மாபாரதம்/துரோணனின் தலைமை

8. துரோணனின் தலைமை

மறுநாள் போருக்கு யார் தலைமை வகிப்பது என்று துரியன் சிந்தித்துக் கொண்டிருந்தான். கன்னன் தான் படைத்தலைமை ஏற்பதாகக் கூறினான்; வீடுமன் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

“நீ வெம் சமரில் படைத்தலைவன் ஆகி விட்டால் எனக்கு உற்ற துணையாக அரசர் நிலையில் இருப்பது யார்?” என்று கூறி விட்டு வேதம் கற்ற துரோணனைப் படைத் தலைவன் ஆக்கினான்.

மறுநாள் இரு திறத்துப் படைகளும் வழக்கம் போல் களத்தைச் சேர்ந்தன; தருமன் களத்தில் போரின் நிலையை விளக்கக் கண்ணனிடம் கேட்டான். கண்ணன் ‘இனி வெற்றி உறுதி’ என்று கூறினான். “கங்கை மைந்தன் சென்று விட்டனன். கதிரவன் மைந்தனாகிய கன்னன் வெற்றி அடையப் போவதில்லை. ‘தக்க சமயத்தில் உன் வில் வித்தை பயன்படாமல் போகக்கடவது” என்று கன்ன னுக்குப் பரசுராமன் சாபம் இட்டிருக்கிறான். போரில் தேர் பூமியில் அழுந்தக்கடவது” என்று ஒரு முனிவன் சாப மிட்டிருக்கிறான். கவசகுண்டலங்களை இந்திரனுக்குத் தானமாகத் தந்து விட்டான். நாகக் கணையை இரண் டாம் முறை ஏவுவதில்லை என்றும், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைக் கொல்வதில்லை என்றும் குந்தி யிடம் உறுதி தந்திருக்கிறான். அதனால் அவன் போரில் மடிவது உறுதி” என்று கூறினான் கண்ணன். மேலும் அசுவத்தாமன் துரியனிடமிருந்து பிரிக்கப்பட்டான்; அதனால் அவன் படைத்தலைமை ஏற்கப் போவதில்லை. போரில் முழுவதும் ஈடுபடப் போவதில்லை. அதனால் பாண்டவர் தமக்கே வெற்றி உறுதி என்று நம்பிக்கை ஊட்டினான்.

வீடுமன் இல்லாத துரியோதனனின் சேனை சந்திரன் இல்லாத வானத்தையும், நறுமணம் இல்லாத மலரையும், நதி நீர் இல்லாத நாட்டையும், நரம்பு இல்லாத யாழை யும், தூய சிந்தனைகள் தோன்றாத மனத்தையும், வேத விதியோடு பொருந்தாத யாகத்தையும் போன்று வெறுமை உற்றது.

வழக்கம் போல் போர் தொடங்கியது. சகாதேவனும் சகுனியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது. இவ்வாறே துரியனும் வீமனும், சல்லியனும் நகுலனும், கன்னனும் விராடனும், துருபதனும் பகதத்தனும், சிகண்டியும் கலிங்க நாட்டு அரசன் சோமதத்தனும் ஒருவரை ஒருவா தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது.

இப்போர்களில் பார்த்தனின் மகனாகிய அபிமன்யுவும் துரியன் மகனாகிய இலக்கண குமரனும் போர் நிகழ்த் தியது சிறப்பு நிகழ்ச்சியாகும். அபிமன்யு அவன் தேரையும் குதிரைகளையும் பாகனையும் அழித்துவிட்டு அவனை உயிரோடு பற்றிக் கொண்டு தன் தேரில் அமர வைத்து இழுத்துச் சென்றான்; அவன் சிறைக் கைதியாயினான். சிந்துபதியாகிய சயத்திரதன் என்பவன் துரியன் தங்கை துச்சளையின் கணவன். தன் மைத்துனன் சிறைப்படுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து அவனைத் தடுத்துப் போர் தொடுத்தான்

சயத்திரதன் அபிமனைத் தடுத்து நிறத்தினான். எனினும் எதிர்கக ஆற்றல் அற்றவனாய்த் தோள் வலி இழந்தான். அவனுக்குத் துணையாகக் கன்னனும் மற்றவர்களும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அபிமனின் அம்புக்கு ஆற்றாமல் அவர்களும் சிதறி ஓடினர். அவர் களுக்குத் துணையாக வந்த மத்திர நாட்டு அரசனாகிய சல்லியன் மீது கணைகளைச் செலுத்தி அவனைத் தேரினின்று இறங்கவும் செய்தான்; சல்லியன் கதை கொண்டு அபிமனைத் தாக்கக் கையோங்கினான். அப்பொழுது வீமன் இடையிட்டு அவனை நன்கு மொத்தினான். சல்லியன் கீழே விழுந்தான். நீ அவனைத் தாக்கினால் என் ஆண்மை என்ன ஆவது என்று தன் பெரிய தந்தையிடம் அபிமன்யு கடிந்து கொண்டான். அபிமன் வீமனோடு உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இலக்கணன் விரைவாகத் தேரில் இருந்து இறங்கி ஒடித் தனது தேரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் யாதவ குலத்தலைவனாகிய கிருதவர்மன் தரையில் விழுந்த சல்லியனைத் தனது பெரிய தேரில் ஏற்றிக் கொண்டு இலக்கணனையும் உடன் வரச்சொல்லி அவனைத் தப்புவித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அத்தமனம் வந்தது; வழக்கம் போல் போர் நின்றது. பாசறையில் துரியன் உறங்காது இலக்கணனை அபிமன் சிறைப்பிடித்த நிகழ்ச்சியைக் குறித்து உரையாடினான்.

துரோணரிடம் தன் மகன் இலக்கணனைச் சிறைப் பிடித்தவர்கட்குச் சரியான படிப்பினை புகட்டவேண்டும் எனப் புகன்றான். போர் நிகழ்ச்சிகளில் ஒரு திருப்பு நிலை அமைக்க வேண்டும் என்றான்.

தருமனைச் சிறைப்பிடித்துத் தன்னிடம் சேர்த்து விட்டால் தம்பியர்கள் சரண் அடைவார்கள் என்று கூறினான்."வலிமை மிக்க வாயுவின் மகன் பின்னே நிற்க இந்திரன் மகன் விசயன் வில்லோடு நிற்க இந்த இப்பிறவி யில் தருமனைப் பிடிக்க முடியும் என்பது என்னால் இயலாது” என்று துரோணன் தன் இயலாமையைத் தெரிவித்தான்.

“கண்ணன் தேர் செலுத்த விசயன் தருமனைக் காக்க அந்தநிலையில் உறுதியாக அவனைக் கைப்படுத்த இயலாது; கண்ணனையும் விசயனையும் சற்றுத் தருமனை விட்டு அகலச் செய்தால் அந்த இடைவேளையில் தருமனைக் கைப்படுத்த முயலலாம்” என்றான்.

அவர்கள் இருவரையும் யார் தனியே இழுத்துச் செல்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. திரிகர்த்த அரசன் முதலாக சம்சப்தகரைச் சார்ந்த சில மன்னர்கள் தாம் விசயனைப் போருக்கு அழைத்து அறை கூவி அவனைத் தம்மோடு போர் லெய்யுமாறு செய்து பிரித்து வைப்பதாகச் சூள் உரைத்தனர்.

