதிந்தது.

அதற்குமேல் நாடகத்தை நீடிக்க விரும்பவில்லை. பார்வதியோடு பரமசிவன் தெய்வக் கோலத்தில் காட்சி தத்து “வேண்டுவது யாது?” என்று கேட்டான்.

“பாசுபத அத்திரம்” என்றான்.

“பத்திரமாக வைத்திருக்கிறேன் யாருக்குப் கொடுப்பதில்லை. துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.” என்றான்.

“தருமம் காக்கவே அது பயன்படும்” என்று சொல்லி இறைவனிடம் அதைக் கேட்டுப் பெற்றான்.

“நம்பி! நீ தருமன் தம்பி: அதனால் உன்னை நம்பித் தரலாம்” என்று சொல்லி அதை இயக்கும் விதத்தையும் மந்திரத்தையும் சொல்லி அருளினான் சிவன்.

இந்திரன் அழைப்பு

அருச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த போது அவன் தவத்தில் இருக்கிறானா என்பதை அறிய இந்திரன் சோதனை வைத்தான். இந்திரபுரியில் இருத்த சுந்தர வதனவனிதையா சிலரை அவன் முன் ஆட வைத்தான். அவர்களை நாட வைக்க முயன்றான்; அவர்கள் தோற்று அவ் இடத்தை விட்டு அகன்றனர். அவன் மனத்திண்மை கண்டு இந்திரன் வியந்தான். அவன் உறுதி கொண்ட நெஞ்சத்தை பாரதி போல் வியந்து பாராட்டினான்

அத்திரம் பெற்றதும் அவன் தனித்திறம் பாராட்ட அவனுக்கு அழைப்பு விடுத்தான். தன் நகருக்கு அழைத்து அவனுக்கு இருபணிகளை இட்டான். நிவாத கவசர், கால கேயர் என்ற அசுரர்களைத் தான் வெல்ல முடியாமல் வேதனையோடு வாழ்ந்து வந்தான். வீர மகனைக் கண்டு அவர்களை அடக்கி அழிக்க அவனை வேண்டினான். தெய்வத் தந்தையின் பணியைத் தனயனான தனஞ்செயன் செய்து முடித்தான். அவர்களை வென்றதால் வெற்றி விழாக்கொண்டாட இந்திரன் ஏற்பாடுகள் செய்தான். நாட்டிய விழா ஒன்று வைத்து ஊர்வசியை ஆட வைத்தான். அவள் அங்க நெனிவுகளைக் கண்டு நாட்டியம் ரசித்தான். கலை அழகைப் பாராட்டி அவளை உயர்த்திப் பேசினான். அவள் அவன் வலை அழகில் விழுந்து மயங்கினாள்.

அன்று இந்திரனோடு இன் அமுது அருந்தி அவன் தனி அறையில் படுத்து உறங்கினான். கதவு தட்டும் சிறு ஓசை அவன் காதில் விழுந்தது.

“யார் அது?”

நடன சிங்காரி ஊர்வசி என்பதை அறிந்தான்.

“நீங்கள் என்னைப் பாராட்டியது என் நினைவு விட்டு அகலவில்லை” என்றாள்.

“உங்கள் கலையை விமரிசித்தேன்” என்றான்.

“நீங்கள் ஆணழகன்” என்றாள்.

“பெண்ணழகி பாராட்டினால் பயன் உண்டு” என் றான்.

“என் அழகு உன்னை மயக்கவில்லையா?” என்றாள்.

“உன் வயது என்னைத் தயங்க வைக்கிறது” என்றான்.

“தேவ உலகில் இளமை நிலைத்திருப்பது” என்றாள்.

“உறவுகள்” என்றான்.

“மாறுவது” என்றாள்.

“என் முன்னோர் ஒருவன் மனைவியாக இருந்தீர்; அதனால் உம்மைத் தாய்மையோடு பார்க்கிறேன்” என்றான்.

“உன் ஆண்மை என்ன ஆயிற்று?” என்றாள்.

“அடங்கி இருக்கிறது” என்றான்.

“இனி முடங்கிக் கிடக்க” என்று சாபம் இட்டாள். அவன் பேடி ஆனான். மறுநாள் இந்திரன் அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான்

தான் பேடியாகிவிட்ட கேட்டினை அறிந்தான்; வெட்கிக்கொண்டு வேதனையோடு அவன்முன் சென்றான்.

