மாபாரதம்/விடுமனின் வீழ்ச்சி

7. வீடுமனின் வீழ்ச்சி

முகுந்தன் வாசகம் கேட்டு முரசு உயர்த்தவனாகிய தருமன் அரசர்களுக்கு எல்லாம் ஒலை போக்கிப் படை களுடன் வருக என்று செய்தி அனுப்பினான். எட்டுத் திக்கில் உள்ள மன்னர்கள் பட்டுத் துகில் எல்லாம் பதாகைகளாக உயர்த்திப் பாண்டவர் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

பாஞ்சால மன்னனான துருபதனும், அவன் மைந்தர்கள் திட்டத் துய்மனும், சிகண்டி என்பாளும், துருபதனின் பேரனான திட்டகேதுவும், உத்தமோசா என்னும் துருபதனின் உறவினனும், மற்றோர் உறவினன் உதாமன் என்பவனும் யானை, தேர், பரி, ஆள் என்ற நால்வகைப்படை யுடன் வந்து சேர்ந்தனர். இவர்கள் எல்லாம் பாஞ்சாலியின் உறவினர்கள்.

மறைந்திருந்த நாடாகிய மச்ச நாட்டில் இருந்த விராட பூபதியும், சதானிக நிருபனும், சுவேதனன் ஆதிவ ராககேது, உத்தரகுமரன் ஆகியவரும் வந்து சேர்ந்தனர். தென்னாட்டில் இருந்து சேரர், சோழர், பாண்டியர் மூவரும், கேகய நாட்டு அரசர்களும், குந்திபோச நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்தனர்.

அவ்வாறே எதிரிகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வீடுமன், கிருபன், கன்னன், துரோணன் சயத்ரதன் பகதத்தன், சல்லியன் முதலிய மாவீரர்களும், பதினோரு அக்குரோணி எண்ணிக்கை அளவு படை வீரர்களும் வந்து சேர்ந்தனர். துவாரகையில் இருந்து யாதவ சேனையும் வந்தது; பரசுராமனிடம் வில்வித்தை பயின்ற வீடுமனைப் படைத்தலைவனாக ஆக்கினான் துரியன்.

முகூர்த்தம் கேட்டு நிச்சயித்தல்

படைகள் எல்லாம் குழுமிவிட்டன. நாள் பார்த்துப் போரை நடத்த வேண்டியது தான் எஞ்சி இருப்பது. நாள் குறித்துச் சொல்லத்தக்க அறிஞனும், களப்பலி கொடுத்து கருமத்தைத் தொடங்க முன்வரத் தக்க வீரனும் யார் என்று துரியன் விசாரித்தான். படைத் தலைவனான வீடுமன் சகல கலைகளிலும் வல்ல சகாதேவனே முகூர்த்தம் குறித்துக் கொடுக்கத் தகுதி உடையவன் என்றும், மகாவீர னான இராவானே களப்பலிக்கு உரிய காளை எனவும் குறிப்பிட்டான்.

துரியன் சகாதேவனிடம் சென்று நாள் கேட்டான். பகைவேறு; தொழில்வேறு என்று வேறுபடுத்திக் காணக் கூடிய மனப்பக்குவம் உடைய சகாதேவன் நாள் குறித்துக் கொடுத்தான். பகைவனுக்கு அருள்செய்யும் பரந்த உள்ளம் பாண்டவரிடம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைகிறது.

தநுர் மாதம் அமாவாசை இரவே களப்பலியூட்டினால் அவர்களுக்கு வெற்றி என்று தெளிவாகச் சொன்னான்.

அருச்சுனனின் மகன் இராவான்; உலூபிக்குப் பிறந் தவன்; அழகிற் சிறந்தவன் அவனை அணுகி “நீ களப் பலிக்கு உதவ வேண்டும்” என்று துரியன் கேட்டான்.

தன்னை அவனுக்கு ஈவதால் போரில் பாண்டவர் தோல்வியுறுவது உறுதி எனத் தெரிந்தும் தன்னைப் பற்றி– யும் தன் பக்கத்தவர் பற்றியும் கவலைப்படாமல் தன்னை யே ஈய முன் வந்தான். ஈகையில் கன்னனுக்கு முன்ன வனாக நடந்துகொண்டான்.

சிறிய தந்தையாகிய துரியன் கேட்டு மறுப்புச் சொல்ல மனம் இல்லை.

“ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என் உயிர்மாள” என்றான்.

தீந் தேன்போன்ற சொற்களைக் கேட்டுத் தீயவனான துரியன் மனம் குளிர்ந்தான் .

“தந்தேன் உயிர்” என்ற போதினில் தேன் வந்து பாய்ந்தது அவன் காதினில் ‘தொம்தோம்’ எனப் பாடி வெற்றிக் களிப்பில் அவன் ஆழ்ந்தான்.

களப்பலிக்கு இரவான் இசைதல்

எதிரிகள் முந்திக் கொண்டனர். அவர்கள் திட்டத்தை முறியடிக்கும் பொறுப்பைக் குன்றம் எடுத்துக் கன்று களைக் காத்த கண்ணன் ஏற்று அமாவாசையை ஒருநாள் முந்தியே துவக்கிவைத்தான். அர்ச்சகர்களை அழைத்து வைத்தான். அவர்கள் வந்து குழுமிவிட்டனர். இதென்ன அநியாயம் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஆகாயத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் குளக்கரைக்கு வந்து விட்டனர்.

சூரியனும் சந்திரனும் இருவரும் அங்குச்சேர்ந்ததால் அதுவே அமாவாசை தினம் என்று அறிவித்தான் அச்சுதன் ஆகிய கண்ணன்.