துரியனுக்குப் புதிய போர்த் திட்டம் கிடைத்தது. அதனைச் செய்து முடிப்பதே அடுத்த கட்டப் போர் என்பது முடிவு ஆயிற்று

பன்னிரண்டாம் நாட் போர்

தருமன் முன்னாள் இரவில் துரியோதனின் பாசறை யில் அவர்கள் பேசிக் கொண்டதை ஒற்றரால் அறிந்து அதைக் கண்ணனுக்கும் விசயனுக்கும் சொல்லிப் போரில் புகத் தும்பைமாலை சூடிக் கொண்டான். பாண்டவர்களின் சேனைத் தலைவனான திட்டத்துய்மன் படைகளை வியூகமாக அமைத்தான். பின்புறத்தில் வீமனையும், அணி வகுப்பில் முக்கியமான இடங்களில் மணி முடி தரிதத மன்னர்களையும், இரு புறத்திலும் நகுலனையும் சகா தேவனையும், முன்புறம் அபிமன்யுவையும் அருச்சுனனையும் நிறுத்த நடு இடத்தில் தருமன் இருந்தான்.

கவுரவர் சார்பில் முன்னிரவு பேசியபடி திரிகர்த்த குலத்தலைவனும் சம்சப்தக சிர்லரும், துரோணன் முதலிய எனையவரும் கூடி வந்து கருட வியூகமாகப் படைகளை அணி வகுத்தனர்.

திரிகர்த்த குலத்தலைவனும், நாரண கோபாலர் என்னும் நர அதிபர்களும் முன் நின்ற விசயனைப் போருக்கு அறை கூவி அழைத்தனர். விசயனின் வீரத் தைத் தரக் குறைவாகப் பேசினால் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவனை இழித்துப் பேசிப் போருக்கு அழைத்து வீரம் பேசினர்.

ஆரவாரம் செய்து அழைக்கும் அவர் குரல் கேட்டு “நீர் சற்றுத் தருமனைக் காத்திடுங்கள்” என்று வீமனி– டமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டுத் தருமனிடம் சொல்லி அனுமதி பெற்று அவர்களை நோக்கிப் பார்த்தனாகிய விசயன் கண்ணனோடு களம் நோக்கிக் சென்றான்.

அதற்குப் பிறகு சயத்திரதன் முதலாகிய வேந்தர்கள் சூழ்ந்து வரவும், முரசங்கள் இடி போல முழங்கி ஒலி எழுப்பவும், யானை, குதிரைப்படைகள் சூழ்ந்து வரவும் துரோணன் தேர் ஏறிக் களத்தில் வந்து சேர்ந்தான். இருதிறத்துச் சேனைகளும் வெற்றி தோல்வி இன்றித் தாக்கிக் கொண்டனர். திட்டத்துய்மன் அம்புகளை மழை போல் பொழிந்தான். துரோணன் திட்டத்துய்மன் கை வில்லை அறுத்து எறிந்தான். துரோணனும் தருமனும் நெருங்கிப் போர் செய்தனர். தருமனோ துரோணனை மிகவும் கடுமையாகத் தாக்கினான். துரோணன் தணர்ந்து விட்டான்.

இதை அறிந்து துரியோதனன் களம் புகுந்தான். தோற்றுப் பின் வாங்கிய வீரர்களை ஊக்குவித்து முன் னேறுமாறு பணித்தான்; அபிமன்யு தனி ஒருவனாக நின்று அவர்கள் தலைகளைப் பந்தாடினான். களம் செம்மண் ஆகிச் சிவந்தது; துரோணன் தருமனின் வில்லுக் குத் தோற்றுக் களத்தினின்று நீங்கினான். அந்நிலையில் துரியனுக்குத் துணையாகப் பகத்தத்தன் களம் புகுந்தான். கண்ணனின் துணைகொண்டு விசயன் தான் போரிட்ட களத்தினின்று வந்து கண்ணன் தந்த அம்பால் அவன் உயிரைப் போக்கி அவன் ஏறி வந்த சுப்ரதீபம் என்ற யானையையும் ஒழித்தான்.

அதனைத் தொடர்ந்து நடந்த போரில் தருமனுக்குச் சகுனி தோற்றுப் பின் வாங்கினான்; சூது போரில் வென்ற– வன் மோது போரில் வெல்ல முடியாமல் போய் விட்டது. அதனைத் தொடர்ந்து வீமனோடு துரியன் தம்பியர்மோதி ஒரு சிலர் படுகாயம் அடைந்தனர். சகுனியின் பிள்ளைகள் சிலர் மாண்டனர்.

பாசறை சென்று துரியன் துரோணனை மிகவுப் கடிந்துகொண்டான். அவனைத் தொடர்ந்து கன்னனும் சாடினான்.

வேதம் ஒதும் அந்தணன் என்பதை அவன் செயலில் காட்டி விட்டான். தருமனைக் கைப்பிடித்துத் தருவதாகக் கூறிய சொல்லைக் காற்றில் பறக்க விட்டான்” என்று கன்னன் இகழ்ந்து கூறினான்.

துரோணன் மானம் மிக்கவனாய்க் கடுஞ் சொற்கள் கூறினான்.

“கன்னன் மட்டுமல்ல, தருமன் முன் நிற்கக்கூடியவீரர் யார் இருக்கிறார்கள் சொல்லமுடியுமா? இதுவரை வன் மைக்கு வீமன்; வின்மைக்கு விசயன் என்று உலகம் பாராட்டி வந்தது. தருமனுக்கு நிகர் யாரும் இல்லை என்பது நேற்று நடந்த போரில் கண்டு கொண்டேன். அவனை நேருக்கு நேர் நின்று பொருது வெல்லும் வீரர் இருந்தால் அவனை மாவீரன் என்று சொல்லிப் பாராட்டு வேன்; அத்தகைய வீரன் இருந்தால் அடுத்த நாள் நடக்க இருக்கும் போரில் முன் வரலாம்” என்று சொல்லி விடை பெற்றான், அனனவரும் அன்று உறக்கத்தில் அமைதி தேடினர்.

அபிமன்யுவின் அழிவு
பதின்மூன்றாம் காட்போர்

கன்னன் கழறிய கடுமொழியால் சுடுஞ்சினம்கொண்டவனாய் முன் நாட்போரை விட முனைப்பாகப் போர் செய்யத் தம் படைகளைத் துரோணன் கடாவினான். இலக்கண குமரனும், துரியனின் தம்பியரும், கலிங்கனும், சிந்து நாட்டு அரசன் சயத்ரதனும் ஒன்று கூடி முன்னேறினர். சக்கர வியூகம் அமைத்துச் சதுரங்க சேனைகளைச் செயல்படுத்தினர்.

துருபதன் மகனாகிய திட்டத்துய்மன் பாண்டவர் படையை மகர வியூகமாக அமைத்தான். துரியனின் திட்டப்படி திரிகர்த்தனும், சம்சப்தகர் மன்னர் சிலரும் விசயனைப் பழையபடி போருக்கு அழைக்க அதைப் புறக் கணிக்க முடியவில்லை. தக்க படை வீரர்களோடு அவர்கள் இருந்த தென்திசை நோக்கிப் படையைச் செலுத்தினான். விசயன் அவர்களோடு கடும்போர் செய்து குருதி யால் மண்ணைச் சிவப்பாக்கினான்.

