மாபாரதம்/மறைந்து வாழ்தல்

5. மறைந்து வாழ்தல்

பன்னிரண்டு வருஷம் காட்டில் எப்படி எப்படியோ வாழ்ந்து முடித்தனர்; கிடைத்ததை உண்டு மனநிறைவு கொண்டு ஒருவாறு வாழ்க்கை நடத்தினர். இன்னும் ஒரு வருஷம் துரியோதனாதியர் கண்களுக்குப்படாமல் வாழ வேண்டும் என்று விதித்திருந்தனர். மச்ச நாட்டில் விராடனின் ஊர் அச்சமின்றி வாழத் தகுந்த இடம் என்று முடிவு செய்தனர்.

விராடனின் ஊருக்குள் நுழைவதற்கு முன் புறங்காட்டில் ஒரு காளி கோயில்; அங்கு ஒரு வன்னிமரம். அதன் பொந்தில் பாண்டவர் தமக்கு உரிய படைக் கருவிகளைப் பத்திரப்படுத்தி வைத்தனர். பதுக்கி வைக்கும் தொழிலி லும் அவர்கள் கை தேர்ந்தவராக விளங்கினர்.

தருமன் கங்கன் என்ற பெயரோடு அந்நகரில் தங்கி னான். துறவுக் கோலத்தில் தெய்வீக மனிதராக நடந்து கொண்டான். அவனை அரசன் எதையும்கேட்டு நடக்கும் அறிவுடைய ஆன்றோனாக அமர்த்திக் கொண்டான். வீமன் சமையல் வேலை கற்றவனாக இருந்தான், உண்ணத் தெரிந்தவன்; அதைப் பண்ணவும் தெரிந்து வைத்திருந் தான். நளன் என்னும் அரசனும் அரசு துறந்த நாளில் மற்றோர் நாட்டில் சமையல் தொழில்தான் ஏற்றான். அது போல் இவன் சமையல்கட்டிலைக் குத்தகை எடுத்துக் கொண்டான்.

நகுலன் குதிரையைப் பராமரிப்பதில் வல்லவனாக இருந்தான். அந்த தேசத்து அரசனின் குதிரைகளைக் கண் காணிக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான்; சகாதேவன் ஆநிரை மேய்க்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான் திரெளபதி அரசிக்கு அலங்கரிக்கும் பணிப்பெண்ணாகப் பணி ஏற்றாள். ‘வண்ணமகள்’ என்று அவள் தொழிலால் அவளை அழைத்தனர். அருச்சுனன் தான் விரும்பும்போது பேடி வடிவம் பெறச் சாபம் பெற்றிருந்தான். அதைப் பயன்படுத்தி அரச மகளுக்கு அழகுக் கலைகள் பயிற்றுவிக்கும் எடுபிடியாகப் பணி ஏற்றான். பிருகந்நளை என்பது அவன் பெயர்.

ஒருவரை ஒருவர் தெரிந்தவர்போல் காட்டிக்கொள் ளாமல் ஒதுங்கியே பழகினர். கூட்டு வாழ்க்கை சிதறிவிட் டது. எனினும் அரண்மனை வாசம் அவர்களுக்கு வசதிகளைத் தந்தது. அவர்கள் ஆற்றல் வெளிப்படும் வகையில் ஒரு சில சூழ்நிலைகள் உருவாயின.

மற்போர் செய்தல்

வெளிநாட்டு மல்லன் ஒருவன் மச்ச நாட்டுக்கு வந்து தன்னோடு அச்சமில்லாமல் போர் செய்ய வல்லவர் உண்டோ என்று வினா விடுத்தான்; வீமன் அங்கு முக மூடியாய் இருந்தபோது அவன் பெயர் பலாயினன் என்பது; அவன் மல்லனைச் சந்திக்க முடியும் என்று அரசியிடம் திரெளபதி சொல்லி வைத்தாள்.

அதனால் அடுப்பங்கரை ஆளாக இருந்த அவன் போர் மடுக்கும் மல்லனாக வெளியில் அவனைச் சந்தித்து அவனோடு மற்போர் செய்து மண்ணைக் கவ்வ வைத்தான்; அதனால் வீமன் புகழ் ஓங்கியது. அதனால் அவன் கருவமும் ஓங்கியது. அவனைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினர்.