அடுத்தது களப்பளிக்குத் தன்னைத் தரக் கண்ணன் முன் வந்தான். போரும் வேண்டாம், ஊரும் வேண்டாம்” என்று கூச்சல் போட்டு “கோவிந்தா! எங்களை மன்னிக்கவும்” என்றனர் பாண்டவர்கள்.

“என்னை விட்டால் இராவான் தான் தகுதி என்று கண்ணன் கூற ஏற்கனவே இசைந்துவிட்டதால் அவன் தன்னைத் தர முன்னுக்கு வந்தான்.

அவனுக்கு ஒர் ஆசை சாவதற்கு முன்னால் போரின் வீரச் செயல்களைக் காண வேண்டும் என்று; களப்பலியில் தான் அறுப்புண்டாலும் போரைக் காணவேண்டும் என்ற விருப்பு அவனை விடவில்லை.

முதல் நாட் போருக்கு முன் இரவு குறிப்பிட்டபடி அவன் களப்பலிக்கு முன் நின்றான். அவன் தன் அங்கங் கள் சிலவற்றை அறுத்துக் காளி முன் இட்டு வருந்தாது முகம் மலர்ந்து நின்றான்; சாகவில்லை; களப்போரைக் கண்டு மகிழ் கொண்டு வாழ்ந்தான்.

எட்டாம் நாள் போர் வரை உயிரோடு இருந்தான். அம்புசன் என்ற அரக்கனோடு போர் செய்து மரணத்தைச் சந்தித்தான்.

அணி வகுத்து நிற்றல்

அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் ஆகியவரோடு அணிவகுத்துப் போர்க்களம் செல்க என மணிவண்ணனாகிய கண்ணன் படைத்தலைவனாகிய விராடன் மகன் சுவேதனிடம் கூறினான். அதிரதர் என்போர் தானும், வீமனும், விசயனும், அபிமன்யும் ஆவார் எனக் கண்ணன் விளக்கினான்.

மகாரதர் என்போர் தருமன், சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன் ஆவர்.

சமரதர் துருபதன், உதாமன், உத்தமபானு ஆகிய இவர் ஆவர்.

அர்த்தரதர் நகுலன், சகாதேவன், கடோற்சன் ஆகிய இவர் ஆவர்.

இந்த அடிப்படையில் படைகள் அணிவகுத்து நின்றன. ஐம்புலன்களைப் போலச் செயல்பட்டுப் பாண்டவர் ஐவரும் கண்ணனும் அணிபடைகண்டு மகிழ்வு கொண்ட னர். மருங்கு நின்ற மகிபாலன் ஆகிய பலராமன் போர் முடியும் வரை தீர்த்த யாத்திரை செய்து வருவதாகக் கூறி இந்த இரத்தக் களிரியைப் பார்க்க மனமில்லாமல் புண்ணிய ஷேத்திரத்தின் மேல் பழிபோட்டுவிட்டுப் புறப் பட்டுச் சென்றான்,

பலராமன் துரியனின் கட்சி, கண்ணன் கட்சி எதிர்க் கட்சி, அவனுக்கு வேறு வழியில்லை. தம்பியை எதிர்த்துப் போராட முடியாது. விதுரனும் பலராமன் வழியைப் பின்பற்றினான். இரண்டு பேரும் தமையனின் மைந்தர்கள். மற்றும் ஏற்கனவே வில்லை உடைத்துப் போட்டு விலகி நின்றவன். அதனால் அவன் செயல் அவனைப் பொறுத்தவரை நியாயமே ஆகும்.

மற்றவர்கள் போரில் நேரிடை பங்கு கொண்டு எதி ரெதிர் நின்று அடித்து நொறுக்கிச் சாகத் துணிந்து நின்றனர். நம்பிக்கையின் சிகரத்தில் நின்று வீரம் சிறக்க வீறு கொண்டு நின்றனர்.

வீமனை நோக்கித் துரியன் விரைகின்றான். எதிரே இருக்கும் பாண்டவர்களை அழிக்க நாள் எத்தனை ஆகும் என்று கேட்டான்.

வீடுமன் கூறியது வியப்பை அளிக்கிறது. எதிரியை மதித்துப் பேசும் ஆண்மை அவனிடம் வெளிப்படுகிறது.

தான் ஒரு பகலில் சர்திக்கும் சாதனையை மற்றவர் கள் செய்து முடிக்க நாட்கள் அதிகம் ஆகும் என்றான்; துரோணனுக்கு மூன்று நாள்; ஐந்து நாள் கன்னனுக்கு: ஒரு நாழிகையில் அசுவத்தாமன் செய்து முடிப்பான்: ஆனால் அதனை அருச்சுனன் ஒரு க்ஷணத்தில் முடித்து விடுவான் என்று கூறினான். அருச்சுனனின் வில்லாற்றலை வியந்து பாராட்டினான்.

அக்கினி தந்த தேரின் மீது அனுமக் கொடியை அருச் சுனன் பறக்கவிட்டான். துரியனின் படை அணியைக் கண்ட அருச்சுனன் இவ்வளவு பேரை அழித்தபிறகு தான் சாதிக்கப்போவது என்ன என்று சிந்திக்கத் தொடங்கினான். வீடுமன் துரோணன் மற்றும் உள்ள உறவினர் தாம் எதிரே நின்றனர். அவன் வில்லை எடுக்க அவன் விரல்கள் வினாக்களை எழுப்பின. வேண்டாம் இந்தப் போர்; நாடும் வேண்டாம்; ஆட்சியும் தேவை இல்லை என்று வெறுத்துப் பேசினான். பொறுத்துச் சிந்திக்கத் துளப மாலை அணிந்த கண்ணன் அவனுக்கு உளம் கொள்ளத்தக்க அறிவுரை கூறினான்.