இந்திரன் அறிந்தான்; அகலிகையால் தான் பெண்மை எய்தியதை நினைத்துப் பார்த்தான், ஊர்வசியால் அருச் சுனன் பேடியானது அறிந்து வருந்தினான்.

நேரே அவனை அழைத்துக் கொண்டு ஊர்வசியின் இல்லத்துக்கு ஏகினான். மன்னவனே வந்து விட்டான் என்று அவள் எழுந்தாள்.

“சாபத்தை மாற்றுக” என்று கேட்டான்.

“இங்கே யாரும் கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது, கூட்ட முடியுமேயன்றிக் கழிக்க முடியாதே” என்றாள்.

‘விரும்பும்போது பேடி ஆகுக’ என்று கூட்டிக் கொள்ளச் சொன்னான். அவ்வாறே கூறினாள். பேடு நீங்கித் தன் பீடு மீண்டும் பெற்றான். அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டான். தக்க தருணத்தில் பேடு உருவம் பெற்றுத் தான் மறைந்து வாழ உதவும் என்று மனம் கொண்டான்.

இந்திரபுரி அவனுக்கு அலுத்திவிட்டது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. காட்டில் வாழ்ந்தாலும் அதன் சுகம் வேறு; இங்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்? குடிக்கிறார்கள்; கூத்தடிக்கிறார்கள்; அழகிகளை ஆட வைத்து உமர்கயாம் பாடல்களுக்கு அதனை ரசனை என்கிறார்கள். தம் ஊரில் குரங்காட்டி செய்யும் வித்தைகளுக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பால் இயல் மோகத்தில் சிக்குண்டு புலன் இயல் இன்பமே பெரிது எனப் புலம்பிக் கொண்டிருக்கும் அவ்வாழ்வு அவனுக்குப் பிடிக்கவில்லை. பசித்துப் புசித்– தால் கிடைக்கும் சுவை மிக்க வாழ்க்கைக்கு ஈடு இல்லை என்பதை உணர்ந்தான். மேலும் கடமைகள் காத்துக் கிடந்தன. சென்றவன் என்ன ஆனான் என்று தன்னை அலைத்துக் கொன்று அழிக்கும் கவலையில் தன் தமையன் அவதியுறுவானே என்று கவலைப்பட்டான். அவன் வரு கையை உரோமசனன் என்னும் முனிவன்வழிச் செய்தி சொல்லி அனுப்பினான். அவன் வேகமாகச் செல்லும் திறன் படைத்தவன்.

அவன் முன் சென்று அருச்சுனன் வருகையை அறிவித்தான்.

வீமனின் பாத யாத்திரை

தீர்த்த யாத்திரை சென்ற அருச்சுனன் குமரி ஆடிவந்தவன் வழியில் குமரிகளையும் நாடி அவர்களை மணந்து ஆளுக்கு ஒரு பிள்ளை என ஆளாக்கிவிட்டுத் திரும்பி வந்தான். மீண்டும் புனித யாத்திரை ஒன்று மேற்கொண்டு கயிலைக்குச் சென்று பாசுபத அத்திரம் பெற்று வந்தான். அதேபோல வீமனும் திரெளபதி கேட்ட பூவினைக் கொண்டுவர வடநாடு நோக்கிப் பாதயாத்திரை செய்தான்; வடநாட்டில்தான் குபேரனின் அளகை நகர் இருந்தது. அதுவரை அவன் சென்று வந்தான்.

பொய்கைக் கரையில் தாமரைப் பூவின் பொலிவில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னை மறந்த நிலையில் திரெளபதி நின்று கொண்டிருந்தாள். விண்ணுலகினின்று சரிந்து தன் கண்ணெதிரே ஒரு பொன் தாமரைப்பூ அவள் கரத்தில் வந்து விழுந்தது. அதன் தரத்தைக் கண்டு வியந்தாள். பூ என்றாலே பூவையர்க்குப் பிடிக்கும்; அதனோடு அது பொற்பூ என்றதும் சொல்லவும் வேண்டுமா?