கீசகன் வதை

வண்ணமகள் வடிவில் இருந்தபோது திரெளபதியின் பெயர் விர தசாரணி. கந்தருவன் ஒருவன் தன் காதலன் என்றும், அவ்வப்பொழுது வந்து சந்திப்பதுண்டு என்றும் அரசியிடம் சொல்லி வைத்தாள்.

அவள் கணவனோடு இருக்கும் கவின்மிக்க வாழ்க் கையை யாரும் காண முடிந்ததில்லை. என்ன இருந்தாலும் அந்தப்புரத்து எடுபிடி தானே.

அங்கு வந்த அரசியின் அருமைத்தம்பி கீசகன் அழகி ஒருத்தி சேவகியாக இருப்பது அவன் கருத்தைக்கவர்ந்தது. அவளை அவன் ஒரம் கட்டினான். அவனோடு அவள் சோரம் போவதற்கு இசைவாள் என்று எதிர்பார்த்தான்.

அதற்காகத் தன் உடன் பிறந்த தமக்கையைச் சாரமாக அமைத்தான். அவன் சார்பில் அவளைப் பேச வேண்டினான்.

தம்பியின் ஆசைக்கு அவளை இசையச் சொல்லிப் பேசிப் பார்த்தாள். “நீயே ஒப்புக்கொள். ரகசியமாக அவனோடு உறவு கொள்; யாரும் உன்னை ஒன்றும் சொல்ல முடியாது” என்று புத்தி சொன்னாள். “அவன் பொல்லாதவன்; பிடிவாதக்காரன், முரடன்; யாரும் இங்குத் தடுக்க முடியாது” என்றும் அச்சுறுத்தினாள். இதமாகப் பேசினாள்; பதப்படுத்த முடியவில்லை.

கட்டில் அறைக்கு அவன் அவளைக் கைப்பிடித்து இழுத்தான்; விட்டில் பூச்சி என அவன் அவளைச் சுற்றிச் சுழன்றான்; வெகுதூரம் ஒடிச் சென்றாள்; பேயைப்போல் அவளைப் பின் தொடர்ந்தான்; அவள் அரச அவைக்கு ஒடினாள்; அங்கே அவன் ஒரு துச்சாதனன் போல் அவள் துகிலைப் பற்றினான்; மற்றோர் துகில் உரியும் நாடகம் தொடர்ந்தது. அரச அவையில் இருந்தவர் நெட்டை மரங்களாக அவனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

அவள் சமையல் அறை நோக்கி ஓடினாள்; அங்கு வீமன் பச்சையாக இருந்த கட்டை ஒன்றை எடுத்து அவன் மண்டையைப் பிளக்க ஓங்கினான். தூர இருந்த தருமன் “பச்சைக் கட்டை எரியாது” என்றான். அவன் குறிப்பு அறிந்து அடங்கி விட்டான். அது தக்க சமயம் அன்று என்பது அவன் கூறிய குறிப்பாக இருந்தது.

அண்ணன் மீது கோபம்; அன்றும் தடுத்தான்; இன்றும் தடுக்கிறான் என்று வெறுத்தான்; நிதானமாகத் திரெளபதி சொன்னாள். அவசரப்பட்டால் கொட்டிக் கவிழ்த்த பாலாகி விடுவோம்; ஆத்திரம் அறிவு அழிக்கும்; பொறுத்தவர் பூமி ஆள்வார். வீணே வெளிப்பட்டு விடுவோம். துரியன் மறுபடியும் நம்மைக் காட்டுக்கு அனுப்பி விடுவான். அதனால் புத்திசாலித்தனமாக அவனை முடிக்க வேண்டும்” என்றாள்.

“அவனை மயக்கிக் காதல் உரைகள் பேசி அழைக்கிறேன். நள்ளிரவில் அவன் பாழ்மண்டபத்துக்கு வருவான்; நீ அவனை அங்குப் பார்த்துக் கொள்ளலாம்; மறு நாள் வண்ணமகளின் காதலன் கந்தருவன் வந்து அவனைத் தேர் ஏற்றிக் கொன்றுவிட்டான் என்ற செய்தி பரவும்; நாமும் இங்கு நிம்மதியாக எஞ்சிய நாட்களைக் கழிக்க முடியும்” என்று கூறினாள். இருவரும் தனியே சந்தித்து இத்திட்டத்தைத் தீட்டினர்.

மறுநாள் கீசகன் வந்தான். அவனிடத்தில் அஞ்சுகம் போன்ற திரெளபதி நெஞ்சங் குழையப் பேசினாள்.