கண்ணன் வழங்கிய கீதை

களத்தில் நின்ற காண்டீபன் இளைஞரையும் தம்மிலும் வயதில் மிக்க முதியவரையும் கண்டு பாசத்தாலும் நேசத்தாலும் பிணிப்புண்டு வில்லெடுத்து அம்புதொடுக்கத் தயங்கினான். அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து செய லிழந்து நின்றது. அவன் தெளிவு பெற அரிய உரைகள் தந்து அவன் மன இருளை மாயவன் மாற்றினான்: அதையே தெய்வ நன்மொழி (பகவத் கீதை) என்பர்.

“மனம் என்பது மாயையின் படைப்பு, அது முக்குண வசத்தால் மாறக்கூடியது; வெறுப்பு விருப்பு, பந்தபாசம் இந்தத் தளைகளில் அகப்பட்டுக் கட்டுப்பட்டு விளங்குவது; மனம் அடங்கினால்தான் மெய்யறிவு உண்டாகும். உற்றார், உறவினர், செற்றார், நண்பர் என்ற பேதம் மறைந்து செயல்படமுடியும்” என்று கண்ணன் திருவாய் மலர்ந்தருளினான்.

“கடமையைச் செய்; பலனைக்கருதாதே; எதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டுச்செயல்பட்டால் கர்த்தாவுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. இவன் ஒரு கருவியே தவிரக் காரணன் அல்லன். இதனையே நிஷ்காமிய கர்மம் என்று உரைப்பர்” என்றான்.

பின் கண்ணன் பேருருவில் நின்று இந்தப் பிரபஞ்சத் தையே அதில் காட்டினான். “யாதும், யாவையும் எல்லாம் யானே” என்று அறிவித்தான்.

விசுவருப தரிசனம் கண்ட விசயன் அண்ட சராசரங் களின் அடிப்படையையும் இயக்கத்தையும் அறிந்தவனாய் ஞானத் தெளிவு பெற்றுக் களத்தில் தான் ஒரு கடமை வீரன் என்ற உணர்வோடு நிமிர்ந்து நின்றான். படுகளத்– தில் ஒப்பாரி வைக்க முடியாது என்ற பாயிர உரையை அறிந்தான். பரணி பாட வேண்டிய இடத்தில் பாமாலை பாடிக் கொண்டிருக்கக்கூடாது என்பதை உணர்ந்தான்.

விடுமனையும் துரோணனனையும் சந்தித்தல்

நிதரிசன உலகத்துக்கு வந்தவர்களாய் அடுத்துச் செய்ய வேண்டிய கடும் போர் குறித்துச் சிந்தித்தனர். குருகுலத்தில் சிங்க ஏறு ஆகிய வீடுமனையும் அறிவு தந்த ஆசான் துரோணனையும் சந்தித்துப் பேசினர். “வீரமும் ஆற்றலும் மிக்க உங்களை வெல்வோம் என்ற உறுதி எங் களுககு இல்லை; நீங்கள் களத்தில் இறங்கியதும் எங்கள் உளத்தில் வெல்வோம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை” என்று பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து பேசினர்.

முதலில் வீடுமன் தான் முடிய வழி உள்ளது என்று கூறினான். போர் தொடங்கிய பத்தாம் நாளில் சிகண்டி அருச்சுனனோடு இருந்து அம்புகள் எய்வாள்; அம்பை என்பவள் துருபதன் மகளாகப் பிறந்திருக்கிறாள்; பிறப்பால் பெண்ணாயினும் சிறப்பால் ஆண் ஆயினள்; தன் பெண்மையை அழித்துக்கொண்டு ஆண்மையை வளர்த்துக்கொண்டு வீரனுக்கு உரிய திறனும் திடமான உரனும் பெற்றுச் சிகண்டி என்ற பெயரில் போர் வீரனாக இயங்குவாள். அந்தச் சிகண்டி களத்தில் இறங்கினால் அம்பு கொண்டு அவளைத்தாக்குவது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான்.

“பெண் என்றாலே ஒதுங்கி வாழ்ந்தவன் யான்; அவளை எதிர்த்து அம்பு எய்வது என் விரதத்துக்கு இழுக்கு. என் கைப்பட்ட அம்பும் அவள் மெய்பட்டுப் பழுது படக் கூடாது. மற்றொன்று பெண் என்று தெரிந்தும் எந்த வீரனும் அவள் மீது அம்பு ஏவமாட்டான். அவளோடு நின்று ஒதுங்கி அருச்சுனன் அம்பு இட்டால் அதனை மலர் எனவே கொண்டு மார்பைக் காட்டுவேன். எதிர்த்து அவனைத்தாக்க மாட்டேன். அம்புகள் என்னை அலங்கரிக்கும். அதுவே எனக்கு மலர்ப் படுக்கையுமாகும். அதன் முடிவே எனக்கு வீரமணம்” என்று தன் குறைபாட்டை எடுத்து உரைத்தான். உயிர்மேல் ஆசை இல்லாமல் உள்ளதைச் சொல்லும் உயர்வு அவனிடம் அமைந்திருந்தது;பத்துநாள் வீடுமனோடு போர் செய்ய வேண்டிய பொறுப்பினை உணர்ந்தனர்.