அந்தக் காட்டிலே அவள் பட்டுப் புடவையையா வாங்கித்தரச் சொல்ல முடியும். பட்டுப்போகும் பூவைத் தான் கேட்க முடியும். வீமன் எதிர்ப்பட்டான். அவள் ஏவலுக்குக் காவலாக நின்று ஆவலோடு எதிர்பார்த்து வீமன், என்ன வேண்டும்”? என்று கேட்டான்.

“சின்ன பூ” என்றாள்.

“பூ இவ்வளவுதானே அது எங்கிருந்தாலும் பறித்துக் கொண்டு வருவேன்” என்று உறுதியாகக் கூறினான்.

உரோமசன முனிவன் எதிரே வந்தான்.

“எங்கே போகிறாய்?” என்று கேட்டான்!

“பூக்கடைக்கு” என்றான்.

“அதற்கு இந்த வழியாகாதே” என்றான்.

“திரொபதி ஆசைப்பட்டாள்; இந்தத் தாமரைப் பூ எங்குக் கிடைக்கும்?” என்றான்.

“இந்திரன் உலகில் இருக்கிறது; அது தவறினால் குபேர பட்டணத்தில்தான் இருக்கிறது” என்றான்.

“இந்திரன் உலகத்துக்கு என் தம்பி போய் இருக்கிறான். அவனிடம் சொல்லி இருக்கலாம். இப்பொழுது செல்ல முடியாது. என்ன செய்யலாம்?”

“குபேரன் ஊருக்குப்போ, கிடைக்கும்” என்றான். போகும்வழி சொல்லி அனுப்பினான்.

ஒரே மூச்சில் கொண்டு வருவது என்று புறப்பட்டான்; மலை, ஆறு குன்று, மற்றும் பள்ளம், மேடு, முள் எல்லாம் கடந்து நடந்து சென்றான். அய்யப்பன் பக்தர்களைப் போன்ற பிடிவாதம்.

வழியில் ஒரு முதிய குரங்கைப் பார்த்தான்.

இவன் இராமாயணம் படித்து இருக்கிறான். நக ரத்தில் இருந்தபோது சாத்திரிகள் இராத்திரி வேளைகளில் நிகழ்த்தும் கதைகள் கேட்டு இருக்கிறான். அம் முதியவன் வாயு பகவானின் மகன் அனுமன் என்பதும் தெரியும்; தன் தந்தைதான் அவனுக்கும் தந்தை என்பதால் அவனைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

“அண்ணா” என்று அவனைக் கட்டிக் கொண்டான்.

அனுமனுக்கு ஆச்சிரியமாக இருந்தது. இப்படி ஒரு தடியன் தனக்குத் தம்பியாக எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டான்.

பிறகு தெரிந்து கொண்டான். அவன் தருமனின் தம்பி வீமன் என்று.

“நீ எப்படி இன்னும் உயிர் வாழ்கிறாய்?” என்று வீமன் கேட்டான். “தெரியாமல் நான் சீதையிடம் ரொம்பவும் நல்லவனாக நடந்து கொண்டேன். அவள் உயிரைக் காப்பாற்றினேன். அதனால் நீ சிரஞ்சீவியாக இரு” என்று வாழ்த்தி விட்டாள். நான் ‘வெட்டு வெட்டு’ என்று உலகத்துக்குச் சுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்” என்றான்.

“நீண்ட காலமாக வாழ்லது கூடவா தவறு?”

உனக்குத் தெரியாது. என்னைப்போலத்தான் நீயும்; கிழக் கட்டைகளைக் கேட்டுப் பார்; சாவு எவ்வளவு இனிமையானது என்று சொல்வார்கள்” என்றான்.

“சிலர் சுருசுருப்பாக இருக்கிறார்களே” என்றான்.

வாழ்க்கையில் உந்துதல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுருசுருப்பாக இருக்க முடியும்” என்றான்.

“அப்படியானால் எங்கள் போராட்டத்தில் நீ பங்கு கொள்ள முடியுமா?” என்றான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“என் தம்பி செய்யும் பாரதப்போரில் தேர்க்கொடியில் நீ பறக்க வேண்டும்” என்றான். “அதுதானே! மறுபடியும் எனக்குப் போர்க்களம் காண ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது” என்று சொல்லி அதற்கு இசைந்தான்.