விசயன் திசை திருப்பப்பட்டுத் தருமனை விட்டு விலக் கப்பட்டான். அதைப் பயன்படுத்திக் கொண்டு துரோணன் தருமனைச் சிறைப்பிடிக்கத் திட்டத்துய்மனோடு போர் செய்தான்; அதில் துரோணனே வெற்றி பெற்றான். பின்னிட்ட திட்டத்துய்மனைத் தருமன் அணைத்துக் கொண்டு “நீயே துரோணனுடன் போர் செய்ய முடியாமல் பின்னடைந்தாய் என்றால் யார்தான் அவரோடு போர் செய்யப் போகிறார்கள்?” என்று கூறிச் செயல் இழந்தான்.

அங்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்த விசயனின் மகன் அபிமன்யுவை அழைப்பித்து “நீ தான் இச்சக்கர வியூகத்தை முறியடிக்க வேண்டும்” என்று கூறினான்.

மூத்த தந்தை யாத்த ஏவலைத் தாங்கித் தேரின் மேல் கதிரவனைப் போல் ஏறினான். துருபதன் மகனாகிய திட்டத்துய்மனும் மன்னர்கள் பலரும் இருபுறமும் துணையாக வரச் சக்கர வியூகமாக நின்ற எதிரிகளை அதன் ஆரைகளாகச் சிதைத்தான் தன் மாமன் ஆகிய அச்சு தன் பெயரைச் சொல்லி ஆயிரக்கணக்கான அம்புகளை அபிமன்யு ஏவினான். மழையைத் தடுக்க மலையைக் குடை யாகப் பிடித்த மாயவன் என அவ்வம்புகளைத் துரோ ணன் தடுத்து மடக்கினான். எனினும் அவன் வலி அழிந்தது; வில்லாசிரியன் என்ற புகழ் அழிந்தது; வில் அழிந்தது; தேர் அழிந்தது. முடிவில் அவன் தோல்வியையும் அடைந்தான்.

உலகம் மதிக்கும் வீரனாகிய கன்னன் களத்தில் புகுந்தான். அவனும் அபிமன்யுவின் தாக்குதலுக்குத் தளர்ச்சி அடைந்து தன் தேரில் ஏறி வந்தவழி பார்த்துக் கொண்டு சென்றான். சீறும் சிங்கத்திடம் தான் மாறி நின்றால் வேறுபட வேண்டும் என்பதை உணர்ந்தான். கிருபனும் கிருதவர்மனும் இரட்டையராக நின்று அம்புகளைச் சொரிந்தனர். அபிமன்யு தன் ஒரே அம்பால் அவர்கள் ஏந்திய இரண்டு வில்களையும் நான்காக ஆக்கி அனுப்பினான், சகுனியும் அவன் மகனும் சகுனம் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று வேதனைப் பட்டார்கள். மகனைக் களத்தில் பறிகொடுத்து விட்டுச் சகுனி பரிதாபமாகச் சென்றான்.

வீகர்ணனும் துன்முகன் முதலிய தம்பியரும் மான் வேட்டை என அபிமன்யுவை நெருக்கினர். அபிமன்யு அவர்களை நோக்கி “எனக்கு நிகர் நீங்கள் ஆக மாட்டீர்; அருமையான உயிர் அதனை என்னால் இழக்கவேண்டாம்; உயிர் தப்பி ஓடி விடுங்கள்” என்று சொன்ன அளவில் அவர்கள் அந்தத் திசை பாராமல் திரும்பி ஒடித் தப்பினர்.

விசயனின் மகன் தனித்துச் சென்று பகைவர் புறமுதுகிடப் போரில் இறங்குவதைக் கண்டு வீமன் துடிதுடித்துப் போனான். பால் மணம் மாறாத பாலகனைப் படுகளத்துக்கு அனுப்பி வைத்துப் பாராமுகமாக இருக்க விரும்ப வில்லை; அவனுக்குத் துணையாகச் சென்று பகைவரைப் பதம் பார்க்கத் தருமனிடம் இதமாக அனுமதி கேட்டான். அவனால் மறுக்க முடியவில்லை. அபிமன்வியூகத்தை முறிக் கக் கற்றவன். வழி அறிந்து திரும்பக் கற்றிலன். ஆதலின் வீமன் செல்ல வேண்டியது அவசியம் எனப்பட்டது.

மண்டலாதிபர்களையும் மாமன்னர்களையும் துணை யாகக் கொண்டு பகைவரை எதிர்க்கச் சென்றான். சக்கர வியூகம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல் ஆகியது. வானத்தில் வட்டமிடும் கருடன் முன் அரவுகளின் கூட்டம் போல அவர்கள் ஒட்டம் பிடித்தனர். கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர், கொங்கணர், கவுசலா, தெலுங்கர், ஆரியர், குலிங்கர், பப்பரர், சீனர், சாவகர், சிங்களர், குலிங்கர், மாளவர் முதலிய சிற்றரசர் பலரும் வெற்று வேட்டு ஆயினர். வீமன் முன்னும் அபிமன் முன்னும் துரியன் படைகள் நிற்க முடியாமல் வெட்கம் அடைந்து வேதனையோடு ஒடி ஒளிந்தன

துரியன் வாழ்க்கையையே வெறுத்து விட்டான்; சயத் ரதனைப் பார்த்து இகழ்ச்சிக் குறிப்பாக அவன் போராற் றலை இகழ்ந்து கூறினான். “மன்மதனைப் போன்ற தோள்கள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? வீட்டு மாப்பிள்ளையாக இருக்கலாம். வீர மாமகனாக இருக்க முடியாது; படை இயக்குவது எப்படி என்று அறிந்து இருக்க வேண்டும். கத்தியைத் தீட்டினால் மட்டும் போதாது; புத்தியைத் தீட்ட வேண்டும். அப்பொழுது தான் எதிரியை அழிக்கும் சக்தியைப் பெறமுடியும்” என்றான்.

மைத்துனன் பேசுவது நகைச்சுவையா என்பது தெரியாமல் திகைத்தான். “வீடுமனும் அபிமனும் சேர்ந்து விட்டார்கள். இரண்டு கை தட்டினால் ஓசை கிளம்பும்; அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும். அபிமன்யுவுக்கு வீமன் துணையாக வரக் கூடாது; உபாயம் சிந்தித்துப் பார்” என்றான்.

“வயதில் இளைஞராக இருந்தால் வாலிப மங்கையை அனுப்பி வைத்தால் எச்சில் இலைக்குப் போராடும் நாய்களாக மாற்றலாம். தந்தையும் மகனுமாக இருக்கிறார்களே எப்படிப் பிரிக்க முடியும்” என்று கேட்டான்.