துரோணனும் தன் குறையை உரைக்கத் தொடங்னான். “மகன் இல்லாமல் யான் வாழ முடியாது” என்ற பாசத்தின் பாங்கினை எடுத்துக் கூறினான். படுகளத்தில் அசுவத்தாமனை அடுபோரில் கொன்று அந்தச் செய்தியை மன்னர் பலர் அறியப் பறை சாற்றினால் அடுத்து அம்பும் வில்லும் கவசமும் வீரமும் என்னை விட்டு அகலும்; நிராயுதபாணியாக நின்று நிமலனை நினைத்து வாழும் மனநிலை பெறுவேன்; அந்த நிலையில் மீனைக் கொத்தக் காத்திருக்கும் கொக்குப் போல வாடிக் காத்திருக்கும் திட்டத்துய்மன் என் தலையை அழித்துப் பந்தாடுவான். அதுவரை என் போர் நீடிக்கும்” என்றான். அவன் போர் ஐந்து நாள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிந்தது.

கண்ணன் பாண்டவர்க்குத் துணை இருக்கும் வரை அவர்களை வெல்வது யாராலும் இயலாத ஒன்று என்றும் உரைத்தனர். பாண்டவர்கள் முதுகுரவர் இருவரையும் வணங்கி ஆசி பெற்று நீங்கினர்.

பாண்டவர்களை எதிர்த்துப் போரிட மூன்று மா வீரர்கள் இருந்தனர். வீடுமன், துரோணன், கன்னன் ஆகிய இம்மூவரிடம் தொடுத்த போர்கள் வரலாறு படைத்தவை. மற்றும் அவர்களுக்குத் துணையாக சயத்ரதன், சல்லியன் மாயைகள் வல்ல சில அசுரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்; அவ்வாறே பாண்டவர் பக்கம் அருச்சுனனும் அவன் மகன் அபிமன் யுவும் செய்த போர்கள் கதைச்சிறப்பு கொண்டவை; போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.

தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்தன; இராம இராவணயுத்தம் பதினெட்டு மாதங்கள் நடந்தன; பாரதப்போர் பதினெட்டு நாட்களைக் கண்டது.

மகளை மணம் முடித்துத் தந்த துருபதன், அவன் மகன் திட்டத்துய்மன், புகலிடம் தந்த விராடன், அவன் மைந்தர்கள், கண்ணனின் தம்பி சாத்தகி, சோழ பாண்டியர்கள் பாண்டவர் பக்கம் நின்று போர் செய்தனர்.

கண்ணன் படை எடுக்காவிட்டாலும் போரை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். அவனே பாண்டவர் வெற்றிக்குத் துணையாக நின்றனன். தக்க சமயத்தில் சூழ்ச்சியும் செயல் திறனும் காட் டிப் பகைவ ரைத் தோல்வியுறச்செய்தான். துவாரகையில் இருந்த யது குல வேந்தரும் யாதவர்களும் துரியனுக்குத் துணையாக நின்றனர்.

விதுரனும், பலராமனும் ஏற்கனவே கூறியபடி இப் போர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாமல் தீர்த்தயாத்திரை சென்று விட்டனர். அசுவத்தாமனின் படைத்தலைமை யைத் தொடக்கத்திலேயே துரியன் இழந்து விட்டான்; கன்னன் வீடுமனோடு முரண்பாடு கொண்டு ஒதுங்கி நின்றான். அவன் தலைமையில் தான் தலை காட்ட முடியாது என்று தலை மறைவாகி விட்டான். இவ் விரண்டு விலக்குகளும் துரியனுக்கு எதிர்ப்பாடுகளாக அமைந்தன. சல்லியன் கன்னனுக்கு எதிராகத் திரும்பிப் படுகளத்தில் அவனைத் தவிக்க விட்டான். கன்னனின் வர பலமும் உரபலமும் ஈகை என்ற பெயரால் அவ் வப்பொழுது குறைந்தன. மற்றும் அவன் பெற்ற சாபங்களும் அவன் தோல்விக்குத் துணை ஆயின.

அசுரர்கள் துரியனுக்குத் துணை நின்றனர். அவர் ளுள் குறிப்பிடத் தக்கலர்கள் பகதத்தன், அலம்புசன். பூரிசிரசு.

வீமனும் துரியனும் தொடர்ந்து போர் செய்தனர்; வீமன் விசயனுக்குத் துணையாக அமர்க்களத்தை ரணகள மாக மாற்றினான். அவன் மோதாத வீரர்கள் இல்லை என்று கூறலாம். துரியனின் தம்பியரைத் தொடர்ந்து கொன்று அழித்தான்; அவன் மகன் கடோற்சகன் மாயை கள் வல்லவன்; அவன் அவ்வப் பொழுது இடையிட்டுப் பகைவர் படைகளை நடுங்கச் செய்தான்.

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்
விராடன் மைந்தர்கள் மறைவு

முதல் நாட் போரில் வீடுமன் துரியன் படைகளுக்குத் தலைமை ஏற்றான். இரு சாராரும் நாளைக்கு ஒரு வியூகம் அமைத்துப் படைகளை அணி வகுத்தனர். போர் தொடர்கிறது. இவைபோரின் மைய நிகழ்ச்சிகளாகும்.