“குபேரன் இருக்கும் நாட்டுக்கு எப்படிப் போக வேண்டு?” என்று கேட்டான்.

அவன் காட்டிய வழியில் விரைவில் சென்று அந்தத் தாமரைக் குளத்தை அடைந்தான். பொன்னால் ஆகிய தாமரைப்பூ ஆதலால் காவல் அதிகம் இருத்தது. அக்காவலனை ஒரு தட்டு தட்டி அனுப்பினான். அவன் ஒடோடிச் சென்று குபேரனிடம் முறையிட்டான்.

“உன்னை எதற்காகக் காவல் வைத்தது? பெரியவர்கள் வந்தால் கண்டும் காணாமல் இருக்கவேண்டும்; அது தான் புத்திசாலித்தனம்” என்றான்.

“யாருடா அங்கே”! அவன் மகனை அழைத்தான்.

“வீமன் வந்திருக்காரு; அவரிடம் வம்பு தும்பு வச்சிக்காதே; கேட்டதைக் கொடுத்தனுப்பு” என்றான். தண்ட லுக்கு வருகிறவர்க்குத் தக்கபடி கொடுத்துப் பழகியவன். அது தொழில் பழக்கம். பூவோடு கொடியைப் பிடுங்கித் தந்தான்.

வீமன் பூ கொண்டு வந்து கொடுத்தான். அவள் அதைத் தன் கூந்தலில் செருகிக் கொண்டாள்.

அவள் முன்னிலும் அழகாக மின்னினாள். ‘பூவையர்' என்று பெண்களுக்கு இதனால் தான் பெயர் வந்ததோ தெரியவில்லை.

சடாசுரன் வதை

திரெளபதி வீட்டோடு இருக்கக்கூடாதா? அவள் தனியாக ஏன் போக வேண்டும்?

இந்தக் காலத்தைப் போலத்தான் அந்தக்காலமும் பெண்பிள்ளை தனியே போகக்கூடாது. போகமுடியாது. அவன் தனியாகச் சென்றாள். அவளுக்கு ஒர் அசுரன் நிழலானான். அவன் பெயர் சடாசுரன் என்பது.

“பெண்ணே நீ எங்கே போகிறாய்?”

“சொல்லித்தான் ஆகவேண்டுமோ?” என்று கேட்டாள்.

அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் வளையல் அரற்றியது; எனினும் அவன் விடுவதாக இல்லை

காற்று வாங்க நகுலனும் சகாதேவனும் அந்தப்பக்கம் சென்றனர். ஆறாவது ஆள் இவன் யார் என்ற வினா எழுந்தது. அதற்குப்பிறகு அவன் அசுரன் என்பது அறிந்து அவன்மீது பாய்ந்தனர். அவன் இவர்களை இரண்டு கைகளி லும்வைத்துச் சுழற்றினான். வீமன் தம்பியரைத் தேடி வந்த போது இந்த வம்பினைக் கண்டான். தும்பி என அவன் மீது பாய்ந்து சராசந்தன், பகன் சென்ற பாதைக்கு வழிக் கூட்டினான்.

“காலம்கெட்டு விட்டது, பெண்கள் தனிவழியே போக இயலாது. பாரதப் பண்பாடு இது” என்று கூறினான்.

இது போன்ற இடர்ப்பாடுகளை அவ்வப்போது அவர்கள் சந்தித்து வந்தனர்.

அதற்கப்புறம் அங்கங்கே இருந்து சில ஆசிரமங்களில் தங்கி இருந்து விட்டு அவர்கள் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இராமா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு காலம் கடத்தினார்கள்; இப்படி ஒன்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

துர்வாசமுனிவர் வருகை

மறுபடியும் அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. திரெளபதி எல்லோருக்கும் சோற்றை ஆக்கிப் போட்டுப் பானையைக் கவிழ்த்து விட்டுத் தெருவாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். எதிர்பாராமல் ஒரு விருந்து வந்தது. வந்தவர் துர்வாச முனிவர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் அனைவரும்தான் இருந்தார்கள். துர்வாச முனிவருடன் அதிதிகள் சிலர் உடன் வந்திருந்தனர். “யாம் போய் நதி நீராடி வருகிறோம். சாப்பாடு சமைத்து ஆகட்டும்” என்று சொன்னார்.