சயத்ரதன் இதற்குமுன் சிவனிடம் சென்று தவம் செய்து பாண்டவரை வெல்ல வரம் தர வேண்டும் என்று வேண்டியிருக்கிறான். “கண்ணன் இருக்கும்வரை அவர்களை வெல்லமுடியாது” என்றும், “வேண்டுமானால் விசயன் ஒழிந்து ஏனைய நால்வரை ஒருநாள் பிரித்து வைக்க இயலும்” என்றும் கூறித் தலைமாலையைத் தந்து அருளினார். கதாயுத ஒன்றும் தந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அருளினார். இச்செய்தி துரியனுக்குத் தெரியும். அதைச் சொல்லிக் கொன்றை மாலை கொண்டு வீமனையும் அபிமன்யுவையும் ஒரு நாள் பிரித்து வைத்தால் போதும் என்று வழிகாட்டித் தந்தான்.

சயத்ரதனும் அதற்கு இசைந்து களத்தில் நுழைந்தான்.

வீமன் கணையால் பகைவர் சிதைந்தனர். அவன் அபிமன்யு இருக்குமிடம் வரும்போது சிவன் அணியும் கொன்றை மாலையைச் சயத்ரதன் இட்டு வைத்தான் அபிமன்யுவைச் சுற்றிலும் வட்டமிட்டது போலத் திட்டமிட்டு இக்கொன்றை மாலையைப் பரப்பி வைத்தான்.

“இன்று அமரில் யார் உயிர் விடுவதாயினும் ஈசன் அணியும் கொன்றை மாலையைக் கடவேன்” என்று உறுதியோடு நின்றான் விமன்.

“சிந்துபதியாகிய சயத்ரதன் தேன் மாலையை இட்டுச் சிறுவன் உயிரை மாய்ப்பதா! வீரம் பழுதாக்கி விட்டானே! இந்தக் கீழ்மைக்கு எல்லாம் காரணம் துரியனாகத்தான் இருக்க வேண்டும்” என வீமன் மனம் நொந்து பேசினான்.

“அபிமன் ஆற்றல் உடையவன்; கூற்றுவனும் அஞ்சும் பேராண்மை உடையவன். அவனை இவர்களால் வெல்ல முடியாது” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

அபிமன்யு படைக்கடலின் மத்தியில் வடவைக் கனல் போல் நின்றான்; பிறர் அஞ்சி அணுகாமல் விலகினர். யாளி என நின்ற மீளியாகிய அவனை வாளிகள் பல போட்டு வருத்தினர்; கூளிகள் நடம் செய்தன.

அஞ்சி ஒடிய கன்னன் மீண்டும் துணிந்து அபிமன்யுவை வந்து எதிர்த்தான். அங்கர்பதியாகிய கன்னனின் தேரில் இருந்த குதிரைகள் நான்கும் செத்து ஒழிந்தன. அவன் வில்லையும் கொடியையும் அழித்து அங்கு நிற்க ஒட்டாமல் அடித்து ஒழித்தான். இரவியின்மகனான கன்னன் ஏகுதலும் அரவக் கொடியவரின் தம்பியர்கள் வந்து சூழ்ந்தனர். அவர்களும் முகவரி இல்லாமல் முகம் மறைந்து ஒடி ஒளித்தனர். இவ்வாறே அசுவத்தாமனும் நிற்க முடியாமல் அவதியுற்றான். துரோணனும் தோல்வியைச் சந்தித்தான்.

துரியனின் தம்பியான துன்முகனும் சல்லியனும் அவன் மகன் உருமித்திரனும் சூழ்ந்தனர். துன்முகன் தன் முடியை இழந்தான்; சல்லியன் மைந்தன் வானுலகு அடைந்தான்; தந்தை சல்லியன் புறமுதுகிட்டான். மாவீரர் பலர் உடைந்து ஓடினர்.

வியூகத்தின் நடுவில் அபிமன்யு தனித்து நின்றான். துரியனின் மகன் இலக்கணன் இயமனை எதிர்க்கக் களத்தில் இறங்கினான். இருவரும் சொற்போரும் விற்போரும் இயற்றி இறுதியில் இலக்கணன் துறக்கம் புக்கான்.

துரியன் கண்ணிர் விட்டுக் கலங்கி அழுதான். அபிமன்யுவைப் பழிக்குப் பழியாக அழிக்காவிட்டால் தன் வாழ்வை முடித்துக் கொல்வதாக முடிவுரை கூறினான். துரோணனும் அசுவத்தாமனும் தத்தம் வீரர்களோடு அபிமன்யுவைப் புலிகள் சூழ்வது போல வந்து சுற்றிக் கொண்டனர். துரியன் கன்னனைப் பார்த்து இப்போர் எளியது அன்று விசயன் வந்து இவனோடு சேர்ந்து விட் டால் நிலைமை என்ன ஆகும்” என்று கூறிச் செயலுக்குத் துரண்டினான். எனினும் அபிமன்யுமுன் நிற்காமல் தேரும் வில்லும் முறிய மனக் கலக்கத்துடன் கன்னன் பின்னிட்டான். துச்சாதனன் தன் தேரில் மீண்டும் ஏறி அபிமனைத் தாக்கினான். அவனுடைய தேரையும் வில்லையும் முறித்து விட்டான். வாளும் கேடயமுமாகப் பாய்ந்து எதிரிகளைத் தாக்கினான்.

அபிமனது தேர், குதிரை, வில் இவை அனைத்தும் போய்விட்டன போர்த்தொழிலும் போய்விட்டது; அனைத்தும் அழிந்து விட்டன. இனி எளிதில் அவனை வீழ்த்தி விடலாம் என்று முழங்கிக் கொண்டு எல்லோரும் ஒன்றுபட்டு அவனைத் தாக்கச் சென்றனர். படை அற்றவனைக்கொல்லுதல் பழி என்றும் பாராது துச்சாதனன் மகன் துச்சனி என்பவன் நச்சு அரவம் போன்று அவனை அணுகினான். அவன் தொடுத்த கணையை வாளால் துணித்து அவனது முடியையும் வீழ்த்தினான். துரோணன் அம்பு கொண்டு அவனைப் பலமுறை தாக்கினான். அபிமன் வாளைக் கொண்டே அவன் தேர்களையும் வில் களையும் முறித்து வீழ்த்தினான். மீண்டும் தேரில் வந்து துரோணன் அவன் வலது தோளை அம்பு கொண்டு துணித்து வீழ்த்தினான். தேர்ச்சக்கரம் ஒன்றைக் கழற்றிப் பகைவரை அழிக்கும் சக்கராயுதமாக மாற்றிப் பகைவரை அழித்தான். ஒரு கையைக் கொண்டே மறுகையோடு போர் செய்யும் இவன் ஆற்றலைக்கண்டு வியந்து பொழுது சாய்வதற்கு முன் இவனைச் சாய்ப்பது அரிது என்று கருதித் துரியன் சயத்ரதனை வருமாறு அழைத்தான்.

சயத்ரதன் சிவன் அளித்த கதையைக் கொண்டு இவன் கதையை முடிக்க வந்து சேர்ந்தான். அபிமனும் சக்க ரத்தை எறிந்து விட்டுக் கீழே விழுந்து கிடந்த மற்றோர் கதாயுதம் கொண்டு சயத்ர தனைத் தாக்கினான். அபிமன் மிகவும் தளர்ந்து விட்டான். அபிமன் சயத்ரதன் உயிர் நிலை அறிந்து கதை கொண்டு தாக்க அவன் உடல் நெரி நெரிந்தது. அவன் சிவ மந்திரம் சொல்லித் தன் கைக் கதையால் அபிமன் தலையைத் தாக்கத் தலை, அறுபட்டுச் சரிந்து விழ இரத்தம் பீறிட்டு அவன் சரிதத்தைச் சிவப்பு மையால் எழுதி முடித்தது.