இம்முதல் நாட் போரில் நடந்த கள நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது உத்தரன் சல்லியனோடு தொடுத்த போராகும். விராட அரசனின் இளைய மகன் உத்தரன் என்பவன் ஆவான். வயதில் இளையவனாயினும் அவன் ஆற்றிய போர் கடுமையானது ஆகும் சல்லியனின் தேரும் குதிரையும் தனிவேறு ஆயின. தரையில் தள்ளப்பட்ட சல்லியன் தன் கைவேலினை அவன் மார்பில் பாய்ச்சி அவன் உயிரைப் போக்கினான். இளங்குருத்து நாசம் ஆகியது. தொடக்கம் துரியனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

உத்தரனின் தமையன் சுவேதன் விட்ட அத்திரங்கள் பகைவர்களை நடுங்கச் செய்தன; எதிரிகளின் வில்களின் நாண்கள் நாணமுற்றுச் சாய்ந்துவிட்டன. கயிறுகள் அறுப்புண்டு வளைந்த வில்களை நிமிரச் செய்தன. அவன் வில்லாற்றலுக்கு வீடுமனும் முன் நிற்க இயலவில்லை. சோர்வு வீடுமனைச் சோதனை செய்தது. அதனால் சூழ்ச்சி அவன் மூளையில் உதயமாகியது.

வில்லினால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்து சொல்லினால் ஒரு சூழ்ச்சி செய்தான்.

அவன் இளைஞன், மானத்தைத் தூண்டி விட்டால் நிதானம் இழப்பது உண்டு என்று அறிந்து செயல்பட்டான்.

“விற்போர் கற்ற நீ வாட்போர் கல்லாதது ஏன்” என்று அவன் தருக்கைக் கிள்ளி விட்டான். செருக்குற்று அவன் வில்லை வைத்து விட்டு வாளை எடுத்துக்கொண்டான். தான் வாளிலும் வல்லன் என்று தன் திறனைக் காட்டத் தொடங்கினான்.

அவன் வில் சிவன் தந்த பழைய வில்; அழிக்க முடியாதது. அதைத் துறந்து வாளோடு சென்றவன் ஆளோடு மறைந்தான். எட்டி இருந்தே அம்பு கொண்டு அவனை அலற வைத்தான். வீடுமன் நெறிதவறிய இடம் இதுவாக அமைந்தது. போர் என்றால் கத்தியைத் தீட்டுவதோடு புத்தியைத் தீட்ட வேண்டி இருந்தது. வீடுமன் வயதில் மூத்தவன்; சிந்தனை மிக்கவன்; வந்தவனை வலிவிழக்கச் செய்வது எப்படி என்று அறிந்தவன். அதனால் விராட னின் மூத்தமகன் தம்பி சென்ற வழி தன் வழி எனத் தன் பயணத்தைத் தொடரும்படி செய்தான்.

ஒரே நாளில் விராடன் தன் இரண்டு மைந்தர்களை இழந்தான்; புத்திர சோகம் அவன் போர் வேகத்தைத் தடை செய்தது. கண்களில் நீர் மிதக்கக் கதறி அழுதான். கண்ணனும் பாண்டவரும் பரிவு காட்டி அவன் மைந்தர் கள் பிரிவுக்காக வருத்தம் தெரிவித்தனர். முதல் நாட் போரில் பெற்ற இழப்பு அவர்கள் எழுச்சியைத் தூண்டியது. பழிவாங்கும் உணர்வு அவர்களைப் பதற வைத்தது. அடுத்த நாட் போரில் அதன் ஆவேசம் அவர்கள் செயலில் காணப்பட்டது.

விதியை மீறல்

கண்ணன் பார்த்திபனுக்குத் தேர் ஒட்டியாகத்தான் களத்தில் இறங்கினான். மூன்றாம் நாட்போரில் களத்தில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது; வீடுமன் தடுப்பார் அற்று வேகமாக முன்னேறிக் கண்ணனையும் விசயனையும் அபி மன்யுவையும் வளைத்துக் கொண்டான். மற்றவர்கள் அவரவர் நிலைக்களத்தில் எதிரிகளோடு போர் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மூவர் களத்தில் இருக்க முதியவன் ஒருவன் முன்னேறு வது என்றால் எப்படித் தாங்கிக் கொள்வது? வீரம் பேசும் விசயன் சோர்வு அடைந்தது ஏன்? உறவினன் என்பதால் அவன் துறவினன் ஆகிவிட்டானா? வில்லெடுத்து விளை யாட வேண்டிய அவன் முதியவனின் வீரம் கண்டு இளைத் தது ஏன்? வீடுமன் கண்ணன் யார் என்றும் பாராது அம்பு வீசி அவனைக் கிளரச் செய்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விசயனைச் சாடட்டும்; அபிமன் யுவை அழிக்கட்டும். அவர்கள் வில்எடுத்த வீரர்கள்; அதற் காகவே துணிந்து நின்றவர்கள்.

தேர் ஒட்ட வந்தவனைத் தொட்டு விளையாடுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’ என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது. படை எடேன்” என்று சொல்லிய சொல் அவனை எளியனாகக் கருதிவிட்டது என்று எண்ணினான்.

சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சொரணை இழக்க அவன் விரும்பவில்லை; சக்கரம் ஏந்திய கையனாய்த் தேர் விட்டுக் கீழே இறங்கினான். அச்சுதன் அக்கரம் சொல்லி வீடுமன் கை தொழுது தெய்வத்தைத்தான் சீண்டி விட்ட சிறுமையை உணர்ந்தான். மானிடர் செய்யும் இப்போரில் மாலே! நீ இறங்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான்.

“உன் சக்கரத்தால் என் தலைச் சிரம் அற்று விழுமானால் உண்மையில் நான் பேறு பெற்றவன் ஆவேன்; பிறப்பு ஒழித்துத் துறக்கம் அளிக்க வந்த தூயவனே! நான் உயர் பேறு பெறுவதற்கு உன் கரம் கறைபடுவதை நான் விரும்பவில்லை. கண்ணா, நீ பொறுத்தருள்க” என்று கேட்டுக்கொண்டான்.