உப்பு இருந்தால் மிளகாய் இல்லை; மிளகாய் இருந்தால் புளி இல்லை; இது போன்ற குடித்தனம் அது.

சோறு என்றால் வடித்துக் கொட்டினால் மட்டும் போதுமா! வடை, பாயசம், காரம், புளிப்பு, இனிப்பு இப் படிப் பலகாரங்களோடு போட அந்தக் காட்டிலே எப்படி முடியும்?

ஒரே திகில் ஆகிவிட்டது. என்ன செய்யப்போகிறோம் என்று ஏக்கம் காட்டினர். ஆபத்பாந்தவன் அனாத– ரட்சகன் கண்ணனை நினைத்துக் கொண்டனர். கண்ணன் வந்தான், விஷயத்தைச் சொன்னார்கள்.

“பானையில் என்ன இருக்கிறது?” என்று கண்ணன் கேட்டான். “பருக்கை ஒன்றுதான் இருக்கிறது” என்றாள்,

இருக்கையில் இருந்து கண்ணன் அப்பருக்கையைத் தனது வாயில் போட்டான்; அவன் வயிறு நிரம்பியது. இந்த வையகம் எல்லாம் உண்டது போல் மகிழ்ச்சி கொண்டது.

உண்ணவந்த முனிவர் வயிறு நிரம்பியவராய் இவர்களை வாழ்த்தினார். “எம் வயிறு குளிர உண்டோம்” என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்து அதற்குப் பிறகு ஆர அமர அமர்ந்து பேசினார்.

துரியனின் அரண்மனைக்குத் துர்வாசர் போய் இருந்தார். அவருக்குச் சகல மரியாதையுடன் பிரமாதமாக உணவு படைத்து மகிழ வைத்தனர்.

அவன் படைத்த உணவு வியக்கத்தக்கதாக இருந்தது. அவர் துரியனைப் பாராட்டினார்.

“இதுபோல் நான் எங்கும் சாப்பிட்டதில்லை” என்றார் முனிவர்.

“எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான் துரியன்.

“என்ன வேண்டும்?”

“நாளைக்கு இதே நேரத்தில் பாண்டவர் தங்கியுள்ள வனத்துக்குச் சென்று போஜனம் உண்ண வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

துர்வாசர் போனால் அவர்களால் சோறு போட முடியாது. அவருக்குக் கோபம் வரும். அவர்களைச் சபித்துவிடுவார். அவர்கள் ஒழிந்து போவார்கள்” என்று அவன் திட்டம் போட்டான்.

அது கண்ணனிடம் பலிக்கவில்லை. துர்வாசரும் துரியன் சொல்லியதைக் கூறி அவன் தீய எண்ணத்தை விளக்கினார்.

அவன் சொன்னாலும் இவர் வந்திருக்கக்கூடாது. அவன் வரம் என்று கேட்டு விட்டதால் மறுக்க முடியாமல் போய்விட்டது.

அவர் மூக்கில் கரி பூசிக் கொண்டார். “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“கேட்பார் பேச்சுக்கேட்டு சுயநினைவு இழக்காமல் இருக்க வேண்டும்” என்றனர்.

அவருக்கு அறிவு வந்தது.

ஒட்டு மாம் பழம்

அங்கே செடியில் மாங்கனி திரெளபதியின் கன்னத்தைப் போலச் சிவந்துகாணப் பட்டது. “என்ன வேண்டும்” என்றான் அருச்சுனன்; “தின்ன அப்பழம் வேண்டும்” என்றாள். பறித்துக் கொடுத்தான்; பழம் கைக்குவந்தது. அதற்குப் பின்னர் தெரிந்தது; அது அங்குத் தவம் செய்யும் ஒரு முனிவருக்கு உரியது என்று.

“பழங்களைப் பறிக்காதீர்” என்று எழுதி அங்கு ஒட்டப்பட்டிருந்தது. பழத்தைப் பறித்துவிட்டோமே என்ன செய்வது என்று விசயன் பதறிப்போனான். தெரிந்தால் அவ்வளவுதான். அனைவரையும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடுவார் முனிவர்; என்ன செய்வது! மறுபடியும் கண் ணனின் வருகை தேவைப்பட்டது. “இந்தப்பழத்தை ஒட்டி வைக்க முடியுமா? என்று கேட்டான் தருமன்.