துரியன் தன் மகன் இலக்கணன் மடிந்ததற்குக்கூட வருத்தப்படவில்லை. வீர அபிமன்யு கோர நிலையில் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் அடைந்தது அவனுக்கு மனநிறைவைத் தந்தது.

காட்டுத் தீப்போல அபிமன்யு பட்ட செய்திபரவியது. விசயனின் மகன் அபிமன் சாக முடியும் என்பதை யாருமே நம்பவில்லை. இதன் பின் விளைவுகள் என்ன ஆகுமோ என்று அனைவரும் அஞ்சினர்.

தருமனும் வீமனும் செய்தி கேட்டு உய்தி இல்லை என்று வருந்திப் புலம்பினர்.

கண்ணன் விசயனுக்கு எப்படிச் செய்தி செப்புவது என்று திகைத்தான். அதனை அதிர்ச்சி தோன்றாதபடி அறிவிப்பது எப்படி என்று யோசித்தான்.

இந்திரனை வரவழைத்து ஒரு நாடகம் நடத்தும்படி கேட்டுக் கொண்டான். இந்திரன் அந்தண வடிவு எடுத்தான். கண்ணனும் விசயனும் வரும் வழியில் சிதை ஒன்று அடுக்கிக் கொளுத்தி வைத்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தான். அதை மூன்று முறை வலம் வந்து அதில் தீக்குளிக்கக் காத்திருந்தான். அதற்குத் தக்க விளம்பரம் தந்து அவனைப் பலர் சூழும்படி செய்துகொண்டான்.

விசயன் அவன் விசனத்தைப் பற்றி விசாரித்தான். “எனக்கு ஒரே மகன்; அவன் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? அவனை எரிக்கும் அதே நெருப்பு என்னையும் எரிக்கட்டும்” என்று விம்மி விம்மி அழுது அலுத்துக்கூறினான்.

விசயன் தடுத்தான்; வினாக்கள் பல தொடுத்தான்,

“அவன் விதி; அது அவன் கதி; நாம் உயிர் வாழ்வது தான் மதி. அவன் கடமையை முடித்து அவன் இறந்து விட்டான். உனக்கு என்று வகுத்த கடமைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை யார் முடிப்பார்கள்? நீ இருந்து உன் மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டாமா? குடும்பத் தலைவன் நீ; நீயே இந்த இடும்பைக்கு உள்ளானால் மற்றவர்கள் நிலைமை என்ன ஆகும்?” என்று கேட்டான்.

“நீர் எளிதில் சொல்லி விடுகிறீர். உங்களுக்கு இது போல் துன்பம் வந்தால் உங்களால் தாங்க முடியுமா? சொல்லுதல் யார்க்கும் எளிது; செயல் செய்வதுதான் கடினம். நீங்கள் உங்கள் மகனை இழக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விதி அப்படிக் கூட்டினால் உங்கள் மதி எப்படிச் செயல்படும்? உம்மால் அதைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“நிச்சயம் முடியும்” என்றான்.

“சத்தியம் செய்து தர முடியுமா?” என்று கேட்டான்.

“க்ஷத்திரியன் சொல் தவறான்” என்று கூறி அவனை நெருப்பில் விழாமல் தடுத்து அனுப்பினான்.

“நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசும் பெருமைதானே இவ்வுலக வாழ்க்கையின் இயல்பு. இறப்பு இயற்கையின் நியதி. இதை அறியாமல் இந்த மானுடர் இரங்கற்பா பாடுகிறார்களே!” என்று விசயன் தத்துவம் பேசினான்.

பாசறை வந்ததும் பேச்சுரை இன்றி மவுனம் நிலவியது. அழுகை மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.

“அழுகையின் காரணம் என்ன?” என்று கேட்டான் விசயன். கண்ணன் வாய் திறந்து பேசவில்லை. அவன் கண்களினின்று விழுந்த முத்துப் போன்ற நீர்த்துளிகள் சத்தமிட்டுப் பேசின.

கண்ணன் காலடியில் விழுந்து “என் கண்ணும் தோளும் மார்பும் இடப்பக்கம் துடிக்கின்றன. உன் பார்வையும் அவலம் பேசுகிறது. இன்றைய போரில் இறந்தது என் துணைவரோ புதல்வரோ கூறுக” என்றான்.

“வீரமரணம் எய்தியது என்மருமகன் அபிமன்” என்று கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டு நடந்ததை விவரமாகச் சொன்னான்.

அவன் அயர்ந்து சோர்ந்து பொலிவிழந்து துடித்து விம்மி விம்மி அழுதான்.

இது அபிமனுக்குச் செய்யும் வீர அஞ்சலியாகியது.

“சிதையிட்டு அதில் எனக்கும் இடம் விட்டுத் தகனம் செய்க” என்றான். அந்தண வடிவில் இந்திரன் மறுபடி யும் வந்து சந்திரகுலத்து அரசனாகிய விசயனைப் பார்த்து வினவினான்.

“மகன் இறந்தற்காகத் தந்தை மரணம் அடையலாமா?”

ஞான ஒளி பெறத் தீபம் ஏற்றி வைத்தான்.

தான் அவனுக்குச் சத்தியம் செய்து தந்தது நினைவுக்கு வந்தது.

அதற்கு மேல் அவனால் வாதம் செய்து கொண்டிருக்க முடியவில்லை. சோகம் அடங்கியது; ஆனால் பழி தீர்க்க வேண்டும் என்ற வேகம் தொடங்கியது.

வீரமணம் என்றால் அதற்கு வருந்தத் தேவையில்லை; அஞ்சலி செய்து விட்டு அமரனாகி விட்டான் என்று அமைதி கண்டிருக்கலாம். இது கோர மரணம்; வீமனைப் பிரித்துவிட்டுச் சிறுவன் ஒருவனை வளைத்துப் போட்டு ஆளுக்கு ஒரு அடி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதற்குத் துணையாக நின்றவன் சயத்திரதன்.

விசயனுக்கு அறிவு கூறி ஆக்க வழியில் திருப்ப வியாச முனிவன் வந்தான். அருச்சுனனுக்கு ஞான உபதேசம் செய்து பாச பந்தத்தால் மனம் தெளிவு இழப்பது தவறு என்பதை எடுத்துக் காட்டினான். சாவு என்பதற்குச் சொந்தக்காரர்கள் இன்னார் தான் என்று வரையறுத்துக் கூற முடியாது. அதற்குக் காரணம் என்ன? யார் இதற்குப் பொறுப்பு? அவர்களைக் களைவது எப்படி என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறி விடைபெற்றுச் சென்றான்.

ஞானபண்டிதனாகிய வியாசன் சென்ற பின்பு அவனுக்குரிய இயல்பான மான உணர்வு நிதானத்தை இழந்தது. மறுநாள் பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொன்று முடிப்பதாகவும், தவறினால் தன் உயிரை முடித்துக் கொள்வதாகவும் வீர சபதம் செய்தான்.