பேடி கையில் இருந்த கைவாள் போல அழகு செய்து கொண்டிருந்தது காண்டீபம். அதைத்தாங்கி வந்த விசயன் கண்ணன் கமலத்திருவடிகளில் விழுந்து வணங்கினான்; வெற்றிபெறுவதில் அடையும்மகிழ்ச்சிபெரிது அல்ல; விரதம் தவறக் காரணமாக இருந்த பழிமொழியைத்தாங்கும் சக்தி எனக்கு இல்லை. படை தொடேன் என்று துரியனுக்குச் சொல்லியதைத் துறந்து களத்தில் இறங்கியது பழிக்கு இடம் தரும்; அருச்சுனன் கடமை தவறி விட்டான் என்ற இழி சொல் என்னைச் சாரும். உயிர் எனக்கு வெல்லம் அல்ல; செயிர்த்து எழுந்து பகைவர்களைப் புறம் காட்டச் செய்கிறேன்” என்று உறுதி தந்து கண்ணனை அமைதி பெறச் செய்தான். மூன்றாம் நாட்போரில் இது ஒரு எதிர் பாராத நிகழ்ச்சியாக அமைந்தது. கண்ணன் பாண்டவர்க்காக எதையும் செய்யக் காத்திருந்தான் என்பதற்கு இது ஒரு சான்றாக நின்றது. வார்த்தைகளை விடச் செயல் திறன்தான் மேற் கொள்ளத் தக்கது என்ற புதிய சிந்தனை யைத் தோற்றுவித்தான். வீரம் பேசித் தோல்வியைச் சந்திப்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை; நன்மை நாடிச் சில தவறுகளும் செய்யலாம் என்பது அவன் போக்காக இருந்தது.

மற்றும் சக்கரத்தைக் கண்ணன் கைக்கரத்தில் எடுத்தானே தவிர மெய்ச்சிரத்தில் ஏவினான் அல்லன். இது அவன் சூத்திரதாரி என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. துவண்டு கிடந்த விசயனைத் தூண்டவும் எல்லை மீறிய எதிரியை ஒடுக்கவும் மேற்கொண்ட செயல்களாகவும் கொள்ளலாம். தான் யார் என்பது தெரிந்தும் சிண்டிப் பார்க்க நினைத்த வீடுமனை நெறிப்படுத்தவும் போர்க்களத்தைக் குறட்டைவிட்டு உறங்கும் மடமாக நினைத்த மடமையைப் போக்கவும் கண்ணன் செயல்பட்டான் என்பது பொருந்தும்.

அசுரர் இருவர் மரணம்

மானிடர் வரபலங்களும் மாயைகளும் இன்றிச் செய்யும் போரில் அசுரர்களும் கலந்து கொண்டது விரும்பத் தகாத ஒன்று ஆகும். அவர்கள் மாயைகளில் வல்லவர்கள். அவர்கள் சூழ்ச்சிகள் மானிடரால் வெல்ல இயல்வது ஒன்று அன்று. அத்தகையை அசுரர்களில் ஒருவன் பகதத்தன் என்பவன் ஆவான். இவன் நரகாசுரன் மகன் ஆவான். இவன் தேவாசுரயுத்தத்தில் தேவர்களுக்குத் துணையாக நின்று தம் இனத்தவரையே மிதிபடச் செய்தவன். இவன் மண்ணரசனாக விளங்கினான். இவன் கவுரவர்களுக்கு உதவுவதாக வாக்கு அளித்து இருந்தான். நான் காம் நாட்போரில் இவன் களம் புகுந்து பாண்டவர் படைகளை எதிர்த்தான். இவனிடம் சுப்ரதீபம் என்ற யானை ஒன்று இருந்தது. வீமனும் விசயனும் அபிமன்யுவும் வேறு ஓர் பக்கம் போர் செய்து கொண்டிருந்தனர். அதனால் அந்த யானையை எதிர்ப்பவர் யாரும் இல்லை என்ற நிலைமை உருவாகி இருந்தது.

துரியனும் வீமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப்போர் செய்து கொண்டிருந்தபோது இவன் இடையில் புகுந்தான். சுப்ரதீபம் என்ற யானையைக் கண்டு பாண்டவர் தம் யானைகள் பின் வாங்கின. மாயைகள் வல்ல அவனை எதிர்க்கக் கடோற்சகன் ஒருவனால்தான் முடிந்தது. இவனும் அரக்கி இடிம்பியின் மகன் ஆதலால் மாயைகள் பல கற்று இருந்தான். அவனை எதிர்க்க யானைப் படை ஒன்றை மாயையால் தோற்று வித்தான். அவை உண்மைப் படை என்று மோதி தத்தனின் யானை முட்டிச் சோர்வு அடைந்தது, பேய்த்தேரை உண்மைத்தேர் எனக் கண்டு அதனைத் தொடரும் கதை ஆயிற்று. கானல் நீரைப் பருகும் நீர் என்று கருதும் பயணிகளின் கதி ஆயிற்று. பகதத்தன் சோர்வு அடைந்தான்; இனி நின்று போரிடுதல் வெற்றி தராது என்று பின்வாங்கிக் கொண்டு உயிர் தப்பினான்.

பகதத்தன் பதினோராம் நாட்போரில் மீண்டும் தலை காட்டினான். சகாதேவனும் சகுனியும், துரியோதனனும் வீமனும், சல்லியனும் தருமனும், கன்னனும் விராடனும் போர் செய்து கொண்டிருந்தனர். அவ்வாறே துருபதனும் பகதத்தனும் கடும் போர் செய்தனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் மற்போரும், விற்போரும், யானைப் போரும் செய்து வெற்றி தோல்வி இன்றி முடிவு காணாமல் அகன்றனர். அடுத்த நாட்போரில் விசயனின் அம்பால் அவன் மரணம் அடைந்தான்.