“முடியும்” என்றான் கண்ணன்.

“எப்படி?”

“அவரவர் தம் விருப்பத்தை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படுத்த முடியுமானால் இதையும் ஒட்டி வைக்க முடியும்” என்றான் கண்ணன்.

தருமன் உலகில் அறம் வாழ வேண்டும் என்றான்; வீமன் நல்லவனாக இருக்க விரும்புவதாகக் கூறினான்; அருச்சுனன் மானம்தான் பெரிது; அதற்காகத் தான் உயிர் விடவும் தயார் என்றான்; நகுலன் கல்வியே போதும் என்றான்; சகாதேவன் புண்ணியம் செய்ய விரும்பினான்.

திரெளபதி சொன்னாள்; “எனக்குக் கணவர்கள் ஐந்துபேர்தான் கிடைத்தனர். தகுதியுடையவன் ஆறாவது ஒருவன் கிடைத்தால் அவனையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டேன்” என்றாள்.

இது ஒரு புதுக்கவிதையாகவும் இருந்தது. அதற்கு மேல் பேச்சு நீடிக்கவில்லை. பழம் மேலே சென்று ஒட்டிக் கொண்டது.

உள்ளத்தில் இருப்பதை யாரும் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள்; அதுதான் உண்மை என்ற ஒரு தத்துவத்தை உணர்த்த இந்தக்கதை இடம் பெற்றுள்ளது.

நச்சுப் பொய்கையில் அடைந்த கலிவு

அங்கு வனத்தில் ஒரு நச்சுப் பொய்கை இருந்தது. அதுஉயிர் வாங்கும் என்று பாண்டவர்களுக்குத்தெரியாது. அந்தணச் சிறுவன் ஒருவன் பூணுரலில் சக்கி முக்கிக் கல்லை அணிந்திருந்தான். மான் ஒன்று அக்கல்லைப் பூணுரலோடு இழுத்துக் கொண்டு ஒடிவிட்டது. அவன் “குய்யோ முறையோ என்று கத்தினான்; ஐயோ பாவம்” என்று இரக்கம் காட்டி அதைத்துரத்திப்பிடிக்கத் தருமன் நீங்கலாக நால்வரும் சென்றனர். அதைப்பிடித்து, அந்நூலைக் கொணர முயன்றனர். அதற்குள் அலுத்து விட்டனர்.

நீர் குடிக்கலாம் என்று அங்கு இருந்த பொய்கைக்குப் போயினர்; நீர் குடித்தனர்; அவ்வளவுதான்: நீட்டிவிட்டார்கள். இதற்குள் துரியன் இவர்களை அழிக்க ஒரு ஏற்பாடு செய்திருந்தான்; முனிவன் ஒருவனிடம் சொல்லி துஷ்ட தேவதைக்குப் பூஜை செய்யச் சொல்லி இருந்தான் அந்த முனிவன் ஒரு வேள்வி செய்து ஒரு கொடிய பூதத்தை உண்டாக்கி அதனை ஏ வினான்; அது அவர்களைக் கொல்லச் சென்றபோது வழியில் பிணங்கள் தடுக்கிக் கீழே விழுந்தது; அதற்குக் கோபம் வந்து விட்டது.

“பிணத்தைக் கொன்று தின்ன ஏவினான்” என்று தவறாக நினைத்து ஏவிய அவன் மீதே பாய்ந்தது. அம் முனிவனைக் கொன்று அவனையே விழுங்கி விட்டது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு அம்முனிவன் வாழ்க்கை உதாரணமாக அமைந்தது; இது இக்கதையின் முற்பகுதி.

அதற்குப் பிறகு தருமன் எமனுடன் வாதாடி இறந்தவர் உயிரைத் திரும்பப் பெற்றான். அது ஒர் சுவாரசியமான சம்பவமாகும். “இறந்தவர் நால்வரில் யாராவது ஒருவரை மட்டும் உயிரோடு பெறலாம். யாரை விரும்புகிறாய்” என்று அசரீரி வடிவில் இயமன் கேட்டான்.