“நாலுபேர் அறிந்தால் நம்மைப்பற்றி இகழ்ந்து பேசுவர்; பாழ்மண்டபத்துக்கு வந்துவிடு; அதனைப்பள்ளி யறை ஆக்கலாம். நள்ளிரவு, சாமம் சரியான நேரம்” என்றாள்.

ஆசைக்கடலில் ஆழ்ந்தவன் அவளால் நாசச் சொற்களில் மோசம் போய்விட்டான் ; காதல் என்பதே களவின் அடிப்படையில்தானே அமைவது, திருடித் தின்பதில் உள்ள இன்பம் தனி இன்பம்தான் என்று முடிவு செய்து கொண்டான். அவளை அடைவது திண்ணம் என முடிவு செய்து கொண்டான்.

பாழ் மண்டபத்துக்குக் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தான்; கைவளை ஒலிக்க முரட்டு உருவம் அந்த இருட்டு வேளையில் வந்து அவனைச்சந்தித்தது. குருட்டு ஆசை அவனை மருட்டி விட்டது. அதனைக் கட்டி அணைத்தான். வீமன் அவ்வுருவம் என்பது தெரியாது; இருவரும் கட்டிப்புரண்டனர்; காதல் செய்ய அல்ல; மோதல் செய்ய, கீசகன் கீச் மூச்” என்று பேச முடியாமல் மரணத்தைச் சந்தித்தான்.

பேய் அறைந்து விட்டது என்று பேசியவர் சிலர்; கந்தருவன் வந்து கொன்று விட்டான் என்று கதை அளந்தவர் பலர்; வீமன் கொன்றான் என்பது யாருக்கும் தெரியாது. அரசனும் அரசியும் மட்டும் வண்ண மகளின் திட்டம்தான் என்று ஐயம் கொண்டனர். திருடனைத் தேள் கொட்டினால் அவன் எப்படிக் கேள்வி கேட்க முடியும். அவர்கள் உள்ளுக்குள் வெந்து வேதனை உற்றனர்.

அத்தினாபுரியில் ஆராய்ச்சி

விராடன் ஊரில், பாண்டவர் வருவதற்கு முன் பஞ்சமும் வறுமையும் நிலவின; இவர்கள் வந்ததும் பயிர்கள் பசுமை உற்றன; வானம் மழை வழங்கியது. பாண்டவர் அடி எடுத்து வைத்ததால்தான் பலபடியாக இறைவன் படி அளக்கிறான் என்று துரியோதனாதியர் பலபடியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

கீசகன் மரணம் ஐயத்தை அதிகப்படுத்தியது. வீமன் தான் அவனைக் கொன்றிருக்க முடியும் என்று யூகித்தனர். அதனால் பாண்டவர்கள் விராட நகரில்தான் தங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

புற்றில் இருக்கும் அரவை வெளிப்படுத்துவது எப்படி? குகையில் உள்ள புலியைக் கூவி அழைப்பது யார்?

“தொழுவத்தில் உள்ள கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது கத்தும்; அதைக் காப்பாற்றப் பசு ஒடி வரும். இது தான்வழி” என்று முடிவு செய்தனர்; “விராடனுக்குத் தொல்லை கொடுத்தால் அவனுக்கு விசயனும் மற்றவர்களும் துணைக்கு வருவார்கள். இதுதான் தக்க வழி” என்று கன்னன் தன் கருத்தைக் கூறினான்.

சகுனியின் சதிகளுக்கு இவன் துணை போவான் என்று அறிந்து துரியன் மகிழ்ந்தான்.

திரிகர்த்த நாட்டின் தலைவன் துரியனுக்கு நண்பன்; அவனைத் தட்டிக் கொடுத்தான். “நீ வடக்குப்பக்கம் சென்று வளைத்துக் கொள்; தெற்குப்பக்கம் நாங்கள் சூழ்கிறோம்” என்றான்.

திரிகர்த்தன் படைகள் வடக்குப்பக்கம் சென்று விரா டன் நகரைச் சூழ்ந்தது. விராட மன்னனும், தருமனும், வீமனும் அவனை எதிர்க்கச் சென்றனர். உடன் நகுலனும் சகாதேவனும் துணைக்குச் சென்றனர். அருச்சுனன் பேடி என்பதால் அவன் ‘லேடி’களுடன் அரண்மனையில் தங்கி விட்டான்.