இராவானும் அம்புசனும்

வேத்திரகீயம் என்னும் நகரில் வீமனால் கொல்லப் பட்டு அழிந்த பகாசுரனது தம்பியான அம்புசன் என்பவன் எட்டாம்நாள் போரில் வீமன் மேல் சினந்து போர் செய்யக் களம் வந்தான். அவனோடு வீமன் மும்முரமாகப் போர் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது விசயனின் மகனாகிய இராவான் அவனுக்குத் துணையாகக் களத்தில் புகுந்து அம்புசனுக்குத் துணையாக வந்தவர்களை எல்லாம் துரத்தி அடித்தான். இவன் மாயப்போர் செய்யும் திறனைக்கண்டு அம்புசன் கருட வடிவம் கொண்டு அரவின் வடிவத்தில் இருந்த இராவானைச் சூழ்ந்து கொண்டான்; கருடன் முன் அரவு நிற்க முடியவில்லை. நாககன்னி உலூபியின் மகனாகிய இராவான் மரணத் தைச் சந்தித்தான். இவனே களப்பலிக்குத் தொடக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.

அடுத்த நாட் போரில் வீமனும் அம்புசனும் வாட் போரும் மற்போரும் செய்தனர். வீமன் அவன் வலத் தோளை வாள் கொண்டு வெட்டினான்; அதனை அடுத்து இருவரும் மற்போர் செய்தனர். விற்போரிலும் வீமன் விஞ்சியவனாக இருந்தான். இறுதியில் வேல் ஒன்றை ஏவி அவன் மார்பில் பாய்ச்சினான். இவன் மகத்தான வெற்றியை அடைந்தான். விமனின் போர்த் திறன் இதில் முழுமையும் வெளிப்பட்டது.

விடுமன் சாய்தல்

வீடுமனே முதல் நாட் போரில் தலைமை ஏற்றான். வயதில் முதிய அவன் விதுரனைப் போலவோ பல ராம னைப் போலவே ஒதுங்கி இருக்கலாம்; உறவு என்று எடுத்துக் கொண்டால் துரியனும் அவன் தம்பியரும் எவ்வளவு நெருக்கமானவர்களோ அவ்வளவு நெருக்க மான வர்கள் பாண்டவர்கள். பிதாமகன் என்று இருவரும் அவனை மதித்தனர்.

சகுனியைப் போலச் சூழ்ச்சியோ கன்னனைப்போல வீண் ஆரவாரமோ கொண்டவன் அல்லன். அவன் குலத்து மானம் மிக்கு உடையவன். தன் வாழ்க்கையை மற்றவர் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். திருதராட்டிரன் கண்ணில்லாதவன். அதனால் அவன்மீது பாசமும் பரிவும் காட்டுவது இயல்பு. மற்றும் துரியன் மாமன்னன்; அவன் இட்டதுதான் சட்டம். அவனைப் பகைத்துக் கொண்டால் தான் அங்கு வாழ முடியாது. உறவு என்பதை விட அவன் ஒரு வீரன்; வீரன் பொதுநிலை வகிக்கக் கூடாது என்ற கொள்கை உடையவன்.

கண்ணன் தெய்வப் பிறவி எனினும் அதற்காகப் போ ராட்டத்திலிருந்து விலகவில்லை. தருமம் பாண்டவர் பக்கம் இருப்பதால் தெய்வமும் அவர்கள் பக்கம் நின்று பணி செய்தது. தருமம் வெல்ல வேண்டும் என்ற கொள்கை கண்ணனின் பங்கேற்பில் அமைந்து கிடந்தது.

வீடுமன் அதருமத்துக்கு ஏன் உதவ வேண்டும்? துரியன் செய்வது தவறு என்று அறிந்தும் அவன் பக்கம் நின்று இறுதிவரை ஏன் போராடவேண்டும்? அதுவும் அவன் பரந்த மனப்பான்மையையே காட்டுகிறது. பாண்டவருக்குக் கண்ணன் உதவியாக இருக்கிறான்; அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய மாபெரும் துணை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

துரியனுக்குத் தக்க துணை இல்லை; தவறு செய்து அழிவுப்பாதையில் சென்று கொண்டே இருக்கிறான். குருடனுக்கு வழி காட்டுவது மானுட தருமம்; அதனால் தான் அறியாமையும் தீமையும் நிறைந்த துரியன் பக்கம் நின்று வீடுமன் செயலாற்றுகிறான்.

அரசியல் கட்சி என்று வந்து விட்டால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. மன்னன் என்று ஒருவன் அமைந்து விட்ட பிறகு அவனுக்கு அறிவு சொல்லலாம்; ஆனால் எதிர்க்கக்கூடாது என்ற கொள்கை உடையவன். அறத்துக்கு மதிப்புத் தந்திருந்தால் அவன் ஒரு வீடணன் ஆகி விட்டு இருப்பான். கடமைக்கு மதிப்புத் தந்ததால் அவன் ஒரு கும்பகருணனாகச் செயல்பட்டான்.

வீடுமன் துரியனே வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி கொள்ளவில்லை; தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையும் கடமையையும் செம்மையாக ஆற்றுவதே தன் செயற்பாடு என்று கொண்டான். அபிமன்யு, அருச்சுனன், வீமன் இவர்கள் தன் மீது அம்பு விடும்போதும் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் வில்லாற்றலையும் போர்த்திறமையையும் கண்டு வியந்து வந்தான்.

