முல்லைக்காடு/நாணிக்கண் புதைத்தல்

நாணிக்கண் புதைத்தல்!

தலைவன் கூற்று.
இராகம்: கமாஸ்
(ஏனிந்தப்படி மனம் கலங்கலானீர் மன்னா என்ற
மெட்டிற் சிறிது பேதம்)

தாமரை முகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி—இளந்தையலே!
பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம்
புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே!
(தாமரை)
விழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி-இளந்தையலே!
பிழிந்த அமுதமதைப் பிசைந்த கனிரசத்தை
விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனதே
(தாமரை)
நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி-இளந்தையலே!
காணப்படும் நிலவைக், கரம்பொத்தி விடுவதில்
ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி!
(தாமரை)
மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம்-இளந்தையலே!
இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம்
இணைத்திணைத் திழுத்திழுத்தணைத்தணைத் தமுதளி!
(தாமரை)