விராடன் தனியன் தானே அவன் என்னசெய்ய முடியும் என்ற திரிகர்த்தன் ஏமாந்து விட்டான். வீமன் உடல் வலியன்; நகுலன் குதிரைப்படைத்தலைவன். சகாதேவன் சகலமும் கற்றவன். இந்த மாவீரர்கள் களத்தில் இறங்கு வார்கள் என்று அவன் கருதவில்லை. ஈட்டிகள் பதித்து வைத்த நீர் நிலையில் நீந்தி விளையாடும் கதி தான் அவன் நிலையும். படைகள் புறமுதுகிட்டன. இந்த முறையில் துரியன் திட்டம் தோல்வியடைந்தது.

அடுத்தது தென் முனை; துரியன் தன் பெரும்படையுடன் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து சென்றான். கன்னனும் அவனுக்குத் துணை நின்றான். விராடனோடு ஊர் ஆண்கள் போர்க்களம் நோக்கிச் சென்று விட்டனர். பெண்கள் என்ன செய்ய முடியும்? அரசியிடம் வந்து முறையிட்டனர்.

அவள் ஒரே மகன் உத்தரன் செயலிழந்து சோர்ந்து நின்றான்; ஆடத்தெரியாதவள் கூடம் போதாது என்று சொல்வாளாம். அதுபோலத் ‘தேர் ஒட்டி இருந்தால் போர் தொடர முடியும்’ என்று பெருமை பேசினான். விரதசாரணியாக இருந்த திரெளபதி பேடியாக இருக்கும் அவன் தேர் ஒட்டுவதில் வல்லவன் என்றாள். போர்க்களம் கண்டவன் என்றும் பேசினாள். அவனை அழைத்துச் செல்லும்படி கூறினாள்.

அவனால் மறுக்க முடியவில்லை; தேரில் அருச்சுனன் அமர்ந்தான். உத்தரன் கடல் போன்ற சேனை கண்டு நடுங்கி விட்டான்; அவன் தேரில் இருந்து இறங்கி வீடு நோக்கி ஓடினான்; அவனைக் கட்டிப் பிடித்துத் தேரில் உட்கார வைத்தான். அருச்சுனன் தான் மறைத்து வைத்த சில படைக்கருவிகளை எடுத்து வந்து வில்லும் அம்புமாகத் தேர் ஏறி நின்றான். அவன் அம்புகளுக்கு ஆற்றாமல் துரியனின் படைகள் பின்வாங்கின. கன்னனும் அருச்சுனன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை; தக்க படைகளோடு போர் தொடுக்கவும் செல்லவில்லை. ஆனாலும் துரியனோடு சேர்ந்து ஒற்றுமையாகப் பின் நோக்கி நடந்தான்.

பாண்டவர் அவசரப்பட்டு வெளிப்பட்டு விட்டனர் என்று வாதம் எழுப்பினான். வீடுமன் அதனை மறுத்து ஆண்டுகள் பதின்மூன்றும் கழிந்துவிட்டன என்று விளக்கினான்

குறித்த காலமும் முடிந்தது. பேடியாகச் சென்ற அருச்சுனன் தன் பழைய வடிவில் களத்திலிருந்து திரும்பினான். தன் நாட்டில் பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு விராடன் பெருமை பெற்றான். அதே சமயத்தில் அவர்களை அடிமைப்படுத்திப் பணி செய்ய வைத்தது அதற்காக வெட்கப் பட்டான். பாண்டவர்கள் அதற்காக வருத்தப்படவில்லை. கீசகனின் கீழ்மைமட்டும் அருச்சுனனைச் சினந்து எழ செய்தது. தீமைகள் பல செய்தவர் எனினும் அவர்கள் செய்த ஒரு நன்மையை எண்ணிப் பார்த்து அடங்குவதுதான் அறிவுடைமை என்று தருமன் அறிவுரை கூறினான். வள்ளுவர் அறத்துப்பால் அவனை அதற்கு அப்பால் போக முடியாதபடி தடுத்துவிட்டது.

பகையை மறந்து நகையை விளைவித்தனர். உத்தரன் அவன் தன் தங்கையை அருச்சுனனின் மகன் அபிமன்யுவுக்கு மணம் முடித்துத் தந்தான். கண்ணன் வந்து கலியாணத்தில் கலந்துகொண்டான் அதற்குப்பிறகு அனைவரும் விராட நகரைச் சார்ந்த உபப்பிலாவியம், என்னும் புதிய ஊரில் வசிக்கத் தொடங்கினர்.