அதன்பின் கண்ணனை அழைத்துக் கொண்டு கயிலை சென்று சிவனை வேண்டி மற்றோர் வில்லையும் அம்பையும் பெற்று வந்தான்.

விசயன் செய்த வஞ்சினமும் அவன் கயிலை சென்ற நோக்கமும் அறிந்து தருமன் யுத்த தருமத்தைப் பற்றிச் சிந்தித்தான்.

பகைவர்களுக்கு விசயனின் சூளுரையை உரைத்தபின் அமர் தொடங்குவது அறம் என்று நினைத்தான். சயத்தி ரதன் விசயனின் இலக்கு என்பதையும், மாலைப்பொழுது முடிவதற்குள் அவன் மரணம் காத்திருக்கிறது என்பதை யும் முன் கூட்டிச் சொல்லிவிட வேண்டும் என்றும் துடித்தான். முன்கூட்டி உரைப்பது அரசியல் அறம் என்றுமுடிவு செய்தவன் கடோற்சகனை அனுப்பிச் செய்தி சொல்லுமாறு பணித்தான்.

கடோற்சகன் துரியனின் பாசறைக்குச் சென்று சயத்திரனுக்குப் பாசக்கயிறு காத்திருக்கும் செய்தியைச் சொல்லினான். அன்று இரவு உறக்கம் கலைந்தது. அடுத்த நாள் செய்வது குறித்து ஆலோசனை செய்தனர். துரோணன், கன்னன், அசுவத்தாமன் முதலியவரைத் துரியன் அழைத்து எப்படித் தடுப்பது என்று அவர்கள் அறிவுரை கேட்டான்.

“நாளை ஒரு நாள் நாம் சயத்திரதனைக் காப்பாற்றி விட்டால் நாம் வீரன் ஒருவனைக் காத்தவர் ஆவோம். தங்கை துச்சளையின் பூவும் பொட்டும் கலைக்காமல் காப் பாற்றப்படும். அதுமட்டுமல்ல; சுபத்திரை அமங்கலியாவது உறுதி. பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொல்லாவிட்டால் விசயன் உயிர் விடுவது உறுதி. அது மற்றைய பாண்டவர் சாவுக்குக் காரணம் ஆகும். அவர்களும் உயிர் மாய்த்துக் கொள்வர். பாரதப்போர் பதினான்காம் நாளிலேயே முடிந்துவிடும். வெற்றி நமதே” என்று முழக்கம் செய்தான்.

துரோணன் கைதட்டிப் பாராட்டுத் தெரிவிக்க வில்லை. “என்னால் முடிந்தவரை காப்பேன்; அதற்குத் தக்கபடி படைகளை வைப்பேன்; விதியின் செயல் அதனை முன்கூட்டி உரைக்க முடியாது. இறுதிவரை போராடுவோம்” என்றான்.

கன்னன், துரியனின் தம்பி துன்மருடணன், அசுவத் தாமன் ஆகிய மூவரும் உறுதியாகச் சயத்திரதனைக் காப்ப தாக உறுதி கூறினர். அதற்குப் பின் கடல் அலைகள் ஒய்வு கொண்டன; உறக்கம் அவர்களை அடக்கி வைத்தது.

சயத்திரதன் வதம் (பதினான்காம் நாட்போர்)

தருமன் காலைக்கடன் முடித்து விசயனது வீர சபதத்தை நிறைவேற்றும் பொருட்டுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். கண்ணன் தேர் நடத்த வீமனும் நகுல சகாதேவர்களும் மற்றுமுள்ள அரசர்களும் இருபுறமும் நெருங்கிவர விசயன் முன்னோக்கிச் சென்றான். துருபதன் மகன் திட்டத்துய்மன் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து மற்றோர் முகமாக முன்னேறினர்.

அவ்வாறே இருபது யோசனை வித்தாரமுள்ள இடத்தில் சயத்திரதனை மத்தியில் நிற்கச் செய்து சுற்றியும் படைகளைத் துரோணன் நிறுத்தினான். சயத்திரதனைக் காப்பதாக வீரம் பேசிய துன்மருடணனைத் தூசிப் படை– யின் முன் நிறுத்திக் கன்னன் சகுனி இருவரையும் காப்பு அணியாகப் பின் நிறுத்தி ஐந்து ஐந்தாக ஐவகை வியூகம் ஆகியசேனையின் சிரத்தில் துரியனை நிறுத்திச் சகட துண் டத்தின் முன்பு துரோணன் நின்றான். அந்தணன் ஆகிய துரோணன் அணிவகுத்த திறமையைக் கண்டு சயத்தி ரதனை விசயன் ஒரு பகலில் அழிக்க முடியாது என்று தேவர்கள் பேசிக் கொண்டனர்.

கைத்தலத்துள்ள பொருளை இறுகப் பிடித்துக் காத்தல் போல சயத்திரனைக் காத்து நிற்றலைப் பார்த்து விசயன், உத்தமோசா, உதாமன் முதலியோர் இருபுறமும் வரக் கண்ணன் முன்னே செல்ல அவன் சுட்டிக்காட்டிய பகைவரைத் தாக்கினான். விசயனின் வில் ஒலிக்கே கலங்கி நீர் ப் பெருக்கின் முன் உடையும் கழனிகளின் கரைகளைப் போல எதிரிகளின் சேனைகள் உடைந்து சிதற விசயனின் சேனைகள் துரோணளிைடம் போய்ச் சேர்ந்தன.

துரோணனும் விசயனும் அம்புகள் விட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அம்புகள் மோதிக் கொண்டு யார் மீதும் படாமல் வழியிலேயே துணிபட்டன.

“ஐயனே! நான் உன் திருவடி போற்றும் மாணவச் சிறுவன்; எனது வஞ்சினம் தவறாமல் நிறைவேற அருள் செய்க” என்று அடக்கத்தோடு கூறித் துரோணனின் வேகத்தைக் குறைத்தான்.

அவனும் தடை செய்யாமல் முன்னேற வழிவிட்டான். அடுத்தது கன்னன் மலைபோல் நின்று குறுக்கிட்டான். இருவரும் சளைக்காமல் போரிட்டுக் கொண்டனர். இவ னோடு போர் செய்வதில் நேரம் கழிவதைக் கண்டு விசயன் அம்புகளை ஆவேசமாகப் பொழிந்தான். கன்னன் களைத்துவிட்டான். இதை அறிந்து வருணனின் மகனாகிய சுதாயு என்பவன் களத்தில் இறங்கி விசயனைச் சந்தித்தான். அவன் சாகாவரம் பெற்றிருந்தான். விசயன் விடும் அம்புகள் அவனை ஊறு செய்யவில்லை. சுதாயு வீசிய கதாயுதத்தைக் கண்ணன் நன் மார்பில் ஏற்றுக் கொண்டான். விளைவு சுதாயுவே மரணமடைந்தான். சாகாவரம் பெற்றிருந்தவன் நிராயுத பாணியாக இருக்கிறவர் மீது ஆயுதம் தொடுத்தால் அது ஏவியவர்களையே தாக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அதனால் அவன் மடிந்து விழ வேண்டியது ஆயிற்று.