“சகாதேவனை” என்றான் தருமன்.

“ஏன்? எதற்கு?” என்றது அசரீரி.

“குந்திக்கு மூவர் பிள்ளைகள்; மாத்திரிக்கு இருவர்; நகுலனுக்குச் சகோதரன் ஒருவன். எனக்குச் சகோதரர்கள் இருவர். இருவர் போனாலும் ஒருவன் இருப்பேன்; கவலை இல்லை; மாத்திரியின் புதல்வர்கள் இருவரில் ஒருவனாவது உயிர்வாழ வேண்டும்” என்று விளக்கம் தந்தான்.

“வீமனும் அருச்சுனனும் இல்லாமல நீர் எப்படி வெற்றி பெறுவீர்” என்று கேட்டது.

“தருமம்; தருமம் எனக்குத் துணை நிற்கும்” என்றான்.

மேலும் தருமனை நோக்கி உயிர் கவரும் அறக் காவலன் ஆகிய இயமன் அசரீரி வடிவில் சில வினாக்களைக் கேட்டான். அதற்குத் தருமன் தந்த விடைகள் அத்தெய்வத்தைக் கவர்ந்தது.

“சொல்லுக; நூல்களில் பெரியது எது?”

“சுருதி”

“இல்லறம் சிறப்பு அடைவதற்கு உதவுவது?”

“மனைக்குத் தக்க மனைவி"

“மணம் மிக்க மலர்?”

“சாதிப் பூவினால் கட்டப்பட்ட மாலை”

“முனிவர் குலம் தொழும் கடவுள் யார்?”

“முகுந்தன்”

“மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை எது?”

“நாணம்”

“இனியது எது?”

“மழலை மொழி”

“நிலைத்து இருப்பது?”

“நீடு புகழ்”

“கற்பது?”

“கசடறக் கற்றலாகிய கல்வி”

“அற்பமாவது எது?”

“பிறர் கையேந்தி நிற்றல்”

இவ்விடைகளைக் கேட்டு இயமன் தருமனைப் பாராட்டினான்.

நால்வரையும் எழுப்பித் தருமனோடு அனுப்பி வைத்தான்.

துரியனின் அவலம்

காட்டில் இருந்த பாண்டவர்க்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்று துரியன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பாடி வீடு அமைத்துப் படையுடன் தங்கி இருந்தான்.

அங்கே சித்திரசேனன் என்ற கந்தருவன் இவர்களைச் சந்தித்தான். துரியன் அவர்களைச் சாதாரண மானுடன் என்று தூக்கி எறிந்து பேசினான்.

கந்தருவனுக்கும் துரியோதனன் படையினருக்கும் போர் மூண்டது; துரியோதனாதியர் தோற்றுப் புறம் கண்டனர். கன்னன், துச்சாதனன், சகுனி அனைவரும் பின் நோக்கி ஓடினர். துரியன் மட்டும் ஓடாமல் நின்றான்.

கந்தருவர் அவனைத் தேரில் கட்டி இழுத்துச் சென்றனர்.

கன்னனோ மற்றவர்களோ அவனை மீட்க முன் வர வில்லை.

அவன் அபயக்குரல் கேட்டுத் தருமன் வீமனைச் சென்று தடுக்கச் சொன்னான். அவன் முதலில் தயங்கினான்.

“பகை வேறு; பண்பாடு வேறு; அபயம் என்று குரல் கொடுப்பவரைக் காப்பது மனித தர்மம்; அதை முதலில் செய்க” என்று தம்பியரை நோக்கிக் கூறினான்.

உடனே வீமனும் விசயனும் செயல்பட்டு அவனை மீட்டுக் கொண்டு வந்தனர். ஆபத்தில் உதவினவர்கள் என்ற நன்றியை அக்கயவன் மறந்துவிட்டான். பகைவ னுக்கும் அருள் செய்யும் பண்பு பாண்டவரிடம் வெளிப் பட்டது. அவன் தான் தப்பித்ததைவிட அவர்கள் காப் பாற்றியதால் அது தனக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதினான். அதுவே அவன் அவர் மாட்டுக் கொண்ட பகையை மேலும் தூண்டியது.