சாவுக்கு அவன் அஞ்சியது இல்லை. காலனும் அவனைக் கேட்டுக்கொண்டு தான் அவன் கணக்கை முடிக்க முடியும். இந்தக்கிழவனை விலகச் சொன்னால் விலகுவதாக இல்லை. என்ன செய்வது! பத்து நாட்கள் அவனுட ன் வீமனும், அபிமன்யுவும் அருச்சுனனும் தொடர்ந்து போர் செய்தார்கள்.

பத்தாம் நாள் அவனுக்கு விடுதலை தரக் கண்ணன் முடிவு செய்துவிட்டான். சிகண்டி களத்தில் புகுந்து அவனை முடிக்கக் காத்து இருந்தாள். அருச்சுனன் விட்ட அம்புகள் இந்த முதியவனைத் தளர்ச்சியுறச் செய்தன. எனினும் தக்க தருணத்தில் சல்லியன் வந்து அருச்சுனன் மீது அம்புகள் சொரிந்தான். அருச்சுனக்குத் துணையாகச் சிகண்டி போரில் ஈடுபட்டாள்; அவள் தனித்தேரில் இருந்து வீடுமனை எதிர்த்தாள். அப்பொழுது துச்சாதனன் இடையில் புகுந்து அவள் தேரையும் கை வில்லையும் முறித்து வீழ்த்தினான். சிகண்டி தேரும் இன்றிப்படையும் இன்றி உயிருக்கு அஞ்சி ஒதுங்கிக் காலில் நடந்து சென்றாள். வீடுமன் விட்ட அம்பு ஒன்று இரண்டு கண்ணன் மேனியில் பட்டு நீல நிறம் சிவப்பு ஏறிற்று.

இதற்குமேல் வீடுமனை விட்டுவைக்க அருச்சுனன் விரும்பவில்லை; சிகண்டியை அழைத்து அவளை அருச்சுனன் தன்தேரின் முன்பகுதியில் உட்காரவைத்துக் கொண்டான். “அஞ்சாதே அம்புகளை வீடுமன் மீது செலுத்து” என்று கூறி உற்சாகப்படுத்தினான். இருவர் அம்புகளும் ஒரு சேரச் சேர்ந்து வீடுமன் மார்பில் தைத்தன. அவற்றை எடுத்துப்பார்த்தான். சிகண்டியின் அம்பு இது, அர்ச்சுன னின் அம்பு இது என்று வேறு பிரித்தான். சிகண்டியின் அம்பு தன்னை ஒன்றும் செய்யாது என்று கூறி அதைப் பொருட்படுத்தவில்லை, அருச்சுனன் அம்பை மட்டும் எடுத்துவைத்து இனி மரணம் உறுதி என்று றுடிவு செய்து கொண்டான்.

தான் எதிர்த்து அம்பு விட்டால் அம்பையின் மாற்று வடிவமான சிகண்டி மீது படும் என்பதால் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தாமல் அருச்சுனன் அம்புகளுக்கு இலக்கு ஆகி நின்றான்.

“எனது இறுதி நாள் அணுகி விட்டது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. உங்கள் தமையனை அடைந்து அடுத்துப் போர் செய்வதற்கு ஆவன செய்யுங்கள்” என்று துரியனின் தம்பியரிடம் சொல்லி விட்டுத் தேரில் இருந்து சாய்ந்தான்.

நாரணன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு கண்ணனின் திருவடிவை நெஞ்சில் நிறுத்திக்கொண்டான். மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளிப்பட்ட அம்புகள் ஒரு சில பதிந்து கிடந்தன. அவ் அம்புகளைப் படுக்கையாகக் கொண்டு மல்லாக்காக விழுந்து கிடந்தான். மா வீரனான வீடுமன் சரப்படுக்கையில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு தேவர்கள் பொன் மயமான கற்பக மலர்களைச் சொரிந்தனர்.

தேகம் எங்கும் தங்கிய அம்புகளின் மீது உடலை வைத்து யோக சாதனையால் உயிரை ஒடாவண்ணம் நிலை நிறுத்தி உத்தராயணம் வரும்வரை உயிரோடு இருக்க முடிவு செய்தான். ஆடி முதல் மார்கழி வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம், தைமுதல் ஆனி வரை உத்தராயனம். தட்சிணாயனத்தில் உயிர்விட்டால் உயர் கதி அடையார் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே தை மாதம் பிறக்கும்வரை உயிரைவிடாமல் காத்துஇருந்தான். இவன் தந்தையாகிய சந்தனு சாகும்போது இவனுக்கு இந்த வரத்தைத் தந்து சென்றான். காலனும் இவனைக் கேட்டுக் கொண்டுதான் கணக்கை முடிக்க வேண்டும். அத்தகைய நெஞ்சு உரமும் நீண்ட ஆயுளும் நிலைப்பதாக என்று கூறிச் சென்றான். வீடுமன் போர் முடியும்வரை சாகவே இல்லை; அந்நிகழ்ச்சிகளைக் கேட்டு அவற்றோடு ஒன்றிய நிலையில் தன் வாழ்வை முடித்துக் கொண்டான்.

துரியனைப்பார்த்துத் தனக்குப்பின் படைத்தலைமை கன்னனுக்குத் தந்து போர் தொடர்க என்று கூறினான்; வீடுமன் விழுந்து சாய்ந்த செய்தியைச் சஞ்சய முனிவன் திருதராட்டிரனுக்கு உரைத் தான். அதுகேட்டு அவன் “இதுவரை எனக்கு விழி போகவில்லை; இப்பொழுது தான் பார்வை இழந்தேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.