அவன் மகன் சதாயுவும் அருச்சுனனை எதிர்த்துக் களைத்துவிட்டான். அந்நிலையில் துரியோதனன், விசயன் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தன் தங்கையின் கணவ னான சயத்திரதன் உயிர் துறப்பது உறுதி என்றும், தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்றும் கூறித் தன்னைப் போர்க்களம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றான். துரோணன் தன் கைவசம் இருந்த கவசம் ஒன்றைத் தந்து அதை அணிந்து கொண்டு செல்லும்படி கூறினான்.

அதை அணிந்துகொண்டால் விசயனின் அம்பு துளைக்காது என்று அறிவித்தான். அவ்வாறே அக்கவ சத்தை அணிந்துகொண்டு துரியன் அருச்சுனனைத் தாக்கச் சென்றான், அருச்சுனன் விட்ட அம்புகள் அவனைத் தொடவே இல்லை. எதிரிகள் எளிதாக அருச் சுனனைச் சூழ்ந்து கொண்டனர். விசயன் களைத்துப் போய்ப் போர் செய்தலைத் தவிர்த்து நின்றான்.

கண்ணன் உடனே தன் சங்கு எடுத்து வாயில்வைத்துப் பேரொலி செய்யச் சிற்றெலிகள் போல் நடுநடுங்கிப் படைகள் சிதறி ஓடின.

இச்சங்கு ஒலி கேட்டுத் தருமன் விசயனுக்கு அழிவு நேர்ந்து விட்டதோ என்று அஞ்சிக் கலக்கம் அடைந்தான். அதனால் தனக்குக் காவலாக இருந்த சாத்தகியையும் வீமனையும் தொடர்ந்துபோர்க்களம் அனுப்பி வைத்தான். சாத்தகியும் வீமனும் களத்தில் புகுந்து கவுரவர் தலைவர்கள் பலரைக் கொன்று குவித்தனர். வீமன் துரியனின் தம்பியர் பலரைக் கொன்று குவித்தான்.

விசயன் சயத்திரதனைத்தேடி முன்னேறினான். சூரியன் அத்தமிக்கும் நேரம் அணுகிவிட்டதால் அருச்சுனன் அவனைக் கொல்வது உறுதி என்று கருதி “நெருங்கி நில்லுங்கள்” என்று கூறிக் கொண்டு அவனை நிலவறை யில் பதுக்கிவைத்தனர்; சயத்திரதனை எங்கும் காணாமை யால் கொல்வது அரிது என்று கண்ணனும் அருச்சுனனும் திகைத்தனர்.

கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்தான். தன் கையில் உள்ள சக்கரத்தை ஏவிச் சூரியனை மறைக்கும்படி செய்தான். சக்கரம் கதிரவனை மறைக்கப் போர்க்களம் போல வானம் செங்களமாக மாறியது. அந்திவானம் சிவப்புற்றதைக் கண்டு கதிரவன் சாய்ந்து விட்டான் என்று தவறாக நினைத்துச் சயத்திரதன் தைரியமாக வெளிப்பட்டான். வெளிப்பட்டதோடு அச்சம் நீங்கியவனாய் அமைதி காட்டினான்.

இனி அருச்சுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலக்காட்சியைக் கவலை இல்லாமல் காணலாம் என்று மனப்பால் குடித்தான். சயத்திரதனைத் தைரியமாகத் துரியனே முன் நிறுத்திக்காட்டி அருச்சுனனை அவமானப் படுத்தினான்; சயத்திரதனை யார் தரையில் தலைஉருளச் செய்கிறார்களோ அவர்கள்தலை நூறுசுக்கலாக வெடிக்கக் கடவது என்று அவன் தந்தையாகிய விருத்தகத்திரன் ஒரு வரம் வேண்டிப் பெற்றிருந்தான். அதனால் கண்ணன் அவன் சிரத்தைக் கொய்வதோடு அல்லாமல் அதனை அவன் தந்தையின் கையில் போய் விழச்செய்யுமாறு அவன் அருச்சுனனுக்குச் சொல்லி வைத்தான். அவ்வாறே அவன் தலையைச் சிவன் தந்த வில்லால் வெட் டி சமந்த பஞ்சகம் என்ற மடுவில் மாலை வழிபாடு செய்து கொண்டு தருப் பணம் விட்டுக் கொண்டிருந்த அவன் தந்தையின் கரத்தில் விழுமாறு செய்தான். தலை அவன் கைப்பட்டதும் அது உருண்டு தரையில் விழுந்தது. தந்தையின் தலை வெடித்து அவனும் மரண வாயிலை அடைந்தான்.

அத்தமனம் வந்த பிறகு அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றான் என்று தவறாக முடிவு செய்து அவன் சபத மொழி பிழைத்தான் என்று ஆரவாரம் செய்தனர். கதிரவனை மறைத்து வைத்த கண்ணனின் சக்கரம் அவன் கைக்கு வந்து சேர்ந்தது. சூரியன் வெளிப்பட்டுக் கதிர் களை வாரி இறைத்து வையகத்துக்குப் பொழுது சாய வில்லை என்பதைக் காட்டியது. தாங்கள் ஏமாற்றப்பட் டதை அறிந்து துரியன் வெட்கமும் வேதனையும் பட்டு மீண்டும் அவர்களை எதிர்த்துப் போர் செய்தான்.

இப்போரில் கடோற்சகன் பெரும் பங்கு ஏற்றான். இவன் மாயப்போர்கள் தொடர்ந்து பல செய்தான். அவன் தாக்குதலைத் தாங்கமுடியாமல் இந்திரனிடமிருந்து பெற்ற வேலினைக் கன்னன் எய்து வீழ்த்துமாறு துரியன் வேண்டினான்.

அருச்சுனனைக் கொல்ல வைத்திருந்த வேலைக் கடோற்சகன் மீது பாய்ச்சி அதனை வீண்படுத்தினான்.

பூரிசிரவசுவின் வதம்

இதற்கிடையில் சாத்தகி களத்தில் புகுந்த போது அவன் பூரிசிரவசு என்பவனைக் கொன்று குவித்தது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

பூரிசிரவசு என்பவன் சாத்தகியின் ஜன்ம விரோதி; மேலும் அவன் யதுகுலத்தலைவனும் ஆவான். கண்ணன் அனுப்பி வைத்த படைத்தலைவர்களில் ஒருவன் இவன் ஆவான். சாத்தகி வயதில் இளையவன்; இவன் மூத்தவன். அவன் இந்த யுத்த களத்தில் தன்குடும்பப் பகையை முடித்துக் கொள்ள இப்போர்ச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டான்.

இருவரும் மற்போரும் விற்போரும் செய்தனர். சாத்தகி போர் செய்ய முடியாமல் சற்றுக் களைத்து விட்டான். அவனைக் கீழே தூக்கிப் போட்டுச் சாத்தத் தொடங்கி னான். கண்ணன் விசயனுக்கு அதைக் காட்டி அவன் மீது அம்புபோட்டுச் சாத்தகியைக் காக்கச் சொன்னான். விசயன் நோக்கமெல்லாம் சயத்திரதனைக் கொல்வதிலேயே இருந்தது; இரண்டு பக்கமும் அவன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டி இருந்தது. மேலும் சாத்தகியும் பூரிசிரவசுவும் போரிடுகையில் இடையில் மூன்றாவது ஆள் புகுவது அறம் ஆகாது என்று அருச்சுனன் கூறினான்.

நிராயுதனாக இருக்கும் சாத்தகியை வாள்கொண்டு வெட்டுவது உடனே தடுக்கப்பட வேண்டும் என்று கண்ணன் ஆணையிட்டான். அதற்கு மேல் அவன் தர்மத்தைப் பற்றிப் பேசிக் காலதாமதம் செய்ய விரும்பவில்லை. கண்ணன் கட்டளையைக் கேட்டு அம்பு தொடுத்து அவன் கையைத் துணித்தான்; வாளோடு அவன் வலக்கை கீழே விழுந்தது.

“உனக்கு உதவி செய்ய வந்த இளையவனை நீ உதாசீனம் செய்யகூடாது. அது தர்மம் ஆகாது” என்று தெளிவுபடுத்தினான். அதற்குள் களைப்பு நீங்கி எழுந்த சாத்தகி எதிரியின் தலையை அறுத்துத் தன் பகையை முடித்துக் கொண்டான். உதவிக்கு வந்தவர்கள் அவரவர் களுக்குரிய சொந்தப் பகையை முடித்துக்கொள்ள இப் போர்க்களம் பயன்பட்டது.

துரோணனின் முடிவு (பதினைந்தாம் நாட் போர்)

இறபுறத்திலும் போர்க்களம் நோக்கி விரைந்தனர். ஆற்றல் மிக்க துரோணனை அழிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. தேவ ரிஷிகளும் நிலத்திற்கு வந்து துரோணனுக்கு அறிவுரை கூறினர். அந்தணர் குலத்தில் பிறந்த அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடாமல் க்ஷத்திரிய தர்மத்தில் ஈடுபட்டுத் தேவை இல்லாமல் களத்தில் இறங்கியதைக் கண்டித்தனர். அவர்கள் உபதேசம் கேட்ட ஆசான் ஆகிய துரோணன் போரில் வெறுப்புற்றுத் தேரும், யானையும் ஊராமல் கால் நடை நடந்து களம் நோக்கிச் சென்றான்.

அவனைத் தொலைத்தால் அல்லது பாண்டவர்க்கு யாதொரு நலமும் வராது என்று அறிந்து துணிந்து கண்ணன் அதற்குத் தக்க வழியைச் சிந்தித்தான். வீமன் மாளவத்து அரசனாகிய இந்திர வர்மன் என்பவனின் யானையாகிய அசுவத்தாமனைக் கொன்று முடித்தான். அந்தச் செய்தியை வைத்துக் கொண்டு ‘அசுவத்தாமன் இறந்தான்’ என்று பலரும் கேட்க உரக்கச் சொல்லுமாறு தருமனை வேண்டினான்.

தருமன் தொடர்ந்து அதைக் கூற விரும்பவில்லை; நன்மைக்காகச் சில பொய்கள் கூறுவதும் அறமே யாகும் என்று கண்ணன் உணர்த்தினான்.

“பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்ற குறட் கருத்துப்படி பொய்யும் சொல்லலாம் என்று தருமனிடம் எடுத்துக் காட்டப்பட்டது. நீல கண்டன் விரும்பி ஆலகால விஷத்தை ஏற்று மற்ற உயிர்களைக் காப்பாற்றிய கதை பேசப்பட்டது. இராமன் மறைந்திருந்து வாலியின் உயிரை வாங்கினான். இந்தக்கதையும் அறிவிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் விட மற்றவர்கள் அந்தப் பொய்யைச் சொல்லி அதனால் வரும் பாவத்தை அவர்கள் அடையாமல் தடுக்கத் தானே முன் தருமன் வந்தான். அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று உரக்கப் பலரும் கேட்க உரைத்தான். யானை என்ற சொல்லைத் தாழ்வாகச் சொல்லி அது துரோணனின் செவியில் படாதவாறு தப்பித்துக் கொண்டான். தாய் பிழைக்க வேண்டுமானால் சிசுவைக் கொல்லும் நிலை மருத்துவர்க்கு நேர்கிறது. அதே போலத்தான் துணிந்து தருமன் “அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று கூறினான். அசுவத்தாமன் என்ற பெயரை மட்டும் எடுத்துச் சொன்னான். யானை என்ற சொல்லைப் படுத்துச் சொன்னான்; யானை என்ற சொல் செவியில் படாதபடி கண்ணனின் சங்கொலி வேறு துணை செய்தது.

அசுவத்தாமன் இறந்தான் என்ற சொல் தொடரைக் கேட்டதும் துரோணன் செயலற்று விட்டான். மகன் இறந்தான் என்ற சோகத்தால் அவன் புலம்பி அழவில்லை. பற்றற்ற ஒரு மனநிலை ஏற்பட்டது. போரில் அவனுக்கு இருந்த பிடிப்பு அவனை விட்டு நீங்கியது. அந்தச் சமயம் பார்த்துத் திட்டத்துய்மன் அம்பு ஒன்று விட்டு அவன் தலையைக் கொய்து வேறுபடுத்தினான். துரோணன் மறைந்தான்; அவன் தலையும் சாய்ந்தது; தலைமையும் ஒய்ந்தது.

தந்தையை இழந்த அசுவத்தாமன் ஆறாத்துயரால் அவலமுற்றான். திட்டமிட்டுச் செய்த இந்தக் கொலைச் செயலைக் கண்டு மனம் அழிந்தான். ‘இது கொடுமை’ என்று முடிவு செய்தான். திட்டத்துய்மன் துரோணனைக் கொன்றது வஞ்சகம் என்றும், குருத்துரோகம் என்றும் அசுவத்தாமன் விளம்பினான்.

பாண்டவர் ஐவரையும் அவர்தம் மக்களுடன் அழிப் பேன் என்றும், திட்டத்துய்மனை ஒழிப்பேன் என்றும் சூளுரைத்தான். அவன் தன் கைவசமிருந்த அத்திரத்தை ஏவினான்.

கண்ணன் அனைவரையும் நிராயுதராக நிற்கும்படி அறிவித்தான்.

தெய்வ அத்திரம் ஆகையால் அது ஆயுதம் ஏந்தாதவர்களைத் தொடாமல் திரும்பிச் சென்றது. வீமன் மட்டும் கதாயுதமும் கவசமும் அணிந்திருந்தான். அந்தத் தெய்வ அம்பு வீமனைத் துரத்தியது. கண்ணன் அவன் உடம்பிலிருந்த கவசத்தையும், ஏந்தியிருந்த கதையையும் நீக்கு விக்குமாறு அறிவித்தான். வீமனும் அவ்வாறே செய்து தாக்குதலிலிருந்து தப்பினான்.

அதற்குள் வியாச முனிவன் வந்து அசுவத்தாமனுக்கு ஞான நல்லுரை நல்கினான்; வேள்வித் தீயில் பிறந்த திட்– டத்துய்மன் பிறக்கும்போதே துரோணனைச் கொல்லும் வரம் பெற்றது தெய்வ அருள் என்றும், மனிதத்தன்மை யால் யாரும் அவன் தந்தையைக் கொல்லவில்லை என்றும் ஆறுதல் கூறினான். அவனும் சினம் ஆறி அடங்கினான் .